தங்கேஸ் கவிதைகள் 34 Thanges Poems 34

1
தோல் போர்த்திய எலும்புக்கூடு
ஏந்திய கரமொன்றில்
இரண்டு ரூபாய் நாணயத்தை திணித்துவிட்டு
ஏதோ தோன்றமுகம் பார்க்கிறேன்
வருடங்க ளுக்கு முன்பு
தொலைந்து போன
பெரியம்மாவின் சாயல் தென்பட
அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று
தன்னிச்சையாக
அவ்விடம் விட்டு நகர்கிறேன்
தம்பி என்றழைக்க நினைத்த வார்த்தையை
அவரசமாக விழுங்கி விட்டு
நான் போகும் திசையை வெறித்தபடி
நாணயத்தோடு
அதுவும் நகர்ந்திருக்க கூடும்
வேறு இடம் தேடி

2
வயலுக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும்
பார்வதி வாரேன்
என்று சொல்லிவிட்டுப் போகும்
ஆண்டி தாத்தா
பாட்டியிடம் சொல்லாமல் போன
அன்று தான்
ரெட்டைப் புளிய மரப் பிஞ்சையில்
உழவுச்சாலுக்குள்ளேயே பிணமாக
கிடந்தார்
பார்வதிப்பாட்டியும் ஒரு நாள்
தெருப் பார்த்த திண்ணையில் சாய்ந்தவாறே
செத்துப் போயிருந்தாள்

எங்கள் அலுவலகத்தில் ஒரு நாள்
ஏ3 சார்
ஒரு தம்ளர் தண்ணிர்
தொண்டைக்குள் இறங்குவதற்கும் முன்பே
ஒரு வார்த்தை சொல்லாமல்
என் மடியிலேயே உயிரை விட்டிருந்தார்

ஒரு முறை
ஐநூறு மைலுக்கு அப்பாலிருந்த விற்பனைப் பிரதிநிதி
தந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக சொன்ன
குறுஞ்செய்திக்கு அலறியடித்து
இரவெல்லாம் பயணித்து
அதிகாலையில்
அவரை வந்து பார்த்த போது
வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும்
வயர்கள் செருகப்பட்டு கிடந்த அவரால்
ஒரு வார்த்தை பேச முடியவில்லை
கடைசி மூச்சு பிரியும் போது
கடைக் கண்ணோரம் சரிந்த
இரண்டு துளி கண்ணீர் மட்டுமே
உருண்டு விழுவதற்காக காத்திருந்தது

சிறிது வெளிச்சம் இருந்தாலும்
தொடர்ந்து வரும் நம் நிழல்
இருளுக்குள் வந்ததும்
சொல்லாமலே விடை பெறுவது போலத்தானா
மனிதர்கள் வாழ்க்கையிடமிருந்து
விடை பெறுவதும்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *