Oyyara Kondai Short Story by K Natarasan Synopsis 82 Written by Ramachandra Vaidyanath. கி.நடராசனின் ஒய்யாரக் கொண்டை சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 82: கி.நடராசனின் ஒய்யாரக் கொண்டை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




அனுபவங்களும் அவற்றைச் சொல்லும் பகட்டில்லாத சொற்களும் வாழ்க்கை ஒரு போராட்டம் எனப் பார்க்கும் பார்வையும். . . . 

ஒய்யாரக் கொண்டை
                                             – கி.நடராசன்

சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம். மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் சுசீலாவிற்குத் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன. நியான் விளக்குகளில் சொலிக்கும் கனவு நகரம். வழவழச் சாலைகளில் வழுக்கியபடி விரையும் கார்கள். மாட மாளிகைகள். சுகந்தம் வீசும் கடற்கரைக் காற்று. புரண்டு புரண்டு படுத்தாள். சிறிது கண் அயர்ந்திருப்பாள். அதற்குள் அம்மா எழுப்பிவிட்டாள்.

மணப் பெண்ணை அலங்காரம் செய்ய வேண்டும். காலைக்கடன்களை முடிக்க அவசரப்படுத்தினாள். முழுநிலா பிரகாசமாய் ஒளி வீசியது. மரம் செடி கொடிகளில் வெண்ணொலி பட்டு பசும் ஒளியாகச் சிதறித் தெறித்து மனோரஞ்சிதமான சூழலை உருவாக்கியது. அதிகாலைக் கடன்களை நடுநிசியில் முடிக்க அவசரப்படுத்தினால் முடியுமா?  இருப்பினும் அம்மாவின் அவசரம் புரிந்து நடந்தாள்.

அதிகாலை நான்கு மணிக்கு பேருந்தைப் பிடித்தால்தான் வடபழனி முருகன் கோவிலுக்கு ஏழு மணிக்கு செல்ல முடியும். உறவுகள் சூழ புதுப்பெண் அலங்காரத்துடன் சென்னையை அடைந்தாள்.  

திருமணம் இனிது நடந்தேறியது. சரவண பவனில் திருமண விருந்து. புதுத் தம்பதிகள் அருகருகே வைத்து விருந்து பரிமாறப்பட்டது. மாப்பிள்ளைத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். விருந்துண்டு உறவினர்கள் மொய்யெழுதி விடைபெற்றுச் சென்றனர்.

சுசீலாவின் வயிறு கனமாகி கடகடக்கும் உணர்வு ஏற்பட்டது. மாப்பிள்ளை ஆட்டோவில் மணப்பெண்ணையும் அவள் பெற்றோரையும் வைத்து ஓட்டிச் சென்றார். சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல, மாப்பிள்ளை ஆட்டோவை லாவகமாக வளைத்து வளைத்து ஓட்டினார். கணவனின் திறமை சுசீலாவிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் ஆட்டோ குலுங்கிய குலுக்கலில் வயிற்று கடபுடா அதிகமாகியது. வயிற்றின் இறுக்க உணர்வு உடலெங்கும் படிப்படியாகப் பரவியது. அடிவயிற்றில் இலேசான வலி பரவியது.  

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் கூவம் ஆற்றங்கரை எனப்படும் சாக்கடை ஓடையின் கரையின் அமைந்த குடிசைப் பகுதியில், சிறிய சந்து பொந்துகளில் ஆட்டோ சர்க்கஸ் லாவகத்தில் சென்றது. மணமகளை ஆரத்தி எடுத்து வரவேற்க மகளிர் கூட்டம் கூடி இருந்தது. அவர்களின் சிநேகப் பார்வை சுசீலாவிற்கு உற்சாகத்தைத் தந்தது.

மாமியார், பள்ளியில் பயிலும் நாத்தனார், கணவன் என்ற சிறிய தொகுப்புதான் அவளின் புது வீட்டின் அங்கங்கள்.. சொந்தங்கள்.

மதிய உணவு ஓட்டலில் இருந்து ஆட்டோவில் வந்து இறங்கியது, பெற்றோரைப் பிரிவது சுசீலாவிற்குத் துயரத்தைத் தந்தது. கண்களில்  கண்ணீர் மல்கியது.  

