- நீங்க என்ன ஆளுக ?
நீங்க என்ன ஆளுங்க என
ஒருவனை
கேட்ட நொடியில்
ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப் புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான்
ஒரு வேசை காசு தராத வாடிக்கையாளின் பரம்பரை பெண்களை
அவளின் தொழிலுக்குப் போகச் சொல்லி சபிக்கிறாள்
குப்பைத்தொட்டியின் அருகில் கிடந்த
சாக்கு மூட்டை அசைந்து அசைந்து
மனித உடலம் தலை நீட்டுகிறது
முழுப் போதையில் போகும் டாஸ்மாக் குடிமகன்
தெருவை ஆபாச வசவுகளால் நெய்தபடி போகிறான்
தெரு நாய்களுக்குள் எலும்பு யாருக்கு என்ற சண்டை மறுபடி ஆரம்பமாகிறது
அன்பான கடவுள் மீது அநாவசியமாகக் கோபம் வருகிறது
வாலில்லாத குரங்குக்கு
மறுபடியும் வால் முளைத்ததும்
கிளைக்குக் கிளை தாவுகிறது
2
மௌனத்தை விட மெதுவாக
உதிர்கிறது மஞ்சள் அரளிப்பூ
கடப்பாரையையும் மண்வெட்டியையும்
தாங்கும் பூமியால் கூட
மெளனத்தின் மென்மையைத்
தாங்க முடியவில்லை
இவ்வளவுக்கும் சருகு கூட இல்லை
வாளிப்பான மஞ்சள் வாகு
சொல்லொண்ணா துயரத்தில்
குலுங்குவது போல் இருக்கிறது மரம்
இரண்டாவது முறை பார்த்த போது
காற்றில் கிளைகள்
ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்தன
கூடவே பூத்திருந்த பூக்களும்
இலைகளையே பார்த்துக்கொண்டிருந்தவள்
“எதுவுமே சொல்லமாட்டியா”
என்றாள்
“எதுவுமே சொல்லத் தோன்றவில்லை”
என்றேன் நான்
3. சந்தை
ஏதேன் தோட்டமாக இருந்த பூமி
சபிக்கப்பட்ட வனமானது
ஆதாமின் வாரிசு
ஆப்பிள்களை சந்தைப்படுத்த
ஆரம்பித்த பிறகு தான்
மனிதர்கள் வாரிசுகளை
விட்டுச்செல்வது போது
பாம்புகளும் வாரிசுகளை
விட்டுச் செல்ல ஆரம்பித்தன
பல்கிப் பெருகிய அவைகள்
அவசரத்திற்கு ஒளிந்து கொள்ள
இடமில்லாமல்
மூளைக்குள் ஓடிவந்து
ஒளிந்து கொண்டன
சமயங்களில் முதலாளிகளின்
புன்னகைகளில்
ஒளிக்கீற்றுகளாகவும்
அரசியல்வாதிகளின்
மணிக்கட்டுகளில்
ஆபரணங்களாகவும்
அதிர்ச்சியில் தற்காலிகமாக
ஊமையாகிப் போன புனிதர்கள்
யாவற்றையும் மௌன சாட்சியாக
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பூமி நெட்டி முறித்து புரண்டு படுக்க
ஆசைப்படுகிறது
கார்ப்பரேட் அதை
ஒரு போர்வையாக
சுருட்டி
கடலுக்குள் கொண்டு செல்ல
எத்தனிக்கிறான்
இந்த முறை வராக உருக்கொண்டெல்லாம்
அவர் வரவேண்டியதில்லை
இதை நாமே தடுத்துவிடலாம் என்று
தோழர் நமது கரங்களை எடுத்து
ஒன்றாக கோர்க்க ஆரம்பிக்கிறார்
பூமி முன்னெப்போதையும் விட
அசுர வேகத்தில் சுழல
ஆரம்பிக்கின்றது
4. மாபெரும் நூலகம்
இந்த உலகத்தை
பெரியதொரு நூலகமாக
மாற்ற முடிந்தால்
ஏறத்தாழ எட்டு பில்லியன்
நடமாடும் புத்தகங்களை அடுக்கலாம்
சர்வ சுதந்திரமாக புத்தகங்கள்
நடமாடும்
தேவையான அடுக்குகளில் தாங்களே
போய் அமர்ந்து கொள்ளும்
சமயங்களில் தேவையான நபர்கள் வாசிக்க
தாங்களாகவே அவர்களின் கைகளில் போய் ஒப்படைத்துக் கொள்ளும்
சில கவர்ச்சிகரமான புத்தகங்களுக்கு
எந்த விளம்பரமும் தேவையில்லை
தாங்களே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும்
சூரியனின் ஆகர்ஷனம் போல்
அவைகள் நம்மை ஈர்த்துக் கொள்ளும்
ஒரே ஒரு புத்தகம் தான் போர்ஹேஸ்
முதலில் கண்டது
பிறகு உலகமெல்லாம் பல்கிப் பெருகியது
அதில் ஒன்று தான் நீ நான் மற்றும்
இந்த பேசும் புத்தகமென்றால்
நீ நம்பவா போகிறாய்?
தங்கேஸ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.