பிச்சுமணியின் கவிதைகள்
குழந்தை மனசென்பது
வேறொன்றுமில்லை
தான் விரும்பிய
எல்லாவற்றிற்கும்
உயிர் தருவதுதான்.
—-
உதிரும் இலைகள்
காற்றின் மீது கோபப்படுவதே
இல்லை..
அது அழைக்கும் இடங்களுங்கெல்லாம்
கூடவே செல்கின்றன.
—-
மொழியின் எழுத்துக்களை
முதன் முதலில் அறியும்
குழந்தையிடம்
“பார்க்காமல் எழுது” என்றால்
கண்களை மூடிக் கொண்டு எழுதுவது
இலக்கணப் பிழை இல்லைதானே..
– பிச்சுமணி
பாவ கணக்கில் கவிதை – கனிராஜ் சௌந்திரபாண்டியன்
நினைவுச்சிறகுகளை விட்டுச்செல்லும்
புல்லினங்களின் வருகைக்காக காத்திருக்கும் கானகங்கள்
ஓலையேதும் எழுதுவதில்லை
உடன்படிக்கை ஏதுமில்லை
பகலை எங்கோ தின்று
ஒரு பிரகாசமான இருளுக்காய் வரும்
அவைகளுக்கு அறிமுகமானான்
மனிதன் யாரென்று..!
கனிராஜ் சௌந்திரபாண்டியன்
இராம்நாடு
எப்போதும் எழுவேன் மொழிபெயர்ப்பு கவிதை – இரா. இரமணன்
உங்களின்
கசப்பு நிறை திருகல் பொய்களால்
சரித்திரத்தின் பக்கங்களில்
என்னை
அழுத்தி வைத்திருக்கலாம்.
குப்பை கூளங்களுக்குள் பரப்பி வைக்கலாம்.
ஆனால் அப்போதும்
அந்த தூசுபோல் நான் மேலெழுவேன்.
என் துணிச்சல்
உங்களை
நிலைகுலைய வைக்கிறதா?
உங்கள் முகத்தில்
சோகம் ஏன் அப்புகிறது?
என்னுடைய வீட்டில்
எண்ணெய் கிணறுகள்
பீச்சி அடிப்பது போல்
நான் நடப்பதாலா?
சூரியனிலும் சந்திரனிலும்
ஏற்றங்கள் நிச்சயமாக நடப்பது போல
நம்பிக்கை உயர உயரமாய்
துள்ளி எழுவது போல
இனியும் நான் எழுவேன்.
ஆத்மாவின் அழுகுரலால்
பலவீனப்பட்டு
கண்ணீர் துளிகள் வீழ்வது போல்
என் தோள்கள் துவள்வதையும்
குனிந்த தலை கவிழ்ந்த கண்களுடன்
நான் உடைந்து போய் நிற்பதையும்
காண விரும்பினீர்களா ?
என் ஆணவம்
உங்களைக் காயப்படுத்துகிறதா?
என் புழக்கடையில்
தங்கச் சுரங்கம் இருப்பது போல்
நான் சிரிப்பது
உங்களுக்கு
அவ்வளவு சங்கடமாக
இருக்கிறதல்லவா?
வார்த்தைகளால் நீங்கள்
என்னை துளைக்கலாம்.
பார்வையால் துண்டாக்கலாம்.
நிரம்பி வழியும் வெறுப்பினால்
நீங்கள் என்னைக் கொல்லலாம்.
ஆனால் அப்போதும்
காற்றைப் போல
நான் எழுவேன்.
என் கவர்ச்சி
உங்களை வருத்துகிறதா?
என் தொடைகளில்
ரத்தினங்கள் இருப்பதுபோல்
நான் நடனமாடுவது
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?
சரித்திரத்தின் அவமானக் குச்சுகளிலிருந்து
நான் எழுகிறேன்.
வேரோடிப்போன வேதனையின்
கடந்த காலத்திலிருந்து
நான் எழுகிறேன்.
நான் ஒரு கருப்பு சமுத்திரம்.
துள்ளிக் குதிக்கிறேன்.
பரந்து கிடக்கிறேன்.
விம்மியும் பொங்கியும்
ஏற்றங்களில் மிதக்கிறேன்.
பயங்கரமும் பயமும் விரவிய
இரவுகளை உதறி
மேலெழுகிறேன்.
அற்புதமாய் ஒளி வீசும்
விடியற்காலையில் எழுகிறேன்.
என் மூதாதையரின் புதையல்கள் கொண்டு வரும்
நான்
அடிமைகளின் கனவாகவும் நம்பிக்கையாகவும்
விளங்குகிறேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.
மாயா ஏஞ்செலோ அமெரிக்கக் கவிஞர். (1928-2014). சரிதையாளர்;குடியுரிமை செயற்பாட்டாளர். ஏழு சுய சரிதைகள்,மூன்று கட்டுரைத் தொகுதிகள், பல கவிதை நூல்கள், நாடகம், திரைப்படம்,தொலைக்காட்சி படைப்பாளர். பல விருதுகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவுர முனைவர் பட்டங்களும் பெற்றவர்.
எழுத்தால் நகர்த்து எண்ணத்தை உயர்த்து கவிதை – கார்கவி
ஊற்றோடு ஊற்றாக மை ஊற்றப் பழகு..!
செல்லும் இடமெல்லாம்
நம்பிக்கை கொண்டு செல்லப் பழகு..!
உயிர் மெய் உனதாக்கு..!
உலகமே நமக்கென பறைசாற்று..!
ஏணியை வானுக்குப் போடு…!
எட்டாத நிலை வந்தால் எழுதுகோல் எடு…!
உலகத்தை ஒருகையில் ஏந்து..!
உண்மையை சாட்டையாக்கு…!
தளர்வுகளில் ஆசை ஊற்று…!
தயங்காமல் கடல் செய்…!
தற்குறி என கூறலாகாதே…!
தட்டிக் கொடுப்போரிடம் முதுகுடன் கண் கொடு…!
வானுக்கு மை நிரப்பு..!
சின்னதொரு நம்பிக்கை வை..!
நாளை உன் வாசல் வர வை….!
ஆணுக்கு பெண் தேடு..!
பெண்ணுக்கு ஆண் தேடு..!
இரண்டிலும் நீள் உண்மை தேடு…!
கடலுக்குள் முத்தை தேடு..!
கடைசியாக ஒரு சொட்டு நீர் விடு..!
அண்டத்தில் புது பூமி தேடு…!
அங்குலம் நிறைந்த கைரேகை தேடு..!
அணு அளவு அணிசேர்..!
எவனாளாலும் வெற்றியை கொள்..!
அகிலம் நிறைந்த வெற்றி காண்..!
ஏணி ஏறி நடைபோடு
எழுத்தால் நகர்த்து-உன்
எண்ணத்தை உயர்த்து…!
காதலித்துப் பார் கவிதை – சரவிபி ரோசிசந்திரா
பேசாத மௌனமொழிக் கவிப்பாடும்
நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும்
தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும்
சிந்தும் புன்னகையில் தேனூறும்
வட்டில் உணவின்றி வயிறு நிறையும்
கண்ணீரில் மனக்காயங்கள் குறையும்
தியானம் செய்யாமல் தத்துவம் பிறக்கும்
கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாய் உருவெடுக்கும்
கடுங்கோடையில் பூ மேனிக் குளிரும்
யாருமின்றி அழகியப் பூவிதழ் உளறும்
கட்டாந்தரையில் இனியக் கனவுகள் மிதக்கும்
பிடிக்காதது எல்லாம் இப்போது பிடிக்கும்
காதலித்துப் பார்
உளியின்றி சீரியச் சிற்பம் வடிப்பாய்
உள்ளம் உருகி மெழுகாய் ஒளிர்வாய்
கடிதத்தை எழுதி கசக்கி எறிவாய்
எறிந்ததை மீண்டும் படித்து ரசிப்பாய்
சிறியமுள் வேகமாய்ச் சுற்றிடுவதாக நினைப்பாய்
பாகற்காயைத் தேனமுதாய்ச் சுவைப்பாய்
விண்ணின்றி முகிலில் வெண்ணிலவு
தெரியும்
இரவில் நட்சத்திரங்கள் சீக்கிரம் மறையும்
கைக்கோர்த்து நடக்கையில் சாலைகள்
விரியும்
விழி அசைவில் வலிகள் புரியும்
காத்திருக்கும் சுகத்தினை இதயம் அறியும்
தொலைதூரம் வந்தாலும் நெருக்கம் இணையும்
காதலித்துப் பார்
அலைபேசி உன் ஆருயிர் அம்மாவாகும்
குறுஞ்செய்தி உற்ற உயிர்த் தோழனாகும்
பகலவன் புலராமல் பொழுது அதிகமாகும்
கழுதையின் குரல் இனிய கானமாகும
உடல் மொழி தெளிவாய்ப் புலனாகும்
உள்ளுணர்வுகள் மனக்கடலில் சங்கமமாகும்
தனிமையின் சுகத்தைச் சிலாய்த்து
வர்ணிப்பாய்
உன்னை நீயே உளமாற
விமர்சிப்பாய்
எறிந்தக் குப்பையைச் சேகரித்து வைப்பாய்
சேகரித்ததை நள்ளிரவில் எழுந்து பார்ப்பாய்
குடையை விரித்து மழையைப் பிடிப்பாய்
ஓவியம் வரைந்து தலையணையில்
மறைப்பாய்
காதலித்துப் பார்
தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
கல்லூரி விழாவிற்கு வீட்டில் உள்ளவர்களையெல்லாம் அழைத்துப் பார்த்தாள் தங்கச்சி. அவரவருக்கு ஒரு வேலையிருந்ததால் யாரும் வர ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டிலிருந்து விழாவிற்கு யாரையாவது கூட்டிவரவேண்டும் என்பது கல்லூரியின் வேண்டுகோள்.
அந்த வீட்டின் மூத்த அண்ணன் முருகேசன் அங்கே தான் இருக்கிறான் அதிலும் அவனுக்கு வேலைவெட்டி எதுவும் கூட இல்லை ஆனால் தங்கை அவனை விழாவிற்கு அழைக்கவில்லை. தங்கை தன்னை அழைக்கமாட்டாளா என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த அண்ணன் அந்தச் சூழலில், “நா வர்றேம்மா” என்கிறார். அவளோ, “நீ யாரு வர்றேனர்னு சொல்ற” என வெறுப்பை உமிழ. “நா ஓ மூத்த அண்ணம்மா” என்று கண்கலங்கக் கூறுகிறான், “அண்ணன்னு சொன்னா போதுமா ஒரு அண்ணனா இந்த வீட்டுக்கோ எனக்கோ என்ன பண்ணிருக்க இதுவரைக்கும்” என அண்ணனின் இதயத்தை மண்குடம் போல் போட்டுடைத்தாள்.
தங்கையின் கேள்விக்கு பதிலற்று நிற்கும் அண்ணன் சிறுவயதிலேலே ஊரை விட்டோடி வசப்படாத பிழைப்பால் வாழ்வில் தோல்வியடைந்து திருமண வயதையும் தாண்டிப் போய் வந்திருப்பவன். உள் காயத்தை சொல்லும் ஒரு துண்டுப் பாடலுக்கான சூழல் இது. படம் வெயில். இயக்குநர் நண்பர் வசந்தபாலன். இசை ஜி.வி. பிரகாஷ்குமார். இது அவருக்கு முதல் படம் எனக்கு மூன்றாவது படம்.
