நான் மழையைச் சபித்தேன்.
கூரையின் மீது ஓசை எழுப்பி
என் தூக்கத்தைக் கெடுக்கிறதென்று.
நான் காற்றைச் சபித்தேன்
என் தோட்டத்தைப் பாழாக்குகிறதென்று.
பிறகு நீ நுழைந்தாய்.
நான் மழைக்கு நன்றி சொன்னேன்.
நீ ஈர ஆடையைக் கழற்றி ஆக வேண்டும் என்பதற்காக.
நான் காற்றுக்கு நன்றி சொன்னேன்.
அது என் விளக்கை அணைத்தற்காக.
-சீன மொழி கவிதை
செங் யூ செய்ன்
நான் நதிகளை அறிவேன்.
இந்த உலகத்தைப் போன்ற பழமையான நதிகளை.
மனித உடலின் ரத்த நாளங்களில் ஓடும்
ரத்த ஓட்டத்தைக் காட்டிலும் பழமையான நதிகளை
நான் அறிவேன்.
எனது ஆன்மா இந்த நதிகளைப் போன்றே ஆழமானது.
விடியல்கள் குழந்தைகலாக இருந்தபோது
நான் யூப்ரடீஸ் நதியினில் குளித்து இருக்கிறேன்.
காங்கோவுக்குப் பக்கத்தில் நான் குடிசைகளைக் கட்டியபோது
அது என்னைத் தாலாட்டிசைத்து தூங்க வைத்தது.
நைல் நதியினைக் கர்வமாகப் பார்த்து
அதன் பக்கத்தில் பிரமிட்களை எழுப்பியவன் நானே.
நான் நதிகளை அறிவேன்
தொன்மையான இருள் படிந்த நதிகளை.
எனது உயிர் இந்த நதிகளைப் போலவே ஆழமானது.
— அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் 1982
அமெரிக்க கருப்புக் கவிதை
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்
என் வார்த்தைகள் கோதுமையாக இருந்தபோது
நான் நிலமாக இருந்தேன்
என் வார்த்தைகள் கோபமாக இருந்தபோது
நான் புயலாக இருந்தேன்.
என் வார்த்தைகள் பாறையாக இருந்தபோது
நான் நதியாக இருந்தேன்.
என் வார்த்தைகள் தேனாக மாறியபோது
ஈக்கள் என் உதடுகளை மொய்த்தன.
பாலஸ்தீன கவிதை
மஹமத் தார்விஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

