செல்வி சாரா கவிதைகள்
1.
*தெரியவில்லை*
குளிருமில்லை
வெப்பமுமில்லை
குளிரிலிருந்து வெப்பமா
வெப்பத்திலிருந்து குளிரா
அறியாக் கதகதப்புடன்
யோனியைத் தழுவிக் கொண்டிருக்கிறது
மாதவிடாய் உதிரம்.
2.
முதல் நாளில்
ஆயிரம் அர்த்தம் சொன்ன
உன் உச்சியின்
வாசனையைத் தேடி அலைகிறேன்
அதிரும் விசையுடன்
என் கன்னத்தில் பதிந்த
உன் ரேகைகளில்.
3.
அதிகாலை எழுந்து அவசரமாய்
இயந்திரத்தின் சக்கரங்களை மாட்டிக் கொண்டவள்
சுழன்றாள் தனக்காக வாசனை மட்டுமே உண்ணப் பழகியவள்
மறந்தே போனாள் பசிக்கும்போது உணவு உண்ண
பசி மறந்த வயிற்றில்
கொட்டிக் கொள்ளவும் மனம் இல்லை
தனிமையின் நிழலில்
அவள் மொத்த உலகமும் வெற்று உலகமாய்
பிள்ளைகள் கைவிட
தேய்ந்த ரேகையில்
தேயாமல் ஒட்டிக்கொண்டது
கழுவுவதும் பெருக்குவதும்
குறைந்த கூலிக்கு கழுவுவதற்கும் பெருக்குவதற்கும்
எப்போதும் எதிர்பார்க்கும் அலுவலக வாசல்களில்
இவள் தினமும்
எறும்புக்குக் கிடைத்த இனிப்பு
அல்லது
நாய்க்குக் கிடைத்த எலும்பு
எதையும் சொல்லாத
சொன்னால் தீட்டு என்று போதிக்கப்பட்ட
அவளுக்கு அன்று மனம் இல்லை சொல்ல
கிளம்பினாள் வழக்கம் போலவே
மேலதிகாரி ஜீப் ஒன்று வர
ஏதோ காரணத்தால் அவளை அழைக்க
அவளும் அருகில் போய் நிற்க
திடீரென கொட்டியது
அவள் உதிரம் செம்மண் வெள்ளமாக
உதிரத்தில் உறைந்து போனவள்
மறைந்து போனாள் அலுவலகத்திற்கு வேலைக்கே வராமல்
அவள் உதிரம் தீட்டு எனும்போது
அதில் பிறந்த
நீ மட்டும் எப்படி சொல்லிக் கொள்கிறாய் மனிதன் என்று.
எழுதியவர் :
செல்வி சாரா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.