அன்புத் தாய்மார்களே! இப்போது நாம் நம்முடைய முதல் வகுப்பறையிலே இருக்கிறோம். அதாவது பிரசவித்த பளிங்கு அறையின் பிரசவ அறையிலே நட்ட நடுவில் கிடத்தப்பட்ட அகலமானதொரு அலுமினிய மேசையில் படுத்துக் கொண்டுதான் இந்தப் பாடத்தையே நாம் தொடர வேண்டியதிருக்கும். இப்படிப் படுத்துக் கொண்டே பள்ளிக்கூடம் போக யாருக்குத் தான் பிடிக்காது? இப்பள்ளியைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போதே பால்வாடி குழந்தைகளைத் தூங்க வைத்து பாடம் நடத்துகிற மழலையின் ஞாபகங்கள் தான் நினைவிற்கு வருகிறது.

இங்கு நீங்கள் இருக்கப் போவதென்னவோ இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மட்டும் தான். குழந்தையைத் துடைத்து வெகுவெதுவாக்கி அவர்களை இயல்பாக மூச்சுவிட வைத்து நம்மிடம் கொடுப்பதற்கும், பிரவசவித்ததால் பாதிப்படைந்த பகுதிகளை தையலிட்டும் நமது சோர்வினை குளூக்கோஸ் போட்டு தேற்றுவதற்குமான இந்த இரண்டு மணி நேர இடைவெளியில் தான் இந்தப் பாடத்தையே நமக்குச் செவிலியர்களும், மருத்துவர்களும் எடுக்கப் போகிறார்கள்.

குழந்தைகள் வெளி வந்தவுடனே சட்டென்று பனிக்குடத்தில் குலைத்தெடுத்த இரத்தக்கறையோடு தூக்கி அப்படியே அம்மாவின் மார்பிலே போடுவார்கள். அப்போது குழந்தையுமே கர்ப்பப்பையோடு ஒட்டிக் கொண்டிருக்கிற நஞ்சுப்பையுடன் பிணைந்த தொப்புள்கொடியின் இணைப்போடுதான் தொடர்ந்து இருப்பார்கள். இந்த நிலையில் தான் பிள்ளையை மார்பில் போட்டு முதன் முதலாக நாமும் தாய்ப்பால் புகட்ட வேண்டியிருக்கும். அப்போது குழந்தையும் மூக்கை விடைத்துக் கொண்டு மார்பைத் தேடி அவர்களாகவே காம்பைக் கவ்வியபடி சவைக்கத் துவங்கிவிடுவார்கள். இப்படிச் செய்வதால் சீம்பாலும் ஊறி மார்பில் உடனே கசியத் துவங்கிவிடும். இதனால் பிரசவித்த எடுத்த எடுப்பிலேயே தாய்ப்பால் மார்பில் சுரக்குமா என்றெல்லாம் நாமும் யோசித்துத் தயங்கத் தேவையில்லை.

இப்படி அடுத்த கணமே மார்பில் போட்டு சவைக்க வைக்கிற போது சீம்பால் பெருகுவதுடன் அடுத்தடுத்து தாய்ப்பால் தொடர்ந்து மார்பிலே ஊற்றென பெருகிச் சுரந்து கொண்டே இருப்பதற்கும் இந்த ஆரம்பகட்ட தூண்டுதலே காரணமாயிருக்கிறது. இதற்காகத்தான் இரண்டு மார்பிலுமே பத்து பத்து நிமிடங்களாக குழந்தையை மாறி மாறிப் போட்டு பிரசவ அறையிலே தாய்ப்பால் சுரக்கத் தூண்டச் செய்கிறார்கள். இதனால் அவர்களும் காம்பில் வாய் வைத்துப் பொருத்தியபடி குடிப்பதற்கு மெதுமெதுவாக பழகிக் கொள்கிறார்கள். மேலும் பிறந்தவுடனேயே குழந்தையும் இரத்தத்தில் உலப்பியபடி வெளிவந்த வெற்று உடம்போடு அம்மாவின் வெற்று மார்பிலே படுத்துக் கொண்டு பால் குடிக்கையில் வெகுவிரைவிலேயே அம்மாவின் தோலோடு தோல் நெருக்கம் கிடைக்கிற அரவணைப்பும் அவர்களுக்குச் சாத்தியமாகிவிடுகிறது.

அம்மாவானவள், முதன் முதலாக குழந்தையைப் பார்க்கும் காட்சியே அவளது இரத்தக்கறை படிந்த பிள்ளையாகத் தான் இருக்கும். அப்போது அந்த இரத்தக்கறையோடு அவர்களை வாரியணைத்து மார்பிலே போட்டு உச்சிமுகர்ந்து உள்ளங்கையில் வைத்து இரசிக்கிற போது, அம்மாவிற்கும் தன் பிள்ளையின் மேலே பாசம் பொங்கி வரும். குழந்தையின் சிணுங்களுடன் கூடிய பூனையின் குரலொத்த அழுகைக் குரலைக் கேட்டவுடனே அதுவரை வலியில் துடித்த பெற்றவளின் அழுகைக்குரல் சட்டென்று மாறி சிரிப்பையும் அழுகையும் குலைத்துச் செய்த ஒரு புதுமுகக் கலவையான பாவணைகளை வெளிக்காட்டத் துவங்கிவிடுவாள்.

இவ்வகையான மகிழ்ச்சியின் ஊற்றிலிருந்து தானே பெற்றவளும் பிரசவ பாதிப்புகளிலிருந்து விரைவிலே மீண்டுவர முடியும். இதனால் அம்மாக்களுமே, தானும் தன்னுடைய பிள்ளையும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்கிற உணர்வு நிலைக்கு வெகுசீக்கிரத்திலேயே வர முடியும். குழந்தைகளும் முதன் முதலாக வெளியுலகத்திற்கு வந்து அம்மாவின் மார்பில் படுத்துக் கொண்டு தாயவளின் குரலைக் கேட்டு மார்பை முகர்ந்து அதில் முண்டியபடி, காம்பைச் சுவைத்து தாய்ப்பால் குடிக்க பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.

அத்துடன் பிரசவிக்கிற பெண்ணோடு உடனிருந்து பார்த்துக் கொள்கிற, பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்கிற தோழியோ, அம்மாவோ குழந்தை பிறந்தவுடனே அவர்களுக்குப் பாலூட்டுவதற்காக துரிதகதியிலே ஒத்துழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். பிள்ளை பெற்றவளுக்கு இரத்தம் கசிந்து வெளியேற்றப்பட்டதாலும், பிரசவித்து களைத்துப் போன சோர்வினாலும் உண்டான பலவீனத்தைச் சரிசெய்வதற்கு ஏதேனும் நீர்சத்துடைய ஆகாரங்களாகக் கொடுத்து நல்லபடியாக தேற்றிவிட வேண்டியதிருக்கும். மேலும் அடிக்கடி குழந்தையை அவளிடம் காட்டி பாலூட்டி வளர்க்க அருகாமையிலிருந்தபடியே ஊக்கப்படுத்தவும் வேண்டியதிருக்கும். இதனால் தான் பிரசவத்திற்கு உடனிருக்கிறவர்களோ, முன்பு பிரசவித்த தாயாகவும் தாய்ப்பாலூட்டல் தொடர்பான தேவையான விழிப்புணர்வினைப் பெற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவமனையிலே அறிவுறுத்துகிறார்கள்.

பொதுவாக, இந்த முதல் வகுப்பறைப் பாடத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீங்கள் தாய்ப்பால் புகட்டும் போது தெளிவில்லாமலும், ஒருவித குழப்பத்தோடும், சின்னச்சின்ன புரிதல் இல்லாத தவறுகளோடும் செய்வது போலவே தான் இருக்கும். குழந்தையைக் கைகளில் வாங்கி தாங்கிக் கொள்வதற்கே உடலெல்லாம் காற்றில் அசைகிற புல்லைப் போல மெலிசான நடுக்கம் எடுக்கும். அப்போது குழந்தையை கைகளில் எப்படி பற்றிக் கொள்வது என்றுகூட அவ்வளவாக நமக்குத் தெரியாது. எப்படித் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளும் நன்குப் பசியாறுவார்கள் என்கிற புரிதலுமே நமக்கு அவ்வளவாக இருக்காது. ஆனாலும் கவலைப்பட வேண்டாம் தாய்மார்களே! நாம், தாய்ப்பால் இரண்டாம் வகுப்பறையான வார்டு பகுதிக்குச் செல்லும் போது இதையெல்லாம் சரிசெய்து கொண்டு சரியாகத் தாய்ப்பால் புகட்ட பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன்னால் முதலாம் வகுப்பறையில் நாம் கற்றுக் கொண்டவற்றை கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாக உறுதி செய்து கொள்வோம்.

தாய்ப்பால் வகுப்பறை படிவம்-1
**************************************

1. பிரசவ அறையிலேயே முதல் தாய்ப்பாலான சீம்பாலை உங்கள் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டீர்களா?
• ஆம் • இல்லை

2. முதல் அரைமணி நேரத்திற்குள்ளாகவே தாய்ப்பால் கொடுக்கத் துவங்கிவிட்டீர்களா?
• ஆம் • இல்லை

3. சிசேரியின் செய்த தாய்மார்களாக இருக்கிற பட்சத்தில் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் புகட்டினீர்களா?
• ஆம் • இல்லை

4. பிரசவித்த உடனேயே மார்பிலே குழந்தை தவழவிடப்பட்டதா?
• ஆம் • இல்லை

5. குழந்தைகள் அவர்களாகவே காம்பைத் தேடி கவ்விச் சுவைக்கக் கற்றுக் கொண்டார்களா?
• ஆம் • இல்லை

6. இரண்டு மார்பிலுமே போட்டு தாய்ப்பால் சுரப்பதற்கான தூண்டுதலைச் செய்தீர்களா?
• ஆம் • இல்லை

7. பிரசவ அறையிலேயே உங்களுக்கும் குழந்தைக்குமான தோலும் தோலுமாக தொடர்பிலிருக்கிற வகையில் தூண்டப்பட்டதா?
• ஆம் • இல்லை

8. பிரசவ அறையிலேயே தாய்ப்பால் புகட்ட போதுமான அறிவுரைகளை பெற்றுக் கொண்டீர்களா?
• ஆம் • இல்லை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *