தமிழ் இந்து தலையங்கம்:
ஊரடங்கின் விளைவாகப் பாதிக்கப்படும் சமூகத்தின் விளிம்புநிலைக் குழுக்களுக்குத் தமிழக அரசு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது வரவேற்புக்குரியது. இந்த உதவிகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்; மேலும், சாதாரண நாட்களில் பாதுகாப்பான சூழலில் இருந்து, இத்தகைய காலகட்டத்தில் விளிம்புநிலை நோக்கி நகரும் மேலும் பல குழுக்களையும் கண்டறிந்து இந்த உதவி வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். உதாரணமாக, அன்றாடம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இத்தகு காலகட்டத்தில் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்பு. ஆனால், பதிப்பகங்களிலும் புத்தக நிலையங்களிலும் காகித விற்பனையகங்களிலும் அச்சகங்களிலும் பைண்டிங் நிலையங்களிலும் பணியாற்றுவோரின் பாதிப்பு கண்மறைவுப் பிரதேசத்தில் நடக்கும்.
தமிழகத்தில் சில ஆயிரம் பதிப்பகங்களும் புத்தக நிலையங்களும் இருக்கின்றன. குடிசைத் தொழில்போல இத்துறையில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு இருக்கும். அது பெருவெள்ளமோ வறட்சியோ சமூகம் ஓர் இடர்மிகு காலகட்டத்தில் காலடி எடுத்துவைத்தால், முதலில் பாதிப்புக்குள்ளாகும் துறைகளில் ஒன்று இது. வெள்ளத்தால் ஒரு சமூகம் பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் நாட்களில் எத்தனை பேர் புத்தகக்கடைக்குச் செல்வார்கள், எத்தனை பேர் புத்தகங்களை வாங்கச் செலவிடுவார்கள்? மேலும், நல்ல நாட்களிலேயே புத்தகத்துக்குத் தொடர்ந்து செலவிடும் கலாச்சாரத்தைக் கொண்டதல்லவே இந்தியச் சமூகம்?
ஆக, எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாத இன்றைய ஊரடங்குச் சூழலும், அதற்கு அடுத்து வரவிருக்கும் ஒரு பெரும் பொருளாதார மந்த காலகட்டமும் பதிப்புசார் துறையினருக்குப் பெரிய சவாலைத் தரக்கூடியவை.
புத்தக விற்பனை நின்ற மாத்திரத்தில் மூச்சுத்திணறலைச் சந்திக்கும் நிலையிலேயே பெரும்பாலான பதிப்பகங்கள் உள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றால், கட்டாயம் அரசின் உதவி தேவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொது நூலகங்களுக்கு நிறையப் பதிப்பாளர்கள் புத்தகம் அனுப்பியிருக்கிறார்கள். ஓராண்டு ஆகியும் இதற்கான தொகையில் 75% நிலுவையிலேயே இருக்கிறது. இதை உடனே விடுவிக்கலாம். ஒவ்வொரு நூலக ஆணையின்போதும் 2.5% தொகையைப் பதிப்பாளர் நல வாரியத்துக்காக அளித்திருக்கிறார்கள் பதிப்பாளர்கள். இத்தொகை மாநில அரசிடம்தான் சேர்ந்திருக்கிறது.
இந்தத் தொகையை இப்போது பதிப்பாளர்கள் மீட்சிக்காக விடுவிக்கக் கேட்டிருக்கிறது பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி). இதை உடனடியாகச் செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேல் அங்கீகரிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்படாமலும் பதிப்புத் துறை சார்ந்து இயங்கும் அனைவருக்கும் ஏனைய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதுபோலான உதவிகள் அளிக்கப்பட வேண்டும். பதிப்புத் துறை ஓர் உதாரணம்தான். இப்படியான ஒவ்வொரு குழுக்களும் அடையாளம் காணப்பட்டு உதவப்பட வேண்டும்.
– நன்றி தமிழ் இந்து நாளிதழ்
பபாசி செய்தி வெளியீடு:
இப்பேரிடர் காலத்தில் பதிப்புத்துறை நலன்கருதி, நூலக நிலுவைத்தொகையை உடனே வழங்குமாறு தமிழக அரசுக்கு பபாசி வேண்டுகோள்
· பொது நூலகங்களுக்கு கடந்த ஆண்டு வழங்கிய புத்தகங்களுக்கான நிலுவைத்தொகை
· பதிப்பாளர் நல வாரியத்தில் பிடித்தம் செய்த தொகையை விடுவிக்கவும் வேண்டுகோள்
சென்னை: தமிழக அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கிய புத்தகங்களுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்குமாறும், பதிப்பாளர் நல வாரியத்தின் மூலம் பதிப்பாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை விடுவிக்குமாறும் தமிழக அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவின் பாதிப்பால் பதிப்புத்துறை தற்பொழுது முற்றிலும் முடங்கியுள்ளது. பொதுவாகவே மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் பொதுத்தேர்வு, பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை போன்ற காரணங்களால் பதிப்பகத்துறை விற்பனையின்றி நலிந்து காணப்படும். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பாராத பேரிடரினால் பதிப்புத்துறையினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், அச்சகம் மற்றும் பைண்டிங் தொழில் புரிவோர் போன்ற லட்சகணக்கான பதிப்புத்துறை சார்ந்த குடும்பங்களின் நலன் கருதி, தமிழக அரசின் உடனடி உதவியை பபாசி எதிர்நோக்கி உள்ளது.
பிப்ரவரி 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் பொது நூலகத்துறையின் ஆணையின்படி, அரசின் பொது நூலகங்களுக்கு பதிப்பாளர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் 2019 ஆகிய மாதங்களில் அனைத்து புத்தகங்களையும் வழங்கிவிட்டனர். அதற்கான தொகை பதிப்பாளர்களுக்கு பல மாவட்ட நூலகங்களிடமிருந்து இன்னும் வந்து சேரவில்லை. எனவே தாள் வணிகர், அச்சக உரிமையாளர்கள் மற்றும் பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கான தொகையை பதிப்பாளர்களால் தர இயலவில்லை. தமிழக அரசு தாராள மனமுடன் இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கிடுமாறு பபாசி அன்புடன் வேண்டுகிறது.
மேலும் பதிப்பாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட தமிழக அரசின் பதிப்பாளர் நல வாரியம், அரசு நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யும் பட்டியல் தொகையில் (Purchase Amount) பதிப்பாளர்களிடமிருந்து 2.5 விழுக்காடு (2.5%) பிடித்தம் செய்து வருகிறது. இந்த பிடித்தம் செய்த வகையில் கோடிக்கணக்கான பணம் பதிப்பாளர் நல வாரியத்திடம் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. இப்பணத்தின் மூலம் பதிப்புத்துறை மிகவும் நலிவுற்று இருக்கும் இப்பேரிடர் காலத்தில், பதிப்பாளர்கள் மற்றும் பதிப்பாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்கி இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுமென்று தமிழக அரசினை பபாசி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
பள்ளி, கல்லூரி மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமான புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் பதிப்புத்துறையினரின் மேற்கண்ட இரண்டு நியாயமான/அவசரமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக துணை முதல்வர், மாண்புமிகு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரை பபாசி அன்புடன் வேண்டுகிறது.
மேலும் விபரங்களுக்கு:
திரு. ஆர்.எஸ்.சண்முகம், தலைவர் – பபாசி: 94440 81510
திரு. ஆ. கோமதிநாயகம், பொருளாளர் – பபாசி: 99625 67240