தடை அதை உடை – நூலறிமுகம்
“வீடற்றவர்களும் இந்நாட்டின் குடிமக்களே”
சென்னையில் சாலையோரம் வசித்து வருபவர்களின் வாழ்வை அருமையாக ஆவணப்படுத்தி உள்ளது இந்த நூல்.
உலகம் முழுவதுமே தங்குவதற்கு வீடு இன்றி சாலையோரம் வசிக்கும் மக்கள் இருந்து வருகிறார்கள். போர்களாலும், வன்முறைகளாலும் வீட்டை இழந்து வாழ்வோர் உள்ளனர். வீட்டில் சண்டை, படிப்பு வரவில்லை, குடும்ப வன்முறை காரணங்கள் மூலம் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இவர்கள் வசிக்க வாடகை வீடு பிடிக்க பணம் இன்றி வறுமையில் உள்ளவர்கள் ஆவார்கள்.
எனவே இவர்கள் சாலையோர வசிப்பிடத்தை நாடுகின்றனர்.
இவர்கள் பிளாஸ்டிக் சீட்டுகள், கிழிந்த போர்வைகள் கொண்டு தற்காலிக வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு வசித்து வருகின்றனர்.
சென்னையில் பிரிட்டிஷ்காரர்கள் நடத்திய போரின் காரணமாக வாழ்விடங்களை இழந்தவர்கள் வண்ணாரப்பேட்டை வால்டாக்ஸ் ரோடு இன்னும் இது போன்ற பல பகுதிகளில் தெருவோரம் குடிசை அமைத்தும் வாழும் நிலை ஏற்பட்டது. அப்பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் நிறைய உள்ளன.
பெரிய கட்டிடங்கள் கட்டவும், தொழில்கள் வளரவும் வீடற்றவர்களை அப்புறப்படுத்தும் நிலை உள்ளது.
இவர்களுக்கு நிரந்தரமான வேலை இல்லை. ஆண்கள் மூட்டை தூக்கி பிழைப்பதும், பெண்கள் வீட்டு வேலைகள் செய்தும் வந்தனர். குழந்தைகளை கூட வேலைக்கு அனுப்பும் நிலையே உள்ளது.
ஆண்கள் குடித்துவிட்டு வந்து வீட்டிற்கு பணம் கொடுக்காததோடு பெண்களை அடித்து துன்புறுத்தும் சூழல் இன்றளவும் தொடர்கிறது.
குழந்தைகளுக்கான கல்வி அவசியம் என்பதை வழி காட்டவும் இவர்களுக்கு யாரும் இல்லை.
நிரந்தர வீடு இல்லாததால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் எதுவும் பெற முடியாதவர்களாக இவர்கள் உள்ளனர்.
இவர்களது இரவு மிக மோசமான இரவாகவே ஒவ்வொரு நாளும் இருக்கும். குறிப்பாக பெண்கள் தூங்குவது மிக கடினம். அருகில் உள்ள கடைகளின் வாசலில் தான் படுத்து உறங்கும் சூழல் உள்ளது. எப்போது கடையை சாத்துவார்கள் அப்போது போய் படுப்போம் என்ற நிலை உள்ளது. இப்பெண்களுக்கு கழிவறை வசதி குடிவரை குடிநீர் வசதி ஏதும் இல்லை. ஒதுக்குப்புறமாக செல்லும் போது பெண்களும், குழந்தைகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள்.
தெருவோரம் வசிக்கும் இவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் என்பதே உண்மை.
அரசு திட்டங்கள்:
இவர்களுக்கு தனி வீடு திட்டம் உள்ளது. அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள், தங்குமிடம், உணவு மற்றும் இவர்களுக்கான அதிகாரி அதிகாரம் அளிக்கும் திட்டம் போன்றவை உள்ளன.
ஆனால் இவை அனைத்தும் பல துறைகள் இணைந்து செயல்பட்டால் தான் சாத்தியம் உண்டு.
அரசுத் துறைகள் மத்தியில் இவைகள் ஒருங்கிணைப்பில் இல்லை.
எனவே இவற்றையெல்லாம் தாண்டி இவர்களுக்கான அரசு உதவி கிடைப்பது என்பது கானல் நீராகவே உள்ளது.
நம் சமூகம் வீடற்றவர்களை ஒரு தொல்லையாக தான் பார்க்கிறது. பொது இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள். இவர்களுக்கு சுகாதாரம் இல்லை என வெறுத்து ஒதுக்குகின்றனர். காவல்துறையும் கூட இவர்களை புரிந்து கொள்வதில்லை.
கருணாலயா:
கருணாலயா சோசியல் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள், இளைஞர் நல்வாழ்வு, இவர்களுக்கான கல்வி, அனைவரும் போல இவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நிலையில் பணியாற்றி வருகிறது.
தற்காலிக தங்குமிடங்களையும் கொண்டுள்ளது கருணாலயா. இங்கு உணவு, கல்வி, சாரணர் இயக்கம், விளையாட்டு, தன்னம்பிக்கை, தலைமை பண்பு போன்ற நல்ல சூழல்களை உருவாக்கித் தருகிறது.
உணவு, உடை, உறைவிடம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தங்கும் இடத்தை அடிப்படை உரிமையாக வரையறுத்து உள்ளது. ஆனால் அரசு தனது பொறுப்பையும் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு தப்பித்துக் கொள்கிறது. இவர்கள் நடத்தும் இடங்கள் முறையாக செயல்படுகிறதா? என்று கூட கண்காணிப்பது இல்லை.
தெருவோர குழந்தைகள் பல்வேறு சோதனைகளைத் தாண்டி விளையாட்டில் ஒலிம்பிக் வரை சென்று சாதித்த நிகழ்வுகள் குறித்தும் இந்த நூலில் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.
அதுபோன்று பல்வேறு துறைகளில் தெருவோரக் குழந்தைகள் கல்வி பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில்bபணிகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளும் என்னுள்ளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இடதுசாரி கட்சிகள் இவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் அரசு உரிய கவனம் செலுத்தி வீடுகள் வழங்கி இவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அனைவரும் அவசியம் வாசித்தரிய வேண்டிய நூல் இது.
நூலின் தகவல் :
நூல் : “தடை அதை உடை”
(இது வீடற்றவர்களின் உலகம்)
நூலாசிரியர் : கோகிலா
விலை: ரூபாய் 120/-
வெளியீடு : ஹெர் ஸ்டோரீஸ்
தொடர்பு எண் : 9600398660
எழுதியவர் :
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


வீடு இல்லாத மனிதர்கள் இருக்கக்கூடாது என அரசு நினைக்க வேண்டும்!
அப்படி நினைத்து பார்க்க கால அவகாசம் இருக்குமா?
பெண்கள் நிலை பற்றிய சிந்தனை அரசுக்கு வந்தால் நல்லது!