முதல் பெண் ஆசிரியர் என்று அனைவராலும் அறியப்பட்டவரான சாவித்திரிபாய் அவர்களின் வாழ்வும் பணியும் கிராபிக்ஸ் வடிவில் புத்தகமாக வந்திருப்பது அவரது பணியை மேலும் பரவலாக்குவதற்கு மிகச் சிறந்த ஏற்பாடு என்றே எனக்கு தோன்றுகிறது.
சாவித்திரி, புலேயின் குழந்தை பருவ மராட்டிய சூழல் என்பது பேஷ்வா பாஜி ராவ் கீழ் கடுமையான கஷ்டங்களை கொண்டதாக இருந்தது. சாதி ரீதியான துன்புறுத்துதல், பல்வேறு சமூக பிரச்சனைகளை தன்னகத்தே கொண்டதாக இருந்தது. இச்சூழலில் தான் ராஜாராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, ஈஸ்வர சந்திரர் வித்யாசாகர் போன்றவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்த காலம். அதே காலத்தில் பிரிட்டிஷாரால் ரயில்வேயும், தொழிற்சாலையும், தொலை தொடர்பும், கல்வி கூடங்களும் இந்திய நகர் பகுதியில் நுழைந்த நேரம்.
1831ல் மராட்டியத்தில் நைக்கோன் என்ற கிராமத்தில் பிறந்த சாவித்திரிபாய்க்கு 9 வயதில் 13 வயதான ஜோதிராவ் புலேவுடன் திருமணம் நடந்தது. புலே ஏற்கனவே கிருத்துவ மிஷனரி பள்ளி மூலம் கல்வி கற்றுக் கொண்டு இருந்தார். அதனால் தனது மனைவிக்கு வீட்டில் கல்வி கற்றுக் கொடுக்கும் பணியை ஏற்றுக் கொண்டார். சாவித்திரிபாய் திருமணத்திற்கு முன்பே சுட்டிதனமும், கற்றுக் கொள்வதில் ஆர்வமாகவும் இருந்தார். அதனால் கல்வியும் அவள் வசமாகியது.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் புனேக்கு இடம் பெயர்ந்தனர். ஜோதிராவ் சாவித்திரியை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அகமத்நகரில் சேர்த்து விட்டார். பயிற்சிக்கு பிறகு புனேக்கு அருகில் 1848 ஆண்டில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியாக இருந்தார். அனைத்து பெண்குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த பிறகு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டன. அந்த இன்னல்களில் இருந்து மீட்டு எடுத்தவர்கள் பாத்திமா ஷேக், உஸ்மான் ஷேக் என்ற இஸ்லாமிய சகோதர, சகோதிரியும் ஆவர். பாத்திமா ஷேக் பின் அப்பள்ளியில் தன்னையும் இணைத்து கொண்டார்.
சாவித்திரிபாய் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் போது வழியில் அவர் மீது கற்கள், சாணம், மனிதமலம் ஆகியவற்றை வீசுவார்கள். அதனையும் பொருட்படுத்தாமல் மாற்று உடையுடன் பள்ளிக்கு சென்று வந்தார்.
பெண் குழந்தைகளை தேடி வீடு வீடாக சென்று சாவித்திரிபாய் அழைத்து வந்தார். சொந்த செலவில் பள்ளியையும் நடத்தினார். அன்றைய பூனா அப்சர்வர் இதழ் பூலேவின் இப்பள்ளியை பாராட்டி எழுதியது.
1852 அன்றைய கல்வித்துறை பூனாவில் பல இடங்களில் பள்ளி கூடங்கள் ஆரம்பிக்க அனுமதித்தது. அன்றே சாவித்திரி பள்ளியில் நூலகம் இருந்தது. சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுக்கு அப்பாற்பட்டதாக பள்ளியை நடத்தியது தான் உண்மையில் புரட்சிகரமானது. ஒடுக்கப்பட்ட விதவை பெண்களுக்கும் சாவித்திரி கல்வி கற்றுக் கொடுத்தார்.
ஜோதிராவ், சாவித்திரியும், “யஸ்வந்த்” என்ற குழந்தையை தத்து எடுத்து கொண்டனர். அவர்களது சமூக செயல்பாடு அதிகமாகி கொண்டே சென்றது. கைம்பெண்களுக்கு மொட்டை அடிக்கும் பழக்கத்திற்கு எதிராக முடித்திருத்தும் வேலையை செய்யக் கூடிய தொழிலாளர்களை அழைத்து இதற்கு எதிராக அழைப்பு விடுக்க செய்தார்.
வயது வந்தவர்களுக்கான கல்வி மையத்தை தொடங்கினார். தனது வீட்டில் கிணறு வெட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். உயர் சாதியாக தன்னை அழைத்து கொண்ட பிராமணர்களிடம் சென்று தீண்டாமைக்கு எதிராக பேசினார்.
மந்திர சடங்கில்லா திருமணம், வரதட்சனை மறுப்பு திருமணம். பெண்கள் மறுமணம் ஆகியவற்றை ஆதரித்தும் பேசியும் நடத்தியும் வைத்தார்.
1877ல் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி தனது கணவருக்கு கடிதம் எழுதும் போது பட்டினி கொடுமையை பார்க்க முடியவில்லை. கடுமையான குடிநீர் பற்றாகுறை. மக்கள் தங்கள் பசியை போக்க இலைகளையும், விசமுள்ள காய், பழங்களை உண்ண வேண்டிய நிலை. சிறுநீரை பருக வேண்டிய நிலை. பஞ்ச நலத்திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டிய தேவை குறித்தும் விரிவாக எழுதினார். அதனை செயல்படுத்தவும் செய்தார்.
1890 நவம்பர் 28ல் ஜோதிராவ் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு பூலே உடலை எரியூட்டுவதற்கான நெருப்பையும் எடுத்து சென்ற சாவித்திரி தனது கணவர் புலே உடலை தானே எரியூட்டினார். அனைவரும் சாவித்திரி செயலை கண்டு திகைத்தனர்.
மராட்டியத்தில் 1896ல் ஏற்பட்ட பஞ்சத்தைத் தொடர்ந்து 1897ல் பிளேக் நோய் தொற்று ஏற்பட்டது. அதற்கான நிவாரண பணியில் இரண்டு ஆண்டுகள் தன்னை இணைத்து கொண்டார். தென் அமெரிக்காவில் மருத்துவம் படித்து திரும்பிய தனது மகன் யஸ்வந்திடம் ஊருக்கு வெளியே தனியே இதற்கு மருத்துவம் பார்க்க கேட்டார். ஏனெனில் அன்றைய பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை கண்டு கொள்ளவில்லை. பிளேக்கு எதிரான போராட்டத்தில் தொற்று ஏற்பட்டு சாவித்திரிபாய் 1897 மார்ச் 10 தேதி பலியானர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அடுத்த தலைமுறை ஆசிரியைகளை உருவாக்கிய சாவித்திரிபாய் அவர்களிடமிருந்து பொது கல்வியை காக்க போராடும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள நிறைய உள்ளன.
இப்புத்தகத்தை வெளியிட்ட அஜிம் பிரேம்ஜி பல்கலைகழகம் புத்தகத்தை பரவாலக்க பொது வெளியில் விற்பனைக்கு அல்லது பல்வேறு அமைப்புகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அருமை! ஜெ.பா தொடர்ந்து எழுதுங்கள். உங்களைப் போன்ற ஆகச்சிறந்த வாசகரால்தான் அருமையான புத்தகங்களை பொதுவுலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட முடியும்.