எடி ஜேக்கூ (Eddie Jaku) எழுதிய உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth) - நூல் அறிமுகம் - https://bookday.in/

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth) – நூல் அறிமுகம் 

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth) – நூல் அறிமுகம் 

தொடர் படுகொலைகளில் இருந்து தப்பிய ஒருவர் தனது கதையைச் சொல்லி, ஞானத்தைப் பகிர்ந்து கொண்டு, தனது சிறந்த வாழ்க்கையை சித்திரமாய் செதுக்கி சென்றுள்ளார்..

வாழ்க்கைல நம்ம இந்த ஒரு பெரிய விஷயத்தை போய் செஞ்சா எப்படி இருக்கும் ?

அப்படி ஒரு சாதனைய நம்மளால செய்ய முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும் ?

இந்த திறமை நமக்குள் இருந்தா எப்படி இருந்திருக்கும்?

அவங்கள மாதிரி நம்ம இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்?

பிரச்சினையே இல்லாம வாழ்க்கையை நகர்த்திட்டு போற அளவுக்கு திறமைகள் நமக்குள்ள கொட்டி கிடந்தா எப்படி இருக்கும்?

இது மாதிரி நிறைய எண்ணங்கள் நம்மள அப்பப்போ உரசிட்டு போற தென்றல் காற்று மாதிரி தொட்டுட்டு போக தான் செய்யும்..

அது எப்படி ஒரு மனுஷனால 101 வயசு வரைக்கும் சந்தோஷமா இருக்க முடியும் அப்படினு ஆச்சரியப்படுற கேள்விக்கான விடை தான் இந்த புத்தகம்..

சொல்லவே முடியாத அளவுக்கு கொடூரமான சூழ்நிலைகள்ல , மோசமான ஒரு சுற்று வட்டாரத்துல இருந்து ஒருத்தர் தனது 101 வது வயசுல தான் தான் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான மனிதன், தன்னோட சந்தோஷத்துக்கு தான் தான் மிக முக்கிய காரணம் அப்படின்னு சொல்றார்னா..! சூழ்நிலையோ, காலநிலையோ, இல்ல நம்மள சுற்றி இருக்கிறவங்களோ நாம் மகிழ்ச்சியா இருக்கிறதுக்கு தடை இல்லை அப்படிங்கிறது நம்ம ஒத்து கொள்ளத்தான் வேண்டும்..

ஒரு இளம் யூத சிறுவனாக பல்வேறு கொடூரமான சூழ்நிலைகள் படுகொலைகள் போருக்கான முன் நடவடிக்கைகள் என எங்கு திரும்பினாலும் வாழ்வதற்கு அறிகுறியே இல்லாத ஒரு கட்டமைப்புக்குள் எடியின் பயணம் அவரது நன்றியுணர்வு, சகிப்புத்தன்மை, எந் நிலையிலும் சாதுரியமாய் செயல்படும் திறன் ஆகியவற்றிற்கு முன்னோடியின் சான்றாய் அமைகிறது..

எடியின் தந்தையோ ஐரோப்பாவிலுள்ள போலாந்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வந்து குடியேறியவர்..

எடியின் பதின்மூன்றாவது பிறந்தநாள் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததையும், யூத எதிர்ப்புக் கொள்கைகள் தொடங்கியதையும் அடிக்கோடிட்டு காட்டி அது எவ்வாறு அவரது கல்வியைப் பாதித்தது என்பதையும் அவரது யூத அடையாளம் காரணமாக உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், அவரது தந்தையின் முன்னெடுப்பினால் தவறான அடையாளத்தின் கீழ் தனது படிப்பைத் தொடர்ந்தார் எடி..

இருப்பினும் நடுத்தர வர்க்க சூழலில் குடும்பம் செழித்து வளர்ந்தது, ஆனால் பெரும் மந்தநிலை பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்தது, இதனால் உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டது, இது வசதியாக இருந்தவர்களையும் கூட பாதித்தது.