“செத்தவடம் செத்துப்போனேன்
சொந்தம் சொன்ன வார்த்த
யாத்தே… பத்துத்தல நாகம்போல
கொத்துதடா இந்த வாழ்க்க
தெக்க போறதா நா வடக்க போறதா
தெச ஒன்னும் தெரியலியே
கொலகாரப் பயமக்கா – என்ன
கொன்னுதான் போடுங்களேன்”
இப்படியாக வெயில் படத்தில் தொடங்கிய எனக்கும் நண்பர் இசை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்குமான நட்பு மிக மிக அலாதியானது. என் எழுத்தை அவர் பெரிதும் நேசிப்பவர் என்பதற்கு அவருடைய படங்களில் இப்போது வரை நான் பாடல் எழுதிக் கொண்டிருப்பதே சாட்சி. அதுபோக நானும் அவருடைய இசைக்கு விசிறி.
எனது பணியான் கிராமத்தில் சுடுதண்ணி ராசு மாமா மளிகைக் கடையில் எண்ணெய் வாங்க சீசாவைக் கொண்டு போனால் அதில் உழக்கு பொங்கி வழிய வழிய ஊற்றி நம் மனதை நிறைப்பார். ஐம்பது பைசாவுக்கு அவர் கொடுக்கும் புளி உருண்டை அந்த வயதில் என் கைக்கடங்காது. ஒரு தேங்காயில் கூட ஏழெட்டுச் சில்லுக்குமேல் போடமாட்டார். அவரின் தாராள குணத்தால் ஊருக்கே பிடித்திருந்தது அந்தக் கடை. ஆனால் எனக்குப் பிடித்ததற்கு அந்தக் கடையின் அடுத்த வாரிசாக பொறுப்பேற்ற அவரது மகன் ஜெயபாண்டி. அவர் எனக்கு நண்பர். அவரையும் நான் மாமா என்று தான் அழைப்பேன். அவர்தான் எனக்கு வைரமுத்து கவிதை பாடும் ஒலிப்பேழையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
பதின்மத்தின் இறுதியில் அவர் கடையில் நான் வைரமுத்து குரல் வழிக் கவிதையை அருந்தி அருந்தி அழகானேன். அவர் புதுக்கவிதையை பாடல் போல் வாசிப்பார் அல்லது அவர் கவிதையை பாடல் போல் யாரும் வாசிக்கலாம். நானும் அவர் கவிதையை அவரைப் போலவே காடுமேடெல்லாம் வாசித்துக் கிடந்திருக்கிறேன். இந்த அனுபவமும் நான் எதிர் காலத்தில் பாட்டுக்கட்டத் துணை புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தோடு எங்கள் ஊரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் அண்ணனின் நட்பும் அவருடனான பெரும் பயணமும் ஊக்குவிப்பும் எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. அவர் பஜனை பாடல்கள் எழுதுவார். அறிவொளி இயக்கம் பாடல்கள் எழுதுவார். அதே காலகட்டத்தில் என் சக பயணியான நண்பர் ரோஸ்முகிலனும் நானும் கருமாத்தூர் தாழைக் கோவிலிலும் அவரது பாட்டி வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு திரைப்பாடல்களின் கவித்துவத்தை பிரித்து பிரித்துப் பேசிக்கிடந்திருக்கிறோம். அவரும் அருமையான பாடலாசிரியர். அவர் பிற்காலத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார்.
ஓடு அல்லது சீகம்புல் வேய்ந்த வீடுகளின் திண்ணைகளில் ஆட்டுக்குட்டிகள் புழுக்கைகளை உதிர்த்துவிட்டு குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருக்குங்கள். ஊருக்கெல்லாம் புழுக்கைகளாக தெரிந்தவை எனக்கு எழுத்துக்களாகத் தெரிந்தன. என் அம்மத்தா சுளகில் கேழ்வரகு போட்டு மேவி புடைத்து கல் தூசி தும்பு பிரிக்கும் போது ஒண்ணரை அடி தூரம் வரை ஆகாயம் பார்த்து சுளகிறங்கும் கேழ்வரகில் ஒன்றுகூட தவறி தரையில் விழாது. அதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு கவிதையும் கதையும் கூட அதன் கருவிலிருந்து ஒரு எழுத்தைக்கூட சிந்தவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புஷ்பம் சின்னம்மாவும் ரஞ்சிதம் சின்னம்மாவும் ஒரு உரலில் ஆளுக்கொரு உலக்கையை எடுத்துக்கொண்டு எப்படி மாற்றி மாற்றி தாளத்தில் நெல் குத்த முடியுமென ஆச்சரியப் பட்டதுண்டு, இதில் நெல்லைக் கொத்துவதற்கு எதற்கும் அஞ்சாமல் உரலுக்குள் தலையைவிடுவதற்காக வரும் சேவலையும் காலால் எட்டி உதைத்து தொரத்திவிட வேண்டும்.
என்னை என்றைக்கும் என் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. என்னால் உழைப்பாளர்களின் வாசமின்றி வாழ முடியாது. அப்படித்தான் ஒரு நாள் ஒரு பாடல் எழுதத் தோன்றியது. அதற்கு நண்பர் கரிசல் கருணாநிதி மெட்டமைத்தார். தமுஎகச மேடையின் நள்ளிரவுகளில் அந்தப் பாடலை அவர் பாடுகையில் கேட்பவர் கண் குளமாகிப் போவதைக் கணக்கற்ற முறை கண்டிருக்கிறேன். இப்படித்தான் தொடங்கும் அந்தப்பாடல்,
“ஒரு ஊருல
ஒரே ஒரு கிழவி
அவ உருவம்
ஒடஞ்ச பாதி வளவி
வெத்தல போட்ட வாயி
காவிய உடுத்தும் – அவ
துப்புன ஒடமெல்லாம்
ஓவியம் கிடக்கும்
கட்ட சாஞ்சிக்கிட
கையகல வீடு
வாழுதய்யா தனியா – ஒரு
வயசான கூடு”
“அவள் பெயர் தமிழரசி” திரைப்படம் விஜய் ஆண்டனி இசையில் நண்பர் இயக்குநர் மீரா கதிரவன் முதன் முதலாக இயக்கியது. என் நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒரு பாடல் வாய்ப்புத் தருவதாச் சொல்லி பாடலுக்கான மெட்டை எனக்குத் தந்தார் இயக்குநர். ஒரு பாட்டுக்கு ஒன்பது பாடல் எழுதிச்சென்று காண்பித்தேன். என் எழுத்துக்களும் உழைப்பும் இயக்குநருக்கு மிகவும் பிடித்துப் போனது. இசை இயக்குனர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் எழுத்துக்களைப் பிடித்துப்போக அந்தப் படத்தில் ஐந்து பாடல்களை எழுதினேன். அவள் பெயர் தமிழரசி படம் தான் என்னை ஒரு எழுத்தாளனாக தமிழ் சமூகம் அறிந்துகொள்வதற்கான இடத்தைத் தந்தது.
இயக்குநர் மீரா கதிரவன் ஒரு கவித்துவமான ஆள். அவர் என் பாடல்களில் மட்டும் அந்த கவித்துவத்தை ரசிக்கவில்லை. அவரோட ஸ்கிரிப்ட்டை நான் வாசிக்க நேர்ந்தபோது அந்த ஸ்கிரிப்ட்டின் ஒவ்வொரு அங்குலமும் கவித்துவமாகத்தான் இருந்தது. அந்த படத்தின் பாடல்கள் மிக நன்றாக வந்ததற்கு காரணம் அவரின நுட்பமான கதை நகர்த்தலும் அவர் எனக்குத் தந்த சுதந்திரமும் தான். காடு கரை தெரு திண்ணையென அலைந்து திரிந்து விளையாடும் சிறுவர் கூட்டத்தின் புழுதி மணக்கும் சூழல் தான் இயக்குநர் எனக்கு முதலில் தந்த மெட்டு அதற்குமுன் அதே படத்தில் காதலியைப் பிரிந்திருக்கும் காதலனின் கண்ணீர் மாலையில் உங்களுக்காக ஒரு சரணம்.
“நீ மொகம் பாக்கும் கண்ணாடில
ஓ நெத்திப் பொட்டு இருக்கு
நீ குளிச்ச எடத்திலதான்
மஞ்ச துண்டு கெடக்கு
விட்டத்தில செருகிவச்ச
கோழி றெக்க இருக்குதடி
நீ சிக்கெடுத்துப் போட்டமுடி
காலச்சுத்திக் கெடக்குதடி
ஒன்னச் சுத்தி எல்லாமே
உம்பேரத்தான் சொல்ல – என்ன
ஒத்தையில விட்டுப்புட்டா
நானெங்க சொல்ல”
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
எட்டு ஒன்பது வயதுகளில் மொத்த வானத்தையும் பொதி மூட்டையைப் போல் தலையில் கட்டிச் சுமந்து திரிந்த நான் இன்னும் இறக்கி வைக்கவில்லை. அந்த நாட்களில் எங்கள் பணியான் கிராமத்தில் விருமாண்டி மாமா டீ கடை ஒன்றிருக்கும். தினத்தந்தி படிக்கிற சாக்கில் பத்துப் பாடல்களைக் கேட்டு விடுவேன் அல்லது பத்துப் பாடல்கள் கேட்கிற சாக்கில் தினத்தந்தியின் அத்தனை பக்கங்களையும் மனப்பாடம் செய்துவிடுவேன். ஆனால் ஒரு நாளும் டீ குடித்ததில்லை.
பார்க்கிற விசயமோ கேட்கிற விசயமோ நமக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை செய்து பார்த்தால் என்னவென்று எல்லாருக்கும் தோன்றுவது போலத்தான் எனக்கும். வைகாசித் திருவிழாவின்போது நடக்கும் நாடகங்களில் பபூன் டான்ஸ் காமிக் இருவரின் ஆடலும் ஆர்மோனியம் வாசிப்பவரின் பாடலும் வெகுவாக என்னை ஈர்த்தன. இழவு வீடுகளில் கோமாளியின் நகைச்சுவையும் ராஜபார்ட்டின் நேர்மையும் பெண் வேடத்தில் நடிப்பவர்களின் வசீகரமும் என்னை ஆட்டுவித்தன. இளம் பெண்களுக்கு பேயோட்டும் போது கோடாங்கியின் உடுக்கை இசையும் மண்டியிட்டு மாராப்பு சேலையை பின்கழுத்தோடு முடிச்சிட்டு தலைவிரித்து ஆடும் ஆட்டமும் அந்த முடி நடுவே தெரியும் உக்கிரப் பார்வையும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. இவை எல்லா வற்றுக்குள்ளும் கதைகளும் வார்த்தைகளும் பின்னிக் கிடந்தன.
எங்கள் கிராமத்தில் ரோட்டில் போகிற வருகிறவர்கள் எல்லாம் பாட்டும் சொலவடைகளுமாய் வீசி விளையாடினார்கள். எனக்கு பித்து தலைக்கைறி சங்கீதம் தெரிந்தே சேவல் கூவுகிறதெனவும், பாட்டி ரிதத்தில் வெற்றிலை இடிக்கிறாளெனவும், ஓட்டைக் கூரையில் ஒழுகும் மழைநீர் பாத்திரத்தில் தாளமிடுகிறதெனவும் தோன்றியதெனக்கு. நாகமலையில் விறகு பொறுக்குகிற மகளை வீட்டிலிருந்து தாய்காரி அழைப்பது
எத்தகைய உன்னதமான ராகம். மாலை நேரம் பஞ்சாரத்தில் கோழிகளை அடைக்கக் கூப்பிடுவது ஒரு பாட்டு. நாயை சோறு திங்கச் சொல்வதொரு பாட்டு. ஈசல் பிடிக்க பாட்டு எருமை மேய்க்கவொரு பாட்டு.
ஏர் உழுகப் பாட்டு. எழவு வீட்டில் பாட்டு. இப்படி பாட்டாலே நிரம்பிக் கிடந்த பூமியில் முளைத்தேன் நான். கதை ஊட்டி வளர்த்த லட்சுமி அம்மத்தாளும் சொக்கர் சியானும் நினைவின் ஆழத்தில் மௌனிததுக் கிடக்கிறார்கள். கதை வேறு பாடல் வேறு அல்ல. பாட்டிற்குள் கதை இருக்கும் கதைக்குள் பாட்டிருக்கும்.
“நாகமல ஓரத்தில
நாலுபேரு போயில
சாரக்கெடா மொகத்துப்பலே
சாடையென்ன எம்மேல”
என்கிற காதல் பாடலும்
“ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு
மாடு வயித்துக்கு மேஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறு
ஆல எலபோல காஞ்சிருக்கு”
என்கிற சமூகப் பாடலும் தான் எனக்கு பாடல் மீது தீராத காதலை ஏற்படுத்தியது. இவ்விரு பாடல்களுக்கும் எழுதியவர் பெயர் இல்லையெனினும் அவ்விருவரே என் பாட்டு ஆசிரியர்கள். எங்கள் ஊரில் 1994 ல் நடந்த மதுரை மாவட்ட அளவிலான அறிவொளி இயக்க நாடகப் பயிற்சிப் பட்டறையில் நானும் ஒரு குழுவிற்கு பயிற்சியாளனாக இருந்தேன். அப்போது தான் என் முதல் தனிப்பாடலை எழுதினேன்.
“சோழவந்தான் வெத்தலையே – என்
சோகம் இன்னும் தீரலியே
தனியா பேசக்கூட வெக்கப்பட்டாயே – இப்போ
வேற ஒரு மச்சானுக்கு வாக்கப்பட்டாயே
தாலிக் கடை நான் இருக்க – ஒரு
தாலி தேடிப் போனாயோ”
இப்படித்தான் பல்லவி தொடங்கும். 7 நாட்கள் நடந்த பயிற்சி பட்டறையில் இறுதி நாளன்று ஒவ்வொருவரும் பயிற்சி அளிக்கப்பட்ட அத்தனை அறிவொளிப் பாடல்களையும் விட “சோழவந்தான் வெத்தலையே” பாடல் தான் மனதில் தங்கிப்போனது என்று சொன்னபோது கண்களில் நீர் சொல்லாமல் சுரந்தது. அப்போது எனக்கு வயது 18. ஒரு மழை நாளில் விருமாண்டி மாமா டீ கடையில் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. உட்கார இடமின்றி நின்று கொண்டிருந்தபோது தான்,
“ஒரு நாள் இதே டீ கடையில் என் பாடலும் ஒலிக்க வேண்டும்” என்று பெருங்கனவு கொண்டேன். களையெடுக்கக் கூலியாக மூன்று ரூபாய் பெற்றுவந்து எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழைத்தாயின் பிள்ளைக்கு இது பெருங்கனவன்றி வேறென்ன.
1999 ல் சென்னையை நோக்கிப் பயனமானேன் பாடலாசிரியராக வேண்டும் என்பதற்காக அல்ல. இயக்குநராக வேண்டும் என்பதற்காக. வந்து ஒரே மாதத்தில் சின்னத்திரையில் ஸ்டில் ஃபோட்டோ கிராபர் குமார் அண்ணன் சொல்லி “மந்திரவாசல்” நாடகத் தொடரில் இயக்குநர் C.ஜெரால்டு அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அதே காலகட்டத்தில் அண்ணன் ஐந்துகோவிலான் அவர்களின் அறிமுகத்தில் இசை அண்ணன் சாந்தக்குமார் அவர்களிடம் சில நாட்கள் மெட்டுக்குப் பாட்டெழுதிப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தேன். நான் காலையில் பயிற்சி வகுப்பு முடித்து உதவி இயக்குநர் பணிக்குச் செல்வேன். கல்லூரி முடித்து மாலை பயிற்சி வகுப்பிற்கு வந்து செல்வார் நண்பர் நா. முத்துக்குமார். நாங்கள் அங்கே சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் அவர் என் பாடல் வரிகளைப் பாராட்டியதாக இசை அண்ணன் என்னிடம் சொல்வார். நான் ஆயிரம் பாட்டெழுதி ஓடிவர நீ, ஒரு பாட்ட எழுதி வரலாற்றுல இடம் பிடிச்சிட்டியேயா” என கடைசியாவும் என்னைப் பாராட்டித்தான் போனார் நா.முத்துக்குமார். இதுதான் அவர் பாராட்டிய பாடலின் பல்லவி.
“ஆத்தா ஓஞ்சேல – அந்த
ஆகாயத்தைப் போல
தொட்டி கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க
அப்பனுக்குத் தல துவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான்
செத்தாலும் என்னப் போத்த வேணும்”
பாடலாசியர்களால் ஒரு படத்தை ஜனரஞ்சக ரசனையோடு இயக்கிவிட முடியாது என்கிற தப்பிதம் திரையுல தயாரிப்பாளர்களிடம் இருந்ததால் நான் பாடல் எழுதும் வித்தையை மறைத்து வைத்துக்கொண்டு இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் “விருமாண்டி” படப்பிடிப்பில் நண்பர் கரிசல் கருணாநிதி பாடிய
“கொலகாரி வாரா – என்ன
கொல்லத் தானே போறா”
எனும் எனது பாடலைக் கேட்ட நடிகர் பசுபதி, தான் கதாநாயகனாக நடிக்க இருந்த “ஆயுள் ரேகை” எனும் படத்தின் சூழலுக்கு இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் இதை எழுதியவர் யார் என்கிற கேள்வியில் தொடங்கி இறுதியாக படத்தில் கருணாநிதியின் குரலிலேயே நண்பர் அப்பாஸ் ரஃபீக் இசையில் பாடல் பதிவு செய்தார் இயக்குநர் அசோக். ஆனால் படத்தில் நாயகனாக பசுபதி நடிக்கவில்லை. திரையில் தென்னவன் தோன்றி என் திரைப்பயணத்தின் முதல் பாடலுக்கு உருவம் தந்தார். என் எழுத்தை நேசித்த இயக்குநர் அசோக் அதே பணத்திற்காக இன்னொரு பாடலையும் எழுதச் சொன்னார் எழுதினேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மேடைக்காக மட்டுமே எழுதிக்கொண்டு திரைத்திரையில் ஒளிந்து கொண்டிருந்த நான் “ஆயுள் ரேகை” படத்திற்காக நான் ஒத்துக்கொண்டதற்கு காரணம் அது எனக்கு திருமணமாகியிருந்த 2004 ம் வருடம். வாழ்வை நகர்த்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதைத் தொடர்ந்து எனக்கு அவள் பெயர் தமிழரசி, ஆடுகளம் ஆகிய திரைப்படங்கள் என்னை உலகறியச் செய்தன.
முதல் பாடல் வெளியான ஆண்டு அம்மாவைப் பார்ப்பதற்காக எங்கள் ஊர் சென்றிருந்தேன். அந்த நாளில் விருமாண்டி மாமா கடையில் என் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் முதன்முறையாக அங்கே டீ குடித்தேன்.
“ஓல எலக் காத்தாடியா
என்ன சுத்துறா
எட்டுமணி ரயிலப்போல
சத்தம் போடுறா
கண்ணால உயிர் பறிச்சு
மால கட்டுறா
உள்ளுக்குள்ள தீக்கொளுத்தி
மேளங் கொட்டுறா”
தொடரும்…