எழுத்தாளர் இரா பாரதிநாதன் எழுதிய “தறியுடன்” | நூல் மதிப்புரை – கருப்பு அன்பரசன்

எழுத்தாளர் இரா பாரதிநாதன் எழுதிய “தறியுடன்” | நூல் மதிப்புரை – கருப்பு அன்பரசன்

“தறியுடன்..” வாசிக்கத் தொடங்கியதுமே
எனது நினைவுகள் என்னை தரதரவென
கருவேல முள் கிழிக்க.. தார் அற்ற கருங்கல் சல்லிகள் சாலையில் முளைத்ததன் கூர்முனை கிழிக்க கருத்த எனதுடம்பெல்லாம்  ரத்தமொழுக இழுத்துக் கெண்டே தரமணியின் குடிசைப்பகுதிகளின் தெருக்களெங்கும் சுற்றிக் கொண்டே..
தற்போது நீங்கள் பார்க்கும் வானுயர்ந்த கட்டிடங்கள், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் பல்வேறு மாநிலத்தின் இளைஞர்கள், ராம்கே, இன்ஃபோசிஸ், டைசல், டைடல் பார்க், மாதம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவு செய்து தம் பிள்ளைகளை எல்.கே.ஜி..தொடங்கி உயர்கல்வி வரை
படிக்க வைத்திடும் அமெரிக்கன் பள்ளி போன்ற கார்ப்பரேட்களின் கட்டிடங்கள், 3ஸ்டார், 5ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கும் பகுதியல்ல அன்று;
சென்னை நகரத்தின் ஒதுக்குப்புறமதில் ஓலைக் குடிசைகள் கொண்ட பகுதியது. மண் சுவர் என்பதை எங்கும் பார்த்திடமுடியாது, சென்னையில் நடைபெறும் பல்வேறுகுற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள், கஞ்சா விற்பவர்கள் என அனைவரின் பாதுகாப்பு ஏரியா அது.  காவல் துறையினரும் தைரியமாக உள்ளே வரமுடியாது.. தரமணியின் காந்தி நகர், பெரியார் நகர் பகுதி. 1980 களில் தொடங்கி இது நாள் வரையிலும் மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் நடத்திய அளப்பரிய வீரம் செறிந்த போராட்டங்கள்தான் இன்றைக்கு அந்தப் பகுதியே அந்த மக்களுக்கு சொந்தமாக்கப் பட்டிருக்கிறதும். ரெளடிகளுக்கு எதிரான விடாத போரட்டமென்பது இன்று நினைத்தாலும் உடலெங்கிலும் ரத்தம் பிசுபிசுக்கிறது. காந்தி நகரிலும் பெரியார் நகரின் வீதியெங்கிலும் கம்யூனிஸ்டுகளின் ரத்தம் சிந்தாத இடமிருக்காது.. பகுதி மக்களின் குடிநீர்த் தேவையென்றாலும், குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சனையானாலும், ரேஷன் கடை முறைகேடென்றாலும் , போலீஸ் அத்துமீறி நடந்தாலும் இன்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் நோக்கியே வருவார்கள். பகுதியை எப்போதும் போராடும் சூட்டோடே, தோழர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் பழக்கி வைத்தவர்கள்
அப்பகுதி கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள்.
வாசகர் விமர்சனம்: 'தறியுடன்' வாழ்ந்த ...
இப்படிப்பட்டதான பல பகுதிகளுக்கு “தறியுடன்..” நாவலாசிரியர் பாரதி நாதன் அவர்கள் நம்மை தம் கள போராட்ட அனுபவத்தினூடாக அழைத்துச் செல்கிறார். நாளெல்லாம் தறியில் உழைத்து  பண்ணையாடிகளிடம் நவீன அடிமைககளாக இருந்த மனிதர்களின்; செங்கொடியின் புதல்வர்கள் நக்சல்பாரிகளால்  வீரு கொண்டு எழுந்த வீரம்மிக்க போராட்டங்களின்.. தியாகங்களின் வரலாறு.. இந் நாவலில் வரும் பெரும்பான்மையான கதாப்பாத்திரங்கள் இன்றும் உயிரோடு நெஞ்சை நிமிர்த்து போராட்டத் தளபதிகளாக ஊரெங்கும் வலம் வருகிறார்கள் உதிரச் சூட்டோடு.
நாவல் 1980 களில் சேலம் மாவட்டம் ரமாபுரத்தில் (ஜலகண்டபுரம்)  வலிமிகுந்த வாழ்க்கையை வாழ்ந்த  பண்ணையாடிகளிடம் கொத்தடிமைகளாக
தினம்தினம் நசுக்கப்பட்டு பூச்சிகளாக ஊர்ந்து கிடந்த மக்களின் உண்மை வரலாறு. புழுவாக கிடந்த மக்களிடம் விசைத் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்கி அத் தொழிலாளர்களை கம்யூனிச சிந்தாத்தந்தின்பால்  ஈர்த்து ஒரு வெகுமக்கள் போராட்டத்தை நடத்திக் காண்பித்தார்கள் நக்சல்பாரிகள்  என்பதை உரத்துச் சொல்லி பொதுவுடமை அரசியல் பேசும் நாவல்தான் “தறியுடன்..”
கோவிந்தராசுவின் தறிப்பட்டரையில் வேலை பார்த்த ராசாத்திக்கு பண்ணையாடியின் அலட்சியத்தால் இடது கை  துண்டாகும் ரத்தத் தெறிப்பில் இருந்து நாவல் தொடங்குகிறது.. ராசாத்திக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத்யோடு ஏமாற்ற நினைக்கும் கோவிந்த ராசுவை,  உடன் வேலை செய்யும் ரங்கன் எப்படி தந்திரமாக நடந்து விசைத் தொழிலாளர்கள் சங்கத்தின் முயற்சியில் ஒரு லட்சம் வாங்கித்தந்தான்; அதனால் பண்ணையாடி கோவிந்தராசு கோவமுற்று
அவனின் குயுக்தியால் உருவாக்கப் பட்ட பொய் குற்றச்சாட்டால் சிறையில் பெருங் கொடும் சித்திரவதைக்கு ரங்கன் எவ்வாறு உள்ளாக்கப்பட்டான் என்பதையும்; எப்படி அவனை சிறையில் இருந்து சிவலிங்கமும், மணியும் கொண்டுவந்தார்கள் ; அதே நேரத்தில் கோவிந்தராசு கைவிலங்கிடப்பட்டதெவ்வாறு, இதற்குப் பெரியசாமி ஆசிரியரிடமிருந்து பெற்ற சட்ட அலோசனை எப்படி உதவியது, இவைகளை நாவலாசிரியர் உணர்ச்சிகரமாக தனது  எழுத்தில் கொண்டு வந்திருப்பார்.
      இந்தப் பகுதியை வாசித்து முடிக்கும்போது
சென்னை தரமணியில் சில சமூக விரோதிகளின் பொய்யான குற்றச்சாட்டால் இரவு 8 மணி அளவில் மறைந்த தோழர் சுப்புராஜ் மற்றும் ராஜா இருவரையும் அழைத்துச் சென்ற வேளச்சேரி  காவல் நிலையத்தில் இருந்து அன்று இரவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஊர்வலமா அழைத்துச் சென்று  மீட்டு வந்த வரலாறும்.. பொய் புகார் கொடுத்த சமூக விரோதிகளை சிறை வைத்த அனுபவமும் வந்து போனது எனக்குள். கம்யூனிஸ்டுகள்தான் எத்தகைய நெஞ்சுரம் படைத்தவர்கள் நேர்மையானவர்கள்.. பொய்க் குற்றச்சாட்டுககுக்கு ஆளான கம்யூனிஸ்டுகளின் விடுதலையை எந்த மக்களுக்காக அவர்கள் போராடினார்களோ அந்த மக்களே அவர்களை அதிகாரத்திமிர் கொண்டவர்களிடத்திலிருந்து மீட்டு வருவார்கள் என்பது மெய்யான உண்மையல்லவா..