மாமியார் மணகளைச் சாப்பிட வற்புறுத்தினார். சுசீலாவிற்கு அடிவயிற்றுக் கனத்தை கீழிறக்க வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது.  நாத்தனாரிடம் ஒன்றுக்குப் போக வேண்டும் என்றாள்.  குடிசைக்குப் பக்கத்தில் புதிதாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓலைத் தடுப்பிற்கு வழிகாட்டினாள். வாழ்வு, கழிவு என்று அனைத்தும் அருகருகே இருந்தது. கிராமத்துப் பெண்ணிற்கு இச்சூழல் கூச்சத்தை ஏற்படுத்தியது. சளசளவெனப் பக்கத்தில் பேச்சுக்குரல்கள் காதில் கேட்பது மாதிரி இருந்தது. முழுமையாகச் சிறுநீர் கழிக்க முடியவில்லை.  

கூப்பிடும் தூரத்தில் குடிசைகளைத் தாண்டி கூவம் ஆற்றங்கரையில் அப்பெண்கள் அதையே அவர்கள் மிக இயல்பாக எந்த சங்கடமற்ற செயலாகச் செய்து கொண்டிருந்தனர். அருவருப்புப் புழு சுசீலாவின் உடலெங்கும் ஊர்ந்து சென்றது.  

மதிய சாப்பாடு சுவையாய் இருந்தும் வயிற்றினுள் இறங்க மறுத்தது. மாமியார் உடனிருந்து அன்பாகப் பரிமாறி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். வயிறு உப்பிசமாகி குடலைப் பிழிவது போல் இருந்தது.  சிறிது நேரத்தில் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உந்தித்தள்ள தொடங்கியது.  நாத்தனாரிடம் இரண்டுக்குப் போக வேண்டும் என்று சங்கடத்துடன் சொன்னாள்.

மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த குடிசைப் பகுதியின் குறுகலான  சந்துகளில் நடந்து சென்றாள். முடிவில் கூவமும் மின்சார ரயிலின் தண்டவாளங்களும் இருக்கும் பகுதியை அடைந்தனர். உருண்டு திரண்ட கறுப்புப் பன்றிகளும் அதன் அழகிய குட்டிகளும், கோழிகளும் அதன் வண்ணக் குஞ்சுகளும் குப்பைகளையும் கழிவுகளையும் கிளறிக் கொண்டிருந்தன.  

கடகடவென்ற மின்சார ரயில் ஒடியது.  இரண்டு பெண்கள் டக்கென்று எழுந்த நின்றனர்.  ஒரு வயதான அம்மாள் கவலையின்றி குந்திக் கொண்டிருந்தாள். ரயில் சென்றவுடன் மீண்டும் குத்துக் காலிட்டு குந்திக் கொண்டனர். இதைக் கண்ட சுசீலாவிற்கு மலம் கழிக்கும் உணர்வே போய்விட்டது.  இரயிலும் தண்டவாளங்களும் மரவட்டைகளாய் உடம்பினுள் ஊரும் எரிச்சலான அருவருப்பை உண்டாக்கின.  

“வா வீட்டுக்குப் போகலாம்.”

“இன்னா அண்ணிய், அவுட்சய்டு போலயா?”

“வர மாதிரி இருந்தது.. இப்ப வரல்ல.”

தடதடவென மின்சார ரயில் சென்றது. ஆயிரமாயிரம் கண்கள் தனது அந்தரங்கத்திற்குள் எட்டிப்பார்க்கும் அவமானமும் கூச்சமும் மேலிட்டன. மன உளைச்சலுடன் சுசீலா வீட்டிற்கு திரும்பினாள்.

மாப்பிளை ஆசை ஆசையாய் புதுப்பெண்ணிடம் ஜாலியாகப் பேச முனைந்தார்.  அவளுக்கும் தன் கணவனிடம் ஆசையுடன் பேசி சிரிக்க வேண்டுமென்று நினைத்தாள். வயிறு கடபுடா சத்தம் போட்டு கலாட்டா செய்து அதைத் தடுத்தது.

முதல் இரவிற்கான சில ஏற்பாடுகளை அந்தக் குடிசையில் உள்ளவர்கள் செய்யத் துவங்கினர்.  புதுத்தம்பதிகள் அந்த குடிசையிலும் மற்றவர்கள் பக்கத்து குடிசையிலும் தங்க ஏற்பாடு நடந்தது. அதைவிட இரவு எப்பொழுது வரும் என்று சுசீலா காத்திருந்தாள்.

மலத்தை அடக்க அடக்க லேசாக வயிறு வலிக்க ஆரம்பித்தது.  அடி வயிறு உப்பிசம் கண்டு முறுக்க ஆரம்பித்தது. நாத்தனார் கலந்து தந்த காப்பியைக்கூடத் தொட மனமில்லை.  தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் இருந்தாள். நாக்கு வரண்டு போனது. அவளின் நிலைமை அங்கு உள்ளவர்களுக்குப் புரியத்தான் செய்தது.  இந்தச் சூழ்நிலைக்கு அவள் பழகித்தான் தீரவேண்டும். வேறுவழி கிடையாது.  இந்த விசயத்தில் கிராமத்து சேரியை விட நகரத்து காலனி மோசமாக இருந்தது.

கதிரவன் மறைந்து காரிருள் கவிழ்ந்தது. மணப் பெண்ணை மீண்டும் ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துக் கொண்டு நாத்தானார் சென்றாள். முழுநிலவு தகதகவெனப் பொன்னிறத்தில் வானில் உதித்து ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சவும் சரியாக இருந்தது. ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளும், ஜிகினா காகிதங்களும் அந்த ஒளியில் மின்னி அருவருப்பைத் தந்தன.  நேற்று மகிழ்வையும் பரவசத்தையும் தந்த நிலவு  இன்று எரிச்சலையும் துன்பத்தையும் தந்தது. அப்பகுதிப் பெண்கள் இதெயெல்லாம்  பொருட்டாகவே கருதாமல் சாதாரணமாக இயங்கித் தங்கள் கடனை முடித்துக்கொண்டு சென்றனர். சுசீலாவால் அவ்வாறு செய்ய இயலவில்லை.

திடுமென்று பிரகாசமான ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டு மின்சார ரயில் கடக் கடக் கடக் என்று அவளின் உடலினுள் புகுந்து கடந்த சென்றது.  இரயிலின் ஆயிரம் சன்னல்களும் பெரிய முட்டை முட்டை கண்களாக கண் கொட்டாமல் விழித்து விழித்துப் பார்த்தது.  சுசீலா நிலைகுலைந்து போனாள்.

மறுநாள் மாப்பிள்ளை அவளை மெரீனா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.  தலைக்கு மேலே சாலைகளில் மெட்ரோ இரயிலுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நல்ல வேளை கூவம் ஆற்றினுள் இந்த மெட்ரோ ரயில் போடப்படவில்லை.  வானம் பிளந்த ஓலைத்தடுப்புக் குளியலறைகளும் ஏராளமான குடிசைப் பகுதிகளின் அந்தரங்கங்களும் வானத்தில் இருந்து பார்க்கும் வேடிக்கைப் பொருள்களாகி விட்டிருக்கும் என்று அவன் மனம் புழுங்கினாள்.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

Aattam Short Story by Yeknath Synopsis 81 Written by Ramachandra Vaidyanath. ஏக்நாத்தின் ஆட்டம் சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 81: ஏக்நாத்தின் ஆட்டம் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




கதையை ஆரம்பித்தது போல முடித்தும் காட்டிவிடவேண்டும் என்று யார் சொன்னார்கள்,  கதைக்கு உள்ளே வருகிறவருக்கு வெளியே போகவும் தானே தெரியும்.  அப்படியே வெளியே போகாவிட்டால்தான் என்ன?

ஆட்டம்
ஏக்நாத்

கையிலிருந்த ஒரு கூழாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு அது கீழே விழுவதற்குள் தரையிலிருந்து ஆறு கற்களையும் வலக்கையால் அள்ளி மேலிருந்து வந்தக் கல்லையும் லாவகமாய் பிடித்தாள் ஆவுடை.  எதிரில் மேலே சென்று வரும் கல்லையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் உடையம்மை.  பொதுவாக இதுபோன்ற கழச்சிக்கல் விளையாட்டுகளில் ஐந்து அல்லது ஆறு பேர் ஆடுவதுதான் வழக்கம்.  ஆனால் இன்று வெறிச்சோடிக் கிடக்கிற தெருவில் வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து இவர்கள் இருவர் மட்டுமே  ஆடிக்கொண்டிருந்ததற்கு காரணமிருக்கிறது.  ஏனென்றால் உடையம்மை சிறிது காலமாக தெருக் குமரிகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்தாள்.  அவளுடன் பேசக்கூடாதென அவள் வயசையொத்த குமரிகளின் அம்மாக்கள் ஒட்டுமொத்தமாய் தீர்மானித்திருந்தனர்.  இந்த முடிவையும் மீறி வாய்க்காலுக்குத் தண்ணிக்குப் போகும்போது சிலர் அவளிடம் பேசுவதுண்டு.  ஆவுடை, உடையம்மைக்குச் சித்தி மகள் என்பதால் இப்போது அவள் மட்டுமே அவளுக்குத் தோழி.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்தான் அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது. மாத்ராங்குளத்துப் பொத்தைக்கருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான் மணி.  பத்து செம்மறியும் ஏழு வெள்ளாடும் அவனுடையது.  அவனுடையது என்றால் அவன் அப்பா இதவச்சுதான் நீ பொழச்சிக்கிடணும் என்று உறுதியளித்துவிட்டு அவற்றைத் தானம் செய்திருந்தார்.  பதினோறு மணி வாக்கில் சாப்பிட்ட சோறு போக மூன்று மணியவில் சாப்பிட தண்ணியும் கஞ்சியும் தூக்குச் சட்டியில் இருந்தன.  அவற்றைச் சுற்றி எறும்புகள் ஆய்ந்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.  

பாவாடை சட்டைத் தாவணியில் ஓர் இளம் பெண் தூக்குச் சட்டியோடு வந்து கொண்டிருந்தாள்.  வெயில் பட்டு அவள் மூக்குத்தியிலிருந்து வந்த ஒளி மின்னிச் சென்றது.  அவள் அருகில் வரவர அவனுக்குள் இனம்புரியாத மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான்.  அக்கம் பக்கம் யாருமில்லை.  மிக அருகில் வந்ததும்தான் அவள் மேட்டுத்தெரு பொன்னுசாமி  மகள் என்பது தெரிந்தது.  மரத்தின் அடியிலிருந்து எழுந்த அவன் ஒருவித கிரக்கத்துடன் டக்கென்று அவளின் கையைப்பிடித்து இழுத்தான்,  இதை அவள் எதிர்பார்க்கவில்லை.  திடுக்கிட்டுப் போனாள்,

“ச்சீ, கைய எடு.”

“ஏட்டி, சத்தம் போட்ட கழுத்த நெறிச்சி போடுவேன் பேசாம வா இங்ஙன.”

“என்னது வரணுமா?” என்றவள் “ஏ அப்பா, ஏப்பா” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.

கம்யூனிஸ்ட் சங்கத்தில் ஊரே கூடி நின்றது.  உடையம்மையின் அப்பா கம்யூனிஸ்ட் என்பதால் பிரச்னையை இங்கு கொண்டு வந்திருந்தார். 

தூணில் சாய்ந்திருந்த தலைவர் கேட்டார் “எங்க கல்றகுறிச்சா மவன?”  தலைவர் அவனுக்குச் சொந்தம் என்றாலும் விவகாரம் என்று வந்துவிட்டால் அவர் நியாயத்தின் பக்கம்.  ஒரு வயக்காட்டுப் பிரச்னையில் தன் சொந்தத் தம்பிக்கே தண்டனை தந்து நியாயஸ்தன் என்பதை நிரூபித்தவர் அவர்.

“ஏல, அந்தப் புள்ள சொல்லுதெல்லாம் நெசமாவா?”

அவன் பேசவில்லை.  தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“ஏல கேக்கம்லா, வாயில் ஈரமண்ணயா வச்சிருக்க.”

“நா ஒண்ணுஞ் செய்யல, அப்பனுக்குச் சோறா கொண்டு போறேன்னுதான் கேட்டேன்.  அதுக்குள்ள..” என்றான் குனிந்த தலை நிமிராமல்.

“த்து நாயே, யாருமத்த எடத்துல நீ என்னத்தக் கேட்டுருப்பன்னு தெரியும்.  முன்னால ஒரு தடவ எலஞ்சியா வீட்டுச் சொவர ஏறிக் குதிச்ச பயதான நீ? பொய்யா பேசுத,  சாத்துனம்னா கடுவாப் பல்லு ஒடஞ்சிடும் படுவா பேசுதாம் பாரு.”

பிறகு அந்தப் பெண் ஏதோ சொல்ல, அவளின் தந்தை ஆரம்பித்தார்.  

“சரி அதுதான் ஒம் மவா வெவரமா சொல்லிட்டாள.  நீயும் என்னத்த சொல்லுத” என்றார் துணைத்தலைவர்.

“அவன்தான் ஒண்ணுமே பண்ணலையே,  ஆள் வந்ததும்தான் வுட்டுட்டுப் போயிட்டான” என்றார் ஒருவர்.

வார்த்தைகள் தடித்தன.

“இனிமே இந்த மாதிரி பொண்ணு புள்ளய கைய புடிச்சு இழுக்க நெலமய மாத்தணும்னா கடுமையான தண்டனைதான் வழி.  அப்பதான் சரிபட்டு வருவானுவோ, கொழுப்பெடுத்துதவனுவோ”.

வந்திருந்தவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்து கைகலப்புக்குப் போய் சப்பென்று ஓய்ந்தது.

அம்மனுக்கு இரண்டு லிட்டர் எண்ணெயும் உடையம்மையின் காலில் எல்லோர் முன்பும் விழுந்த அவன் மன்னிப்புக் கேட்டதையும் ஊரில் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள்.    உடையம்மையைப் பொறுத்தவரை விஷயம் வேறாகியிருந்தது.  அவள் ஏதோ தப்பு செய்துவிட்டாள் என்பது போலவும், அவள் உறவினர்களே அவளை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.  அந்தச் சம்பவத்துக்குக் கண் காது மூக்கு வைத்து அதை ஒரு பெரிய பிரச்னையாக்கி இருந்தார்கள் தெருக்காரிகள்.  இதனால் உடையம்மை வயசையொத்த குமரிகளை அவளிடம் பேசக்கூடாதன தெரு பெண்கள் ஒரு மனதாக முடிவெடுத்திருந்தார்கள்.  

உடையம்மையின் மாமன் மகன் பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தான்.  அவளைத்தான் கல்யாணம் முடிப்பேன் என்று காத்திருப்பவன்.  தெருவில் யாரோ நடந்த விஷயத்தைக் கிசுகிசுவாக்கி அவனுக்கு எழுதிப் போட்டிருந்தார்கள்.  இதனால்தான் அவசரமாக ஓடி வந்தான்.  எல்லோருமே ஒரு விதமாகச் சொல்வதைக் கேட்டு மனதுக்குள் கிரீடம் சூட்டி மகிழ்கின்ற தனது காதலி வருங்கால மனைவி மீது வெறுப்படைந்தான்,  இது நெசமாக இருக்குமா?  அவள் எப்படி என்னை ஏமாற்றுவாள்.  மனம் இரட்டை வேடம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறது.  

வாசலில் காத்திருந்தாள் உடையம்மை அவன் வருவானென்று.  இதற்காக பீடி சுற்ற சித்தி வீட்டுக்குச் செல்வதைக்கூடி நிறுத்தியிருந்தாள்.  இரட்டைச் சடைப்பின்னி பவுடர் பூசி புதுசு மாதிரியான பாவாடை சட்டையை அணிந்து கொண்டு எதிர்பார்த்திருந்தாள்.   அவன் வரவில்லை.  யாரை மலைபோல் நம்பியிருந்தானோ அவனே இவளிடம் கேட்காமல் ஊர்ப்பேச்சைக் கேட்டுச் செல்கிறானே என்று மனதுள் புழுக்கம்.

சின்ன வாய்க்கால் கல்பாலத்தில் ஒரு காலை மேலும் ஒரு காலைத் தரையிலுமாக வைத்துக் கொண்ட அமர்ந்திருந்தான் மணி.  சின்னதாய் சலசலத்து ஓடும் தண்ணீரையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அருகில் எதோ ஓர் உருவம்  நிற்பதுபோல் உணர நிமிர்ந்து பார்த்தான்.  ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

தான் உடையம்மையின் மாமன் மகன் என்றும் அவளைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகச் சொன்னான்.  

“இல்ல ஊருல ஒரு மாதிரியா பேசுதாவோ அதான் என்னன்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான்.

இப்படி நேரிடையாகவே குற்றவாளியிடம் வந்து என்ன பண்ணுன என்று கேட்பது அவனைப் பொறுத்தவரை வேடிக்கையாகவே இருந்தது. ஏதோ தெரியாத்தனமாக நிமிட நேர தடுமாற்றத்தில் செய்த பிழை இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தியிருப்பது குறித்து வருந்தினான்.  

தனத வலக்கையைத் தூக்கி அவன் தலையில் வைத்து “என் அம்மா மேல ஆணையா சொல்லுதேன் எந்தத் தப்பும் நடக்ககல.  நாந்தான் அவசரப்பட்டு … “என்று ஆரம்பித்து விளக்கினான்.

இருவரும் அங்கிருந்து பீடி குடித்தனர்.  “நான் ஒங்களப் பார்தது யார்ட்டயும் சொல்லாண்டாம்” என்ற வேண்டுகோளோடு விடை பெற்றான் மாமன் மகன்.

திடீரென்று அவள் முன் வந்து நின்றான் மாமன் மகன்.  உடையம்மை அவனை எதிர்பார்க்கவில்லை.  இரண்டு நாட்களுக்கு முன்பே வந்த அவன் தன் வீட்டுக்கு வராததால் அடைந்திருந்த கோபமும் எரிச்சலும் மாறியிருந்தது.  

“உள்ளே வாங்க.”

வீட்டுக் கதவுக்கு அடைப்பாள் இருந்த ஸ்டூலை எடுத்து கொடியில் கிடந்த தாவணியால் துடைத்து உட்காரச் சொன்னாள்.  அவனின் வருகையை முன்னிட்டு  காபி போடும் ஆயத்தத்தில் இறங்கினாள்.   

காப்பிச் சட்டியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும் தீ அணைந்தது.  இரண்டு எருக்களை அடுப்புக்குள் திணித்து குழலை எடுத்து ஊதினாள்.  புகை வீடு முழுவதும் நிறைந்தது.

இருமிக் கொண்டே “ஒங்கப்பாவ எங்க?” என்றான்.

“பொட்டலுபுதூருக்க வேல.  போயிருக்காவோ” என்றவள் மீண்டும் ஊதத் தொடங்கினாள்.

“ரெண்டு நாளக்கி முன்னாலயே வந்திருந்தீங்க..”

“ஆமா உடையம்ம, சும்மா  ஒரு வெஷயமாக வர வேண்டியிருந்துச்சு”விஷயத்துக்கு வந்தான்.  

“ஏம் உடையம்ம, ஊருக்குள்ள ஏதோ  வெவகாரம்னு பேசிக்கிட்டாவுள” ஒன்றுமே தெரியாதது போல கேட்டான்.

“ஆமா..”

“தெருவுல ஒன்னய எல்லோரும் ஒரு மாதிரியா பேசுதாவோ, ஆனா நான் நம்புவனா?”

அவள் மௌனமாகவே நின்றாள்.  காப்பி கொதித்து மூடியிருந்த தட்டை நிமிர்த்தி நுரைகளாய் வெளியே சிந்திய ஸ்ஸ் சத்தம் கேட்டு அடுப்பு பக்கம் ஓடினாள்.  அதை இறக்கி டம்ளரில் ஊற்றி ஆற்றினாள்.  

“என்ன வெவகாரம் உடையம்ம?”

“இப்ப எதுக்கு திரும்பவும் அது..”

“ஒனக்கு விருப்பமில்லனா வேண்டாம் உடையம்ம, ஓம் மனச வாடினா என்னால தாங்க முடியாது.  தெருக்கார பயலுவோ ஆயிரஞ் சொல்லட்டும் நான் ஒன்ன உயிருக்குயிராக நெனக்கேன்.  நீ எனக்குனேப் பெறந்தவ” என்றவன் ஸ்டூலிலிருந்து எழுந்து அவளின் கைகளைப் பிடித்தான்.

டக்கென்று கையை உதறிவிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் உடையம்மை

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.