*புலப்பெயர்வு மற்றும் யூத அடையாளம் மக்களின் மனநிலை அவர்களது வாழ்க்கை நெறி மற்றும் அமைதிநிலை ஆகியவற்றில் பாதிப்பை எவ்வளவாய் திணிக்கிறது என்பதற்கான முன்னுதாரணம் எடியின் வாழ்க்கை சரிதையாக இந்நூல்*

எடியின் குடும்பத்தினர் பெல்ஜிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர், ஆனால் ஒரு அதிசயம், அவரது தந்தையின் சாதுரியமான சிந்தனை காரணமாக அவர்களது குடும்பம் ஒரு போக்குவரத்து முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஆஷ்விட்ஸுக்கு செல்லும் ரயிலில் ஏற்றப்படுகிறது, கடுமையான நிலைமைகளை எதிர்கொள்கிறது, ஆஷ்விட்ஸுக்குள் எடியும் அவரது தந்தையும் தேர்வுச் செய்யபட்ட போதும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படுகிறார்கள், எடி
உழைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் காரணம் அவர் பெற்றிருந்த கல்வி, அவரது தந்தை Gas chambers க்குள் அனுப்பப்பட்டு கொல்லப்படுகிறார்.

எடி தனது பயிற்சிக் காலத்தில் பெற்ற கல்வி மற்றும் அனுபவங்களைப் பொக்கிஷமாகக் கருதுகின்றார் ஆனால் தனது குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற நேரத்தை நினைத்து மிகவும் வருந்துகிறார், குடும்பப் பிணைப்புகளின் விலைமதிப்பற்ற தன்மையை உணர்ந்துகொள்ள சூழ்நிலை அவரை சிந்திக்க வைக்கிறது.

முகாமின் கடுமையான குளிரைத் தாங்கிக் கொள்வதே தினசரி போராட்டமாக இருந்தது, கைதிகள் மீது மரண அச்சுறுத்தல் தொடர்ந்து எழுந்தது. முகாமின் கொடூரத்தையும் , மனிதாபிமானமற்ற தன்மையையும், எடுத்துக்காட்டும் வகையில், அவர்கள் கொடூரமான சிகிச்சையைச் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தருணங்களில் இருந்து எடியின் வாழ்வு, தந்தை கற்றுத்தந்த கலைப்பாடுகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய நம்பிக்கையை எடி முற்றிலுமாய் உணர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்து தருகிறது காலச் சூழல்.

அனுபவங்கள், குடும்பம் மற்றும் செல்வத்தை விட உறவுகள் மிகவும் மதிப்புமிக்கவை. அவரது *உண்மையான மகிழ்ச்சி செல்வத்தை குவிப்பதை விட தன் தந்தை தனக்கு அளித்த நுண்ணறிவின் மூலம் கிடைத்த கல்வியே* என்னும் வாக்குமூலம் *கல்வியின் மகத்துவத்தையும், கல்வியின் மூலம் எதனையும் சாதிக்கலாம் என்ற யதார்த்தத்தையும், கல்வியே மகிழ்ச்சி என்னும் தன் மரக்கிளைகளை வாழச் செய்யும் வேர்* என்பதையும் மௌனமாக எடுத்து சொல்கிறது எடியின் வாழ்க்கை வரலாறு..

இப்படியாக , புலப்பெயர்வு ஒரு மனிதனை எவ்வாறு திக்கு முக்காட வைக்கிறது என்பதற்கான சான்று மட்டுமல்லாது அதிலும் கல்வி அவனுக்கு எவ்வாறு கரம் கொடுத்தது என்பதை படம் பிடித்து காட்டுகிறது இந்நூல்..

*மௌனத்திற்குள்ளான அலறல்*

*காரிருளினூடே தோன்றும் ஒளி*

*கொடூரத்தினுள் ஒரு கருணை*

*இனிமையான துக்கம்* போல

*தாங்கொன்னா இன்னல்களினூடே துளிர்த்த மலர் தான் எடியின் மகிழ்ச்சியுமாக* காட்சியளிக்கப்பட்டுள்ளது..

கல்வியை கண்ணென கற்று உணர நம் மாணவச் செல்வங்களுக்கு பரிந்துரைக்க வேண்டிய மிக முக்கியத்துவம் வாய்ந்த நூல்..

நூலின் தகவல்கள் : 

நூல்  : உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் (The Happiest Man on Earth)
ஆசிரியர் : எடி ஜேக்கூ (Eddie Jaku)

நூல் அறிமுகம் எழுதியவர் : 

சுகிர்தா குணசீலி அ
நெல்லை.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *