1
ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென
வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென
வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று
கிளையில் பூக்காது வாடும்
மொட்டாய்
வெற்றுத் தாள்களைத் தாங்கிப் பிடிக்கும்
வார்த்தையற்ற நூலாய் விருட்சங்களற்றும்
விலங்குகளற்றும்
பாலையாய்க் கிடந்த
வனத்தினுள் பரிதவிக்கிறேன்.
2.
இருளுக்குள் ஒளிரும்
பூனையின் விழிகளாய்
மனதுக்குள் ஊற்றெடுக்கிறது நம்பிக்கைச் சுடர்
தொலைவானத்தின்
தொடு எல்லை போல நீள்கிறது வாய்ப்புகளின் ஊஞ்சல்.
அலைபுரளும் கடலுக்குள்
ஊசலாடும் படகினில்
தொங்கிடும் கயிறாய் வளர்கிறது தேடல்களின் உலகம்.
நிலையாமை வாழ்வினில் நிலைக்கும் வரை பேணுகிறேன் எழுத்துகளின் சங்கமத்தை.
3.
இதழுக்குள் ஊற்றெடுக்கிறது
அன்பின் அறுசுவை முத்தமென.
அடைபடும் விரல்களுக்குள் ஒட்டிக்கொள்கிறது
ப்ரியத்தின் வாசனை குருதியென.
நெருக்கத்தின் நினைவுகளில் புன்னகைக்கிறது
பயணத் தருணங்கள் மலரென.
இளைப்பாற்றும் தேநீரில் உணர்ச்சிகளின்
சொல்லாடல் ஒளிர்கிறது நறுமணமென.
சினத்தின் கரத்தினுள்
சிதைந்திடும் பொழுதினில்
எனை மீட்டெடுக்கும்
உன் மௌன வேள்வியின் கடவுள்களை வருக என்கிறேன்.
எழுதியவர்:
– இளையவன் சிவா
*****************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.