Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது மாநாடு மதுரையில் நடந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பான இடத்தை பெற்றிருந்த போதிலும், அரசின் தன்மையைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன.

வெளியே கடவுள், உள்ளே மிருகம் !
ஆளவந்தான் திரைப்படத்தில் தனது இரட்டை நிலையினைப் பற்றி நாயகன் பாடும் வரிகளை உல்டா செய்து படித்தால், அதுதான் அப்போது இந்திய அரசின் தன்மையாக இருந்தது. உலக அரங்கில் அவர்கள் ஏகாதிபத்திய முகாமிற்கு மாற்றினை முன்வைத்தார்கள். ஆனால், உள்நாட்டில் முதலாளித்துவ பாதையில் சென்றார்கள்.

இந்த நிலைமை பலருக்கும் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. மூன்றாவது மாநாட்டில், ஒரு சகோதர பிரதிநிதியாக பங்கேற்று பேசிய பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹேரி பொலிட், ‘நேரு தலைமையிலான இந்திய அரசு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாக புரிந்து கொண்டிருந்தார்’. எனவே இந்தியா உட்பட உலகம் ழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் நேரு அரசை ஆதரிக்க வேண்டும் என்றார். அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலை எடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வைத்து, முற்போக்கு சக்தியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நடந்தது என்ன?
இந்திய விடுதலைக்கு பிறகு நேரு அரசாங்கம் முன்வைத்த முதல் ஐந்தாண்டு திட்டம், ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. அயல் துறை கொள்கையிலும் ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைக்கும் போக்கினையே முன்னெடுத்தார்கள். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை என்பதாலேயே கூட்டுச் சேராக் கொள்கையை முன்னெடுத்தார்கள். இந்த மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கான ஒன்றாக பார்த்தது. ஆனால், இது உள்நாட்டு அணுகுமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவருமா என்பதுதான் கேள்வி.

1949 ஆம் ஆண்டில்தான் மக்கள் சீனம் உருவாகியிருந்தது. கொரிய அமைதி ஒப்பந்தம் 1953 ஜூலை 27 ஆம் தேதி கையெழுத்தானது. இப்படியான உலக சூழலில்தான், இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுத்தது. அணுகுண்டுகளுக்கு எதிராகவும், சோசலிச நாடுகளுடன் கலாச்சார பரிவர்த்தனை, தொழில்நுட்ப பரிவர்த்தனை, வணிக தொடர்புகள் என்று பல்வேறு கவனிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. (இந்த சமயத்தில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ராணுவத்தளத்தை பாகிஸ்தானில் அமைத்தது)

உள்நாட்டில் இந்திய அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகள் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளின் நலன்களை முன்னெடுப்பதாக அமைந்தன. தொழில்துறையும், வேளாண் துறையும் சந்தித்த நெருக்கடிகள் அதிகரித்தன. நிலவுடைமைக்கு முடிவுகட்டுவதில் இந்திய அரசிற்கு விருப்பமே இல்லை. வகுப்புவாதமும் ஒரு முக்கியமான பிரச்சனையாக எழுந்தது. இவற்றிற்கு எதிராக ஒரு புரட்சிகர திட்டம் தேவைப்பட்டது.

மேலே சொன்னது ஒரு இரட்டை நிலையாகும். உலக அரங்கில் முற்போக்கு, உள்நாட்டு சூழலில் பிற்போக்கு என்று தோற்றமளித்த இந்திய அரசின் நிலைப்பாடு அதில் இருந்துதான் எழுந்தது. இதனைப் பற்றி குறிப்பிடும் இ.எம்.எஸ் – இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ‘ஏகாதிபத்தியத்தோடு முரண்பாடுகள் இருந்தன. உள்நாட்டில், இந்திய மக்களுடனும் அதற்கு முரண்பாடுகள் உள்ளன’ – என்று விளக்குகிறார்.

ஆரம்பத்திலேயே மேற்சொன்ன புரிதல் கட்சிக்குள் வரவில்லை. “அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலையை ஏற்கெனவே மேற்கொண்டுவிட்ட அரசு, காலப்போக்கில் படிப்படியாக அதன் உள்நாட்டுக் கொள்கைகளிலும் முற்போக்காக மாறும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது…” என்பதையும் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அயல்துறைக் கொள்கையில் காணப்பட்ட முற்போக்கான அம்சங்களுக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவில்லை…” ஆனால் இந்த “முற்போக்குத் தன்மை அரசின் உள்நாட்டுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும் என்ற வாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.” என்கிறார்.

அனைத்தையும் விவாதித்த மாநாட்டு, இந்தியாவின் உள்நாட்டுச் சூழலை கணக்கில் கொண்டு, தனது மதிப்பீட்டையும் நிலைப்பாட்டையும் மேற்கொண்டது. அதாவது, அயல்துறைக் கொள்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ற சுயேட்சையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

முதலாளித்துவ நலன்கள்
முதலாளித்துவ வர்க்கத்தினர், நிலப்பிரபுக்களோடும் இதர பிரிவினரோடும் முரண்பட்டார்கள். நாட்டை வேகமாக தொழில்மயமாக்க வேண்டும் என்று விருபினார்கள். ஆனால், பிற்போக்கு சக்திகள் இதற்கு எதிராக நின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ‘நிலவுடைமை எதிர்ப்பில் அரசோடு ஒத்துழைக்க முடியும். ஆனால், அரசுக்கு ஒரு புரட்சிகரமான எதிர்ப்பு என்பதே கட்சியின் நிலையாக இருந்தது.’

‘அதாவது புரட்சிகர தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினருக்கும் இடையே கூட்டு என்ற லெனினிய நடைமுறையை கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அகில இந்திய மாநாட்டிலும் அதற்குப் பிறகும் கடைப்பிடித்தது’ என்கிறார் இ.எம்.எஸ். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் மேற்சொன்ன நிலைப்பாட்டை ஏற்றார்கள்.

‘இந்திய அரசியல் பற்றி வெளிநாட்டுத் தோழர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் கூட, இந்திய கட்சி இங்கே கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை, தானே உருவாக்கிக் கொண்டது’

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

1952 கல்கத்தா பிளீனம்:
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் இருந்து ஒரு சதவீதத்தை கட்சிக்கு லெவியாக வழங்குவார்கள். அதே போல கட்சி உறுப்பினர்களுக்கென்று உரிமைகளும், கடமைகளும் உள்ளன. கட்சியில் ஒருவர் உருப்பினராகும் முன்பு அடிப்படைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற உட்கட்சி விசயங்களை 1952 கல்கத்தா பிளீனம் (சிறப்பு மாநாடு) விவாதித்தது. கட்சி விரிவாக்கத்தையும், கட்சி ஒற்றுமையும், தத்துவார்த்த – அரசியல் புரிதலை வலுவாக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன உட்கட்சி நடைமுறைகளைப் பற்றிய விரிவான விவாதமும் முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அதில் தோழர் இ.எம்.எஸ், ரன்னென் சென் மற்றும் ராமமூர்த்தி ஆகிய தோழர்களை உள்ளடக்கிய குழு, அமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளை வழங்க பணிக்கப்பட்டது. மூன்றாவது மாநாட்டில் தோழர் இ.எம்.எஸ் முன்வைத்த பரிந்துறைகள் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (India's path of revolution!) Web series 5 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 5 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (இந்தியாவின் புரட்சிப் பாதை !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்




1964 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டது. அது தனது திட்டத்தில் ‘மக்கள் ஜனநாயக’ புரட்சி என்ற தெளிவான தொலைநோக்கினை முன்வைத்தது என்பதை நாம் அறிவோம்.

உண்மையில், 1951 ஆம் ஆண்டில், முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற இலக்கினை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துக் கொண்டது என்பதை இ.எம்.எஸ் தனது நூலில் விளக்குகிறார். 1964 ஆம் ஆண்டில் கட்சி பிளவுற்ற பிறகு சி.பி.ஐ ‘தேசிய ஜனநாயகம்’ என்ற புதிய கோட்பாட்டினை உருவாக்கியது. உண்மையில் அதுவொரு வர்க்கப் போராட்ட திட்டமாக இல்லை. வர்க்க சமரசத்திற்கே வழிவகுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியோ ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற சரியான இலக்கையே தொடர்ந்து முன்னெடுத்தது.

இந்த இலக்கு, 1951 அக்டோபரில் கல்கத்தாவில் நடந்த சிறப்பு மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒன்றாகும். அப்போது ஏற்கப்பட்ட ஆவணத்தில் 53 பகுதிகள் இருந்தன.’நாட்டின் அனைத்து கனிம சுரங்கங்களும், கப்பல் கட்டும் தளங்களும், ஆலைகளும், பண்ணைகளும் தேசியமயமாக வேண்டும்’ என்ற புரட்சிகரமான அறைகூவலை விடுத்த அந்த திட்ட ஆவணத்தின் பகுதிகளை விளக்கி இ.எம்.எஸ் குறிப்பிடும் கருத்துக்களை பார்ப்போம்.

மக்கள் ஜனநாயகம் என்றால் என்ன?
அ) மக்கள் அனைவருக்கும் உண்மையான – நம்பகமான – விரிவான ஜனநாயக உரிமைகளை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தது போல பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் உறுதிப்படுத்துவது;
ஆ) அந்த ஜனநாயக அமைப்பில் தொழிலாளி மற்றும் விவசாயி மக்களின் தலைமையை உறுதிப்படுத்த வேண்டும்;
இ) அரசு மற்றும் அரசியல் அமைப்பின் தலைவனாக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும்

‘முதலாளிகளுக்குக் கூட விதிவிலக்கு இல்லாமல் பெரும்பான்மை மக்களாகிய தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துகிற ஒரு அரசு அமைப்பைத் தான்’ மக்கள் ஜனநாயகம் முன்வைக்கிறது. இந்த முடிவு நமது நாட்டின் வரலாற்று சூழலை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

தேர்தல்களில் பங்கேற்பு
மேலும் அந்த ஆவணம் தேர்தல்களை பற்றியும் பேசியது. ‘கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல்களைப் பயன்படுத்தி, பெரும்பான்மை பெற்று, ஆட்சியதிகாரத்தில் நீடிக்க முதலாளித்துவ வர்க்கம் அனுமதிக்கும் என்று முடிவு செய்து விடக் கூடாது. மாறாக, நாடாளுமன்ற அமைப்புகளையும் நிர்வாக ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் பலப்படுத்திட கம்யூனிஸ்ட்டுகள் முயல்கிறார்கள் என்பதை முதலாளித்துவ வர்க்கத்தினர் காண்பார்களானால் அதைத் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் – பலப்பிரயோகம் உட்பட – அவர்கள் மேற்கொள்வார்கள். அப்படியரு கட்டம் வருமானால், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி அதைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்திட வேண்டும்’

இது ஒரு எச்சரிக்கை. இதன் பொருளை கீழே காணும்படி விளக்குகிறார் இ.எம்.எஸ்., “நாடாளுமன்ற அமைப்புகளின் மூலம் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்கள் ஆதரவை வென்றெடுப்பதற்கான போராட்டங்களும் – இந்த போராட்டங்கள் மற்றும் ஆதாயங்களின் மூலமாக ஒரு புரட்சிகர இயக்கத்தை வலுவாகக் கட்டுவதும் – இந்தியப் புரட்சிப் பாதையின் துவக்கமாகும். ஆனால் முதலாளித்துவ படைபலத்துக்கு எதிராக புரட்சிகர வழிமுறைகள் மூலமாகப் போராட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் அதையும் செய்தாக வேண்டும்.”

தேர்தல்களில் பங்கேற்பது மட்டுமல்ல, பெரும்பான்மை பெறுகிற நேரங்களிலும் இடங்களிலும் அரசுப் பொறுப்பை ஏற்பதும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் பணியாகும். சோவியத் யூனியனிலோ, சீனாவிலோ, இருந்திராத, இந்தியாவுக்கே உரிய நிலைமையாக இது உள்ளது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிடைத்த பல்வேறு அனுபவங்களை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ், “இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமும் முயற்சிகளும் சோவியத்தைப் போலவோ சீனாவைப் போலவோ இதர சில சோசலிச நாடுகளைப் போலவோ பிரதியெடுத்தார்ப் போன்ற அரசு அமைப்பை ஏற்படுத்துவது அல்ல” என்பதையும் தெளிவாக்குகிறார்.

மேற்சொன்ன ஆவணம் கொடுத்த பார்வையின் அடிப்படையிலேயே 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலிலும், பிற தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்தார்கள். விடுதலைக்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியின் பகுதி என்ற முறையிலும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்தப் பெயரிலும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

இடது, வலது திரிபுகள்:
மேலே குறிப்பிட்ட ஆவணம், சில திரிபுகளைப் பற்றிய எச்சரிக்கையையும் முன்வைத்தது. பிற்காலத்தில் அத்தகைய திரிபுகளை எதிர்த்து போராட வேண்டி வந்ததை நாம் அறிவோம்.

‘தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி என்பது அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்’ ‘கோடிக்கணக்கில் உழைக்கும் மக்கள் பங்கேற்கிற தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் அன்றாடப் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்தான் உழைக்கும் மக்களின் ஜனநாயக இயக்கத்தின் ஆற்றல்மிகு அடித்தளமாகும்.’ என்பதை ஆவணம் தெளிவாக குறிப்பிட்டது.

· அவ்வாறு அல்லாமல், மக்கள் போராட்டங்களில் உறுதியாகக் காலூன்றாமல், முதலாளித்துவ நாடாளுமன்ற நிர்வாக அமைப்புகளில் செயல்படுவதும் தேர்தல்களில் பங்கெடுப்பதையும் மட்டுமே முன்னெடுத்தால் அது ஒரு வலதுசாரி திரிபு நிலைமையில் கொண்டு போய் தள்ளிவிடும்.

· மக்களைத் திரட்டாமல் அவர்களது போராட்டங்களுக்குத் தலைமை ஏற்காமல் முதலாளித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிவந்தால் அது இடது சாரி திரிபுவாதமாக சுருங்கிப் போகும்.

· அதே போல வர்க்கங்களின் சக உறவுகள் மற்றும் அரசியல் கூட்டணிகள் தொடர்பான பிரச்னைகளிலும் ஏற்படக்கூடிய வலது-இடது திரிபுகள் பற்றிய எச்சரிக்கைகளும் அதில் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, மக்கள் ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினரும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் கூட, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களும், குழுக்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது பகைமை கொண்டவர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது. எனவே முதலாளித்துவ பிரிவினர் தம்முடைய சொந்த வர்க்க நலன்களுக்காக ஜனநாயக லட்சியத்துக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளது. இது குறித்து பாட்டாளி வர்க்கமும் அதன் அரசியல் கட்சியும் தொடர்ந்து விழிப்புடன் இருந்ததாக வேண்டும்.

இதனை இ.எம்.எஸ் விளக்கும்போது சில உதாரணங்களையும் தருகிறார். “விவசாய அரங்கில், பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கத்தை நடத்துவதற்குக் கட்சி முயல்கிறது. ஆனால், பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினர் சில நேரங்களில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக மாறக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இது குறித்தும் விழிப்புடன் இருப்பது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பாகும். ஆனால் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயி மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டே, கட்சி இதனைச் செய்ய வேண்டியுள்ளது.”

சுருக்கமாக, நிலவுடைமை சக்திகளையும், ஏகாதிபத்திய சக்திகளையும், ஏகபோக பெருமுதலாளிகளையும் எதிர்த்து ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலை எடுக்கக்கூடிய எல்லாரோடும் ஒத்துழைக்க வேண்டும்; அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும், கூட்டாளிகளின் சமரச முயற்சிகளை எதிர்த்திட வேண்டு. இதுதான் மக்கள் ஜனநாயகத் தொலைநோக்குப் பார்வையின் பொருள் ஆகும்.

ஆம்‘நமது புரட்சிப் பாதை… இந்தியாவின் சொந்தப் பாதை, அதன் வடிவத்தை இந்திய மக்களே முடிவு செய்வார்கள்’

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (A time of chaos!) Web series 4 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (குழப்பங்கள் அலையடித்த காலம் !) 4

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்




கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, கல்கத்தாவில் இரண்டாவது மாநாடு தொடங்கியது. அப்போது இந்தியா விடுதலை பெற்று சில மாதங்களே ஆகியிருந்தன.

உலக அரங்கில் பாசிச சக்திகளை வீழ்த்துவதில் சோசலிச சோவியத் ஒன்றியம் முக்கியமான பங்கினை ஆற்றியது. ‘மக்கள் யுத்தம்’ பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது என்பதை காலம் நிரூபித்தது. மேலும், கட்சி எதிர்பார்த்ததை போலவே உலகில் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு செலுத்தும் காலனி ஆதிக்க முறை முடிவுக்கு வருவதற்கும் அது வழிவகுத்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், இந்தியாவில் நடந்த வரம்பற்ற ஏகாதிபத்திய சுரண்டல் மக்களை பஞ்சத்தில் தள்ளியது. அதற்கு எதிராக, மக்களோடு துணையாக கம்யூனிஸ்ட் கட்சி நின்றது. 1946 ஆம் ஆண்டில் ‘இறுதி தாக்குதலுக்கான’ தீர்மானத்தை கட்சி நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து தெபாகா போராட்டம், தெலங்கானா போராட்டம் (1946-1951), புன்னப்புரா-வயலார் போராட்டம், பீகார் – உ.பி மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம், அசாம் பழங்குடியினரின் ஆயுதமேந்திய தற்காப்புப் போர் ஆகியவை எழுச்சிகளாக வெடித்தன. இவைகளில் பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வீரச் சமர் புரிந்தார்கள் கம்யூனிஸ்டுகள்.

கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாகவும், இந்திய தேசிய ராணுவத்தினர் விடுதலையைக் கோரியும் மக்கள் எழுந்து அலையடித்தன.

விடுதலை பற்றிய மதிப்பீடு:
மேற்சொன்ன பின்னணியிலேயே இந்திய விடுதலை சாத்தியமானது. ஆனால், ஏகாதிபத்தியத்துடனான சமரசத்தின் விளைவாக இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நிகழ்த்தி முடிக்கப்பட்டது. (பிரிவினையின் போது, வகுப்புவாத சக்திகளின் கலவர முயற்சிகளை தடுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்றது).

இந்தியா பெற்ற விடுதலையை எப்படி மதிப்பிடுவது? ஆள்வது யார்? ஆளப்படுவது யார்? இனி கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? என்ற கேள்விகள் இயல்பாக எழுந்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இதனை விவாதித்து, “நாட்டின் சுதந்திரம் ஒரு யதார்த்தமான நிலையாகி விட்டதால் கட்சி தன் சக்தி முழுமையையும் செலுத்தி, மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிட சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல வேண்டும்” என்ற முடிவிற்கு வந்தது என்பதை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு வலுவான பிரிவு இந்த முடிவில் இருந்து மாறுபட்டதையும் குறிப்பிடுகிறார்.

“இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம் அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அதிகாரப்பூர்வமாக ஆட்சியதிகாரத்தைக் கைவிட்டாலும் கூட நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் உதவியோடு மறைமுகமாக ஆட்சியில் நீடிக்கவே செய்கிறார்கள்” என்று மதிப்பீடு செய்ததுடன், “புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தொலைநோக்குடன் ஒரு புரட்சிகர சக்தியாக கட்சி செயல்பட வேண்டும்” என்று அவர்கள் வாதிட்டார்கள். இந்த கருத்துக்கள் கட்சிக்குள் மோதிக்கொண்டன.

மேலும் தெலங்கானாவில் கம்யூனிஸ்டுகளில் தலைமையில் நடந்துவந்த எழுச்சியில், 2 ஆயிரம் கொரில்லா வீரர்களும், 10 ஆயிரம் தன்னார்வளர்களும் 3 ஆயிரம் கிராமங்களை கைப்பற்றி நிர்வகித்துவந்தார்கள். அங்கே 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களிடம் மறுவினியாகம் செய்யப்பட்டன. இப்படியான சூழலில், அதுவரை ஹைதராபாத் நிஜாமின் ஆளுகையில் இருந்த அந்த பகுதிகளில் 1948 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் நுழைந்து, தனது ஆளுகையில் எடுத்துக் கொண்டதும் இந்த காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

உலக நிலைமைகளில் மாற்றம்:
உலகப்போர் முடிந்தவுடனே, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கெடுபிடிகளை உருவாக்கி முன்னெடுத்தது (பனிப்போர்) அமெரிக்கா. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த போக்கிற்கு எதிரான சோசலிச நாடுகள் உறுதியான நிலையை எடுத்தார்கள். ஆனால் உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் இதில் மாறுபட்டார்கள். பாசிச எதிர்ப்பு போரில் ஏற்பட்ட ஒற்றுமையை தொடர்வதற்காக நெளிவு சுழிவாக இயங்கவேண்டும் என்றார்கள். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏர்ல் பிரௌடர் அங்கு கட்சியைக் கலைத்து விடவும் முடிவு செய்தார்.

இப்படியான திருத்தல்வாத போக்கின் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது. (1943 ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்டுவிட்டது என்பதால் தத்துவார்த்த குழப்பங்களை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அருகியிருந்தன).

கட்சிக்குள் அதிரடியான மாற்றங்கள்:
மேற்சொன்ன சூழல்கள் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் எதிரொலித்தன. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி, திருத்தல்வாத போக்கின் பிரதிநிதி என்ற விமர்சனத்திற்கு ஆளானார். அது தொடர்பான தீர்மானத்தை பி.டி.ரணதிவே முன்மொழிந்தார். பாகிஸ்தான் தொடர்பாக ஒரு தீர்மானத்தை பவானி சென் முன்மொழிந்தார். மாநாட்டின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், மத்தியக் குழுவிலும் இருந்தும் ஜோசி நீக்கப்பட்டார். பி.டி. ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர எதிரிநாடுகளாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியத்தின் விருப்பம் என்பதை அந்த மாநாடு சுட்டிக்காட்டியது.

குழப்பங்களின் ஆண்டுகள்:
ஆனால், கட்சியின் இரண்டாவது மாநாட்டில் தேர்வான மத்தியக்குழு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கூடவே இல்லை. அரசியல் தலைமைக்குழு ஒருமுறை மட்டுமே கூடியது. அந்த மத்தியக்குழுவின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே, மத்தியக் குழுவின் முழுமையான சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி தன்னை சுய விமர்சனம் செய்துகொண்டதுடன் பி.டி.ரணதிவே பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதுடன், இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரின் செயல்பாடுகளை பரிசீலிக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.

