குட்டி இளவரசன் (The Little Prince) – நூல் அறிமுகம்
1943 ஆம் ஆண்டு எழுத்தாளர் பிரெஞ்சில் எழுதிய நூல்தான் இது. 64 பக்கமே கொண்ட நூலாக இருந்தாலும் நிறைய படங்களுடன் பல கிரகங்களுக்கு போய் வரக்கூடிய நூல் இது. ஆம் குட்டி இளவரசன் ஒரே இடத்தில் இருக்க மாட்டான். அவன் செல்கின்ற இடங்களில் எல்லாம் வித்தியாசமான நபர்களை சந்திப்பான். எல்லோரிடமும் இயல்பாக உரையாடுவான்.
ஒரு கிரகத்தில் வியாபாரியுடன் பேசுவான். 500 கோடி நட்சத்திரங்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை என்று பேசும் ஒரு வியாபாரியோடு பேசுவான். ஒரு கிரகத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை விளக்கை ஏற்றி அனைக்கும் ஒருவரை சந்திப்பான். “ஏன் அப்படி ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை விளக்கை ஏற்றி அணைக்கிறீர்கள்” என்று கேட்டால் ‘சூரியன் ஒரு நிமிடம் மட்டுமே இங்கே தெரிவான் மறு நிமிடம் இருட்டாக இருக்கும்’ என்று கூறுவார். அதிசயமான கிரகத்தில் வாழும் மனிதரிடம் “நீங்கள் எந்நேரமும் சூரிய வெளிச்சத்தில் இருக்கும்படியாக போய் நின்று கொள்ள வேண்டியது தானே” என்று கேட்பான்.

இப்படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவங்களை குட்டி இளவரசனுக்கு வழங்கும். அந்தக் குட்டி இளவரசனை நீங்களும் காண வேண்டுமா வாசியுங்கள் குட்டி இளவரசனை. இந்நூலை இன்று மீண்டும் நான் எடுத்ததற்கு காரணம் எங்களுடைய பெல்ஜியம் இளைஞர்தான் காரணம். அவர்தான் குட்டி இளவரசனை ஞாபகப்படுத்தி விட்டார். என்றோ 10 ஆண்டுகளுக்கு முன் வாசித்த குட்டி இளவரசன் இன்று மீண்டும் என்னோடு உரையாடினான். பத்தாண்டுகளுக்கு முன் வாசித்த பொழுது முகநூலில் பதிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் வந்ததில்லை. இன்று புத்தகமும் பேச ஆரம்பித்து விட்டதால் நாம் அப்படியே கடந்து போக முடியாது இல்லையா. அதுதான் குட்டி இளவரசனை உங்களோடு பேச கொண்டு வந்துள்ளேன்.
குட்டி இளவரசனை குழந்தைகளோடு உரையாட வையுங்கள். நமது ஊர் ஏதோ சின்னஞ்சிறிய ஊர் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற நாம் எல்லோரோடும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம் என்று குழந்தைகளிடம் கூற வேண்டும். பாலைவனத்தில் ஒரே ஒரு செடியில் இருக்கும் ஒரே ஒரு பூவை பாதுகாக்க குட்டி இளவரசன் கேட்டது என்ன, அவனுக்கு கேட்டது கிடைத்து விட்டதா, பூவை பறித்து திண்ண ஆடு வந்தால் அவற்றை எவ்வாறு பாதுகாத்து இருக்க முடியும் என்கிற இடமெல்லாம் மிகவும் சுவாரசியமாக நம்மை கடத்திச் செல்வார் ஆசிரியர் குட்டி இளவரசனோடு.

இந்நூல் 345 மொழிகளில் உலக அளவில் வெளியானபோது இதோ நமக்கு அருகாமையில் இருந்த மலையாளத்தில் வந்த மொழிபெயர்ப்பை தான் நமக்கு தமிழில் அழகாக கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் யூமா வாசுகி அவர்கள். குட்டி இளவரசன் பெல்ஜியம் இளவரசர் இ.பா.சிந்தன் Chinthan Ep அவர்களின் ‘கதை சொல்லிகளின் கதை’ நூலின் வழியாகவும் வந்து சேர்ந்தார் எனும்போது பெரும் மகிழ்ச்சி தான். இரண்டு சிறப்பான மொழிபெயர்ப்பாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களும், நன்றியும்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூலின் தகவல் :
நூல் : குட்டி இளவரசன்
ஆசிரியர் : அந்த்வர்ன் து செந்த் – எக்சுபெரி
தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பாரதி புத்தகாலயம்
ஆண்டு : அக்டோபர் 2009
(இப்போது பல பதிப்புகள் கண்டிருக்கும்)
நூலைப்பெற : thamizhbooks.com
நூல் அறிமுகம் எழுதியவர் :
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

