Vasuthenthira's Red Parrot Novel in tamil translated by Yumavasuki book review by Dhurai. Arivazhakan சிவப்புக் கிளி நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: வசுதேந்திராவின் சிவப்புக் கிளி நாவல் தமிழில்:யூமா வாசுகி – துரை. அறிவழகன்



மண்மணம் பேசும் கிளி

இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்பைப் படைக்க முடியும். இயற்கை, மண்மீதான நேசம், கவித்துவ மொழி என பல நிறங்கள் கரைந்து உருக்கொள்ளும் படைப்பு மனம் கொண்டவரான கன்னட மேதமை “வசுதேந்திரா”வின் அத்தகைய உன்னதப் படைப்புதான் “சிவப்புக் கிளி” எனும் நாவல்.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்திலுள்ள “சாத்தூரில்” பிறந்தவர் “வசுதேந்திரா” அவர்கள். பால் புதுமையினருக்கான உள்ளூர் அமைப்புகளோடு இணைந்து களப்பணி ஆற்றுபவர் இவர். இவரது நூல்கள் அனைத்தும் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை கண்டு சாதனை படைத்தவைகள். “கன்னட சாகித்திய அகாதெமி” விருது உள்பட பல்வேறு விருதுகளை தனது மகுடங்களாகக் கொண்ட சிறப்புப் பெற்றவர் “சிவப்புக் கிளி” மூல நூலின் ஆசிரியர் “வசுதேந்திரா” அவர்கள்.

பல்லுயிர்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் இடையிலான உறவு குறித்த உணர்வு ரீதியிலான புரிதலுடன் ஒரு படைப்பு உருக்கொள்ளும் போது அப்படைப்பு காவியத்தன்மை பெறுகிறது. அக்காவியத்தன்மை என்பது அழகியல் வடிவம் சார்ந்ததாக மட்டுமில்லாமல் வாசக மனதைத் தைத்து ஒரு மகத்தான மாற்றம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் அமைந்துவிடுகிறது.
இவ்வாறு கலை மேன்மையும், சமூக அக்கறையும் கொண்ட படைப்புகளே காலத்தின் தேவையாக உள்ளது; காலத்தின் உன்னத ஆன்மா இப்படைப்புகளின் வழியாகவே மலர்ந்து பேசுபொருளாக நிலைத்து நின்றுவிடுகின்றன. நேசமும், பிணைப்பும் என்பது மனிதர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; புல், பூண்டு, வெட்டுக்கிளி, இலை, தழை, பறவை, மரம் என பிரபஞ்சத்தின் சகல பல்லுயிர்களையும் ஒன்றிணைத்து மலரும் இம்மண்ணின் மகத்தான உறவாகும். இவ்வாறான பேரன்பு கொண்ட ஆத்மாவில் பிறக்கும் எழுத்துக்கள்தான் காலத்தின் முகத்தில் அறையும் சாட்சியங்களாக நிலைக்கின்றன.

பிரச்சாரம், அறிவுறுத்தல் எனும் காரணிகள் ஏதும் துருத்தி நிற்காமல் அழகியலுக்குள் கரைந்து உருவாகும் “சிவப்புக் கிளி” போன்ற படைப்புகளே காலத்தில் அழியாத கலைமேன்மை கொள்கின்றன. ஒரு இலையின் நுனியிலுள்ள பனித்துளிக்கும் இப்பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இடையிலான மகத்தான தொடர்புக் கண்ணிகள் குறித்த விழிப்புற்ற ஆன்மாவை “வசுதேந்திரா”வின், சிவப்புக் கிளி வழியாகப் பார்க்க முடிகிறது. கலையின் வெற்றியும் கலைஞனின் வெற்றியும் இத்தகைய விழிப்புற்ற ஆன்மாவில்தான் அடங்கியுள்ளது.

வசுதேந்திராவின் களங்கமற்ற மற்றும் அறிவகங்காரமற்ற மொழி, இயற்கையோடு கரையும் போது அழகிய படிமங்கள் பூத்து வாசிப்பு மனங்களை பரவசப்படுத்திவிடுகிறது. சூரிய கதிர்களின் தீண்டலில் காற்றோடு பனி கலக்கும் கணத்தில் மண்ணிலிருந்து வெளிப்படும் மணம், வசந்த காலத்தில் துளிர்க்கும் தளிர் இலைகள், ஈர நிலத்தில் விழுகையில் ‘சொத்’தென்ற சப்தம் எழுப்பும் பனம் பழம், பனங்குருத்தை மென்றபடி பம்மிக் கிடக்கும் காடைகள் என மனிதன் அவதானித்து நேசம் கொள்ள இயற்கை எல்லையற்று விரிந்து இருக்கிறது. சிறுதுளி நீர்ச்சொட்டுக்குள் மறைந்து நிற்கும் குளம், குட்டை, ஓடை, ஏரி, கடல் என விரியும் நிலவியலைப் பேசத் தெரிந்தவனே அசலான கலைஞனாகப் பரிமளிக்க முடியும். அவ்வாறு தன் சிறகுகளை விரித்து நிற்கும் கலைஞராக வசுதேந்திராவை ‘சிவப்புக் கிளி’ நூல் வழியாகப் பார்க்க முடிகிறது.

மண்ணை ஆளும் விகார மனம் மனிதனுக்குள் விழித்தெழும் போதெல்லாம் இயற்கை தன் வசீகர முகத்தை மாற்றிக் கொண்டுவிடுகிறது. பலவேறு படைப்புகளில் தன் மனம் தொட்ட பாத்திரங்கள் குறித்து ஒரு பதிவில் சொல்லும் போது “சிவப்புக் கிளி” நாவலில் வரும் ‘ ஈரப்பா’வின் கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார் ‘யூமா வாசுகி’ அவர்கள்.
மரபு வழியிலான அறிவை நவீன எந்திரங்களின் கண்டுபிடிப்புகள் வழியாக மனிதன் ஆள நினைக்கும் போது இயற்கை எதிர்வினை புரியத் தொடங்குகிறது. தாவரங்கள் குறித்த அறிவுச் செழிப்பை வைத்திய அறிவாக மறுவரைவு செய்த “இருளர்” மொழியை நவீனம் உள்ளுணர வேண்டும். ‘காடர்’ மற்றும் ‘இருளர்’ பழங்குடி இன மக்களின் தொன்ம அறிவை நோக்கி நவீனம் திரும்பும் போது புதிதான சிலவற்றை மனித இனம் பெறமுடியும் என்பது திண்ணம். அத்தகைய சிந்தனைப் புள்ளி நோக்கிய திறவாக அமைந்துள்ளது “வசுதேந்திரா”வின் ‘சிவப்புக் கிளி’ நாவல்.

நிகழ் புள்ளியில் நின்று மூதாதையர் வாழ்வை நோக்கியும், இனி வரும் தலைமுறை சந்ததிக்கான வாழ்வை நோக்கியும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது “சிவப்புக் கிளி” நூல். நவீன முன்னகர்வு எனும் பொய்யுரைக்கு நாம் தொலைத்து வரும் மண்ணையும், வாழ்வையும் பேசுகிறது இந்நாவல்.
நவீனம் என்ற பூச்சோடு எந்திரங்களின் துணை கொண்டு மனிதன் இந்தப் பூமியை ஆளத்தொடங்குகையில் அவன் எதையெல்லாம் இழக்கிறான், எப்படி அழுக்கடைகிறான் என்பதை பச்சை நிறம் மறைந்து சிவப்புப் பூச்சுப் பெறும் கிளிவழி குறியீடாகப் பேசுவதே நாவலின் சிறப்பாக அமைகிறது. கிளிகளின் இறக்கைகள் நிறம்மாறும் போது மனித குல வாழ்வை அச்ச ரேகைக்கள் சூழ்ந்து பதைபதைக்க வைத்துவிடுகிறது.

“விவசாயத் தோட்டம்” குறித்த ஒரு பால்ய வயதுச் சிறுவன் எழுதும் கட்டுரை வழியாக மலரும் நாவல் மூதாதையர் மண்ணின் உடங்கருவல் வாடையோடு முற்றுப்பெறுகிறது. தொன்ம மண்ணின் பாரம்பரிய விதை வித்தாக வாழும் “ஈரப்பா”வின் வாழ்வு சிதைவதை அடிக்கோடாகக் கொண்டு தலைமுறை மாற்றம் காட்சி பெறுகிறது.
பால்ய நிலத்தின் நிறம் மாறும் ஒரு சமூக அவலம் வாசிப்பு மனதைத் தைத்து ரணமாக்கிவிடுகிறது. மண்ணுடனும், இயற்கையுடனும் பிணைந்திருந்த நம் தொன்ம வாழ்விலிருந்து விலகும் போது நம் சுவாசப்பாதையில் படியும் அழுக்கைச் சுட்டி அகவிழிப்பை ஏற்படுத்தும் வகையில் நாழி ஓட்டு அடுக்குகளாக காட்சிபெறுகிறது நாவலின் களம். மூதாதையர் வாழ்வின் பொருள்பொதிந்த வாசம் சுமந்து, பதைபதைக்கச் செய்கிறது “வசுதேந்திரா”வின் “சிவப்புக் கிளி” எனும் அழகியல் சாரம் கொண்ட குறியீட்டு நாவல்.

நூல் : “சிவப்புக் கிளி”
கன்னட மூலம் : ‘வசுதேந்திரா’
மலையாளம் வழி தமிழில்: ‘யூமா வாசுகி’
விலை: ரூ.40 /- பக்கங்கள் : 48
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
Web : Tamizhbooks.com

B.V.Sugumaran's Dhiya novel in tamil translated by Yuma vasuki book review by Dhurai. Arivazhakan பி.வி.சுகுமாரனின் தியா நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: பி.வி.சுகுமாரனின் தியா நாவல் தமிழில்:யூமா வாசுகி – துரை. அறிவழகன்



“குழந்தைகளின் விருப்பப் பள்ளிக்கான திறவுகோல்”

2016ல் சிறார் இலக்கிய விருது பெற்ற குழந்தை பருவத்தினருக்கான நாவல் பி.வி. சுகுமாரனின், “தியா”. துளிர்க்கும் பருவத்து பசு இலை குறுஞ்செடிகளுக்கு வானத்தின் திசை காட்டும் பொறுப்புமிக்க பெரியவர்களும் வாசித்து நாவலின் உள்ளோட்டத்தை உள்வாங்கி சிறார் உலகுக்கு கடத்தலாம். கல்வியின் சாரத்தையும், மணத்தையும் கொண்ட அரசுப் பள்ளிகளின் சிறப்பு உணர்த்தும் எழுத்துக்கள்.

நூலின் மூல ஆசிரியர் பி.வி. சுகுமாரன் அவர்கள் கேரள பாலக்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவர். “தியா” நாவலுக்கான “கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது” மட்டுமல்லாமல், “ஃபாதர் சின்னப்பா நாவல் விருது” மற்றும் “ராஜீவ் காந்தி கலாசார விருது” ஆகிய விருதுகளையும் பெற்றவர்.
கையகள நிலத்தை அளந்து சிறுகக் கட்டி பெருக வாழும் மனநிலை விலகி, பறப்பதைப் பிடிக்கும் மன உலகு கொண்டவர்கள் நடுத்தர வாழ்வியல் குடும்பத்தினர். அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதை இழுக்காகவும், தனியார் பள்ளி மாயப் பெருமையில் மூழ்கி தத்தளித்து தடுமாறும் பொருளியல் வாழ்வில் பயணிப்பவர்கள் இவர்கள். இந்த முரண் நகையை தன் எழுத்தின் சித்தரிப்பில் துல்லியமாக காட்சிபடுத்தி உள்ளார் நாவலாசிரியர் பி,வி.சுகுமாரன்.
கனவுச் சிறகுகளுடன் பரந்து, விரிந்த ஆகாயத்தில் சிறகடிக்க வேண்டிய பருவத்தில் முடக்கப்பட்ட சிறகுகளுடன் தங்களை சுருக்கிக் கொண்டு பயணிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகும் குழந்தை மனதின் தெறிப்புகள் இழையோட பின்னப்பட்ட படல் இந்நாவல்.

சுய பெருமை எனும் மாபெரும் பொய்ப் பிம்பத்துடன் தங்கள் குழந்தைகளின் சிறகுகளை பொசுக்கும் பெற்றோர்களுக்கு சில உண்மைகளை உணர்த்தும் வகையில் தீட்டப்பட்டுள்ள சித்திரம் “தியா” நாவல். இச்சித்திரத்தின் வழி அரசுப் பள்ளிகளின் உயர் தன்மை நிறம்பெறுகிறது. மாயத் திரை விலக்கி, குழந்தைகளின் அக உலகம் மலர்வதற்கான இதமான காற்றை படரச் செய்யும் இது போன்ற வரவுகள் பிற மொழிகளில் இருந்து தமிழ் மண்ணில் உயிர் பெறும் போது சிறார் இலக்கியம் புது திசையில் புத்தொளி பாய்ச்சலுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
நாவலின் நாயகி ஆறு வயதுச் சிறுமி “தியா” நடந்த பாதை, கண்ட காட்சிகள், செய்த குறும்புகள், மலர்வுகள் என அவள் வாய்வழி விவரிக்கப்பட்ட யதார்த்த உண்மைகளின் அலையோட்டம் கொண்ட நாவல் “தியா”. அனுபவ துணுக்குகளில் சிறிதான புனைவு நிறம் சேர்த்து நாவலை அழகுற மலரச் செய்துள்ளார் ஆசிரியர். இதுவே நாவலின் கூடுதல் சிறப்பு.

1966ல் கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவிடைமருதூரில் பிறந்தவர் யூமா வாசுகி. ‘மாரிமுத்து’ எனும் பெயரில் உள்ளொளி பாய்ந்த ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்காக 2017ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’ விருதினை பெற்றவர் இவர்.
‘உனக்கும் உங்களுக்கும் – 1993’; ‘தோழமை இருள் – 1997’ ; ‘இரவுகளின் நிழற்படம் – 2001’ ; ‘என் தந்தையின் வீட்டை சந்தை யிடமாக்காதீர் – 2008’ ; ‘சாத்தானும் சிறுமியும் – 2012’ ; ஆகிவைகள் இதுவரை வெளிவந்துள்ள இவரது பூரணத்துவம் பெற்ற கவிதை நூல்கள்.
“பொதுவாக ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கையில் நாம் அவைகளுக்குள் ஒரு பொதுத்தன்மையை கண்டடைய முயற்சிப்போம். யூமா வாசுகியின் படைப்புகளை வாசிக்கையில் அதிலுள்ள பொதுத் தன்மையென எனக்குள் ஒரு வார்த்தை தோன்றுகிறது; “கள்ளமின்மை” – என சொல்கிறார் இளம் எழுத்தாளர் ‘சுரேஷ் பிரதீப்’.

யூமாவின் கவிதைகளை வாசிப்பது என்பது, குழந்தைமையை தொலைத்துவிடாத ஒரு தூய மனதை வழி தொடரும் நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. ‘எங்கே யாருக்கும் அவர்கள் கையசைத்தாலும், அங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’ என்று கையசைக்கும் குழந்தைகளின் உலகில், குழந்தைகளின் கையசைப்பை யாசித்து நிற்கும் எளிய மனிதராகவே தன்னை இருத்திக் கொள்ளும் ‘யூமா வாசுகியை’ அவரது எழுத்துக்களின் வழி காண முடிகிறது.
சத்தியமான இலக்கிய வாழ்வு என்பது மகுடங்களைத் தருவதில்லை; ஆனால் சிறகுகளைத் தரக்கூடியது. அத்தகைய காருண்ய சிறகுகளக் கொண்ட கலை ஆளுமையாகத் திகழ்பவர் யூமா வாசுகி. “நுண்ணுணர்வுகள் சலனித்துக் கொண்டிருக்கும் மனவோடை யூமாவுடையது” என்கிறார் எழுத்தாளரும், விமர்சகருமான ‘சி.மோகன்’ அவர்கள். குழந்தைமையும், களங்கமின்மையும் கலந்து கைகோர்த்து உலாவுகிற தூய வெளியை கருவாகச் சுமந்து யூமா வாசுகியின் படைப்புக்கள் உருக்கொள்கின்றன. பாசாங்கொழித்து முன் நிற்கும் தவிப்புக்கு உயிர்நீர் வார்க்கும் ஈரக்கரங்கள் போல இவருடைய ஒவ்வொரு கவிதையும் வாசிப்பு அகத்தை நனைக்கிறது. வெள்ளந்தி மனிதர் யூமாவின் ஒவ்வொரு வார்த்தையும் அன்பின் மகரந்தக் கருவை தன்னுள் கொண்டுள்ளது. கவிதை பெருவெளி எனும் பேரொளிக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு ‘ஃபினிக்ஸ்’ பறவையாக எழும் யூமா வாசுகி அவர்கள் எதிர்வரும் படைப்பாளிகளுக்கான நற்சிறந்த பாதையாளர்.

தணலென தகிக்கும் வாழ்வின் நடுவே மொழி எனும் மானுடச்சொல் கொண்டு ஒரு தொல்மரமாக உருவெடுத்து நிற்கிறார் யூமா வாசுகி.
பிற மொழி சிறார் இலக்கியக் கதவின் பெரும் திறவுகோல் ‘யூமா’ அவர்கள் என்பதை “தியா” நாவலின் மொழிபெயர்ப்பு மீண்டும் நிரூபணம் செய்கிறது. அசல் மற்றும் சுய புனைவு என இரு நிலங்களிலும் கால்பதித்து மொழியாக்கம் செய்யும் கலை அறிந்தவர் யூமா அவர்கள். இசையின் ஓசையும், இயற்கையும் முயங்கி வெளிப்படும் காவியத்தன்மை கொண்ட மொழி கட்டமைப்பின் தீண்டல் நெகிழ்வை கண்டடையலாம் “யூமா வாசுகியின்” மொழிபெயரிப்பு சிறார் இலக்கிய நூல்களின் வாசிப்பு வழியாக.

எளிமையான விவரிப்பில் கதை நகரும் போது எழுத்து குறித்த சமூகப் பொறுப்பு உணர்ந்த ஆளுமையை பார்க்க முடிகிறது. சிறார் இலக்கியத்தின் அண்டரண்டப் பட்சி ‘யூமா வாசுகியின்’ அவர்கள் மலையாள மூலத்தின் உணர்வு ஒளி சிறிதும் பிசகாமல் நேர்த்தியுடனும், அழகியலுடனும் மொழி பெயர்த்துள்ளார். சிறார் இலக்கியத்தின் உயிர்ப்பான நிலம் மொழிபெயர்ப்பு கதைகள்; அதனை சிறப்புற தாய் மொழி வாசிப்பின் நெருக்கத்தை ஏற்படுத்துபவை யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு.

சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் மீது நேசமும் அக்கறையும் கொண்ட பெரியவர்கள் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல் பி.வி.சுகுமாரனின், “தியா”.

நூல் பெயர் : “தியா”
நூல் வகை : “சிறார் நாவல்”
மலையாள மூலம்: பி.வி.சுகுமாரன் / தமிழில் : யூமா வாசுகி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (புக்ஸ் ஃபார் சில்ரன்)
பக்கங்கள் : 110 விலை : 100 /-
தேவைக்கு :”புக்ஸ் ஃபார் சில்ரன்”,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
புத்தகம் வாங்க : Tamizhbooks.com