கவிதை 1
மழைக்கு ஒதுங்கிய வானம்
**************************************
மூன்றுநாழிகையாய் முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கிறாள் அம்மை
மரம் செடி கொடி பூக்களெல்லாம் குருவிக்குஞ்சுகளாய் வாய்திறந்து சப்புக்கொட்டுகின்றன
பட்டணத்தில் பூட்டிக்கிடக்கும் பிரமாண்ட இரும்புக்கதவுகளுக்கும் வெளியே
சீருடையில் அமர்ந்திருக்கும் இரவுக்காவலர்களின் தலையை முதல்துளி தீண்டியதும்
‘’ நாளைக்கே நாத்து பாவிடலாம் ‘’ என்று அனிச்சையாக சொல்லிவிட்டு
நாக்கைக் கடித்துக்கொள்கிறார்கள் கண்கள் பனிக்க.
ஊரில் மழை பொய்த்துவிட்ட வேதனையில்
இருந்த கையகல புஞ்சையையும் விற்றுவிட்ட கூடாண்டி தாத்தா
விவசாயம் பண்ணமுடியாத ஏக்கத்திலேயே நெஞ்சுவெடிச்சு
செத்துப்போனாரு முந்தா நாலு
கிழவன் உசுரோட இருக்கும்போது வரலைன்னாலும் செத்த மூணாம்நாளு
குழிமொழுகவாச்சும் வந்துச்சே பாவி மழை என்று குடிசைக்குள்
ஏங்கி ஏங்கி மாரடித்துக் கொண்டிருக்கிறாள் பார்வதிபாட்டி
மேலே மழைக்கு ஒதுங்கியவானம் நள்ளிரவில்
ஊர்வடக்கான் கிணற்றுக்குள் கிடந்து தத்தளித்துக்கொண்டிருக்கிறது
பெருந் தவளையைவிழுங்கி விட்டு செரிக்க முடியாமல் நெளிந்துகொண்டிருக்கும்
தண்ணீர்ப் பாம்பாக
கவிதை 2
பாதங்களால் நிறையும் வீடு
*************************************
பசுஞ்சாணத்தில் மெழுகிவிடுவாள் தெரு வாசலை பசலைக்கீரை நிறத்தில் கருக்கலிலேயே
தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுங்கன்றும் வெள்ளாட்டுக் குட்டியும் சங்குப்பூனையும்
சிம்மி நாய்க்குட்டியும் நீச்சத்தண்ணீ கேட்டு பக்கத்து வீட்டு குட்டிக்காடுகளும் குருமான்களும்
சட்டமாக வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள் சாணம் பதிந்த கால்களோடு
கழுத்தைக் கட்டிக்கொண்டும் முகத்தை உரசிக்கொண்டும் முழங்காலைக்
கட்டிக்கொண்டும் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் காலையிலேயே
தீம்பட்டி குழல் வைத்து அடுப்பூதிக்கொண்டிருப்பவள்
ஒவ்வொன்றொன்றுடனும் வழமை பேசிக் கொண்டிருப்பாள் சளைக்காமல்
ஒரு கரண்டியில் கொதிக்கும் கருவாட்டுச் சாறெடுத்து தாத்தாவின் உள்ளங்கையில் வைத்து
உப்பு பார்க்கச் சொல்வாள் மறக்காமல்
சுயம் தொலைத்து நிற்க நேரமில்லாத இப்பெரு நகரத்தில் பிழைப்பிற்காக பல்லடுக்கு மாடிஒன்றின்
ஒருதளத்தில் அடைந்து கிடக்கும் கிராமத்தானுக்கு
இப்போது எந்தஅழைப்பு மணி ஒலித்தாலும்
ஒற்றறியும் லென்ஸ் மூலம் வெளி முகம் பார்த்துக் கதவு திறக்கும் வரை
அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் பயத்தையும் தாண்டி
பார்வதி பாட்டியின் சிரித்த முகம் எட்டிப் பார்ப்பதை மட்டும்
ஏனோ தவிர்க்க முடியவேயில்லை
கவிதை 3
கண்ணாடியும் கீறல்களும்
************************************
கல் உரசித்தான் கீறல் விழுந்திருக்க வேண்டுமென்பதில்லை
சமயத்தில் விட்டெறிந்த சொல்லாலும் கூட இருக்கலாம்
தனிமையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
சட்டென்று மூன்றாவது முகம் ஒன்று
முட்டி முளைத்திருக்கக் கூடும்
பளிங்கும் சுத்தம் வேண்டுமென்று பழந்துணியால்
நையத் தேய்த்த விரல்களின்
கைங்கர்யமாகவும் இருக்கக் கூடும்
பொய்மைகள் புரையோடிக் கிடக்கும் முகத்தில்
நெளியும் புன்னகைகளைக் கண்டு
தாங்காத சிட்டுக்குருவி ஒன்று
பரிசுத்தமான கண்களிலிருந்து பறந்து வந்து
தன் கூர் அலகுகளால் கொத்தி உடைத்துவிட்டும் போயிருக்கலாம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