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ...
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் “சங்கத் தலைவன்” திரைப்படமாகும் “தறியுடன்” நாவல்!
     திண்ணப்ப அய்யர், ஊர் பொறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் உதவியோடு நயவஞ்சகமாக தனதாக்கிட முயற்சி செய்கிறார்.. அந்த நிலத்தில் வந்து மேயும் ஆடு மாடுகளை கட்டி வைத்து அவைகளின் உரிமையாளர்களாக இருக்கும் உழைக்கும் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார்.. அய்யரின் கொடுமைக்கு முடிவு கட்ட சங்க நிர்வாகிகளின் உதவியோடு விவசாய கூலிகளும், விசைத்தறி தொழிலாளர்களும் ஒரே நாள் இரவில் அய்யரின் வேலியை உடைத்தெறிந்து ஊர் பொது நிலத்தில் வீடற்றவற்கள் தனக்கான குடிசையை  கட்டி  எழுப்பும் அழகினை, வேகத்தை, அந்த இரவில் வரும் அய்யரின் அடியாட்களை எப்படி எதிர் கொண்டு ஓட விரட்டினார்கள் என்பதையும், விஷயம் கேள்விப்பட்டு விடியற்காலை வந்து சேரும் அய்யரையும், தாசில்தாரையும், காவல்துறை அதிகாரியையும் நேர்கொண்ட ரங்கன் தன் வாதத்தால் திரும்பிச்செல்ல வைத்ததையும் நாவலாசிரியர் விறுவிறுப்போடு, வேகமெங்கும் குறையாமல் பதிவாக்கி இருப்பார். மக்களின் சொத்தை களவாட முயற்சி செய்பவர்களிடமிருந்து, வழிகாட்ட தலைமைதாங்க எதிர்பார்ப்பற்று வேலைசெய்யும் கம்யூனிஸ்டுகள் இருந்தால் அம்மக்களே அச்சொத்தை பறிமுதல் செய்வார்கள் என்பதையும் தெளிவாக பதிவு செய்திருப்பார்.
     இதே அனுபவம் அன்று 1990களின் துவக்கத்தில் தரமணி காந்திநகர் டி.கே.கபாலி தெருவிற்கு எதிர்புறம் இருந்த வீராணம் குழாய் பதிந்திருந்த நிலத்தை முதலாளித்துவக் கட்சியினர் ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பாகுபாடில்லாமல் ஆக்கிரிமிக்க முயற்சி செய்தபோது இரவோடு இரவாக அப்பகுதியில் இருக்கும் மார்க்சிஸ்டுகள் நிலத்தை வேலிபோட்டு மடக்கி ஊர் கூட்டத்தில் அந்த நிலத்தை சொந்த குடிசையற்ற  ஏழைமக்களுக்கு விநியோகம் செய்து ஆக்கிரிமிப்பு செய்ய நினைத்தவர்களுக்கெதிராக அதிரடியாட்டம் ஆடினார்கள்.  வலுவான அமைப்பும், பொதுவான கோரிக்கையும் தன்னிலம் பார்க்காத தலைமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது கள அனுபவமே அனைத்து இடங்களிலும்.
       “நாம் செய்யும் நல்ல விசயங்களை ஆதரிக்க மக்கள் என்றும் தயாராக இருக்கிறார்கள். அதில் அவர்கள் துளிகூட தயக்கம் காட்டுவதில்லை. மேலும் நம்மை போராடத் தூண்டுகிறார்கள். தட்டிக் கொடுக்கிறார்கள். தங்களின் முன்னோடியாக நம்மை நினைத்து நம் பின்னால் அணிதிரள்கிறார்கள். கரம் கொடுத்து களத்தில் நிற்கிறார்கள் நம்மோடு” என்பதை போராட்ட அழகியலோடு  நாவல் முழுதும் சொல்லி இருப்பார்.
தீ. கம்யூனிஸ்ட்டுகளாக தமிழகம் முழுவதும் முதலாளித்துவ பத்திரிக்கையாளும், காவல் துறையாலும், ஆளும் முதலாளித்துவ கட்சிகளாளும் சித்தரிக்கப்பட்ட நக்சல்பாரிகள் எல்லாவற்றையும் மீறி பொதுவெளியில், அவசியமானபோது மறைந்தும் பொதுமக்களின் தலைவனாக, தோழனாக, எல்லாவித அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்ட போராளியாக,  இயக்கமாக களத்தில் நின்ற உண்மைகளை அப்படியே பதிந்திருப்பார் நாவலாசிரியர், பொருளாதார கோரிக்கைக்கான போரட்டத்தினூடே வந்திருக்கும் பொது மக்களையும், தொழிலாளர்களையும் அரசியல்படுத்த வேண்டிய அவசியத்தையும் நாவலில் வலுவாக பல இடங்களில் தோழர்களின் கலந்துரையாடல் வழியாக சொல்லி இருப்பார் பாரதி நாதன்.
சங்கத் தலைவன் – Kungumam Tamil Weekly Magazine
தறியுடன்…தானில் தோழமையை…நேசத்தை.. பிரியத்தை.. வேறு எங்கோ பிறந்து, பழக்கத்தில் உருவாகும் பாசமும், அன்பும் மிக அழகானதே என்கிற உச்சத்தை தான் அறிமுகப்படுத்தும் எல்லா கதாப்பாத்திரங்களின் ஈரம் மிகுந்த உரையாடல் வழியாக மேலும் அழகினை செறிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர். ராசாத்தி, ரங்கனை அண்ணாவென அழைத்து சுட்டிப்பெண்ணாகவும், அறிவார்ந்து பேசுபவராகவும், கல்யாணி திருமணம் குறித்து பேசிடும் வேளையில் ரங்கனிடம் அன்பின் ஈர மிகுதியால் சண்டைபோடும் தோழமை கொண்டவராகவும் மிளிர வைத்திருப்பார் நாவலாசிரியர். வேலாயி, மாரியம்மாள், மாரியம்மாளின் தாய், ரங்கனின் தங்கை ரஞ்சிதா இப்படி அனைத்து பெண்பாத்திரங்களும் தைரியம் மிக்கவர்களாக அடையாளப்படுத்தி  நாவலுக்குள் இருப்பார்.
ஒரே சாதிக்குள் பிறந்தாலும் உடமை வர்க்கத்தின் நயவஞ்சகமான, குயுக்தியான திட்டம் கல்யாணி ரங்கன் காதலை எப்படிப் பிரித்து, காதல் மனங்களை துன்புறத்துகிறது என்பதை பாரதி நாதன் அன்பின் வலியோடு உரையாடலை நம்மோடும் நிகழ்த்துவார்.
   கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக தருமபுரி சுற்றுவட்டார கிராமங்களில் பாலனின் விடாது போராட்டத்தையும், அரசு அறிவிப்பை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தி, கந்துவட்டிக்காரர்களின் கையாளகி நின்ற காவல்துறை போராளி  பாலனை கொடூரமாக தாக்கி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்கிற   உண்மையை வெடிப்புற அப்படியே பதிவாக்கியிருப்பார் ஆசிரியர். வாசிக்கும் நெஞ்சமதை பதைபதைப்பிற்குள்ளாக்கி அரசு மீது கோவத்தின் உச்சத்திற்கே சென்றடைய வைக்கும் நேரமதுவாகும்.
கம்யூனிஸ்டுகளின் குடும்பத்தில், ஜனநாயகத்தின் அழகை வேலாயி-சிவலிங்கத்தின் இணையர்களின் உறவுகளிலும், அவர்களின் சொந்த வாழ்க்கையின்.. அனுபவங்களின் வழிசார்ந்து பதிவாக்கி இருப்பார் ஆசிரியர்.
