contemporary-tamil-collocations-dictionary-10004282-800x800
contemporary-tamil-collocations-dictionary-10004282-800x800

தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியைக் கொண்டாடும் தருணம் இது – வீ. அரசு.

மொழியின் வளம் என்பது, அம்மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். செம்மொழியான தமிழுக்கு ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த வரலாற்றை சுருக்கமாகக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம்.
கி.பி. 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை மொழியில் உள்ள சொற்கள் மற்றும் தொடர்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கும் மரபு உருவானது. இதனை நிகண்டு என்று அழைக்கிறாம்.
நமக்குப் பல்மொழிச் சூழல் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், அத்தன்மை குறித்த இலக்கண மரபு சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்தன. ஆனால் ஐரோப்பியர் வருகையோடுதான் இரு மொழிகள் சார்ந்த பொருள்களும் அகராதிகளும் ஒரே மொழியில் உள்ள சொற்களுக்கானப் பொருள்களும் அகராதிகள் ஆகியவை உருவாயின. இந்த வகையில் 1862இல் உருவான ஆங்கிலம் தமிழ், அகராதி மற்றும் தமிழ், ஆங்கில அகராதி முதன்மையாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனை உருவாகியவர் வின்சுலோ. இம்மரபு பின்னர் தொடர்ந்தது.
இருபாதாம் நூற்றாண்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியுற்றன. இந்நிறுவனங்கள் வழி அகராதிகள் உருவாக்கும் பணி உருவானது. பேராசிரியர் க.வையாபுரிப் பிள்ளை தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் லெக்கிகன் (1924_36) இவ்வகையில் முதன்மையானது.
மேற்குறித்த அகராதி உருவாக்க மரபுகள் என்பவை மொழியில் உள்ள சொற்கள் தொடர்பான தொகுதிகளாகவே அமைந்தன. அச்சொற்கள் குறித்த தமிழ், ஆங்கிலப் பொருள், பயின்றுவரும் இடம், இலக்கணக் குறிப்புகள் பழங்குமுறை ஆகிய பிறவற்றை முதன்மையாகக் கொண்டவை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில், இம்மரபின் தொடர்ச்சியாக அகராதிகள் உருவாக்கிய நான்கு நிறுவனங்கள் முக்கியமானவை.
வரலாற்றுமுறை இலக்கியப் பேரகராதி வைணவ உரைநடைச் சொற்கள் அகராதி, கல்வெட்டுச் சொற்கள் அகராதி ஆகியவற்றை உருவாக்கிய மர்ரே நிறுவனம்.
பேரா. வ.ஐ. சுப்பிரமணியம் அவர்களின் தொலைநோக்குப் பார்வை சார்ந்தது உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழக அகராதிகள்.
க்ரியா உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி.
‘மொழி’ நிறுவனம் உருவாக்கியுள்ள அகராதிகள் மற்றும் கையேடுகள்.
இவற்றில் இறுதியாக கூறப்பட்ட இரு நிறுவனங்களும் உருவாக்கியுள்ள அகராதிகள் என்பவை
முழுக்க முழுக்க இருபதாம் நூற்றாண்டில் தமிழில் புழக்கத்தில் உள்ள அல்லது தமிழில் புதிதாக பழைய புழங்கு சொற்களோடு புதிதாக உருவான பு-ழங்கு சொற¢களை கவனப்படுத்திய அகராதிகள் ஆகும். மொழி ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக 1990 களுக்குப் பிறகு உருவான தாராலமயம் எனும் பொருளாதார வாழ்முறை உருவாக்கும் பண்பாட்டு நிகழ்வுகள் பல்பரிமாணம் மிக்கவை. ஒலி, ஒளி, எழுத்து சார்ந்து ஊடகத்துறை பெற்றுள்ள அசுர வளர்ச்சி என்பது மொழியின் சொற்புழக்கத்தை பல்வேறு கோணங்களில் வளர்ச்சி பெறச் செய்துள்ளது. இவ்வாறு மொழியில் உருவாகும் சொற்களுக்கானப் பதிவுகள் என்பவை அகராதிகளாக வடிவம் பெறுவது அவசியமாகும்.
