அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் இப்போது மிகவும் இருண்ட காலம். ஆனால் கடந்த இரண்டு வாரங்கள் நமக்குக் கொஞ்சம் நம்பிக்கைக்காக காரணத்தைத் தருகின்றன. நகரங்கள் பணத்தைக் காவலர்களிடமிருந்து பொதுச்சேவைகளுக்குத் திருப்பிவிட உறுதி கொள்கின்றன, வன்முறைக் காவலர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள், கடந்த வாரத் தொடக்கத்தில் இடதுசாரிகளின் வெற்றி அலைபோல் வந்து கொண்டிருக்கிறது.
எழுச்சியை வரவேற்கிறோம். நாம் ஆளும் வர்க்கத்தை, அதன் தரம்கெட்ட, கொலைகாரச் சேவகர்களை எதிர்கொண்டு வெல்ல முடியும் என்பதை நாம் கற்கத் தொடங்கியிருக்கிறோம்.
நீங்கள் எதிர்ப்பை வருடத்தில் ஒன்றிரண்டு முறை காட்டுவதால் அது எதையும் வெல்லாது. அதனால்தான் சாதாரண சமயங்களில் பெரும்பாலான மக்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் இப்போது சாதாரண சமயமல்ல. நாடு முழுதும் கடந்த இரண்டு வாரங்களில் இரவும் பகலும் நாட்டு மக்கள் மினியபோலிஸ் போலீஸ் அதிகாரியால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து தெருக்களை நிறைத்து வருகிறார்கள். முன்னர், எதிர்ப்புகள் சில நாட்களுக்கு ஆவேசமாக நடக்கும், பின்னர் கொலை செய்த காவல்துறையினர் சுதந்திரமாகச் செல்வது மட்டுமல்ல, தமது வேலையையும் தக்க வைத்துக் கொள்வர்.
ஆனால் இது கடந்த காலமல்ல. நான்கு அதிகாரிகள் ஃப்ளாய்ட் படுகொலைக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதிசயிக்கத்தக்க எண்ணிக்கையிலான போலீஸ் அதிகாரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டுமல்ல, எதிர்ப்பாளர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியதற்காக குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளனர். ஜூன் 1அன்று ஊரடங்கை மீறியதற்காக ஒரு கருப்பரை போலீஸ் சுட்டுக் கொன்ற லூயிவில்லியில் போலீஸ் தலைவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உழைக்கும் வர்க்கத்தினர், குறிப்பாக கருப்பர்கள், புலம்பெயர்ந்தோர், இளைஞர்கள் மீது அதீதமாக போலீஸ் அடக்குமுறை ஏவப்படுகிறது என்பதை அமெரிக்கர்கள் உணரத் தொடங்கும்போது, நிறுவனங்கள் மிக வேகமாக மாறுகின்றன. போர்ட்லாண்டும், மினியபோலிசும் பொதுப் பள்ளிகளில் போலீசைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வருகின்றன. மினியபோலிஸ் பூங்கா மற்றும் பொழுதுபோக்குத் துறையும் கூட போலீஸ் துறையுடன் தமது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கின்றன. அதையும் விட ஆச்சரியமாக, போலீசை ஒழித்துக் கட்டவும், நிதியை வெட்டவும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. மினியபோலிஸ் நகரக் கவுன்சில் தனது போலீஸ் துறையை கலைக்கத் தயாராக இருப்பது போல் தோன்றுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் ஏற்கனவெ பிற சமூகத் தேவைகளுக்காகத் தனது போலீஸ் பட்ஜெட்டை வெட்டிக் கொண்டிருக்கிறது. இதுவரை நியூயார்க்கின் கலகக்கார மேயர் அவரை ஒத்த போலீஸ் துறையைப் பாதுகாக்க பரிதாபமாக முயன்றுள்ளார். அவர் மற்றவரைத் துன்புறுத்தி மகிழும் ஒரு கூட்ட்த்தினரால் விரும்ப்ப்பட வேண்டும் என்று விரும்பும் ஒரு ஏசப்படும் குழந்தையைப் போல் இருந்தார். அவர்களோ அவரை இன்னும் அதிகமாகவே ஏசுவர். அவரே கூட இந்த எழுச்சியைக் கண்டு, போலீசுக்கான பட்ஜெட்டை வெட்டி பணத்தை இளைஞர் சேவைக்கு மடைமாற்ற ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தத் திட்டங்கள் பலவும் இன்னும் தெளிவற்றே உள்ளன. ஒவ்வொரு சீர்திருத்தமும், குறிப்பாக தேசிய அளவில் போலீஸ் சங்கங்களாலும், அதிபர் டிரம்பாலும், பல ஜனநாயகக் கட்சியினராலும் எதிர்க்கப்படும். எனினும் எதிர்ப்பு இரண்டு வாரங்களைக் கூடக் கடக்காத நிலையில் இயக்கம் இவ்வளவு தூரம் வந்துள்ளது மிகவும் அதிசயிக்கத்தக்கது.
நாம் தேர்தல் வெற்றிகளைக் கூடப் பெறுகிறோம். சமீப காலம் வரை ஒரு சோசலிஸ்ட் நகர கவுன்சிலில் வெற்றி பெற்றால் கூட நாம் பெருமை கொள்வோம். அது கடந்த வாரம் நடந்து விட்டது: வாஷிங்டன் நகர கவுன்சிலில் ஜெனீஸ் லெவிஸ் ஜார்ஜ் வெற்றி பெற்றால் அவர் போலீசை பணிநீக்கம் செய்து விடுவார் என்று எதிர்த்தரப்பு வேட்பாளர் அறிவிக்க, அதை வாக்காளர்கள் விரும்பியதாலோ என்னவோ, அவர் தீர்மானகரமான வெற்றியைப் பெற்று விட்டார். ஆனால் அவர் தனியாக இல்லை. கடந்த வாரச் செய்திகள் குறிப்பிடத்தக்கவை. பிலடெல்பியாவில் அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்டுகளின் ஆதரவுடன் போட்டியிட்ட நிகில் சாவல் – பாலியல் தொழிலாளர்களை நிறுத்தி இழுத்துச் செல்வதை நிறுத்தவும், அவர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்தவும் ஆதரவளித்தவர் மாநில செனேட்டில் உறுதியான வெற்றியை ஏற்கனவே பதவிலியிருப்பவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான ரிக் ரஜேவ்ஸ்கி, இந்தக் கட்டுரையை எழுதும்போது இன்னும் பல பெட்டிகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் முன்னணியில் இருக்கிறார். சோஷலிசக் கட்சியின் உறுப்பினரும் நமது புரட்சியின் ஆதரவைப் பெற்றவருமான சம்மர் லீ தென்மேற்கு பெனிசில்வேனியாவின் மாநில செனேட்டில் பிரதிநிதியான முதல் கருப்பினப் பெண்மணி. அவர் 75 சதவீத ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மொண்டானாவில் நமது புரட்சி ஆதரவு பெற்ற ஆறு பேர் அடிப்படை உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றனர். ரிபப்ளிக் அடிப்படை உறுப்பினர்கள் கூட மகிழ்ச்சியை தூண்டாமல் இல்லை: இனவெறியர் ஐயோவா ரிபப்ளிகன் காங்கிரஸ்கார்ர் ஸ்டீவ் கிங் தனது இடத்தை இழந்தார்.
நாம் தொடர்ந்து தெருக்களை நிரப்புகிறோம், கட்டுப்படுத்த முடியாமல் நடந்து கொள்கிறோம், அதே சமயம் மக்களைத் தோற்க வைத்த ஆட்சியாளர்களை தூக்குகிறோம். நாம் நமது நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் அழைக்கிறோம், அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பது எப்படி என்று விளக்குகிறோம், அவர்கள் ஏன் சோஷலிஸ்டுகளுக்கும் பிற இடதுசாரி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டுமென்று விளக்குகிறோம். நாம் நமது நிறுவனங்களைக் கட்டி வளர்த்து வருகிறோம்; அமெரிக்க ஜனநாயக சோஷலிசக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை இப்போது 70,000 த்தைக் கடந்து விட்டது.
நாம் தற்போதுதான் தொடங்கியிருக்கிறோம். நாம் கணித்திராத, சிலசமயம் தேர்ந்தெடுத்தே இராத திசைகளில் இந்த இயக்கம் குறிப்பிட்ட வடிவங்களையும், திசைகளையும் எடுக்கும்; சில கோரிக்கைகள் நமது கற்பனையில் கூட ஒருவேளை உதித்திராது. ஏனென்றால் அவை நமது இளமைக் காலத்திலோ, அல்லது கடந்த மாதத்திலோ கூட சாத்தியப் பட்டிருக்காது. இயக்கத்துக்குப் புதிதாக வந்துள்ள பலர் வசதிப்படாத பல புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். நம்மிடம் இல்லாத பல திறன்களை நாமெல்லாம் விரைவில் பெற வேண்டும். நெருங்கிய கவனத்தை செலுத்த வேண்டிய, கவனமாகக் கேட்க வேண்டிய, நாம் உதவி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டிய நேரம் இது. நாம் ஒவ்வொரு வெற்றிக்கும் உரிமை கோரவும், கொண்டாடவும் வேண்டும்.
-லீசா ஃபெதர்ஸ்டோன்
ஜகோபின்னில் கட்டுரை எழுதுபவர், சுதந்திரமான பத்திரிகையாளர், பெண்களை மலிவாக விற்பது; வால்மார்ட்டில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மைல்கல்லான போராட்டம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