தெலுங்கானா போராட்டத்தின் ஒரு முன்னணி தலைவரான சி.ராஜேஸ்வரராவ் பொதுச் செயலாளராகவும் பி.சுந்தரய்யா, எம். பசவபுன்னையா மற்றும் ஆந்திராவின் வேறு சில தோழர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு புதிய மத்திய குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மத்திய குழு ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. பி.டி.ஆர்., தலைமை போன்றே இந்த தலைமையும் தனிக் குழுவாதத்தன்மை கொண்டதாக விமர்சனத்திற்கு ஆளானது.

பிறகு, மேற்சொன்ன இரண்டுவிதமான போக்குகளுக்கு எதிராக ஒரு புதிய மத்தியக் குழுவும், அரசியல் தலைமைக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன் செயற்குழு அமைப்பாளராக அஜாய் கோஷ் முடிவுசெய்யப்பட்டார் என்கிறார் இ.எம்.எஸ்.

சோவியத் ரஷ்யாவின் உதவி:
விடுதலை பெற்ற இந்தியாவிற்கு, சோவியத் ரஷ்யாவின் உதவி தேவைப்பட்டது. அதைப் போலவே, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த சிக்கலை தீர்க்கவும் சோவியத் கம்யூனிஸ்டுகள் கைகொடுத்தார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்கள் அஜாய் கோஷ், எஸ்.ஏ. டாங்கே, பசவபுன்னையா, ராஜேஸ்வரராவ் ஆகியோர், ஸ்டாலின் தலைமையிலான சோவிய ரஷ்யாவின் பிரதிநிதிகள் குழுவை, அங்கு சென்று சந்தித்தார்கள். உரையாடினார்கள்.

இந்த சந்திப்பில், கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று ஒரு திட்ட ஆவணமும், கொள்கை அறிக்கையும் உருவாக்குவது அவசியம் என்று முடிவானது. அதற்கான உதவியை செய்த சோவியத் ஒன்றியம், இந்த ஆவணங்களை உருவாக்குவதற்கான மார்க்சிய – லெனினிய அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கு தெளிவு உண்டு ஆனால் இந்தியாவின் கள நிலைமைகள் குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. எனவே இந்த ஆவணங்கள், இந்தியாவில் கம்யூனிஸ்டுகளால் விவாதிக்கப்பட்டு திருத்தவோ, ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

எதிர்க் கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சி:
அந்த ஆவணங்கள் விவாதிக்கப்பட்டு திருத்தங்களோடு ஏற்கப்பட்டன. எனினும், கட்சிக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் சாதாரணமாக அடங்கவில்லை. அந்த குழப்பம் நடைமுறை பணிகளோடு சேர்த்து நீண்டகால இலக்கான சோசலிசத்தை எவ்வாறு எட்டுவது என்ற பாதையை தீர்மானிப்பதிலேயே பாதிப்பை ஏற்படுத்தியது.

மறுபக்கம், மக்களிடையே செல்வாக்கு அதிகரித்தது. விடுதலைக்கு முன்பே கட்சியால் தலைமைதாங்கப்பட்ட அடுக்கடுக்கான போராட்டங்களும், அளப்பரிய தியாகங்களும் தனித்துவமான இடத்தை கட்சிக்கு ஏற்படுத்தின. மற்ற எல்லா எதிர்க் கட்சிகளும், நாடாளுமன்றத்துடன் தங்கள் பணிகளை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களோடு நின்றது.

வீரம் செறிந்த போராட்டங்களை வழிநடத்திக் கொண்டேதான் தலைவர்கள் இந்த தத்துவார்த்த போராட்டத்தையும் முன்னெடுத்தார்கள். இந்த பின்னணியை விவரித்து எழுதும் தோழர் இ.எம்.எஸ் கூட மாநாடுகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்ததையும். பிறகு கூட்டான முடிவுகளுக்கு வந்து சேர்ந்ததையும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்