தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




மெட்டுக்குப் பாடல் எழுதுவது புதிதாக வருகிறவர்களுக்கு பெரும் சிரமமான காரியமாக இருக்கும். மெட்டுக்கு எப்படிப் பாடல் எழுதுவது என்று சில தம்பிமார்களும் நண்பர்களும் கேட்பார்கள். முதலில் உங்களுக்குத் தெரிந்த திரைப்பாடலின் மெட்டுக்கு எழுதிப் பழகுங்கள் என்பேன். அப்படி எழுதிப் பார்க்கிற போது நம்பிக்கை பிறக்கும். எழுதிய பாடல் வரிகளை ஒரு மெட்டில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம் உண்டாகும். ஒருவகையில் தெரிந்த மெட்டிற்குப் பாடல் எழுதுவது சுலபமாக இருக்கும் அதில் அவர்கள் பெறுகிற புரிதலை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடலாம் என்பது என் எண்ணம். அதனைத் தொடர்ந்து கேட்காத இந்திப் பாடலை அல்லது வேறு மொழிப் பாடலை எடுத்துக் கொண்டு அதன் மெட்டுக்கு எழுதச் சொல்வேன். அதையும் எழுதிவிட்டால் அவர்களின் நகர்வை என்னாலும் அவர்களாலும் உணர முடியும். அதன் பின் நான் எனக்குக் கொடுக்கப்பட்ட என் பாடலின் மெட்டை அந்த பாடல் வெளிவந்த பிறகு கொடுத்து எழுத வைப்பேன். அதிலும் எழுதிப் பழகிவிட்டால் அவர்கள் மெட்டுக்கு எழுதுகிறவர்களாக மாறிவிடுவார்கள். இப்போது மெட்டுக்கு எழுதிப் பழகிவிட்டார்கள் ஆனால் அவர்களின் கருத்தும் கவித்துவமும் அழகிலும் எப்படிக் கைவரப் பெற்றிருக்கிறது என்பது அடுத்த கேள்வி. இது குறித்தும் பயில நமக்கு நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் ஒரு பாணி இருக்கிறது. தமிழ் பாடலாசிரியர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பில் ஒவ்வொருவரின் பாடல் எழுத்துமுறையையும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும் என எனக்குக் கூட ஓர் எதிர்காலத் திட்டம் இருக்கிறது.

சென்னைக்கும் மதுரைக்கும் என்னைவிட அதிகம் பயணித்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் இதில் விதிவிலக்கு. இன்னொன்று இதற்கு நான் நடத்துநர் வேலையோ ஓட்டுநர் வேலையோகூட செய்திருக்கலாமோ என்றுகூடத் தோன்றும். அப்படி நான் பயணிக்கையில் மோசமான அனுபவமும் சந்தோசமான அனுபவமும் ஓரிடத்தில் கிடைக்கும். அந்த இடம் தான் ஹோட்டல். அங்கே கழிப்பறை மட்டமாக இருக்கும். பள்ளிக்கூட அனுபவத்திற்குப் பிறகு ஒருவரைக் கையில் குச்சியோடு பார்த்தேனென்றால் அது இங்கு தான். ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு கக்கூஸ்க்குள் அனுப்ப ஓர் அண்ணன் ஆசிரியர் வேலையைச் செய்வார். என்ன மாணவர்களுக்குத் தான் வயது கொஞ்சம் அதிகம். அதே போல் அங்கிருக்கும் ஹோட்டலில் தோசையும் சால்னாவும் சாப்பிட்டால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பஸ் ஒரு நான்ஸ்டாப்பில் நின்று ஒருவர் வாட்டர் பாட்டிலோடு காடுகரை நோக்கி ஓட வேண்டும் தான். இப்போ விசயம் இதுவல்ல பஸ் நிற்கும் அந்த 15 நிமிடங்களில் அங்கே நான்கு ஐந்து பாடல்கள் ஒலிக்கக் கேட்கலாம். அந்த பாடல்களின் மூலமாகத்தான் நான் தமிழகத்தின் பல முக்கிய நாட்டுப்புற கானா பாடகர்களை அறியப்பெற்றிருக்கிறேன். அங்கு எல்லாவிதமான பாடல்களும் ஒலிக்கும். அங்கேயே கேசட் பிற்காலத்தில் சிடி விற்பனையும் நடக்கும். அங்கே என் பாடல் ஒலித்தால் எத்தனையோ பேரைச் சென்றடையுமே என்று ஏங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் என் பாடல் இரண்டாவது ஒலித்துவிடுகிறது ஆனால் நான் இப்போது மதுரைக்கும் சென்னைக்கும் ரயிலில் பயணிக்கிறேன்.

ஒரு முறை சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்கே உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களோடு போயிருந்தேன். யாரும் கற்பனை செய்ய வேண்டாம் நான் சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தேன். அங்கே என் பாடல்களைத் தமிழ் நாட்டிலிருந்து வந்த பாடகர்கள் பாடும்போதும் அவற்றை அங்கிருந்த நண்பர்களும் நண்பிகளும் கேட்கும் போது எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது எனக்கு றெக்கை முளைத்தது.

ஒருமுறை “வானவில்” என்கிற ஒரு படத்திற்குக் கேரளா சென்றிருந்தேன். அந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன். மிகச் சிறப்பாக வந்திருந்தது. அந்த டீம் கேரளத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் பெயர்கள் மறந்தபோயின. ஆனால் அவர்கள் ஒரு தமிழ் கவிஞனுக்குக் கொடுத்த மரியாதையும் உபசரிப்பும் மறக்க முடியாத நினைவுகள். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை என் பாடல்களும் தான். இதை எதற்காக சொன்னேனென்றால் பத்தாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் என் அருமைத் தம்பி அமைப்பொன்றின் ஆல்பத்திற்காக பத்துப் பாடல்கள் எழுத ஒரு மழைக்கால இரவில் ஒரு காட்டுப் பங்களாவில் தங்கவைத்தான். உடனிருப்பானென எண்ணினேன் இருக்கவில்லை. பேப்பர் பேனா எடுத்து எழுதத் தொடங்கினேன். கரண்ட் கட்டானது. மழைக் கொட்டியது ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை. யாரோ ஒருவர் நான்கு இட்லியைத் தந்துவிட்டு குடையோடு ஓடி மறைந்தார். மெழுகுவர்த்தியும் இல்லை. பேய் பயம் எனக்கில்லை. ஆனால் பயம் இருந்தது. தூங்குவதற்குத் தொந்தரவாக வெக்கை இல்லை ஆனால் சரியான விரிப்பான் இல்லை.
கொசுக்களின் துணை இருந்தது ஆனால் கடித்தன. விடிய விடிய தூங்கவில்லை. அந்த நான்கு இட்லியையும் சாப்பிடவில்லை பத்து பாடல்களும் எழுதவில்லை.

Paadal Enbathu Punaipeyar Webseries 27 Writter by Lyricist Yegathasi தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிகேரளா போய் பாடல் எழுதிய அனுபவம் போல் கேரளத்து நண்பர்கள் சென்னை வந்து என்னிடம் பாடல் வாங்கிய விதமும் அழகானது தான். படத்தின் பெயர் “ட்ராமா” இது இரண்டே ஷாட்டில் எடுக்கப்பட்ட சினிமா. இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் திரைக்கு வரும். இந்த வாய்ப்பு என் பெற்றெடுக்கா மகள் விஜயலட்சுமியால் கிடைத்தது. அவர் வாட்ஸ்அப்பில் உரையாடும் போது நீங்கள் மண்வாசனை பாடல் மட்டும் தான் எழுதுவீர்களா வேறு வகைப் பாடல்களும் எழுதுவீர்களா எனக் கேட்டபோது சின்னதான கோபத்தில், நான் இங்கிலீஷ் படத்திற்கே பாடல் எழுதியிருக்கிறேன் என்னப் போய் இப்படி கேட்டிட்டியே மகளே என்றேன்.(அதற்கு அவர் என்ன.. இங்கிலீஷ் படமா என வாயைப் பிளந்தது, பிறகு அது என்ன படம் எனக் கேட்டபோது என் வாய் மூடிக் கொண்டதெல்லாம் எடிட்) அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு, ஏனெனில் அந்தப் படத்திற்கு விஜயா தான் வசனக்கர்த்தா. அந்தப் படத்தின் இயக்குநர் அஜய்குமார் என் அன்புக்குரியவர். அந்தப் படத்தில் மதுரையின் பெருமையைச் சொல்லும் விதமான ஒரு பாடல் ஜெய கே தாஸின் இசையில் வேல்முருகனின் குரலில்.

தொகையறா

மல்லிகைப் பூ வாசம் எங்க மதுரையோடது
நாயக்கர் மஹால் தூண்களால பெரும கூடுது
தெப்பக்குளத்தில பசங்க பாரு கிரிக்கெட் ஆடுது
நம்ம கோனார் மெஸ்ஸு கறி தோச நாக்கு தேடுது

பல்லவி

ஜிகர்தண்டா பேருபோன மதுரைதானுங்க
சிங்கப்பூரத் தோக்கடிக்கும் எங்க ஊருங்க
டீக்கடைங்க எங்களுக்கு சட்டமன்றம் தான்
அடிகுழாயில் நடக்கும் பட்டிமன்றம் தான்

வாழத்தார வச்சதுபோல் நான்கு கோபுரம்
வைகை ஆத்து இடுப்புலதான் நாங்க வாழுறோம்

சரணம் – 1

வருஷத்துல ஆறு மாசம் சென்ரல் ஜெயிலு
வந்ததுமே கோழி அடிக்கும் பொண்டாட்டி மயிலு
உசுப்பிக் கேளு ஒரு மணிக்கும் இட்டிலி கிடைக்கும்
சாமத்துக்கும் சலிக்காமல் சட்னி இருக்கும்

நண்பனை தொட்டவனை பிடித்திடும் சனிதான்
உசுரு கூட எங்களுக்கு பாக்கெட் மனிதான்

சரணம் – 2

கேலி கிண்டல் நக்கல் பேச்சு கூட பிறந்தது
பூமி போல எங்க ஊரு தூங்க மறந்தது
தியேட்டரில் புதுப் படன்னா விசில் தான் பறக்கும்
வெள்ளைக்காரச் சனங்க பாரு டவுசரில் நடக்கும்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது எங்களின் மண்ணு
நீ அதை நீதி கேட்டு எரிச்சதுங்க கண்ணகிப் பொண்ணு

தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




நண்பர் பாடலாசிரியர் ந.முத்துக்குமார் அவர்கள் இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் சிஸ்யர்களில் ஒருவர். நானும் அவரும் பேசும்போதெல்லாம் அவர் அடிக்கடி, கதையை தயார் செய்து தயாரிப்பாளர்களிடம் சொல்லி இயக்குநர் ஆகிடு ஏகாதசி, நாற்பது வருசம் பாட்டெழுதி சம்பாதிக்கிற பணத்த ஒரு படத்தில் சம்பாதிச்சிடலாம் என்பார். அவர் சொன்னது எத்தனை அனுபவப்பூர்வமானது என்பதை நான் இன்றுவரை உணர்ந்தவண்ணம் உள்ளேன். இங்கே “ஒரே படத்தில் பெரிதாக சம்பாதித்து விடலாம் என்பதை” அவ்வாறாக எடுத்துக் கொள்ளாமல், சம்பள விசயத்தில் பாடலாசிரியர்களுக்கு இழைக்கப்படும் வதைகளைத் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் ரூபய்க்கு ஒரு பாடலை எழுதக்கேட்டு நாளொன்றுக்கு ஐயாயிரம் ரூபாயிக்கு மது அருந்திக் கொண்டாடும் மகான்களே இங்கு அதிகம். இது எனக்கு முதல் படம் பார்த்துச் செய்யுங்கள் அடுத்த படத்தில் நீங்கள் கேட்கிற சம்பளத்தைக் கொடுக்கிறேன் சார் என்பார்கள். நாமும் எழுதிவிடுகிறோம். அவர்கள் அடுத்த படத்தில் அள்ளிக் கொடுப்பார்கள் என்பதை நம்பி அல்ல நமக்கு வயிற்று வலி என்பதால் ஒண்ணாரூபாய்க்கும் எழுத ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது பல நேரங்களில். அதே சமயத்தில் அள்ளிக் கொடுப்பதாக சொன்னவர்கள் அடுத்த படத்தில் நேராக முன்னணி பாடலாசிரியர்களிம் போய் நின்று விடுகிறார்கள். அவர்கள் இரண்டாவது படத்திலேயே பெரும் கூட்டணியோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்றாம் நிலைப் பாடலாசிரியர்கள் முதல் பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முட்டுக் கொடுத்தபடி மட்டுமே வாழ்வைக் கடக்கிறார்கள்.

பெரும்பாலோனோர் பாடலை எழுதி வாங்கிக் கொண்டு. சம்பளத்தை பாடல் பதிவின் பின் கொடுப்பதையே விதிமுறையாகக் கையாளுகிறார்கள். பாடல் பதிவு நடைபெற இரண்டு வருசம் ஆனாலும் நாம் காற்றைக் குடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதிலும் பாடலை முடித்துக் கொடுத்தபின் படம் நின்றுவிட்டால் நாமம் தான் போடுவார்கள் வேறு வழியில்லை. அவரவர் வேலை முடிந்துவிட்டால் அவரவருக்கான ஊதியத்தை கொடுத்துவிட வேண்டும். ஒரு பாடலாசியருக்கு ஒப்பந்தம் செய்யும் போது ஒருபகுதி முன்பணமும் பாடலை எழுதித்தந்து இறுதிசெய்தபின் மறுபகுதிப் பணமும் கொடுத்திட வேண்டும் என்பதுதான் என்னைப்போன்ற பாடலாசிரியர்களின் விருப்பமாக இருக்கிறது. இதுதான் சரியான விசயமும் கூட. ஆனால் ஒரு திரைப்படம் தொடங்கும்போது எல்லாருக்கும் முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வார்கள். பாடலாசிரியர்களை மட்டும் பந்தாடுவார்கள். அதே சமயம் கவிஞர்களை மரியாதையோடும் அன்போடும் நடத்துபவர்களும் உண்டு. நான் சம்பளம் பெறாமல் பாடல் எழுதி பாட்டும் படமும் வெளியாகாமல் போனவை நூற்றுக்கும் மேல்.

இத்தனை காயங்களுக்குப் பிறகு நாம் முன் பணம் பெற்றுக்கொண்டே பாடல் எழுதவேண்டும் என்கிற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. இதில் பலருக்கும் என் மீது தவறான அபிப்ராயம் வந்துவிடுவதை நான் என்ன செய்ய முடியும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு பெரிய படம். அதன் மேனேஜர் பாடல் எழுதக் கேட்டார். ஒரு சம்பளம் முடிவு செய்து பின் பாடலுக்கான சூழலை இயக்குநரிடம் கேட்டுவிட்டு மெட்டை வாங்கிக் கொண்டு வந்து எழுதத் தொடங்கும் முன் முன்பணம் கேட்டேன். அதற்கு அவர் முன் பணம் கொடுத்தால்தான் எழுதுவீங்களா என்றார். நானோ, நான் அப்படிச் சொல்லவில்லை முன் பணம் பெற்றுக் கொண்டால் இந்த படத்தில் நான் பாடல் எழுதுவதற்கான சாட்டிசியமும் உத்தரவாதமுமாகிவிடும் என்றேன். அதற்கு அவர் நீங்கள் பாடல் எழுதுவதற்கு முன் முன்பணம் கேட்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். பிறகென்ன, நீங்கள் அதிர்ச்சியோடே இருங்கள் எனச் சொல்லிவிட்டு என் முடிவில் மாற்றமின்றி முன் பணம் பெற்ற பின்னரே தான் பாடல் எழுதிக் கொடுத்தேன். நானாவது முன்பணம் பெற்று எழுதுகிறேன். ஆனால் அய்யா கவிஞர் வாலி அவர்கள் முழுப் பணத்தையும் பெற்றுக்கொண்ட பின்னரே பேனாவையே திறப்பார்.

சில இயக்குநர்கள் கதை தயாராவதற்கு முன்னரே பாடலை முடித்துவிடும் முனைப்பில் இறங்கி நம்மை வதைப்பதுமுண்டு. அது அவரவர் இஷ்டம் எனினும் அதை செய்துகொடுக்க இயலாத சூழலில் நம் மீது உமிழப்படும் பொல்லாப்பு ஏற்புடையதல்ல தானே. இதில் அம்மன் ஆல்பத்தையும் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சி ஆல்பத்தையும் தவிர்த்துவிடுகிறேன். அதே சமயம் விசய ஞானமுள்ள இளம் இயக்குநர்கள் குறும்படமோ பெறும்படமோ நேர்மையோடு எடுக்க முற்படுகிறபோது என் ஒத்துழைப்பு அவசியம் இருக்கும்.

நான் திரைப்படத்திற்காக எழுதுகிற பாடல்களை இணைய தளத்தில் தேடினால் கிடைத்துவிடும். ஆனால் எல்லா தனியிசைப் பாடல்களையும் இதுபோல் இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியாது. பல பாடல்கள் மேடையிலேயே நின்றுவிடுகிறது. எல்லா தனியிசைப் பாடல்களையும் பதிவு செய்தல் என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. அதற்கு பெரும் பொருளாதாரத் தேவை இருக்கிறது. அப்படியே செலவு செய்து தயாரித்தாலும் பிஸ்னஸ் சிக்கல் இருக்கிறது. அதுவும் போக ஒரு திரைப்படப் பாடல் என்பது அந்த குறிப்பிட்ட படத்தின் கதைக்காக எழுதப்படுவது தான். ஆனால் தனியிசைப் பாடல்கள் பலகோடி கதைகளைக் கொண்ட மனித சமூகத்திற்காக எழுதப்படுவது. திரைப்பாடப் பாடல்கள் மேல் பொது மக்களுக்கு பெரிதும் ஈர்ப்பிருப்பினும் இது மாதிரி சந்தர்ப்பத்தில் நான் தனியிசைப் பாடல்களின் வரிகளைப் பதிவு செய்ய தவறவிடக்கூடாதென விரும்புகிறேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 26 Writter by Lyricist Yegathasi தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிசுகந்தி என்கிற பாடல் பாடுகிற ஒரு பெண்ணை விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு தமுஎகச மாநில மாநாட்டில் சந்தித்தேன். அந்தப் பெண் தோழர் தபேலா குமாரின் மனைவி என்றறிந்தேன். அவர் என்னுடை “மல்லிக் கொடியே மகனே ராசா” என்கிற சோகத் தாலாட்டை என் முன் பாடிக் காட்டினார் வியந்தேன். குரலில் அத்தனை இனியை. இனிக்க இனிக்க சிலர் பேசுவர். இவர் இனிக்க இனிக்க பாடுபவர். அதற்கு முன் அப்பாடலை திருவுடையான் மட்டுமே பாடினார். இவர் அவருக்கு இணையாகப் பாடினார். திருவுடையான் போட்ட மெட்டை அவரைத் தவிர வேறொருவர் பாடுவது சிரமம். அதை இவர் செய்தது சவாலான விசயம். அதன் பிறகு சுகந்தியோடு தோழமை இன்றுவரை நீடிக்கிறது. எனது பல தனியிசைப் பாடல்களை பாடியுள்ளார். ஏர் டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டாப் 10 வரை வந்து உலகத் தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். இப்போது திரைப்படங்களிலும் மேஸ்ட்ரோ இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர் பலரின் இசையிலும் பாடிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் திடீரென அழைத்து தோழர் தமிழ் தேசிய அமைப்பொன்றின் மேடை. தமிழரின் நிலை குறித்து அவசரமாக ஒரு பாடல் வேண்டும் எனக்கேட்க அடுத்த சில மணித்துளிகளில் எழுதி அனுப்பி வைத்தேன். அதற்கு மிகச் சிறந்த மெட்டொன்றை அமைத்து அன்று மாலையே பாடி அசத்தினார். அந்த பாடலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல்லவி

தொண்டக் குழிக்குத் தண்ணி கேட்டோம்
தப்பிருக்கா – அட
கண்டவங் கிட்ட மிதிவாங்குறோமே – தமிழா
துப்பிருக்கா

எத்தனை மறியல் எத்தனை மரணம்
நல்லது நடந்திருக்கா
மத்திய மாநில சர்க்காருக்கு
மான ரோசமிருக்கா

சரணம் – 1

உலகத்திலே மூத்த குடி
நம்ம தானடா – இப்ப
உலை வைக்கத் தண்ணி இல்ல
உண்மை கேளடா

நடுவர் மன்றத் தீர்ப்பைத் தானே
நாடு மதிக்கல – நம்ம
ஏழை சனங்க வயித்துக்குத்தான்
சோறு கிடைக்கல

கோடி கோடியா அடிச்ச மந்திரி
குதூ கலத்தில – எங்க
விவசாய சனத்தப் பாரு
கோ வணத்தில

சரணம் – 2

இந்தியாவ கூறுபோட்டு
விக்கத் திட்டமோ – பங்கு
தண்ணியத்தான் குடுத்தாத்தான்
என்ன நட்டமோ

வானம் பூமி காத்தும் மழையும்
யாருக்குச் சொந்தம் – இத
கேக்க நாதி இல்லாமத்தான்
ரோட்டுக்கு வந்தோம்

அழுத கண்ணீர சேத்திருந்தா
அணையக் கட்டிருப்போம் – அட
மூணு போகம் தானியத்த
வெளைய வச்சிருப்போம்

தொடர் 25 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 25 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு “அசுரன்” படத்தைத் தொடங்க சில மாத இடைவெளி இருந்தது. அதற்குள் சின்னதாக ஒரு படத்தை இயக்கி விடலாம் என்கிற எண்ணம் அவருக்கு. காரணம் கோவையைச் சேர்ந்த தோழர் எழுத்தாளர் வெ.சந்திரக்குமார் தனக்கு நேர்ந்த அனுபவங்களை வைத்து எழுதிய “லாக்கப்” என்கிற நாவலை வெற்றிமாறன் வாசித்திருந்ததுதான். அதுதான் தினேஷ், சமுத்திரக்கனி நடித்த “விசாரணை”.

வழக்கம்போல் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இந்தப் படத்திற்கு இரண்டு பாடல்களை உருவாக்கத் திட்டமிடிருந்தார் இயக்குனர். அதில் ஒன்று, வெளி மாநிலத்தில் மளிகைக் கடையொன்றில் வேலைப்பார்க்கும் ஓர் இளைஞனுக்கும் வீட்டுவேலை செய்யும் ஓர் இளம்பெண்ணுக்கும் இடையில் மலர்கிற காதல் என்பது சூழல்.(விசாரணை படத்தில் பாடலே இல்லையே இவன் என்னடா வேறொரு கத சொல்றான்னு தோணும் அதுக்கு நான் அப்பறமா வர்றேன்)பாடலை ஒரு ஃபோக் டைப்பில் உருவாக்கத் திட்டமிட்டதில் உதித்த பல்லவி தான்.

“உருட்டுக் கண்ணால
ஒரசிப் போறாளே
அய்யய்யோ பத்திக்கிச்சு
நெஞ்சுக்குழி தன்னால

இடுப்புத் தண்டால
இமயம் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

மேகத்தக் கத்தரிச்சு
செஞ்ச பொண்ணாடா – இந்த
மாயக்காரி மண்டைக்குள்ள
சுத்தி வாராடா

நெத்திப் பொட்டாக – என்ன
இட்டுக்கிட்டாளே – அவ
கண்ணா பின்னான்னு – என்ன
கொன்னுபுட்டாளே – அவ
மிச்சம் வைக்காம – என்ன
தின்னுபுட்டாளே

நான் காணா போனேன்டா – என்ன
கண்டா சொல்லுங்க”

என்கிற ஒரு நீளமான பல்லவி.

மோதிப் பாக்கட்டுமா
கெடா முட்டுக் கண்ணால
மூச்சில் வேகட்டுமா
முத்துப்பேச்சி முன்னால

கீரக் கட்டுப்போல
கூந்தல் முடிப் பின்னால
வீரன் சாஞ்சுபுட்டான்
வீதியில தன்னால

நான் பீடி பத்தவச்சா – அவ
பொகையப் போல வருவா
ஒரு பீர தொறந்து வச்சா
அட நொரையப்போல வருவா

நா தியேட்டருக்குப் போனா – அவ
ஹீரோயினா தெரிவா
அட சீரியலுப் பாத்தா
அவ மருமகளா அழுவா

இடியோட மழபெய்யும் – அவ
ஏ வீட்டில் வந்து நின்னா

இப்படியாக இரண்டு சரணங்கள். பாடல் மிக சிறப்பாக வந்தது. பாடலை ஜீ.வி. பிரகாஷ் குமாரே பாடியிருந்தார். படம் முடித்துப் பார்த்தபோது படம் மிக மிக நேர்மையாக வந்துநிற்க, பாடல் படத்தில் ஒட்டுமா என்கிற சந்தேகம் வர வெற்றிமாறன் அவர்கள் படத்தில் பாடல்கள் வைக்கும் திட்டத்தைக் கைவிட்டார். படமும் வெளியானது விருதுகளும் குவிந்தன.

சிறிது இடைவெளிக்குப் பிறகு தம்பி இயக்குநர் வள்ளிக்காந்த் அவர்கள் இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் “பசங்க” புரொடக்சன்ஸில் ஜி.வி.பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து “செம” எனும் தனது முதல் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ஒரு மாஸ் சூழலுக்கு அந்தப் பாடல் பொருந்திப் போக, தினேஷ் க்காக இசைத்த பாடல் இசைத்தவருக்கே வாய்த்துப் போனது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பாடல் அப்படி ஒரு ஹிட்.

ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த படத்தில் இடம்பெறாமல் போனாலும் இன்னொரு படத்தில் வெளியாகி வெற்றியடையும் போது மனம் ஆறுதல் அடைந்துவிடுகிறது. ஆனால் எண்ணற்ற பாடல்கள் உருவாக்கப்பட்டு அங்கேயே தங்கி விடுகின்றன. அந்த வரிகளை நாம் இன்னொரு படத்தில் பயன்படுத்தவும் முடியாது. காரணம் ஒரு மெட்டுக்குள் இருக்கும் வரிகளைப் பிய்த்து இன்னொரு மெட்டுக்குள் பொருத்தமுடியாது. பாடல் என்பது பிரசவத்திற்கு சமமானது. இதில் கூட அறுவை சிகிச்சை மூலமும் குழந்தை பிறக்கிறது. ஆனால் பாடலில் சுகப்பிரசவம் மட்டுமே உன்னதமானது.

தோழர் பேரா. இரா. காளிஸ்வரன் அவர்களின் மனைவி காளத்தி அவர்களின் தயாரிப்பில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் “பெண் அழகானவள்” என்கிற ஒரு தனியிசை ஆல்பம் உருவானது. அதற்கு செல்வநம்பி இசையமைத்திருந்தார். ஆல்பத்தின் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருந்தேன். அதில் ஒன்று தான் “பெண் அழகானவள் பேரன்பானவள்” எனும் பாடல்.

பல்லவி
பெண் அழகானவள்
பேரன்பானவள்
அரவணைத்துப் பூப்றிப்பாள்
அநீதி கண்டு ஆர்ப்பரிப்பாள்

வெளிச்சம் தந்து வெளிச்சம் தந்து
தீபமானவள் – இவள்
தேகம் கொன்று தேகம் கொன்று
தெய்வமானவள்..

சரணம் 1
உயிர் தந்து உடல் தந்து
தாயானவள் – நம்
விரல் பிடித்து நடந்து வரும்
மகளானவள்

கடலுத் தண்ணி தேக்கி வச்சா
கண்ணுக்குள்ள தான்
கடைசி வரை இவள் கால்கள்
மண்ணுக்குள்ள தான்

இமயமலையைத் தோற்கடிக்கும்
ஈரம் கொண்டவள் – பெண்
எவரும் வீழ்த்த முடியாத
வீரம் கொண்டவள்

சரணம் 2
காடு மலை சுத்தி வந்து
காவல் காத்தாள் – பெண்
காலமெல்லாம் நெருப்பைத்தான்
பாதுகாத்தாள்

கட்டிகிட்டு வந்தவள
யாரும் நம்பல
காளி மாரி யாருமில்ல
நம்ம பொம்பள

சிறகு கொண்ட பெண்ணுக்கு
ஏது எல்லையே – பெண்ணை
சீசாவுல் அடைக்கிறது
ஞாயம் இல்லையே

தோழர் இரா. காளீஸ்வரன் அவர்கள் மக்கள் டீவியில் “மூதாய்” என்கிற தொடரை இயக்குனார். அது வாரா வாரம் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது. சிறு தெய்வங்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் விதமாக அந்தத் தொடர் அமைந்தது. அந்தத் தொடருக்கு நான் மேலே குறிப்பிட்ட “பெண் அழகானவள்” பாடலே டைட்டிலில் பாடப்பட்டது. ஒவ்வொரு எபிசோடுக்கும் முன் வரும் அந்தப் பாடல் செல்வநம்பியின் குரலில் தொன்மம் கசிந்தது.

இயக்குநர் சி. ஜெரால்டு இயக்கிய “அவன் அவள் அவர்கள்” மெகா சீரியலில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த போது ஒரு துணை நடிகை கைக் குழந்தையோடு ஷூட்டிங் வருவார். அந்தப் பெண் வீட்டு வேலை செய்பவராக நடித்தார். குழந்தையை அறையில் தூங்க வைத்துவிட்டு ஷார்ட்டுக்கு வருவார்.
ஒவ்வொரு ஷார்ட்டுக்கும் இயக்குநர் நடிகர்களை வரவழைக்க உதவி இயக்குநர்களைக் கத்துவார். உதவி இயக்குநர்கள் விழுந்தடித்து ஓடி நடிகர்களின் அறை முன் நிற்போம். சில உதவி இயக்குநர்கள் இயக்குநர்கள் கொடுக்கும் நெருக்கடி பொறுக்காமல் நடிகர்கள் பாத் ரூமில் இருந்தாலும் கதவைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதே போல் தான் குழந்தை வைத்திருக்கும் துணை நடிகையிடமும் நடந்துகொள்வார்கள். அதாவது ஏழை எளிய துணை நடிகர்களிடம் தான் இவர்கள் பருப்பு வேகும். செல்வாக்குப் பெற்ற பெரிய நடிகர்கள் என்றால் வாலை உருட்டிக் கொண்டு நின்றிருப்பார்கள். மயில் தோகை கொண்டு கதவு தட்டி வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துப் போவார்கள். நான் ஒரு முறை அந்தத் துணை நடிகையை அழைக்கச் சென்றபோது அவர் தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார. என்னால் அவரை அழைக்க முடியவில்லை. நான் வந்திருப்பது கண்டு அவரே அவசரமா எனக்கேட்க நான் இல்லை என்று பொய் சொன்னேன்.

நான் இயக்கிய முதல் படத்தில் “கபடின்னா கபடி காசுக்கு ரெண்டடி” எனும் பாடலுக்கு பத்மாவதி எனும் ஒரு பெண்ணை ட்ராக் பாட வைத்திருந்தார் இசையமைப்பாளர் பரணி. அவரின் பல பாடல்களுக்கு அவர் அதற்கு முன்னும் ட்ராக் பாடியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு திரைப்படத்தில் பாடவேண்டும் என்பது கனவு. அந்தக் கனவு மெய்ப்படும் தூரம் மிக அருகில் தான் இருந்தது. ஆனால் ஒருவர் ட்ராக் சிங்கராக அறியப்பட்டால் அவரை அதற்குப் மட்டுமே பயன்படுத்துவார்கள். அங்கேயும் அதுவரை அதுதான் நடந்துகொண்டிருந்தது. அந்த என் படப்பாடலை யாரை வைத்துப் பாடலாம் என யோசித்தபோது ஆண் குரலுக்கு கார்த்திக்கை முடிவு செய்துவிட்டு பெண் குரலுக்கு ஒருவரை பரணி சொன்னபோது நான் அந்தப் பாடலுக்கு ட்ராக் பாடிய பத்மாவதியை பாடவைக்கலாமே என்றேன். பரணி யோசித்தார், நான் இல்லை அவரே பாடட்டும் என்றேன். மிக அழகாகப் பாடிக்கொடுத்தார். அதன் பிறகு திரையிசை உலகில் பல பாடல்கள் பாடி பிரபலமானார். இங்கே திறமை இருந்தும் அங்கீகாரம் கொடுக்க ஓர் ஆள் தேவைப்படுகிறது. அந்த ஆள் ஏன் நாமாக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றேன்.

தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




2004 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் “சண்டக்கோழி” படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஏவிஎம், பிரசாத் போன்ற ஸ்டுடியோக்களுக்குள் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. செக்குரிட்டி தொரத்திவிடுவார் அல்லது ஆயிரத்து எட்டுக் கேள்விகள் கேட்பார். அத்தனைக்கும் பதில் தெரிந்திருக்கவேண்டும். ஒரு மார்க் மிஸ் ஆனாலும் உள்ளே செல்ல முடியாது. அல்லது டிப்டாப் ட்ரெஸ் அணிந்து யாரையும் கண்டு கொள்ளாமல் விருவிருவென நடந்தால், விஐபியென நினைத்து விட்டுவிடுவார்கள். சும்மாவே நம்ம ட்ரெஸப் பாத்து நாய் குரைக்குது இதுல எங்க போறது விஐபி கெத்துக்கு. இந்தக் கோடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைப்பேசிக் காலம் வந்தது. ஸ்டுடியோவுக்குள் போகும்போதே ஏதோ முக்கியமான கால் பேசுவதுபோல் ஆக்ட் பண்ணியபடி உள்ளே சென்றால் நம்மை வழிமறிக்க மாட்டார்கள். இப்போது வரை நான் இந்தக் கொள்கையைத் தான் பின்பற்றுகிறேன். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை விஐபி என்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் மட்டும் தான். அது ஒரு பஞ்சாயத்துக் காட்சி ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் தான் இயக்குநர் லிங்குசாமி என்பது நான் ஏற்கனவே அறிந்ததுதான், ஆனால் அவர் வேலை செய்யும் விதத்தைப் பார்த்ததில் எனக்கு அவர்மேல் இருந்த மரியாதை மேலும் கூடியது. விசால் நாயகனாக நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டது. நண்பர் கவிஞர் ந. முத்துக்குமார் எழுதிய “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” பாடல் பெரிய ஹிட்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

இயக்குநர் லிங்குசாமி என்பவருக்குள் மிகச் சிறந்த கவிஞர் இருப்பார். மிகச் சிறந்த ரசிகர் இருப்பார். அவருக்கு திரைப்பட நண்பர்களுக்கு இணையான இலக்கிய நண்பர்கள் உண்டு. இவ்விரண்டுக்கும் இணையான சாமானிய மனிதர்களின் நட்பும் உண்டு. அத்தனை எளிமை. அத்தனை இனிமை. ஒரு நாள் அவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. நான் எனது ஹைக்கூ நூலான “ஹைக்கூ தோப்பு” ஐ அவருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றேன். அவரை நான் சந்திக்கிறவரையிலும் எனக்குள் முதன் முதலில் நான் அவரை நேரில் பார்த்த “சண்டக்கோழி” படப்பிடிப்பும் அவரது பரபரப்பும் மட்டுமே வந்து வந்து போனது. அலுவலகம் கலையால் நெய்யப்பட்டிருந்தது. அவரது அழகிய மனம் போல் அலுவலகமும் இருந்தது. அடுத்தபடியாக அவரின் மூன்றாம் கை இயக்குநர் கவிஞர் பிருந்தாசாரதி அண்ணன் அலுவலகத்தை அலங்ரித்துக் கொண்டிருந்தார்.

எனது “ஆத்தா ஓஞ்சேல” பாடலை மனம் திறந்து பாராட்டினார் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உச்சபட்ச பாராட்டுக்குமேல் ஒன்றிருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது எனக்கது. பின்பு எனது சில திரைப்பாடல்கள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகளை சிலாகித்தார். நான் எனது நூலை அவருக்களித்தேன். அவர் அவரது “லிங்கூ” எனும் அழகிய நூலை எனக்களித்தார். பல பேச்சுக்கள் ஓடின. இறுதியாக அழைத்த விசயம் சொன்னார், நான் தற்போது இயக்கும் படத்தை முடித்துவிட்டு “சண்டக்கோழி – 2” எடுக்கும் திட்டம் இருக்கு,. அதில் நீங்கள் ஒரு பாடல் எழுதவேண்டும் என்றார். என் மனம் அப்போதே என் காலில் கத்தியைக் கட்டி களம் இறங்கத் தயாராகியது.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “சண்டகாகோழி – 2” தொடங்கியாச்சு வாருங்கள் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோ என்றார். அது ஓர் இரவு சந்திப்பு. வந்து சிறிது நேரம் காத்திருப்பின் பின் நண்பர் யுவன் சங்கர் ராஜா வந்து கீபோர்டில் விரல்கள் பாவ, மெட்டு ஈரத்தரையாய் இதம் வார்க்க, “கம்பத்துப் பொண்ணு கம்பத்துப் பொண்ணு” சொற் பூக்கள் உதிரத்தொடங்கின. சரியாக ஓர் இரண்டுமணி நேரத்தில் பாடல் ரெடியானது. அந்த வாரத்திலேயே குரல் பதிவு நடந்தது. யுவன் சங்கர் ராஜா கொஞ்சிக் கொஞ்சிப் பாடித் தந்தார். பாடலைக்கேட்ட அண்ணன் லிங்குசாமி அவர்கள் என்னைக் கட்டியணைத்து எனக்கு ந.முத்துக்குமார் கிடைச்சிட்டார் என நெகிழ்ந்தார். நான் சிறகடித்தேன். அவருக்கு “தாவணி போட்ட” தீபாவளியைப் போல் குறைவின்றி ஒரு பாடல் வேண்டும் என்பது இலக்கு. ந.முத்துக்குமார் இல்லாததால் நடந்தேறாமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் இருந்திருக்கிறது அவருக்கு. அது இப்போது அறவே இல்லை. “பாம்பாட்டம் ரெட்ட சடடா” வரியை கொண்டாடினார். படப்பிடிப்பில் பலமுறை கதாநாயகன் விசால் ரசித்தது “ஈசல் றெக்கை பிச்சு வந்து இதயத்த நெஞ்சுக்கிட்ட” வரியை என அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம். படத்தில் அந்தப் பாடலை மிக அழகாய் விஷுவல் செய்திருப்பார்கள். அந்த திருவிழா கூட்டத்தில் விசாலும் கீர்த்தி சுரேஷும் மான்கள் போல் ஓடி கொஞ்சுவது பார்ப்பவர்களையும் காதலிக்கச் சொல்லும்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

பல்லவி:
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்குற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

ஆலமரத்து எலடா
அவ கன்னக் குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டச் சடடா – இப்போ
பாக்குது என்னத் தொடடா

அடடடட…
மஞ்ச செவப்புக் கண்ணாடி போல
என்ன நீ சாய்க்காத
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரிப் பூரா தூங்கல

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

சரணம் – 1
தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
அம்மியா அரைக்கிற ஆளா நீ அசத்துற
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்தப் பாச்சுற

சவ்வு மிட்டாயி வாட்சப் போல
என்னதான் கட்டிக்கிட்ட – அடி
குச்சி ஐஸு கறையப் போல
சட்டையில ஒட்டிகிட்ட

கடுங்காபி இதம் போல
மனச நீதான் ஆத்துற
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

சரணம் – 2
ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்கறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலப் போல மனச நீயும் ஆட்டுற

பஞ்சு மிட்டாயி ரெண்டத் திருடி
கன்னத்தச் செஞ்சுக்கிட்ட – அடி
ஈசல் றெக்கையைப் பிச்சு வந்து
இதயத்த நெஞ்சுக்கிட்ட

ஆத்தாடி காத்துல
உன் பேரத்தான் கூவுறேன்…
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

இந்தப் பாடலுக்கு சிங்கப்பூரில் கூடுதலான வரவேற்பும் கொண்டாட்டமுமாம், நான் இயக்கிய முதல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் சொன்னார். காரணம் “கம்பம்” என்பதற்கு கிராமம் என்பது அங்கே பொருளாம். அப்படியெனில் அந்தப் பாடல், “கிராமத்துப் பொண்ணு…
கிராமத்துப் பொண்ணு…” என்ற அர்த்தத்தில் தங்கள் மொழியில் முதல் வரி அமைந்தவண்ணம் வந்துள்ள பாடலென மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இந்தப் பாடலுக்காக 2018 ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் V4 அவார்ட் எனக்குக் கிடைத்தது. இந்த விருது நிகழ்விற்குத்தான் நான் முதன்முதலாக குடும்பத்தோடு சென்றிருந்தேன். விருதைப் பெற்று நான் பேசியது,

“பாட்டெழுத வாய்ப்பளித்த அண்ணன் லிங்குசாமி அவர்களுக்கும், விருதுக் குழுவினருக்கும் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்காமல் பாட்டெழுதும் சம்பளத்தில் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு, கதை கவிதை பாடலெனச் சுற்றித்திரியும் ஒரு பைத்தியத்தை இத்தனை ஆண்டுகளாக பொறுத்தருளும் என் குடும்பத்திற்கும் என் நன்றி”

தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




இசைமேதை இளையராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து வந்திருக்கிறேன். அவரின் குரல் சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. எனக்கு அவர் பாடிய பாடலென்றால் உயிர். அந்தக் குரல் அத்தனை இதமானதாகத் தோன்றும் எனக்கு. வைரமுத்து அவர்களின் கட்டுரை வழியாகவோ பாரதிராஜா அவர்களின் வாழ்க்கை சரிதத்திலிருந்தோ இளையராஜா பற்றிய செய்தி வரும்போது லயித்து விடுவேன். அதற்காக எனக்கு பாரதிராஜா வைரமுத்து இருவரையும் பிடிக்காதென்று அர்த்தமில்லை இந்த இருவரையுமே எனக்கு இளையராஜா அளவுக்குப் பிடிக்கும்.

இளையராஜா போல் தமிழை மிக சரியாக உச்சரித்துப் பாட வேறு ஒருவரைத் தேடுவது கடினம். மொழி இலக்கணத்திலும் அவருக்கு ஞானம் அதிகம். “மயிலு” எனும் படத்தில் தான் அவர் இசையில் முதன்முதலாக பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில்,

“நம்மலோட பாட்டுத்தான்டா
ஒலகம்பூரா மக்கா
கண்ட பாட்ட நாங்க கேக்க
காணப் பயறுத் தொக்கா”

என்றொரு பாடல் எழுதியிருப்பேன். அதில் முதலில் ‘காணப் பயிரு’ என்று தான் எழுதியிருந்தேன், அவர் தான் எனக்கு “காணப் பயறு” என்பதுதான் சரியென்று கற்றுத் தந்தார். அதே போல் அவர் கொடுக்கும் தத்தகாரம் மிக எளிமையாக இருக்கும். அவரின் தத்தகாரத்திற்கு யார் வேண்டுமானாலும் பாடல் எழுதிவிடலாம். பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் தத்தகாரத்தை தரும்போதே எழுபது சதவீத வேலையை முடித்து விடுவார்கள் ஆனால் இளையராஜா அவர்கள் மெட்டைத தருகிபோது மிக மிக ராவாக இருக்கும், ஆனால் அதன் பின் அந்தப் பாடலை “அவனா இவன்” என்பதுபோல் அசத்திவிடுவார். அவர் படத்தில் ஒரு பாடல் எழுதிவிட்டால் போதும் ஒருவன் எப்படி மெட்டுக்கு பாடல் எழுதுவது என்பதை கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம் அவர் மெட்டுப் போடுகிற பெரும்பாலான பாடல்களின் பல்லவியை அவரே எழுதிவிடுகிறார் என்பது அவர் மேலுள்ள குற்றச்சாட்டு எனினும் அவர் எழுதியதற்கு மேலான பல்லவி வரிகளை கவிஞர்கள் எழுதிவிட்டால் அதை ஏற்க மறுப்பவரும் இல்லை.Paadal Enbathu Punaipeyar Webseries 23 Writter by Lyricist Yegathasi தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

அவர் இசையில் கடைசியாக நான் எழுதிய பாடல் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் “விடுதலை” எனும் படத்திற்கு. அவர்மேல் திரைப்படத்துறையில் ஒரு பார்வை இருக்கிறது அவர் ரொம்பவும் கண்டிப்பானவர் என்பார்கள். ஆனால் நான் பணிசெய்த குறைந்த படங்களின் அனுபவத்தில் அவரைப்போல் ஒரு எளிமையான இலகுவான மனிதரைப் பார்க்க முடியாது என்பதுபோல் இருந்தது. அவரருகே அமர்ந்துவிட்டால் அத்தனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவ்வளவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படித்தான் இயக்குநர் பாலா அவர்கள் மீதும் ஒரு பார்வை உண்டு மற்றவர்களுக்கு ஆனால் நான் அவரோடு இரண்டொரு பட வேலைகளில் பாட்டுக்காக உரையாடிக்கொண்டிருக்கும் போது நான் அதுவரை அவர்மேல் வைத்திருந்த அத்தனை தப்பிதமான பிம்பங்களும் உடைந்துபோயின. இயக்குநர் பாலா மிகவும் மென்மையானவர். நேர்மையானவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பிறரை மரியாதையோடு நடத்துகிற மாண்பு மிகப் பெரியது.

என் சிறு பிராயத்தில் இளையராஜா அவர்களின் பேட்டி ஒன்றை தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது நிருபர் கேட்ட கேள்வியும் பதிலும் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. நீங்கள் எப்படி இசையை உருவாக்குகிறீர்கள்? நான் எதையும் உருவாக்குவதில்லை இந்த பூமி இசையால் நிரம்பியிருக்கிறது. பெய்யும் மழைத் தூறலிலும் ஒரு ரிதம் இருக்கிறது அதை எப்படி இசையாக்குவது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். கிராமத்திலிருந்து வந்த நீங்கள் எப்படி நகரத்து வாழ்வோடு ஒத்துப் போனீர்கள் என்பது போன்ற ஒரு கேள்வியை நிருபர் எழுப்புமுன் இடை நிறுத்தி, 100 வருடங்களுக்கு முன் சென்னையும் கிராமம் தான் என்று சின்னதாகச் சினந்தார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒன்று இல்லை, நான் இப்போது உங்களோடு பேசும் நேரத்தே வேண்டுமானால் எனது ஓய்வு நேரமென்று சொல்லலாம் என்றார். இப்படியாக அப்போதைய இளையராஜா அவர்களின் தீர்க்கமான எண்ணத்திற்கும் செயல்பாட்டிற்கும் இப்போதிருக்கும் இளையராஜாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவரின் முடிவும் செயல்பாடுகளும் அவரது உரிமை என்றாலும் அவரை விமர்சனம் செய்யும் நண்பர்கள் அனைவரும் அவரின் இசை ரசிகர்களே. அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் காதலை அவர் உணரவேண்டும் என்பதே என் கருத்து.

Paadal Enbathu Punaipeyar Webseries 23 Writter by Lyricist Yegathasi தொடர் 23 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிநான் இரண்டாவதாக இயக்கிய “அருவா” எனும் திரைப்படத்திற்கு நண்பர் ஜெய கே தாஸ் தான் இசை. ஆறு பாடல்களை இழைத்துத் தந்துள்ளார். அவர் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உலகம் அறிந்து கொள்ள இந்தப் படம் வெளியாவது அவருக்குத் துணையாக இருக்குமென நம்புகிறேன். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு காதல் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்கள் பாடினார்கள். அப்போது இசையையும் பாடல் வரிகளையும் வெகுவாகப் பாராட்டினார். அதில் தந்தையின் அன்பைச் சொல்லுகிற ஒரு பாடல். இந்தப் பாடலை இசைமேதை இளையராஜா அவர்கள் பாடினால் நன்றாக இருக்குமென யோசித்தோம் ஆனால் பிறர் இசைக்கும் இசையில் பாடமாட்டார் எனவும் விதிவிலக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மட்டும் ஒரு படத்தில் பாடியிருப்பதாகவும் கூறினார்கள். ஆனாலும் எனக்கு அவர் குரல் வேண்டும் என்பதால் அவர் குரலையொத்த கங்கை அமரன் அவர்களை அழைந்துப் பாடவைத்தோம் மனம் நிறைவடைந்தது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் தோழர் வேல ராமமூர்த்தி அவர்கள். இந்தப் படத்தின் டப்பிங் பேச வந்த அவருக்கு அந்தப் பாடலை காட்சியோடு பார்த்தவர், நான் எத்தனை படம் பண்ணியிருந்தாலும் எனக்கு இது வேற ஒரு படம் எனச்சொல்லி என்னைக் கட்டியணைத்தார். காரணம் எல்லா படங்களிலும் வேல ராமமூர்த்தி கடுங் கோபக்காரர் என் படத்தில் கனிவான அப்பா.

பல்வவி:
காசு பணமெல்லாம் சும்மா – இவர்

கர்ப்பப் பை இல்லாத அம்மா (2)

எத்தனை முகங்கள்
யாருமற்று அலைய
தண்ணீர் துளிகள் இங்கு
காற்றடித்துத் தொலைய

பிடித்து நடந்து செல்ல
விரல் தரும் மனிதருண்டோ
இவர் போல் அன்பு கொள்ள
கடவுள் உண்டோ

சரணம் – 1
செம்மறி ஆட்டுக்கெல்லாம்

மேய்ப்பவனே அப்பா
பார்வையற்ற மனிதனுக்கு
ஊன்றுகோல் அப்பா

நிலவு அம்மா என்றால்
சூரியன் தான் அப்பா
அன்பை நட்டு வைத்தால்
சொல்லுங்களேன் தப்பா

பாருங்களேன் மாலைக்குள்ள
பல பூவிருக்கும் – அவை
அத்தனையும் கட்டிக்கொண்டு
ஒரு நூலிருக்கும்

சரணம் – 2
பூக்கள் வாசனையை

பூட்டி வைப்பதில்லை
வேர்களை பூமியிங்கு
விட்டுப் போவதில்லை

சொந்த பந்தம் எல்லாம்
சொல்லில் மட்டும் இல்லை
விழுதாடும் அத்தனையும்
ஆலமரப் பிள்ளை

கத்துகிற பறவைக்கெல்லாம்
ஒரு பேர் இருக்கும்
ஒத்தையடிப் பாதைக்கெல்லாம்
ஓர் ஊர் இருக்கும்