1928ஆம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் உருவாகும் மேற்குறித்தப் புதிய தன்மைகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சார்ந்த அகராதி உருவாக்கப்பணி ஆக்ஸ்போர்டு அகராதிகளாக பல்வேறு கோணங்களில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த தெண்ணூறு ஆண்டுகளில் ஆக்ஸ்போர்டு அகராதிகள் உருவாக்கம் என்பது, ஆங்கில மொழியின் அனைத்து வகையான புதிய புதிய வளர்ச்சிகளையும் பதிவு செய்து அகராதிகளாக உருவாக்குகிறார்கள். இவ்வகையான செயல்பாட்டை முன்னெடுக்கும் நோக்கத்தைத்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித் துறையை வ.ஐ. சுப்பிரமணியம் உருவாக்கினார். ஆனால் அது சில ஆண்டுகளுக்குப் பின்தங்கிவிட்டது. அரசு சார்ந்த நிறுவனங்களின் சீர்குலைவு என்பது தமிழ் சூழலில் பூதாகரமானது. எனவே வ.ஐ,.சுப்பிரமணியின் திட்டங்கள் கனவுகளாகவே தொடர்கின்றன. ஆனால், அவரிடம் பயிற்சி பெற்ற, அவரது முதன்மையான மாணவர்களில் ஒருவரான பேரா. பா.ரா. சுப்பிரமணியம் அப்பணிகளைத் தொடர்கிறார். க்ரியா உருவாக்கிய தற்காலம் தமிழ் அகராதி உருவாக்கத்தில் பா.ரா. சுப்பிரமணியம் அவர்களுக்கு குறிப்பிடத் தக்க இடமுண்டு. பின்னர் அவரது தலைமையில் செயல்படும் ‘மொழி’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள அகராதிகள் மற்றும் கையேடுகள் இருபதாம் நூற்றாண்டின் புதிய கூறுகளைப் பதிவு செய்வன ஆகும். இத்தன்மை குறித்து பேரா. பா.ரா. சுப்பிரமணியின் தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியின் (1997) அறிமுகப் பகுதியில் பதிவு செய்துள்ள செய்திகள் வலுப்படுத்துவதாக அமைகின்றன.
‘‘1992ஆம் ஆண்டு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ், தமிழ் ஆங்கிலம்), வெளிவந்தது. அந்த அகராதியின் தரவு மூலம் தற்காலத் தமிழ் உரை நடை. அதில் அடங்கியுள்ள 15.875 சொற்களும் தற்காலத் தமிழில் வழங்குபவை. தற்காலத் தமிழின் பொதுத் தரமான உரைநடையில் நிலைபெற்று வழங்கும் சொற்களைக் கொண்டதால் அது ஒரு பொது அகராதி.
அந்த அகராதியின் தொடர்ச்சியாகவே மொழி அறக்கட்டளை இப்போது மரபுத் தொடர் அகராதியை வெளியிடுகிறது. இதன் தரவு மூலமும் தற்காலத் தமிழே. தற்காலத் தமிழ் அகராதியில் முக்கியப் பங்காற்றிய ஆசிரியர்குழுவே இந்த மரபுத் தொடர் அகராத¤யையும் உருவாக்கியிருப்பது அகராதித் தொகுப்புக் கொள்கையில் தொடர்ச்சியைத் தருகிறது. தற்கால தமிழ் அகராதிக்கு உதவிய தரவு மூலங்களோடு அதிகப் படியாகச் சேர்க்கப்பட்ட தரவு மூலங்களையும் பயன்படுத்தித் தற்காலத் தமிழில் உள்ள மரபுத் தொடர்களைத் தேர்ந்தெடுத்த மரபுத் தொடர்களை மட்டும் கொண்டிருப்பதால் இது ஒரு சிறப்பு அகராதி.
பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் முன்னெடுப்பில் உருவான தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியின் அடுத்த கட்ட செயல்பாடுதான். தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி. (2016) இவ்வகராதி பற்றி பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் விளக்கத்தை தருகிறேன்.
‘‘சொற்களுக்குப் பொருள்தரும் வழக்கமான நடைமுறையிலிருந்து இந்த அகராதி வேறுபடுகிறது. சொற்களைத் தனித்தனியாக பார்க்காமல். அவற்றின் பொருளுக்குத் தக்கவாறு உறவுகொள்ளும் பிற சொற்களோடு காணும் வசதியை இந்த அகராதி தருகிறது. ஒரு சொல்லின் பொருளும் பயன்பாடும் அது பிறசொற்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டுறவிலிருந்து தெளிவாவது போன்று அதன் தனிநிலையில் வெளியாவதில்லை. இது ஒரு பயன் என்றால் மற்றொரு பயன் மொழியின் இயல்பான ஓட்டத்திற்கு தடங்கல் இல்லாத ஆற்றொழுக்கான நடைக்கு இந்தச் சொற்கட்டுகள்தான் அடிப்படை ஆகின்றன. மொழியில் செயற்கைத் தன்மை, ஏற்படாமல் இருப்பதற்கு இத்தகைய இயல்பான மரபான சொற்சேர்க்கைகள் காரணம் ஆகின்றன. (முன்னுரை)
தமிழில் இருபதாம் நூற்றாண்டில் வழக்கில் இருக்கும் சொற்சேர்க்கைகள் குறித்த இந்த அகராதி முன்னர் உருவாக்கப்பட்ட மரபுத் தொடர்கள் குறித்த அகராதியின் பிற¤தொரு வகையாக அமைகிறது. இந்த அகராதி யாருக்கானது? இந்த அகராதி மூலம் தமிழ் சமூகம் பெறப்போவது என்ன? போன்ற கேள்விகளை எழுப்ப நமக்கு உரிமை உண்டு., இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முன், தமிழ்ச்சூழலில் அகராதியைப் பயன்படுத்தும் தன்மைகள் எவ்விதம் உள்ளது என்பது பற்றியும் அந்தப் பின்புலத்தில் இந்த அகராதியின் முக்கியத்துவம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் நாம் பேசலாம்.
பேராசிரியர். கா.சிவத்தம்பி அவர்களிடம் இருந்த பழக்கம் ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். தமக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அகராதியைப் புரட்டிக் கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கின்றேன். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை அவர் அவ்விதம் புரட்டிக் கொண்டிருப்பார். புதிது புதிதாக அந்த அகராதியின் பதிப்புகள் வந்தால் புதிதாக வந்த பதிவினை உடனடியாக வாங்கிவிடுவார். சொற்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது முன்னர் வந்த பதிப்பிலிருந்து அடுத்த பதிப்பில் சொற்கள் எவ்வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதைக் கவனிப்பார். இப்பழக்கத்தின் மூலம் தாம் கட்டுரைகளை எழுதும்போது ஆங்கிலத்தில் சிந்திக்கும் சொற்களைத் தமிழில் எழுதுவதற்கு மேற்குறித்தவாறு அகராதியில் உள்ள சொற்களின் பல வடிவங்களை ஒருங்கிணைந்து வேர்ச் சொற்கள் சார்ந்து முன்னெட்டு அல்லது பின்னொட்டுக்களை இணைத்து புதிய கலைச் சொற்களை உருவாக்கி எழுதுவார். இம்மரபை பேரா. க. கைமொழியும் கைக் கொண்டிருப்பதைக் காணமுடியும். இவ்விருவர் புதிதாக உருவாக்கியுள்ள கலைச் சொற்கள் குறித்த கல்வியில் நிறைஞர் (எம்.ஃபில்) ஆய்வேடு ஒன்றை உருவாக்கினோம். இச்சொற்கள் உருவாக்குவதற்கு அகராதியை இப்பெருமக்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை அறிய முடிகிறது. பேரா. கா. சிவத்தம்பி அவ்வாறு உருவாக்கும் தருணங்களில் அவரோடு உரையாடும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்தது. மொழிப் பயன்படுத்துதலில் அகராதிகளின் பங்களிப்பு என்பதை இவ்வகையில் புரிந்து கொள்ள வேண்டும். இம்மரபில் தமிழ்நாட்டில் செயல்பட்ட பேராசிரியர்களில் ந.சஞ்சீவி அவர்களுக்கு தனி இடமுண்டு. இவரும் நிறைய புதிய கலைக் சொற்களை தமது கட்டுரைகளில் கவனப்படுத்துவார். அவரே உருவாக்கிய சொற்கள் அவை. பேரா. ந.சஞ்சீவி அவர்களும் அகராதிகளை தொடர்ந்து புரட்டிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அகராத¤ப் பயன்படுத்தும் கலையை அறிஞர்கள் பயன்படுத்தும் முறையிலிருந்து வெகுசனமக்கள் பயன்படுத்தும் முறை வேறுபட்டது. பெரும்பகுதி சொற்பொருளுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். பல்கலைக் கழகம் சிதம்பரநாதன் செட்டியார் அகராதி இந்த வகையில் மிகப் பரவலான புழக்கத்தில் உள்ளதை காணமுடியும். பொருள் விளக்கம் பார்ப்பதற்கு மட்டும் என்னும் பார்வையிலிருந்து தமது எழுத்து மொழியில் வளமான மரபை உருவாக்கிக் கொள்ள வேறுவகை அகராதிகள் உதவுகின்றன. அந்த வகையில் அகராதிகள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த சொற்சேர்க்கை அகராதி முக்கியமானது. இந்த அகராதி வெகுசனங்கள் நம்பும் பொருள் தரும் அகராதியாக மட்டும் அமையாது, ஒரு சொல், மொழியில் எவ்வாறெல்லாம் இணைந்து இணைந்து செயல்படுகிறது. அவ்விதம் செயல்படும்போது மொழியின் அழகு எவ்வாறு கூடுகிறது. மொழியின் வளத்தை நாம் எவ்வாறு அனுபவிக்க முடியும் என்ற பல சிந்தனை மரபுகள் இவ்வகராதி சார்ந்து நாம் கூற முடியும்.
இவ்வகராதியின் பின்னிலையில் கண்டுள்ளபடி இவ்வகராதியின் பயன்படுத்தம் குறித்த இரு அடிப்படையான செய்திகள் மிகவும் முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன்.
மொழி பெயர்ப்பாளர்களுக்கு இவ்வகராதி உதவும் முறைமை.
தமிழ் கற்போர், கற்பிப்போர் ஆகியவர்களுக்கு இவ்வகராதி தரும் பயன்.
இப்போது இவ்வகராதி மேற்குறித்த நோக்கத்தில் யாருக்கு எப்படிப் பயன்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியானால் இவ்வகையில் துறைசார்ந்தவர்களுக்கு மட்டுமே இவ்வகராதி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூற முடியாது. அவர்களுக்கு கூடுதலாக இது உதவும். ஆனால் பின் அட்டையில் குறித்த வேறு சில செய்திகளும் முக்கியமானவை. இவ்வகராதி மொழியை எழுதும் யாருக்கும் மொழியில் உள்ள சொற்சேர்க்கை எப்படி அமைய வேண்டும் எவ்வாறெல்லாம் அமைந்தால் எப்படியான பொருளை தரும் என்ற விளக்கத்தையும் தருகிறது. அந்த வகையில் மொழியை எழுதும் அனைவருக்கும் இவ்வகராதி பயன்படும். குறிப்பாக ஆய்வு செய்து கட்டுரை எழுதுவோர், புதிய வகையான புனைகதைகளை உருவாக்கும் எழுத்தாளர்கள் ஆகியோர் இவ்வகராதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆக இவ்வகராதி யாருக்கானது எப்படி பயன் கொள்ள முடியும் என்பதை தெளிவுப்படுத்திக் கொண்டோம்.
தமிழ்ச் சூழலில் அகராதி வாங்கும் பழக்கம் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. படிக்கும் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் அகராதி வாங்கிக் கொடுக்கிறார்கள். மாணவர்கள் ஆங்கில அகராதிகளை வாங்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். இதனால் அனைத்துப் பதிப்பகங்களும் ஏதேனும் ஒரு அகராதியை வெளியிடுவதைப் பார்க்கிறோம். இந்த வகையில் மொழி நிறுவனம் உருவாக்கிய அகராதியை ‘பாரதி புத்தகாலயம்‘ வெளியிட்டுள்ளது. பதிப்பகங்கள் பெரும்பாலும் தமிழ், ஆங்கிலம் என்னும் பொருள் பார¢க்கும் அகராதிகளையே வெளியிடும்.
தமிழ்ச் சூழலில் வேறுபட்ட அகராதியை வெளியிடும் ஓரிரு பதிப்பகங்களில் பாரதி புத்தகாலயம் இணைந்து கொண்டுள்ளது. அடையாளம் பதிப்பகம் மொழியின் அகராதி மற்றும் கையேடுகளை மறுவெளியீடு செய்யும் பணியைச் செய்து வருகிறது. பாரதி புத்தகாலயம் வணிக நோக்கமின்றி மிகச் சிரத்தையுடன் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளதை வெகுவாகப் பாராட்டும் கடமையும், அந்த அகராதியை வாய்ப்பு நேரும்போதெல்லாம் அறிமுகப்படுத்தி பரவலாகக் கொண்டு செல்லும் கடமையும் நமக்கிருக்கிறது. இந்த நோக்கத்தில் இவ்வகராதி குறித்த அறிமுகத்தைப் பதிவு செய்துள்ளேன். அகராதி உள் அமைப்பு சார்ந்த தொழில்நுட்ப உரையாடல்களை மேற்கொள்ளுவதற்கான பயிற்சி எனக்கு இல்லை. எனவே புதிதாக வந்துள்ள அகராதியை ஒரு வெகுசன வாசிப்பாளனாக நின்று அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளேன். தமிழில் செயல்படும் ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் மொழி ஈடுபாடு அனைத்து தரப்பினர் மொழி பெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள் இவ்வகராதியை வாங்கிப் பயன்கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன். இதனை உருவாக்கிய மொழி நிறுவனம் குறிப்பாக பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் இதனை வெளியிட்ட பாரதி புத்தகாலயம் குறிப்பாக நாகராசன் அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டும் ….

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *