அயர்ஸ் பாறை (Ayers Rock)
– ஏற்காடு இளங்கோ
உலகத்திலேயே மிகப் பெரிய பாறை ஒன்று ஆஸ்திரேலியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய இயற்கை அடையாளங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலா தலமாக விளங்குகின்றது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் வில்லியம் கோர்ஸ் என்பவர் 1873 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று இங்கு சென்றார். இந்தப் பாறையின் பிரமாண்டத்தைக் கண்டு வியந்தார். அப்போது தென் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயலாளராக சர் ஹென்றி அயர்ஸ் (Henry Ayers) என்பவர் இருந்தார். அவரைக் கௌரவிக்கும் வகையில் இந்தக் குன்றுக்கு அயர்ஸ் பாறை (Ayers Rock) எனப் பெயர் சூட்டினார். இதன் பிறகே இது வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது.
ஏற்கனவே இங்கு வாழும் பழங்குடி மக்கள், இந்தப் பாறையை உலுரு (Uluru) என அழைத்து வந்தனர். 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 15 இல் இது அயர்ஸ் ராக்/ உலுரு என இரட்டைப் பெயரிடப்பட்டது. அதன் பிறகு இரட்டைப் பெயர்களின் வரிசையில் அதிகாரப் பூர்வமாக “உலுரு/அயர்ஸ் ராக்” என 2002 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று மாற்றப்பட்டது.
இது ஒரு மணற்கல் பாறையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,831அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாறை 1,142 அடி உயரமும், 3.6 கிலோ மீட்டர் நீளமும், 1.9 கிலோமீட்டர் அகலமும், 3.33 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. இது 9.4 கிலோமீட்டர் சுற்றளவுக் கொண்டது. இதன் பெரும் பகுதி நிலத்தடியில் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது. தரைக்கு மேலே உள்ள இந்தப் பாறையின் எடை சுமார் 1,425,000,000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாறையில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது. ஆகவே சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. குறிப்பாக சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது சிவப்பு நிறத்தில் ஒளிரும். மேலும் சூரியனின் வெப்பநிலைக்கு ஏற்ப மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என நிறம் மாறிக் கொண்டே இருக்கும். ஆகவே இது பச்சோந்திக் குன்று எனவும் அழைக்கப்படுகிறது. பாறையைச் சுற்றி ஏராளமான நீரூற்றுகள், நீர் நிலைகள், பாறை குகைகள் மற்றும் பாறை ஓவியங்களும் உள்ளன.
கட்டுரையாளர் :
ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.