நெய்வேலி பாரதிக்குமாரின் கவிதைகள்

நெய்வேலி பாரதிக்குமாரின் கவிதைகள்




த்சோ.. த்சோ
*******************
பொய் வெட்கத்துடன் உதிர்க்கும் ம்ஹும்
அங்கீகரிக்கிறது
கூடலின் போதான மீறல்களை…

செல்லச் சிணுங்கலுடன் இசைக்கும்.. சீச்சீ..
மொழி பெயர்க்கிறது ஆயிரம்
எதிர் அர்த்தங்களை

ஒரு நொடியில்
மின்னி மறையும்
உதட்டுச் சுழிப்பு
பழிக்கிறது
அகராதிகளின்
அத்தனைச் சொற்களையும்…

ஒரு த்சோ த்சோ
உரித்து விடுகிறது
ஏமாற்றங்களின் தொலிகளை..

அர்த்தங்களில்
கால் இடறி
மல்லாந்து கிடக்கின்றன
எல்லா மொழிகளும்..

அகாதத்தின் பொருள் தேடி..‌.
*********************************
ஒரு சொல்லின் நூல் பிடித்து நடக்கையில்
திரும்ப விரும்பா
மொழி வனத்துக்குள் இட்டுச் செல்கிறது அச்சொல்..

கனிந்திருக்கும் சொல்மரத்தின் அருகில் செல்கையில்
அது
மெய் போலிருக்கும்
பொய்யும் வஞ்சகமும் என
பொழிப்புரைக்கிறது..

காதம் என்றால் தூரம் எனில்
அகாதம் அருகிலா என
வினவுகையில்
நீளம் என்று மறுக்கிறது…

அகராதிகளின் கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிக்காதபடி
சொல் விட்டு சொல் தாவி
ஒளியலாம்…

ஒவ்வொரு முறையும் தேடுவதற்காக நுழைந்து
தொலையலாம்
தொலைவதற்காகவே தேடலாம்…

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை..
************************************************************
சுமந்து செல்பவர்களே மீண்டும் மீண்டும்
அறையப்படுகிறார்கள்…

குருதியின் தடத்தில் இழுத்துச் செல்லப்படுகின்றன
பொறுமையின் கால்கள்..

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை போதிக்கின்றது
என்றேனும் ஒருநாள் கடவுளாகலாமென..

புதைக்கப்படுபவர்கள் ஒருபோதும்
உயிர்த்தெழுவதே இல்லை

குனிகின்றவர்களுக்காகவே தயாராகிக் கொண்டிருக்கின்றன
சிலுவைகள்….
ஆமென்..

– நெய்வேலி பாரதிக்குமார்

சொல்வலை வேட்டுவம் கவிதை – யாழ் ராகவன்

சொல்வலை வேட்டுவம் கவிதை – யாழ் ராகவன்




சொல்லொன்று உரசிப்பிடித்த தீயில்
வெந்து தணிந்த காடு
இன்னொரு காட்டுக்கு எருவானது

பொல்லா சொல்பட்டு சரிந்த தலைகள்
சரித்திரத்தில் துருத்தி நிற்கின்றன
செந்நா புலவனை

கிணற்றில் விழுந்து
தற்கொலை செய்த சொல்
பூத ரகசியங்களை ஆவியாக்கிபடி
உயிர்த்தெழுகிறது

பச்சை உதடுகளின் முத்த வெடிப்பில்
நிலத்தை நிமிண்டிப் பழித்தன
புதைச் சொற்கள்

தேவனைப் பிடிக்க
மனிதர்களைப் பயிற்றுவித்து

மனிதர்களுக்கு வீசுகிறது ஆதிச்சொல்

– யாழ் ராகவன்

சொல் அமிழ்து கவிதை – சாந்தி சரவணன்

சொல் அமிழ்து கவிதை – சாந்தி சரவணன்




நீ
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?

உன் உதடுகள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
சொந்தமானது என
மறந்தது ஏன்?

தீ பிழம்பாய் சுட்டு எரிக்காமல்
அமிழ்தாய் இனிக்கட்டுமே உனது சொல்!

இனிய நாவே
கனிவான சொல்
உதிர்த்து
நீடூழி வாழ்!

-சாந்தி சரவணன்
9884467730

Maranam Vendi Kavithai By Sudha மரணம் வேண்டி கவிதை - சுதா

மரணம் வேண்டி கவிதை – சுதா

எழுதா வார்த்தை
ஒவ்வொன்றிலும் பிழைகள்..
சொல்லாத சொல்
ஒவ்வொன்றிலும் அர்த்தங்கள்…

சிந்தாத கண்ணீர்
துளிகள் ஒவ்வொன்றிலும்
மரணவலி…
இல்லாத உறவுகளில்
இருந்து கொல்லும்
அவமானங்கள்…

கேட்காத சொற்களில்
உணராத அன்பு…
படராத கொடியில்
படர்ந்து திரியும்
சிலந்திவலை…

புரியாத புதிராய்
ஏற்றுக்கொள்ளமுடியா
கடமைகள்…
வாழ்ந்த வாழ்வில்
வாழா நிமிடங்கள்…
சிரித்த பொழுதுகளில்
மகிழா நொடிகள்…

மழை வேண்டி பலர்
மழை வேண்டாம் என சிலர்…
என்னைப்போல் சிலர்
மரணம் வேண்டியும்…