நீங்கள் தமுஎகச-வில் இணைந்த கதையைச் சொல்லுங்கள்

மதுக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1970-களில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்றதுண்டு. அந்தச் சிற்றூரில் அமைந்திருந்த அரசு நூலகம் வாசிப்பு வாசலைத் திறந்துவிட்டது. அந்த ஊரில் நடைபெறும் கோவில் விழாக்கள் மற்றும் மீலாது விழாக்கள் இலக்கிய விழாக்களாகவே நடைபெறும். என்னுடைய தந்தை மு.சந்திரன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வராதவர். இயல்பாகவே எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பமாக இருந்தது. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசில் மாணவர் பருவத்தில் எனக்கும் ஈடுபாடு இருந்தது. இந்தப் பின்னணியில் தான் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை பொருளாதார வகுப்பில் சேர்ந்தேன். அப்போது ஜனதா கட்சி உருவாகியிருந்த பின்னணியில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாணவர் ஜனதா மாவட்டச் செயலாளராக இருந்தேன். அப்போது காங்கிரசில் பிரபல பேச்சாளர்களாக இருந்த நெல்லைஜெபமணி, கோ.கலிவரதன், தமிழருவி மணியன், தஞ்சை இளஞ்சிங்கம் ஆகியோரடு சேர்ந்து மேடையைச் சுற்றி வந்திருக்கிறேன்.

மறுபுறத்தில் புதுக்கவிதை பேரலையாக எழுந்திருந்த காலம். அநேகமாக கல்லூரி மாணவர்கள் அனைவருமே கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படித்தான் நானும்.

பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் கவியரசர் கண்ணதாசன் மறைவையொட்டி நடைபெற்ற இரங்கல் கவியரங்கில் என்னையும் போட்டுவிட்டார் எனது பேராசிரியர் சோ.சிங்காரவேலன். நான் பதறிப்போய் அவரிடம் சென்று எனக்குக் கவிதை எழுத வராதே என்றேன். அவர் தான் “எழுதிப் பார் வரும்” என்றார். அப்படி எழுதப்பட்ட கவிதையை இரங்கல் கூட்டத்தில் வாசித்தேன். அதன்பிறகு தொடர்ந்து கல்லூரி விடுதி அறிவிப்புப் பலகையில் தினமும் ஒரு கவிதைதைய எழுதிப்போடுவேன். கைகழுவும் இடத்தில் இருந்த அந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்ட கவிதைகளை மாணவர்கள் படித்துவிட்டு கைகழுவிவிட்டுப் போவார்கள்.இவற்றைப் படித்த சில நண்பர்கள் “நீ ஏன் புத்தகம் போடக்கூடாது” என ஏற்றி விட்டனர். அதை நானும் சீரியசாக எடுத்துக்கொண்டு புள்ளியில்லா கோலங்கள் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுத்தேன். மயிலாடுதுறைக்கு வேறு வேலையாக வந்த கவிஞர் வைரமுத்துவை மடக்கி முன்னுரையும் வாங்கிவிட்டோம். கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் அந்த நூலை வெளியிட்டார். கல்லூரி நிர்வாகமே செலவை ஏற்றுக்கொண்டது. மெஸ் பில்லுடன் கவிதை நூலுக்கான ரூ.500-ஐயும் சேர்த்துவிட்டது தனிக்கதை.

அடுத்து அதே கல்லூரியில் முதுகலை படிக்கும்போது காய்க்கத் தெரியாத காகிதப்பூக்கள் என்ற நூலை வெளியிட்டேன். விடுதியில் இருந்ததால் சந்தைப்படுத்துதல் கடினமாக இல்லை. இதன்பிறகு பொருளாதாரத்தில் எம்.பில்,. ஆய்வுப்படிப்பிற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கு மார்க்சிய பொருளாதார அறிவியர் வெ.ப.ஆத்ரேயா பணியாற்றினார். அப்போது நான் கையில் ஏர்-உழவன் சின்னம் பொறித்த மோதிரம் அணிந்துகொண்டிருப்பேன்.

அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மார்க்சிய இயக்கத்திற்குள் கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் தான் என்னை முதன்முதலில் கட்சிக் கிளையில் சேர்த்தார். துவக்கத்தில் அவரது வீட்டில் தான் கட்சிக் கிளைக் கூட்டங்கள் நடைபெறும். அவர் வீட்டில் கிடைக்கும் தேநீரின் ருசி இன்னமும் நாவில் மிச்சமிருக்கிறது. என்னிடம் இருக்கும் அரசியல் ஆர்வத்தை அறிந்து வகுப்பு முடிந்தவுடன் அழைத்து தொடர்ந்து பேசுவார். அவர் என்னிடம் முதன் முதலில் படிக்கக் கொடுத்த நூல் தோழர் கு.சி.பா எழுதிய “சங்கம்” நாவல். அதைத் தொடர்ந்து பல புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

ஒரு நாள் தமுஎச திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த முகிலிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தினார். தோழர் நந்தலாலாவும் அப்போது திருச்சியில் தான் இருந்தார். முகில், நந்தலாலா, புதிய கம்பன், அக்னிக்குஞ்சு உள்ளிட்டவர்கள் இணைந்து சோலைக்குயில்கள் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் திருச்சி மலைக்கோட்டை அருகிலுள்ள இப்ராஹிம் பூங்காவில் கவிதை வாசிப்பு நடத்துவார்கள். மனுஷ்யபுத்திரன். பிச்சினிகாரி இளங்கோ, பொன்னிதாசன், இரா.எட்வின் ஆகியோர் வந்து கவிதை படிப்பார்கள். அவற்றைத் தொகுத்து சிறுநூலாக வெளியிடுவார்க்ள். இவ்வாறாக தேசியநீரோட்டத்திலிருந்து விலகி தமுஎச-வால் ஈர்க்கப்பட்டேன். அப்போது தமுஎக திருச்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது. தோழர்கள் மேலாண்மை பொன்னுச்சாமியும், ச.தமிழ்ச்செல்வனும் பேச வந்திருந்தார்கள். அதுவரை கேட்ட பேச்சுக்களிலிருந்து அது வித்தியாசமாக இருந்தது. தோழர் தமிழ்ச்செல்வன் ” வெயிலொடு போயி சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். அந்த அட்டை இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறது. அதே ஆண்டு திருச்சியில் தமுஎச மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு தான் நான் மட்டுமல்ல, தோழர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்ற முதல் மாநில மாநாடு. கே.முத்தையா, அருணன், கந்தர்வன், ச.செந்தில்நாதன் உள்ளிட்ட பல தலைவர்களை அப்போதுதான் பார்த்தேன். திருச்சி தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாடு அது.

பலரும் திருச்சியில் திருப்புமுனை மாநாடு என்பார்கள். என்னைப் பொருத்தவரை தமுஎச மாநாடு தான் உண்மையில் திருப்புமுனையாக அமைந்தது. திருச்சியில் படிப்பை முடித்த பிறகு தஞ்சையில் தமுஎச-வுடன் பயணம் தொடர்ந்தது. தோழர்கள் கோ.பாரதிமோகன், ச.ஜீவபாரதி, வல்லம் தாஜ்பால், ஆர்.தாமோதரன், நாகை.மாலி, ரகுபதி, புலவர் சௌ.ராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றுபட்ட பல ஆளுமைகள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டக்குழுவில் இருந்தார்கள். தஞ்சை மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிந்த பிறகு தஞ்சை மாவட்ட தமுஎச தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்.ஆண்டுதோறும் பட்டுக்கோட்டையில் நடைபெறும் மக்கள் கவிஞர் விழா என்னை வளர்த்துக்கொள்ளவும் அமைப்பிற்குள் பணியாற்றவும் பெரும் உதவியாக இருந்தது.தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை கலைப் பயணத்தில் ஒரு கலைஞனாகப் பங்கேற்றேன். பிரளயன் தான் கலைக்குழுவின் தலைவர். போப்பு, ஷாஜகான், ந.முத்துநிலவன் உள்ளிட்ட தோழர்களும் அந்தக்குழுவில் இருந்தனர். அது ஒரு நல்ல அனுபவம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்த பிறகு மதுரை மாவட்ட தமுஎச-வோடு தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம் கிளையின் சார்பில் இயங்கிய வேடந்தாங்கல் என்னையும் இணைத்துக்கொண்டது. தோழர்கள் சு.வெங்கடேசன், வெண்புறா, சோழ.நாகராஜன் ஆகியோர் ஒரு கூட்டுப் பறவைகள்

தோழர் கே.முத்தையாவுடனான உறவும்-தோழமையும் பற்றி…

மதுரை பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்த போது தோழர் கோ.வீரய்யன், கே.எம்.அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். தீக்கதிர் அலுவலகத்திற்கு அந்தக் கடிதத்துடன் வந்து அவரைச் சந்தித்தபோது “வாங்க.. வாங்க…” என்று வரவேற்றார். பல்கலைக்கழகப் பணி முடிந்தவுடன் தினமும் மாலையில் தீக்கதிர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்றார். தோழர் குமரேசன் முதலில் ஒரு செய்தியைக் கொடுத்து எழுதச் சொன்னார். அடுத்த நாள் தீக்கதிரில் அது வெளியாக, பித்துப் பிடித்துவிட்டது. அடுத்து தோழர் அருணனிடம் கே.எம்.ஆற்றுப்படுத்தினார். எழுத்தின் நுட்பங்களை அவர்தான் முழுமையாக சொல்லிக்கொடுத்தார். ஒரு நிலையில் “பல்கலைக்கழகப் பணியை விட்டுவிட்டு முழுநேரப் பணியாக தீக்கதிருக்கு வந்துவிடு.” என்றார் தோழர் கே.எம். நிறைய தயக்கம் இருந்தது. இடையில் இரண்டு கல்லூரிகளில் கிடைத்த பேராசிரியர் பணிக்கும் செல்லவில்லை. தோழர் நல்லசிவன் அழைத்துப் பேசி “நீ தீக்கதிரில் தான் பணியாற்ற வேண்டும்” என்று கூறியதை மறுக்கமுடியவில்லை.

தோழர் கே.முத்தையா தீக்கதிர் அலுவலகத்திலேயே தங்கியிருப்பார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது. அவர் மேற்கொண்டிருந்தது ஒரு துறவு வாழ்க்கை. காலையில் இருவரும் சேர்ந்து டீ போட்டுக் குடிப்போம். நானும் அலுவலகத்தில்தான் தங்கியிருந்தேன். எப்போதும் அவருடனே இருக்கும் அரிய வாய்ப்பு அது. “இவன் என் மகன்” என்றுகூட சிலரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரிடம் கற்றுக்கொண்டது, பெற்றுக்கொண்டது ஏராளம். அவர் தான் பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார். என் திருமணத்தை முடிப்பதற்காக இரண்டொரு முறை மதுக்கூரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமும் பேசிவிட்டார். இவர் தான் ஏதோ மந்திரப்பொடி போட்டு என் மகனை வழி மாற்றி அழைத்துக்கொண்டு போய்விட்டார் என்று என் அம்மா உறவினர்களிடம் சொல்லியது முன்னுக்கு வருகிறது. தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தை என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு போன்ற தலைவர்கள் தான் நடத்தி வைத்தனர். கோ.வீரய்யன் உட்பட மாவட்டத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டுவந்து நடத்தி வைத்த திருமணம் அது. கே.எம். கூறியபடி ஒவ்வொரு கமிட்டியும் ஆளுக்கொரு பொருளாக வாங்கிக் கொண்டுவந்து கொடுத்ததை மறக்க முடியாது. திருமணத்தின் போது குடும்பம் தொடங்குவதற்கான பண்ட பாத்திரங்களை வாங்கிக் கொடுத்தார். அவர் சென்னைக்குச் செல்லும் வரை நிழல் போல அவரையே பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர் செல்லும் கூட்டங்களுக்கு என்னையும் அழைத்துச் சென்று அவர் பேசுவதற்கு முன் என்னைப் பேசவைத்து ரசிப்பார். எழுதுவதைச் செப்பம் செய்து கொடுப்பார். பல கட்டுரைகளை அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

தோழர் பி.ராமமூர்த்தி இறந்தபோது நான் எழுதிய ஒரு கவிதையை செல்லுமிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் ஏதாவது மேன்மை இருந்தால் அதற்கு அவரே பொறுப்பு. அவர் ஒரு ஞானத்தந்தை.

அன்றைய தமுஎச-விற்கும் இன்றைய தமுஎச-விற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்… வளர்ச்சி குறித்து குறிப்பாக சிலவற்றை சொல்ல முடியுமா?

செம்மலர் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட தமுஎச அடிப்படையில் ஒரு எழுத்தாளர் அமைப்பாகவே தொடக்கத்தில் இருந்தது. இலக்கியம் படைப்பதே பிரதான பணியாக இருந்தது. பிற்போக்கு இலக்கியங்களுக்கு எதிராக கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவசரநிலைக் காலத்தில் உருவான இந்த அமைப்பு கருத்துரிமைக்கான போரில் எப்போதும் முன்நின்றுவந்துள்ளது. தோழர் எஸ்.ஏ.பி. போன்றவர்களின் முயற்சியால் நிறைய கலைஞர்கள் இந்த அமைப்பால் ஈர்க்கப்பட்டார்கள். தமிழ் இலக்கிய உலகில் தமுஎச தலைவர்கள் நடத்தி வந்துள்ள விவாதங்களை தொகுத்தால் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அது அமையும்.பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் திருவண்ணாமலையில் தொடங்கி திருப்பரங்குன்றத்தில் பறந்து தமிழகம் முழுவதும் ஒளிர்ந்த கலை இரவுகள் தமுஎச-வை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றது.

கலை இரவு மேடையால் அடையாளம் காடடப்பட்ட பேச்சாளர்கள், கலைஞர்கள் ஆயிரம் ஆயிரம். கலை இரவு பார்த்துதான் திரைத்துறைக்குச் சென்றேன் என்று கூறும் கலைஞர்கள் ஏராளம். மறுபுறத்தில் நாவல், சிறுகதை, நாடகம், இசைப்பாடல்கள் எனஆண்டுதோறும் ஏராளமான பயிற்சி முகாம்கள்.தொடக்கத்திலிருந்தே கலைஞர்கள் இந்த அமைப்பில் இருந்தாலும் பெயரிலும் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக தமுஎச தமுஎகச-ஆக மாறியது. பண்பாட்டுப் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து முகம் கொடுத்து வந்தாலும் திருவண்ணாமலை மாநாடு ஒரு பெரும் பாய்ச்சலாக மாறி இது தற்போது கலை-இலக்கிய-பண்பாட்டு பேரமைப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது பயற்சிமுகாம்கள் நடத்திவந்த நிலையில், நிரந்தர திரைப்படப் பள்ளி, நாடகப் பள்ளி என கலை-இலக்கிய-பண்பாட்டு நிறுவனமாக தற்போத நிமிர்ந்து நிற்கிறது தமுஎகச.

முப்பெரும் ஆளுமைகளான பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையாரை இத்தனை காலம் முன்னோடிகளாகக் கொண்டிருந்த தமுஎகச ஐம்பெரும் ஆளுமைகளாக கவிஞர் தமிழ் ஒளியையும் பால சரஸ்வதியையும் இணைத்தது ஏன்?

பாரதியின் தேசியம், விடுதலை உணர்வு, பாவேந்தரின் பகுத்தறிவு, பட்டுக்கோட்டையாரின் பொதுவுடைமை என மூன்று தத்துவப் போக்குகளையும் ஒன்றிணைத்தே முப்பெரும் ஆளுமைகளைத் தேர்வு செய்தனர் எம் முன்னோடிகள். அவர்களது நிர்ணயிப்பு மிகச்சரியானது.எனினும் வளர்ச்சிப்போக்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. கவிஞர் தமிழ்ஒளியை எப்போதும் போற்றிக் கொண்டாடியே வந்துள்ளது. முற்போக்கு தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. பாரதியின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் அவர். சிங்காரவேலர் மே தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினார் என்றால் மேதினத்தை முதன்முதலில் பாடியவர் தமிழ்ஒளி. நிலைபெற்றசிலை, ஈராயி, மே தின ரோஜா போன்ற அவரது காவியங்கள் நிகரற்றவை. பொதுவுடைமைக் கொள்கையைப் பாடியதோடு இந்தியாவிற்கே உரிய சாதிச் சிக்கல்களை சரியாகப் புரிந்து கொண்டு அதையும் தமது படைப்புகளில் கொண்டு வந்தவர். எனவே அவரையும் தமுஎகச ஆளுமைகளில் இணைக்க வேண்டுமென்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது.

தஞ்சாவூர் பாலசரஸ்வதி தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இழிவு செய்யப்பட்ட பரதக்கலைக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தவர். உலகளவிலான பல்கலைக் கழகங்களில் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்தவர். சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர். கலையைப் போற்றும் தமுஎச அவரையும் தன்னுடைய ஆளுமைகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஐம்பெரும் ஆளுமைகள் பல்வேறு தத்துவ போக்குகளை, கலை-இலக்கிய வடிவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளனர். காலப்போக்கில் கள மாற்றத்தில் நிகழ்ந்துள்ள இயல்பானதொரு மாற்றம் இது.

கலை-இலக்கிய அமைப்பாகத் தொடங்கப்பட்ட தமுஎச இன்று பண்பாட்டு அமைப்பு போல செயல்படத் தொடங்கியிருப்பது தற்செயலானதா? திட்டமிட்டதா?

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அது ஒரு பண்பாட்டு அமைப்பாக செயல்பட்டதாகும். தீபாவளிக்கு மாற்றாக பொங்கல் விழாவை முன்னிறுத்தியது பெரும் பாய்ச்சலாகும். பழமையில் வேரூன்றி இருந்த பண்பாட்டை அவ்வியக்கம் பல வகையில் அசைத்தது. இன்றைக்கு சனாதனவாதிகள் பண்பாடு என்ற பெயரிலேயே பழமையை, அழுக்கைத் தக்க வைக்க முயல்கிறார்கள். இதற்கெதிரான உழைக்கும் மக்கள் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை தமுஎகச உணரந்தது. நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் கூட நிறைய பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. ஆண்களும் சமைக்க வேண்டும். குடும்ப வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கிய தமுஎகச வாழ்வியல் நிகழ்வுகளில் மட்டுமல்ல, இறப்பு நிகழ்ச்சியிலும் கூட முற்போக்கு விழுமியங்கள் உயிர்த்திருக்க வேண்டுமென தற்போது பேசத் தொடங்கியுள்ளது. சடங்குகளை மறுத்து உடல் தானம் செய்வதற்கான படிவங்கள் பரபரப்பாக விநியோகிக்கப் படுகின்றன. காலத்தின் இன்றைய தேவைக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் பண்பாட்டு வேர்களை விசாரிக்க வேண்டியது அவசியம். காலத்தின் தேவையை உணர்ந்து கொண்டதால் நிகழ்ந்துள்ள இயல்பான மாற்றம் இது.

பிற கலை-இலக்கிய அமைப்புகளிடமிருந்து தமுஎகசவை வேறுபடுத்திக்காட்டும் சிறப்பம்சம் எவை எனக்கூறுவீர்களா?

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான கலை-இலக்கிய அமைப்புகள் இயங்குகின்றன. ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் ஒத்திசைவாக இயங்க ஒரு போதும் தவறியதில்லை. பல்வேறு அமைப்புகளோடு இணைந்து இயங்கி வருகிறது.இங்கு தனிநபர்கள் முன்னிறுத்தப்படுவதில்லை. தத்துவம் தான் இந்த அமைப்பை வழி நடத்துகிறது. கால மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வது இந்த அமைப்பின் பெரும் சிறப்பு.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமின்றி ஆர்வலர்கள், ரசிகர்களையும் தமுஎகச உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வது ஏன்?

ரசிகன் இல்லாத கலையும், அழகும் பெருமை கொள்ளாது என்பார் கண்ணதாசன். மரத்தில் பழம் பழுத்து தொங்குவதும் கலை என்பார் பட்டுக்கோட்டையார். படைப்பாளிகள் எந்தளவிற்கு முக்கியமானவர்களோ. அந்தளவிற்கு முக்கியமானவர்கள் வாசகர்கள். அவர்களை ஒரு படி மேலானவர்கள். அதே போல கலை-இலக்கிய ஆர்வலர்களும் இந்த அமைப்பின் வேர்களாக விளங்குகின்றனர். தமுஎகச திரைப்பட உருவாக்க முகாம்களை மட்டுமல்ல, திரைப்பட ரசனை முகாம்களையும் நடத்தியுள்ளது. தேரில் இருக்கிற சிலைகள் மட்டுமல்ல. தேரை இழுத்துச் செல்கிற கரங்களும் முக்கியமானவை. ஆர்வலர்கள், ரசிகர்கள், வாசகர்கள் என எல்லோரையும் இணைத்துச் செல்வதால் தான் இந்த அமைப்பு சில நூறு பேரைக் கொண்டதாக மட்டுமின்றி பல ஆயிரம் பேரைக் கொண்ட பேரமைப்பாகவும் பயணிக்கிறது. இது தொடரும்.

தமுஎகச-வின் எதிர்காலம் குறித்து தங்களுக்குள்ள கனவு பற்றி…

தமிழகத்தில் தற்போதுள்ள கலை-இலக்கிய அமைப்புகளிலேயே அளவில் மட்டுமல்ல. போர்க் குணத்திலும் தமுஎகச-வே பேரமைப்பாக விளங்குகிறது என தன்னடக்கமாக கூறமுடியும். இன்னமும் கூட இந்த அமைப்பு மண்ணில் வேர் பற்றி விண்ணைத் தொட வேண்டும் என்பதே இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொருவரது கனவும் ஆகும். இங்கு கனவு என்பதே தனி நபர் சார்ந்ததாகவே உள்ளது. எங்களது கூட்டுக் கனவு. எல்லாப் பறவைகளும் வந்து தங்குகிற பெரு மரமாக, எல்லாப் பயணிகளும் இளைப்பாறுகிற பெரும் நிழலாகவும் இந்த அமைப்பு வளர வேண்டும் என்பதே எம் கனவு.

தமிழகப் பண்பாட்டு வெளியில் கடந்த 50-ஆண்டுகளில் தமுஎகச ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

படைப்புரிமை, கலையுரிமை, கருத்துரிமைக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கொதித்தெழுந்து போராடும் அமைப்பு இது. அதற்கு ஒரு உதாரணம் தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் அச்சுறுத்தப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வீதிமன்றத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திற்கும் சென்று வழக்காடி கருத்துரிமைக்கு ஆதரவான தீர்ப்பை தமுஎகச பெற்றுத் தந்ததை சொல்லலாம்.எதிரிகளால் அதிகமாக அவதூறு செய்யப்படும் படைப்பாளிகள், கலைஞர்களில் பலர் நாங்களாகவே இருக்கிறோம். இது எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். கலை இரவுகள்

தமிழ்ச் சமூகத்திற்கு தமுஎகச தந்த கொடை. அதை நகலெடுக்க முயன்ற பலர் தத்துவ வறுமையால் தோற்றுப் போனார்கள். பேசாப் பொருளை பேசியிருக்கிறோம். அதனாலேயே தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்ச் சமூகத்தின் தடத்தையே மாற்றிவிட்டோம் என்று கூறவில்லை. ஆனால், பண்பாட்டுப் பெருவெளியில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறோம் என்று கூறமுடியும். மதவெறி, சாதிவெறி முன்வைப்பதே பண்பாடு என்பதை மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம். உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயரத்தில் நிறுத்தும் வரை ஓய மாட்டோம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… நேர்காணல்: மதுக்கூர் ராமலிங்கம் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்”
  1. த. மு. எ.க. சங்கத்தின் பரிமாண வளர்ச்சி குறித்து அறிய உதவும் நேர்காணல். 70 களில் கவிதை இயக்கத்தின் உத்வேகமும் எழுச்சியும் ஒரு தெறிப்பாக பதிவாகியுள்ளது. சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *