மனோந்திரா கவிதைகள்
1. சதைக்குடில்
விதியென்று எண்ணித்தான் வேதனைகள் தாங்கி
கதியென்ன ஆனாலும் காரணங்கள் தேடி
சதிசெய்து கொல்லும் சமூகத்தில் நாளும்
மதியற்று வாழ்கின்றோம் மானிடராய் நாமும்
அடுத்தென்ன நடக்கும் அதையறிவார் யாரோ!
தொடுத்துவரும் சாவைத் துரத்துபவர் யாரோ!
துடுப்பொன்றும் இல்லாத தோணிகளில் அன்றோ
நடுக்கடலாம் வாழ்க்கையதில் நாம்பயணம் செய்வோம்!
முடிவற்ற காலத்தில் முளைக்கின்ற காளான்
வடிவத்தைத் தானிழந்து வாடிவிடும் நாளில்
பிடியற்ற வாழ்வினையே பெற்றிருக்கும் நாமும்
படியற்ற பாதாளம் பாய்ந்திடுவோம் வாழ்வில்
தனம்சேர்க்கும் வேகத்தில் சத்தியமும் சாகும்
சனம்பலவும் பட்டினியில் நித்தமும்தான் வேகும்
அனலன்ன வாழ்விலது அன்றாடம் நோகும்
கனவான்கள் கக்கூஸ்கள் காஞ்சனத்தில் மின்னும்
இறந்திடுவோம் நாம்ஒருநாள் என்பதுதான் உண்மை
விறகினிலே நெய்பெய்து வேகவைப்பார் நம்மை
மறந்துவிடும் இவ்வுலகம் மாற்றமதில் இல்லை
துறப்பவற்றைத் துய்த்திடவே சுற்றம்சண்டை போடும்!
சிதைக்குள்ளே வீழ்ந்தொருநாள் தீதின்னப் போகும்
சதைக்குடிலை நம்பிநாமும் தனம்குவிக்க ஓடி
வதைக்கின்றோம் வதைகின்றோம் வாழ்வமென்று எண்ணி
இதைக்கண்டு காலமது எள்ளிநகை யாடும்!
2.காளியாகி வீழ்த்திடுங்கள்
இந்தியினைத் தான்திணிக்க ஈனரவர் எண்ணுகிறார்
ஏனின்னும் தூங்குகிறீர் தம்பிமார்களே!- தூக்கம்
தானின்னும் போகலையோ தங்கைமார்களே!
தாய்மொழியாம் தங்கத்தமிழ் சாவதைத்தான் பார்த்திடவோ
சத்தமின்றித் தூங்குகிறீர் தம்பிமார்களே!- எழுவீர்!
யுத்தம் மீண்டும் வந்திருக்கு தங்கைமார்களே!
கல்விபாரம் கூடிடவே கட்டாயமாய் இந்தியினைக்
கற்கும்படிச் சொல்லுகிறார் தம்பிமார்களே!- மொழிக்
கசப்பினையே ஊட்டுகிறார் தங்கைமார்களே!
முச்சங்கம் தான்வளர்த்த மூத்தமொழி நம்தமிழை
மூளியாக்க எண்ணுகிறார் தம்பிமார்களே!- நீங்கள்
காளியாகி வீழ்த்திடுங்கள் தங்கைமார்களே!
குறளுண்டு வண்டமிழில் கம்பனது பாட்டுண்டு
கோவலனின் கதையுமுண்டு தம்பிமார்களே!- தமிழ்க்
காவலராய் நின்றிடுவீர் தங்கைமார்களே!
செம்மொழியாம் நம்மொழியை திருடியந்த இந்திமொழி
தின்றிடத்தான் பார்க்கிறது தம்பிமார்களே!- அது
தின்பதினைத் தடுத்திடுவீர் தங்கைமார்களே!
எழுதியவர் :
மனோந்திரா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.