     நிலவுடமைச் சமூகத்தின் இன்னொரு கூரே பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஆணாதிக்கத்தின் தாலி அடையாளம். அதையும் கூட இன்றளவும் பெண்களே விரும்பி ஏற்குமாறு தந்திரத்தோடு கட்டமைத்திருக்கிறார்கள் பெண்ணடிமை சூத்திரதாரிகள். இந்த நாவலில் வரும் மாரியம்மாள் தன் சுயமரியாதையை, தனி நபர் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கிடும் கணவனிடமே கழுத்தில் தொங்கிடும் தாலியை பேச்சுவார்த்தையின் போது அறுத்து வீசியெறிவார்  ; அதோடு நில்லாமல் நிர்பந்தத்தின் காரணமாக கல்யாணியின் திருமணம் முடிந்ததும் தனித்திருக்கும் ரங்கனிடம் தான் அவனை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்வோமாவென தனது விருப்பத்தையும் முன்மொழிவார்.. அதே எண்ணத்தோடு இருக்கும் ரங்கனும் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பார். இந்தக் காட்சிகளை நாவலுக்குள் கொண்டுவரும்போது முற்போக்காளர்களும்.. சங்கத்தால் அரசியல் அறிவு பெற்றவர்களும், ஆண் பெண் இணையென்பது வெறும் உடல்சார்ந்து மட்டுமே இருப்பதுவல்ல என்ற புரிதலோடு வாழ்பவர்களால் மட்டுமே இப்படிபட்ட சூழலில் சரியானதொரு நிலையில் நின்று எதிர்கால வாழ்வதனை தீர்மானிக்க முடியும் என்பதை நாவலாசிரியர்  கதாப்பாத்திரங்களின் வார்த்தைகளில் நிறுவிடுவார்.
Vetrimaaran's Sanga Thalaivan First Look Out Now! Tamil Movie ...
கம்யூனிஸ்ட்டுகள், நக்சல்பாரிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் உழைக்கும் மக்களோடு தினமும் ஒன்றர கலந்து எங்கனம் இயங்கி வந்தார்கள்.. போராட்டங்களை புத்திக் கூர்மையோடு எப்படித் திட்டமிட்டார்கள்? வழிநடத்தினார்கள், உடற்சிரமங்களை, வாழ்வின் நெறுக்குதல்களை நிதம் பொறுத்து பொதுவுடமைக்கான போராட்டத்தில் தினமும் தங்களை முழுவதுமாக அர்பணித்து வந்தார்கள், நெருங்கி வரும் காவல் துறையிடமிருந்தும் தங்களை எப்படி தற்காத்து அரசுக்கு சவாலாக நின்றார்கள் என்பதை நாவல் முழுவதும் சிவலிங்கமாகவும், மணியாகவும், ரங்கனாகவும், ராசாத்தியாகவும்,வேலாயியாகவும், மாரியம்மாளாகவும், அர்த்தநாரியின் மனைவி உள்ளிட்ட இன்னும் பல தோழர்களாகவும் பரவலாக கொண்டுவந்திருப்பர் பாரதி நாதன்.
முதலாளிகளும், நிலச்சுவாந்தர்களும், கந்துவட்டிக்காரர்களும் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள சாதி சொல்லி உழைக்கும் மக்களை பிரித்திடும் வஞ்சகத்தையும், பிரச்சனையாகிடும்போது தன் சொந்த சாதிக்காரனையும் பலிவாங்க முதலாளித்துவம் தயங்காதென்பதையும், அதற்கு இன்றைய காவல்துறையும் அரசு நிர்வாகமும் எப்படியெல்லாம் வளைந்து கொடுக்குமென்பதை கோவிந்தராசு, அக்கரக்கண்ணு, தின்னப்ப ஐயர் உள்ளிட்ட மேல் சாதி வெறியர்களின் கொடூர செயல்களின் வழியே வாசகனோடு பேசி இருப்பார் நாவலாசிரியர்.
தொடர்ந்து விசைத் தறி தொழிலாளர்கள்,  உழைக்கும் மக்களின்பால் நின்று இடையறாது போராட்டம் நடத்திடும் ரங்கனை  நேரெதிர் நிற்கத் துணிவில்லாத முதலாளி வர்கம், பொதுக்கூட்டம் நடத்தி முடித்து எல்லோரையும் பொறுப்பாக வீட்டிற்கு வழியனுப்பி இரவில் தனியே நடந்து வரும் வேளையில் ரங்கனை வெட்டிச் சாய்க்கிறது.. அதன்பிறகு..? அதுதான் நாம் தெரிந்தறிய வேண்டியது.
நாவலை வாசியுங்கள்.. வெறும் 740 பக்கங்கள்தான். வாசிக்கும் போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் பல வாழும், மறைந்த, பலிகொடுக்கப்பட்ட நிறைய தோழர்கள் உங்கக் கண்முன் வந்து நிற்பார்கள்.
தறியுடன்.. வாசிப்பது வாசிபவர் தன்னை புதுப்பித்துக் கொள்ள உதவும்.. மீண்டும் துடிப்புடன் செயலாற்ற உதவும்.. தனக்கான சிறு இழப்பையும் சகித்துக் கொள்ள முடியாத முதலாளி வர்க்கம் தொழிலாளர்களை பழிவாங்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை உணர்ந்திட, தெரிந்திட உதவும்.
     ரங்கன் வெட்டிச் சாய்க்கப்பட்டதை வாசித்துடும் போதினில் ஏனோ எனக்கு என் தோழன் ப்ரதீப்குமார் வந்து என் எதிரில் நிற்கிறான்.  சுசீலா… தரமணி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின், வாலிபர்சங்கத்தின் தலைவர்களில், போராளிகளில் ஒருவனாக, மிகச் சிறந்த அமைப்பாளனாக, பேச்சாளனாக வளர்ந்தவன் ப்ரதீப்குமார். நானும் அவனும் தனித்தனியே இருந்த காலங்கள் என்பது எங்கள் இருவரின் திருமண வாழ்க்கைக்குப் பிறகுதான்.. எனதின் திருமணத்திற்கு முன்பு வரை என் அறையில்தான் தங்கி இருந்தான்.. அவர்கள் வீட்டிற்கு செல்வது என்பது வெகு குறைவே.. என்னுடந்தான் அவன் இருப்பான் என்பதை, தோழர்களும், பொது மக்களும், அவனின் குடும்பம் அறிந்ததே.. நல்லதொரு போராளியை இச் சமூகத்திற்கு கொடுத்த அன்பொழுகும் குடும்பம் அது. காந்தி நகரின் அவ்வையார் தெருவில் இருந்த என் அறையில்தான் எல்லாவித திட்டமிடலும் நடக்கும். பகுதியில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் இருவரும் ஒருங்கே அங்கு நின்றிடுவோம். மாறி மாறி குரலெடுத்து பேசுவோம் முழங்குவோம்.
சங்க தலைவன்.. வெற்றி மாறன் ...
குடி நீருக்கான போராட்டமாகட்டும், குடிமனைப் பட்டாவிற்கான போராட்டமாகட்டும் முன் வரிசையில் நின்று எத்தனை அதிகாரிகள், காவல் துறையினர் வந்தாலும் சவால் விட்டு நின்று சாமாளிப்பவன் அவன். சாதுர்யமான முடிவுகளை கண நேரத்தில் எடுக்கும் மிகச் சிறந்த ஆளுமையவன். பகுதியில் ரெளடிகளின் நில ஆக்கிரமிப்பு புதிய வடிவில் வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி நேர் கொள்ள வேண்டிய இருந்தது.. எதிர் கொண்டனர் மார்க்சிஸ்டுகள்.. இடையறாது எல்லத் தளங்களிலும் ரெளடிகளோடு மறைமுக நேரடியான மோதல்கள் தொடர்ந்தவண்ணமிருக்கிறது.. இடையே குடிமனைக்கான போராட்டமும். அரசியல் போராட்டங்களும் அனுதினமும்.. பகுதி முழுவதும் தோழர்களும் மக்களும் போராட்ட தீயோடேவே பொழுதைக் கழித்து வந்தார்கள். அந்த நெருப்பை அணையவிடாது காத்த எண்ணற்ற தோழர்களின் கரங்களில் பிரதானமானது  ப்ரதீப்குமாரின் சக்திமிக்க ஆளுமையின் இளைய வலுவான கரங்கள்.
சென்னை நகரின் பிற பகுதிகளை விட புற நகரில் இருக்கும் தரமணி பகுதி வேகமாகவே வளர்ச்சியின் பெயரால் பல மாற்றங்களை தினமும் சந்தித்து வந்தது,
கூடவே ரெளடிகளின் அத்துமீறலோடே குடியிருப்பு, குடிமனை விவகாரங்களில்..
ஏபரல் 18, 2002, மாலை 6 மணியளவில்
காத்திருந்த ரெளடிகள் ஒன்று சேர்ந்தனர், அந்தப் பகுதி மக்கள் திரள் வீடடங்கும் நேரமதில் தங்கள் அனைவரின் கைகளில் கொலைக் கத்திகளோடு, கூட்டம் ஒன்றிற்கு தனியாக தகவல் சொல்லச் சென்ற ப்ரதீப்குமார் வருகைக்காக.. வந்தான் ப்ரதீப்குமார், காத்திருந்த கொலைகாரர்களின் அத்தனை கத்திகளும்
ஒரே நேரத்தில் ப்ரதீப்குமாரின் முகத்திலும், வாயிலும், கழுத்திலும், மார்பிலும், வயிற்றிலும், குதிகால் நரம்பிலும் என
பல இடங்களில் வெட்டி எழும்பியது ரெளடிகளின் கரங்களுக்குள்.. கம்யூனிஸ்டுகளின் மீதிருந்த ஒட்டுமொத்த வெறியும் ப்ரதீப்குமார் மீது மொத்தமாக இறங்கியது குத்தீட்டிகளின் கூர்முனை வழியே.. ப்ரதீப்குமார் செத்து முடிந்ததை உறுதி செய்த ரெளடிகள் ரத்தம் ஒழுகும் கத்திகளோடு வாகனங்களில் தப்பி ஓடுகிறார்கள்..  சத்தம் கேட்டு வெளியே வந்த பொது மக்களின் பார்வையில் கிடந்ததென்னவோ
செத்துக் கிடந்த ப்ரதீப் குமாரின் உடல் மட்டுமே..
அன்று மாலை பத்திரிக்கை அனைத்திலும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர் ப்ரதீப்குமார் ரெளடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்பது செய்தியாகியது.. செய்தி அறிந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா நேரடியாக களத்திற்கு வருகிறார்.. மாநில செயற்குழு தோழர்கள் வருகிறார்கள்.. தரமணி பகுதி முழுதும் செங்கொடி வீரர்களின் முழக்கம் வானுயர எழுந்து நின்றது செங்கொடிகளில் கருப்பு துணியேந்தி.. வீதிகள் அனைத்தும் செங்கொடித் தோழர்களின் சாரை சாரையான அணிவகுப்பு, பகுதி மக்களின் அழுகையொலி.. தன் குடும்பத்தின் முதல் சாவை பார்த்த பொழுதாக எல்லோர் வீடுகளிலும் அன்று. மாநிலம் முழுதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு அது. என் அளவில் மிகப்பெரிய, எக்காலத்திலும் எவராலும் ஈடுசெய்திட முடியாத வாழ்வின் ஒரு அத்தியாயத்தை தொலைத்து, இழப்பை சந்தித்த நாள் அது.  அதன்பிறகு தோழர்களின் துணையோடு பல்வேறு அச்சுறுத்தலுக்கிடையே வழக்கை நடத்தி கொலையாளிகள் 8 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வாங்கித்தந்தார்கள் பகுதியில் இன்றும் இருக்கும் மார்க்சிஸ்டுகள்.. கம்யூனிஸ்டுகள்.
இதில் ப்ரதீப்குமாரின் இணையர் தோழர் சுசீலாவின் இடையறாத துடிப்பு மிக்க போராட்டம் எல்ல தளங்களில் இருந்தது; அது  மெச்சத்தக்க மதிப்பு மிக்கது. வணக்கத்திற்குறியது.
CPIM Tamilnadu on Twitter: "#NovemberRevolution100 நிறைவு ...
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன் உயிரையும் இம் மக்களின் மேம்பாட்டிற்காக கொடையாக்கி வருபவர்கள்தான் நிஜமான போராளிகள்.. அவர்கள் கம்யூனிஸ்டுகள். இன்று இவர்களுக்குள்தான் எத்தனை எத்தனை பிரிவுகள், குழுக்கள், போகும் வழி வேறென்றாலும் குறிக்கோள், இலட்சியம் ஒன்றுதானா.. கார்ப்பரேட்டும், பாசிசமும் சவால் விட்டு நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து ஒரே கையாக உயர்த்திட வேண்டி இருப்பதின் அவசியத்தை நாமே உணரத் தவறினால், எதிரில் இருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக சக்திகள் நம்மை அவர்களின் வளர்ச்சிக்கான கருவியாகத்தானே பார்ப்பார்கள்.. சவால் மிகுந்த நேரமிது. நம் ஒன்றுபட்ட செயல்பாட்டிற்கான கணமிது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். உணரத் தவறினால் எதிர்கால சந்ததியர்கள் நம்மை இகழ்ந்திட நாமே வழிவகுக்கிறோம்.. என்ன செய்யப் போகிறோம்.. உலக கம்யூனிஸ்டுகளே
சந்தித்திராத, தெரிந்தே மனித உழைப்பை வீணடித்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக் காலமிது.. மனித உழைப்பை வீணடிப்பதென்பது கொடுமையான சூழல் கம்யூனிஸ்ட்டுகளுக்கு.. எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்.. நிகழ்வோடு இணைந்த செயல்பாடே பரிசீலனைக்கு உதவும்.. செயல்பட்டிருக்கிறோமா..?
அவசியம் வாசியுங்ள்.. தறியுடன்.
உங்களுக்குள் நெருக்கமானவர்களை
நீங்கள் சந்தித்து இளைப்பாறலாம்..
பேசலாம்.. அழலாம்.. போராடலாம்.
நாவலை அரசியல் பொதுச் சமுகத்திற்கு
அளித்த ஆசிரியர் இரா.பாரதிநாதன்
அவர்களுக்கும்.. மிகச்சிறந்த முறையில்
வாசிப்பை வேகப்படுத்தும் விதத்தில் அச்சில் கொண்டுவந்த பொன்னுலகம்
பதிப்பகம் திருப்பூர் குணாவிற்கும்
அன்பும் வாழ்த்துக்களும்.. வணக்கங்களும்.
“பழைய சமுதாயத்தின் கருப்பைக்குள் அதற்கேத் தெரியாமல் புதிய சமுதாயம் கருக்கொண்டிருக்கிறது. அந்தக் கருவை சிதைக்க என்ன முயன்றாலும், எந்த ஆயுதத்தை உபயோகப்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் அந்தப் புரட்சிக் கரு உருவாகிக் கொண்டே இருக்கும்”.
தறியுடன்
இரா பாரதிநாதன்
பொன்னுலகம்பதிப்பகம்
Image may contain: 1 person
கருப்பு அன்பரசன்.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *