தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள்
இன்றைய நூலின் பெயர்: தமிழுக்கு நிறம் உண்டு
நூல் ஆசிரியர் : வைரமுத்து
இது ஒரு கவிதை நூல்..
இந்த நூல் இரு வகைகளில் எனக்கு பிடித்த நூல். மரபும், புதுமையும் என இரு வகை கவிதைகளையும் கலந்து தமிழ் என்ற மொழி இன்னும் தன் நிறத்தை இழக்காமல் இருப்பதை உணர்த்திய காரணத்தாலும், வைரமுத்துவின் கவிதை நூல்களிலேயே இந்த நூலில் இருந்து தான் அதிக கவிதைகள் திரையிசைக்கு எடுத்து கையாளப்பட்டது என்பதாலும் இந்த நூல் எனக்கு பிடித்த நூல்..
30 கவிதைகள்..
அழைப்பு என்ற கவிதையின் முடிவு திகைக்க வைக்கும். அயோத்திராமன் அழுகிறான் கவிதை மதவெறியருக்கு சூடு போடும். பெயர் சொல்ல மாட்டேன் கவிதை காதல் சோகத்தின் நீள அகலங்களை சொல்லும். என்னோட ராவுகள் கவிதை கற்புள்ள ஆண்களின் ரகசியம் சொல்லும். உலகம் கவிதை உலகின் இரட்டை நாக்கை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும். இப்படி ஒவ்வொறு கவிதையும் சிறப்பு வாய்ந்தது.
இந்த நூலின் உச்சம் என நான் கருதுவது வைரமுத்துவின் முன்னுரை. தமிழ் இலக்கிய வரலாற்றை இத்தனை அழகாக 9 பக்கங்களில் கூற முடியுமா. பிரமிக்க வைக்கிறார்.
முன்னுரை முடிவில் வைரமுத்து சொல்கிறார் :
எத்தனை வண்ணங்கள் பூசி பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை காலத்தின் மழையால் – வெயிலால் தமிழின் நிறம் மங்குவதில்லை ஆயுதங்களால் – அந்நிய கலாச்சார திணிப்பால் – பிறமொழி உறவுகளால் தமிழ் தன்னிறம் திரிதலில்லை என்று முடிக்கிறார்.
இது உண்மை என்றே இந்த நூலை வாசிக்கும்போது தோன்றுகிறது..
வாசியுங்கள்..
சொக்கி போவீர்கள்..
பக்கம்: 160
விலை: ரூ 50
வெளியீடு: சூர்யா வெளியீடு
முதல் மரியாதை படத்தின் பாடல்களுடன், சற்றுமுன்தான் வடுகபட்டியை கடந்து வந்தேன். வீடு வந்டைந்தவுடன் தங்களின் வைரமுத்து நூல் குறித்த பதிவு மகிழ்ச்சியை தருகிறது.