தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் | Tamil short story writers

பெ விஜயகுமார் “தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்- ஓர் அறிமுகம்”

100 ஆண்டுகள் கடந்தும் இலக்கியதளத்தில் நிறைய வாசகர் பரப்பையும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இலக்கிய வடிவமாக இன்றும் வெற்றி நடை போடும் சிறுகதை அமைப்பில் நிறைய எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் உலகத்தரம் வாய்ந்த கதைகளைப் படைத்திருப்பதும் நூறாண்டு கால பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சிறுகதை வடிவத்தில் இன்றும் புதிய புதிய ஆக்கங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலையை சில கதாபாத்திரங்களை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ள இலக்கண விதிகளை மீறியும் புதிய புதிய வடிவங்களை படைத்தும் தமிழ் சிறுகதை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் மேன்மையை மேலும் உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் சிறுகதை எழுத்தாளர்கள் 20 பேர் பற்றிய சிறிய அறிமுகமாக பேராசிரியர் பெ விஜயகுமார் அவர்கள் தொகுத்திருக்கிறார்.

எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய அறிமுகம் அதைத்தொடர்ந்து அவர்கள் படைத்துள்ள சிறந்த சிறுகதைகள் சிலவற்றின் கதைச்சுருக்கம் என்ற வகையில் இந்த 20 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. அளவாகப் பேசி அறிமுகம் செய்வது மட்டுமே இந்த நூலின் வேலையாக இருக்கிறது. அறிமுகம் என்பது முக்கியப் பிரமுகர்களை சந்திப்பதற்கு நமக்கு கிடைத்த சிபாரிசுக் கடிதம் என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த கடிதத்தை வைத்து பிரமுகரிடம் நாம் நமது திறமையை எப்படி வெளிப்படுத்துகிறோமோ அதே போல இந்த எழுத்தாளர்களின் கதைக்குள் நாம் எதைக் கண்டறியப் போகிறோம் என்பது பற்றி வாசிப்போரின் எண்ணத்திற்கு விட்டு விடுகிறார் எழுத்தாளர்.

இதில் இவர் குறிப்பிட்டிருக்கும் இருபது எழுத்தாளர்கள் மட்டுமே சிறந்த சிறுகதையாளர்கள் என்று அவரும் வகைப்படுத்தவில்லை. மேலும் நிறைய சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இதை அறிமுக உரையாகவே எழுதிச் சென்றிருக்கிறார். அவசரமான வேலைப்பளு நிறைந்த பணத்தைத் தேடி ஓடும் இன்றைய அறிவியல் யுகத்தில் நின்று நிதானித்து வாசித்துக் கிடப்பதற்கான நேரமும் எண்ணமும் நிறையப் பேருக்கு வருவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் சிறுகதைகள் வெற்றி அடைவது என்பது இலக்கிய வெளியில் மிகுந்த ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர நமக்கு வழங்குகிறது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்து ஒரு சில கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு தான் சொல்ல நினைத்த கருத்தை,சமூக சீரழிவை தனது சிறுகதையின் வழியாக நம்முள் முழுவதுமாக கடத்திச் செல்லும் எழுத்தாளர்களின் திறமை இதில் சிறப்பாக வெளிப்பட்டால் மட்டுமே சிறுகதைகள் புகழ் பெற்ற ஒன்றாக மாறக் கூடும். அந்த வகையில் ஒவ்வொரு எழுத்தாளரும் நிறைய சிறுகதைகளை எழுதி இருந்தாலும் அவர்களுக்கு பெயரும் புகழும் பெற்றுத் தரும் சிறுகதைகள் ஒன்று இரண்டு என சொல்லலாம். அந்த அடிப்படையில் சில தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை முன்னோட்டமென நமக்கு காட்டிச் செல்கிறது இந்த நூல். இதில் சிறுகதை எழுத்தாளர்களின் பிறந்த ஆண்டு கொண்டு வரிசைப்படுத்தி அவர்களது சிறுகதைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர்.

1. ந. பிச்சு பூர்த்தி

புதுக்கவிதையின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் ஒரு துறவியைப் போல வாழ்ந்தவர். தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது படைப்புகளும் அதை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு. இவரது சிறுகதைகள் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் இன்ப துன்பங்கள் ஆசைகள் அபிலாசைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ஆகியவற்றை அடிப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. தான் வேலை பார்த்த வக்கீல் தொழில் மற்றும் கோவில் நிர்வாகம் தந்த அனுபவங்களே அவரது கதைகளின் கருப்பொருட்களாக மாறி சிறந்த கதைகளுக்கு வித்திட்டன. தர்க்க ரீதியான அறிவோ அந்த அறிவின் வழியாக வெளிப்படும் புத்திசாலித்தனமோ முக்கியமல்ல, மனித மனங்களின் உணர்ச்சியும் அதன் வெளிப்பாடுமே முக்கியம் என்று கூறும் பிச்சமூர்த்தியின் கதைகளும் மனித மனங்களின் உணர்வுகளை எடுத்துக் கூறும் கதையாகவே அமைந்துள்ளன.

2. கு ப ராஜகோபாலன்

தன்னுடைய முழு நேர உழைப்பையும் இலக்கியத்திற்காகவே செலவழித்தவர். ஆனால் இலக்கியம் அவருக்கு வறுமையையே பரிசளித்தது. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி கால படைப்பாளிகளில் ஒருவரான இவரது சிறுகதைகள் புனைகதை இலக்கியத்தில் தனி ஒரு இடத்தை பிடித்துள்ளன. தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் வங்காளம் ஆகிய இலக்கியங்களில் இவர் பெற்றிருந்த புலமை மற்றும் பாங்கு அவரது அறிவை விசாலப்படுத்தி சிறுகதைகளை எழுத வைத்தது. ஆண் பெண் உறவின் நுட்பத்தை குபரா மிகச் சிறப்பாக தனது சிறுகதைகளில் கையாண்டு உள்ளார். குடும்ப வாழ்வின் நெருக்கடிகளையும் பெண்களின் அவல வாழ்வினையும் ஆழமாகவும் கூர்மையாகவும் பதிவு செய்துள்ளது இவரது கதைகள். கணவன் மனைவி உறவில் ஏற்படும் சலனங்கள் சஞ்சலங்கள், சபலங்கள் எவ்வாறு அவரது குடும்ப வாழ்வை பாதிக்கின்றன என்பதையும் இவரது கதைகள் காட்சிப்படுத்துகின்றன. குபராவின் கதாபாத்திரங்கள் எல்லை மீறுவதில்லை. அவரது கதைகளில் விரசங்களுக்கும் விபரீதங்களுக்கும் இடமில்லை.

3.புதுமைப்பித்தன்

தமிழ் எழுத்து உலகில் புதுமையான புரட்சிகரமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர். தமிழ்ச் சிறுகதை உயர்ந்த நிலையை அடைவதற்கு தன்னாலான முயற்சிகளை செய்தவர். கேலியும் கிண்டலும் கலந்த நடையும் பகடி செய்யும் எழுத்தும் இவரது தனிச்சிறப்பாக ஒளிந்துள்ளன. இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை, அறிஞர்களை தமிழர்கள் கொண்டாடுவதில்லை என்ற மாண்பின் அடிப்படையில் பாரதியார் புதுமைப்பித்தன் குபரா போன்ற எழுத்தாளர்கள் வறுமையில் உழன்றவர்களே. ஆயினும் எழுத்திலும் வாழ்விலும் எந்தவித சமரசத்தையும் செய்து கொள்ளாமல் மிகச்சிறந்த படைப்புகளை வழங்கி தமிழ்ச் சிறுகதை உலகிற்கு புத்துணர்ச்சி ஊட்டியவர் புதுமைப்பித்தன். வறுமை மனித மனங்களை எவ்விதமான திசைகளுக்கு இட்டுச் செல்லும் என்பது இவரது செல்லம்மாள் கதை வெகு ஆழமாகவும் சிறப்புறவும் எடுத்துக் கூறுகிறது. புதுமைப்பித்தன் கதைகள் அனைத்திலும் சமுதாயத்தின் மீதான அவரது விமர்சனம் இலை மறை காயாக சொல்லப்பட்டுள்ளது. அதை நகைச்சுவையைக் கலந்து அவர் நகத்திச் செல்லும் அழகு நாமும் அவரது சிறுகதையின் பின்னால் நகரும் உயிரியாக மாற்றி விடுகிறது.

4.கு அழகிரிசாமி

ஓவியம் இசை பாடல் இயற்றுவது போன்ற கலைகளில் சிறுவயது முதல் கை தேர்ந்தவர். பணப் பற்றாக்குறையினாலும் உடல் நலக்குறைவினாலும் சென்னை வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களுடன் பட்டினி கிடந்து படைப்பாளியாக வாழ்வது என்ற வைராக்கியத்தில் உழன்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் கட்டுரைகள் நாவல்கள் மொழிபெயர்ப்புகள் என முழு நேராக எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்தவர். இவரது பல கதைகள் பிரசுரிக்கப்படாமலேயே போனது தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஒரு மிகப்பெரிய பேரிழப்பு எனலாம். அழகிரிசாமியின் கதைகள் மண்வாசனை கலந்து கரிசல் காட்டில் வாழும் ஏழை எளிய மக்களின் அன்பு பொங்கிடும் வாழ்வை எழுத்தோவியமாக வெளிப்படுகின்றன. கவித்துவ நடையும் ஆழ்ந்த உள்ளடக்கமும் அழகிய வடிவமும் அவரது கதைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதுப்புது அர்த்தங்களை நமக்கு விளங்க வைக்கின்றன.

5. தி ஜானகிராமன்

தனது படைப்புகளில் பெண்களை வியந்து போற்றிக் கொண்டாடிய எழுத்தாளர் இவர். இவரின் பெண் கதாபாத்திரங்கள் கதாபாத்திர எல்லையைத் தாண்டி பெண் தெய்வங்களாகவும் வழிபாட்டிற்கு உரியவர்களாகவும் மாறிப் போகிறார்கள். மனிதர்களின் வெற்றியையும் தோல்வியையும் பலத்தையும் பலவீனத்தையும் மகிழ்ச்சியையும் சோகத்தையும் பெருமையையும் சிறுமையையும் சமமாகவே பார்க்கும் கதைகளை எழுதியவர் இவர். மனிதன் வகுத்துள்ள சட்டவிதிகள், ஒழுக்கம் குறித்து அவன் கொண்டிருக்கும் வரையறை, தர்மம் அதர்மம் பற்றிய அவனுடைய நம்பிக்கைகள், மதங்கள் காட்டிடும் அறவழிகள் இவற்றையெல்லாம் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் தி ஜானகிராமன்.

6. ஜி நாகராஜன்

இவருடைய கதைகள் புனைகதை இலக்கியத்தில் நிறைய மாற்றங்கள் செய்து அதிர்வலைகளை ஏற்படுத்தின. சமுதாயத்தின் இருளான மனிதர்களை சித்தரித்து வாசகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் இவர்.

7. சார்வாகன்

முழு நேர மருத்துவராக இருந்து கொண்டே எழுத்தாளராக பணி அமைத்து வெற்றி பெற்றவர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு சீர்திருத்த சிகிச்சையில் சிறப்பு மருத்துவராக விளங்கிய இவர் வேதங்கள் கோலோச்சிய காலத்தில் ஆன்மீக தத்துவங்களுக்கு எதிராக தத்துவார்த்த போராட்டம் நடத்தியவர். முற்போக்கு சிந்தனை கொண்டவர். மனித வாழ்வின் சிறுமை கண்டு மனித வாழ்வின் ஒழுங்கினங்களைக் கண்டு சீற்றம் கொள்ளாமல் சிறு நகையுடன் நகரும் இவரது கதைகள் அங்கதம் கலந்து வாழ்வின் செயல்பாடுகளை எள்ளி நகையாடுகின்றன.

8. ஆர் சூடாமணி

தமிழில் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி எந்த ஆரவாரம் இன்றி தனது இயற்பெயரிலேயே அன்றைய காலகட்டத்தில் வெளியிட்ட சிறந்த சிந்தனைவாதி. குடும்ப வாழ்வில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இடையே வெளிப்படும் அன்பு பாசம் போன்ற நெருக்கமான உறவுகள் அதில் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவை மட்டுமே இவரது கதைகளில் எதிரொலிக்கின்றன. சிறு வயதில் அம்மை நோயால் பாதிப்படைந்து கை கால்களின் வளர்ச்சியை இழந்தாலும் இவரது ஊனம் மனதை எந்த அளவிலும் பாதிக்காமல் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாது 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி சிறப்பு செய்தவர்.. காந்திய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்த இவர் மரணத்திற்கு பின் தன் சொத்துக்களை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடையாக விட்டுச் சென்றவர். ஆண்களை பழிப்பதல்ல பெண்ணியம். ஆணும் பெண்ணும் சரிநிகராக வாழ்வதுதான் பெண்ணியத்தின் நோக்கம் என்பதை விளக்கும் இவரது கதைகளில் குரோதம் துரோகம் போன்ற வன்முறைகளுக்கு இடமில்லை.

9. சுந்தர ராமசாமி

சம்பிரதாயம் சடங்குகளை அனுஷ்டிக்க வேண்டி மனிதன் செய்ய வேண்டிய சமரசங்கள் குறித்து இவரது கதைகள் அதிகம் பேசுகின்றன. கதைகளின் கவித்துவம் அடையும் வர்ணணைகளில் ஒளிரும் அங்கதமும் நகைச்சுவையும் வாசிப்பவரை கதையின் பால் ஈர்ப்பு கொள்ள வைக்கின்றன. புதுப் புது முயற்சிகளையும் பரிசோதனைகளையும் தனது சிறுகதைகளில் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தவர்.

10. அ. முத்துலிங்கம்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வரும் இவரது எழுத்துக்களில் புலம்பெயர்ந்த மனிதர்களின் அவலங்கள் அதிகமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆழ்ந்த படிப்பறிவும் பரந்த பட்ட றிவும் இவரது படைப்புகளுக்கு மெருகேற்றி பகடியும் நகைச்சுவையும் கலந்த எழுத்துகள் நம்மை வாசிப்பை நோக்கி நகர்த்துகின்றன.

11. தஞ்சை பிரகாஷ்

பல்வேறு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் இடமான தஞ்சையில் இன்றும் வாழும் பல்வேறு கலைஞர்களும் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி ஏற்றமும் இறக்கமும் பெற்று நிலை பெற்ற அவர்களின் வாழ்வின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் இவரது கதைகள் முன்னிலைப்படுத்துகின்றன. சமஸ்கிருதம் தெலுங்கு மலையாளம் இந்தி வங்காளம் ஆங்கிலம் உருது ஜெர்மன் தமிழ் என்று பல மொழிகள் தெரிந்தவர். இதழாசிரியர் பதிப்பாளர் வெங்காய வியாபாரி பால் கடை முகவர் என 20க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து எதிலும் நிலை கொள்ளாமல் முழு நேர எழுத்தாளராகவே தன்னை மாற்றிக் கொண்டவர். மனித மனத்தின் குரல்களையும் துரோகங்களையும் அதனால் விளையும் ஏமாற்றங்களையும் துன்பங்களையும் தனது கதைகளில் காட்சிப்படுத்தும் இவர் வயிற்றுப் பசியையும் காமத்தின் வேட்டையையும் தணித்திட மனிதர்கள் நடத்திடும் போராட்டங்களையும் எடுத்துரைக்கிறார்.

12. அம்பை

புனைப்பெயரில் எழுதி வரும் சி எஸ் லட்சுமி தமிழ் இலக்கியத்தில் பெண்ணினத்தின் முக்கிய குரலாக ஒலிக்கிறார். பிரச்சார வடை எதுவும் இன்றி அழகிகளோடு பெண்ணிய நோக்கில் எழுதப்படும் இவரது கதைகள் பெண்களின் இன்னொரு பக்கத்தையும் அவர்களின் ஆழமான பரந்துபட்ட அறிவையும் அதன் வழியாக அவர்கள் அடையும் உயர்ந்த இடத்தையும் பற்றிப் பேசுகின்றன.

13. பிரபஞ்சன்

தன் எழுத்துகளில் மனிதனின் உன்னதத் தருணங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். சாதாரண நிலையில் சண்டையும் சச்சரவுமாக விளங்கும் மனிதன் வாய்ப்பு கிடைக்கும்போது எந்த ஒரு உயர்ந்த செயலையும் பிரமிக்கத்தக்க காரியங்களையும் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவனாகிறான். மனிதனுக்குள் மிருகமும் கடவுளும் உறங்கிக் கிடப்பதை இவரது கதைகள் ஆழமாகத் தொட்டுச் செல்கின்றன.

14. பூமணி

கரிசல் மண்ணின் ஏழை எளிய மக்களின் வறுமையும் வெட்கையும் பின்னிப்பிணைந்த வாழ்வை அதன் வலியான கோர வடிவத்தை சாதிய கட்டமைப்பை தனது புனைகதைகளில் ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்துபவர். சிறுகதை இலக்கியத்தின் நுட்பங்களான வார்த்தைச் சிக்கனம் கதைக்கான சூழலை உருவாக்குதல் எதிர்பாராத முடிவு என்று இவை அனைத்தும் இவரின் கதைகளில் இயல்பாக அமைந்து கரிசல் மண்ணின் காட்சிகளை நமக்கு தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

15. நாஞ்சில் நாடன்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நான்கு வகை நிலங்களையும் கொண்டு இயற்கை அழகு ஜொலிக்கும் குமரி மாவட்டத்திற்குச் சொந்தக்காரரான இவர் எழுதும் சிறுகதைகளின் வாயிலாக நாஞ்சில் நாட்டின் கலாச்சாரம் முழுவதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற முடிகிறது. குமரி மாவட்டத் திருவிழாக்கள் பற்றிய விரிவான தகவல்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று குமரி மாவட்ட வாழ்வின் அனைத்து அம்சங்கள் பற்றியும் இவரது படைப்புகளில் நம்மால் உணர முடிகிறது.

16. வண்ண நிலவன்
தாமிரபரணி பாயும் நெல்லை சீமையில் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மனக்குமுறல்களை வேதனைகள் சோதனைகள் என சொல்லித் தீராத சோகங்களை எளிமையான வார்த்தைகளில் எதார்த்த மொழியில் நின்று பெண்களின் மனதை படம்பிடித்து காட்டும் சிறுகதைகளை எழுதிப் புகழ்பெற்றவர் இவர்.

17. திலீப்குமார்

பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாழும் நிறையப் பேருக்கு தமிழ் மொழியின் மீதும் சிறுகதையின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தாமும் எழுத்தாளராக மாறிவிடும் நிகழ்வுகள் அரங்கேறி விடுகின்றன. அந்த வகையில் குஜராத்தி மொழி பேசும் திலீப் குமார் தமிழில் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளராக மாறி இருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு பெயராக அமைகிறது. குஜராத்தியர்களின் வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளையும் அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விவேகத்தையும் தன்னுடைய சிறுகதைகளில் நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்துகிறார் இவர்.

18. மேலாண்மை பொன்னுச்சாமி

வானம் பார்த்த பூமியாக விளங்கும் விவசாயம் கூட செழிக்காத வறுமைப்பட்ட கரிசல் மண்ணில் ஈரம் இல்லாவிட்டாலும் மக்களின் நெஞ்சில் முழுவதும் ஈரம் நிறைந்தே இருக்கிறது. வறுமையும் சாதிக் கொடுமைகளும் பின்னிப் பிணைந்துள்ள இவர்களின் வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ்வாதாரத்தையும் கிராமத்தின் எளிமையையும் தனது கதைகளில் சொற்ச்சித்திரமாக எழுதுகிறார் மேலாண்மை பொன்னுச்சாமி. இவரது கதைகளில் கதைகள் நகரும் பாங்கை விட கதாமாந்தர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இவரது எழுத்து வாசிக்க வாசிக்க நம்மையும் நெஞ்சுருக வைக்கும். இவரது ஒவ்வொரு கதையிலும் கரிசல் மண்ணின் ஏழை எளிய மக்களின் பொங்கி வழியும் அன்பையும் வெறிகொண்டு அலையும் கோபத்தையும் வன்மத்தையும் அதற்கு பின் அடையும் அமைதியையும் காண முடிகிறது.

19. வைரமுத்து

கவிதை எழுதுதல் திரைப்பட பாடல் எழுதுதல் என்ற இரண்டு எதிர் எதிர் துருவங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர் தமிழ்ச் சிறுகதை எனும் பேராற்று வெள்ளத்தில் தன்னையும் மற்றுமொரு கிளை நதியாக மாற்றிக்கொண்டு சிறுகதைக்குள்ளும் தன்னால் சிறந்து விளங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். “சிறுகதைக்கு உருவம் உடல் போன்றது எனில் அதன் உள்ளடக்கம் உயிராகிறது. உருவத்தைக் கொடுப்பது படைப்பாளியின் திறன். உள்ளடக்கம் எல்லாம் சமூகம் கொடுத்த வரம் “என்று சிறுகதை பற்றிக் கூறும் வைரமுத்துவின் சிறுகதைகளும் பேசாப் பொருளை பேசத் துணியும் புதிய புதிய களங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

20. ச தமிழ்ச்செல்வன்

எழுத்தாளர், பண்பாட்டுப் போராளி, எழுத்துரிமை, பெண்ணுரிமை, கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அறிவொளி இயக்கத்தில் திறம்பட செயலாற்றியவர் என பன்முகம் கொண்ட இவரது சிறுகதை இலக்கியம் வறுமையையும் அதன் அவலத்தையும் முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது. கந்தக பூமி எனப்படும் கரிசல் மண்ணின் வறுமையும் வெயிலும் போட்டி போட்டு மக்களை வாட்டிடும் தருணத்தையும் விவசாயத்திற்கு பெரிய சாத்தியங்கள் இல்லாத சூழலில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி வாழ்ந்திடும் மக்களின் அவலங்களையும் தனது கதைகளில் காட்சிப்படுத்தும் இவரது பாங்கு வியக்கத்தக்கது.

தமிழ் இலக்கிய உலகில் சிறுகதைகள் மக்களின் மனங்களில் ஏற்படுத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உணர்ந்து அந்த எழுத்தாளர்களின் வாழ்வியல் குணங்களை சுருங்கச் சொல்லியும் அவர்களது கதையின் வழியாக அவர்களது எண்ண ஓட்டங்களை நமக்குள் ஆழமாக விதைத்தும் எழுதி இருக்கும் நூலாசிரியரின் முயற்சி சிறந்த சிறுகதைகளை வாசிப்பதைப் போன்று வெற்றியைத் தருகிறது.

நூலின் தகவல்கள் 

நூல் : தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்- ஓர் அறிமுகம்

நூலாசிரியர் : பெ விஜயகுமார்

விலை : ரூ. 100/-

நூலினைப் பெற
தொடர்பு கொள்ளுங்கள்: 9500740687

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *