கவிதைகள் – ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
1
பேருந்துப் பயணத்திற்காக
அவசரமாகக் கிளம்பியதை
எண்ணித் தன்னை நொந்தபடியே
பயணிக்கிறாள் அவள்
இன்னும் ஒரு மணிநேரப் பயணம்
தாக்குப்பிடிக்க வேண்டும்
நான்கு வேகத்தடைகளை
பேருந்து ஏறி இறங்குகையில்
அடிவயிற்றில் கைவைத்துக்கொள்கிறாள்
அவளின் போதாத நேரம்
இன்றும் கிடைக்கவில்லை இருக்கை
அவளின் நிறுத்தம் வந்ததும்
முந்திகொண்டு இறங்குகிறாள்
அவசர கதியில் அவள் விழுங்கிய
இட்லி செய்த இடைநிறுத்தத்தால்
தொண்டை வறண்டு விட்டது
குடிக்க நீரிருந்தும் மனமில்லை
நெறித்துக்கொண்டு நிற்கும் சிறுநீரால்
சில அடிதூரம் நடக்கவே ஆயாசமாக
இருக்கிறது அவளுக்கு
இது வாடிக்கையான ஒன்று தான்
இருந்தும் தினம் தினம்
அடக்க முற்பட்டு அவதிப்படுகிறாள்
இந்த அவஸ்தைகளுக்காகவே
அவள் வெறுக்கிறாள்
பெண்ணினத்தை
2
நரைத்த கிழங்கள்
இரண்டு எங்களைச் சுற்றி
வளைக்கப்பார்க்கிறது அன்பின் வளையத்தில்
அகப்படாமல் ஓடிச்சென்று
ஒளிந்து கொள்ளும் தருணங்களில்
ஏங்கிவிடுங்கின்றன
இரண்டு பெருசுகளும்
என் பெற்றோரின் பிள்ளை வயதை
கதையாகக் கூறியபடி
கேலிசெய்து சிரிக்கையில்
முத்துக்களை இழந்த பல்லாங்குழியைப் போல
விழுகிறது கன்னத்தில் குழி
3
நள்ளிரவு நேரம்
நதிக்கரை ஓர காதலிலெல்லாம்
நம்பிக்கை இன்றி இருந்தேன்
உன்னைக்காணும் வரை
எழுதியவர்:
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

