தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ் - நூல் அறிமுகம் - The Other Side of Silence இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை காலக் கொடுமைகள் பற்றிய வாய்மொழி வரலாறு - https://bookday.in/

தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ் – நூல் அறிமுகம்

தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ் – நூல் அறிமுகம்

’தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’: ஊர்வசி புட்டாலியாவின் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலக் கொடுமைகள் பற்றிய வாய்மொழி வரலாறு,

C:\Users\USER\Desktop\book by urvashi bhutalia.jpg          C:\Users\USER\Desktop\220px-UrvashiButalia.jpg

இருநூறு ஆண்டுகால ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்குப் பின்னர் விடுதலை பெற்ற வேளையில் – பல நூறு ஆண்டு காலம் ஒன்றுபட்டிருந்த இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா – பாகிஸ்தான் எனப் பிரிந்ததனால் ஏற்பட்ட துயரம் சொல்லித் தீராதது. இந்தியப் பிரிவினை இத்தனை அவலங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதை  பிரிட்டிஷ் அரசு மட்டுமின்றி இந்து மகாசபை, முஸ்லீம் லீக், இந்திய தேசிய காங்கிரஸ், அகாலி தளம் போன்ற  அமைப்புகள் எவையும் எதிர்பார்த்திருக்கவில்லை. விடுதலையையும், பிரிவினையையும் ஒன்றாக அறிவித்த ஆங்கிலேய அரசு, சர் சிரில் ராட்கிளிஃப் என்ற பிரிட்டிஷ் அதிகாரியிடம் அன்றைய ஒன்றிணைந்த பஞ்சாப், வங்காள மாகாணங்களை இரண்டாகப் பிரித்து எல்லைக் கோட்டை வரையறுக்கும் பொறுப்பைக் கொடுக்கிறது. அவருக்குத் தரப்பட்ட கால அவகாசம் வெறுமனே 36 நாட்கள் மட்டுமே. சர் சிரில் ராட்கிளிஃப் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் கொண்ட குழுவைத் தன்னுடைன் இணைத்துக் கொண்டார். ஆனாலும் அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களே தவிர தகுந்த ஆலோசனைகளை அவருக்கு வழங்கிடவில்லை.

பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ் நதிக்கரை இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடாகி நாடு பிரிக்கப்பட்டது. ’தி கிரேட் பார்ட்டிசன்’ என்று அழைக்கப்படும் இப்பிரிவினைக் காலத் துயரங்களை பலரும் பல வடிவங்களில் ஆவணப்படுத்தியுள்ளனர். குஷ்வந்த் சிங் ‘ட்ரெயின் டு பாகிஸ்தான்’ என்றும், சாமன் நஹல் ‘ஆசாதி’ என்றும்,  பாப்சி சித்வா ‘ஐஸ் கேண்டி மேன், என்றும், சால்மன் ருஷ்டி ‘மிட்னைட்ஸ் சில்டரன்’ என்றும் புனைவிலக்கியங்களாக தேசப்பிரிவினைத் துயரங்களைப் படைத்துள்ளனர்.  யாஷ்மின் கான், ஸ்டான்ஃபோர்டு வரலாற்றாளர் பிரியா சாட்டியா போன்றோர் வரலாறுகளாக எழுதிப் பதிவு செய்துள்ளனர். இந்த வரலாற்றளார்களிலிருந்து சற்று மாறுபட்டு இந்தியப் பிரிவினைக்காலத் துயரை வாய்மொழி வரலாறாக ‘தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’ என்று ஊர்வசி புட்டாலியா எழுதியுள்ளார். வரலாற்றியியல் அறிஞர்கள் வாய்மொழி வரலாற்றை அறிவியல் பூர்வமானதாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். ஊர்வசி போன்ற பெண்ணியல் வரலாற்றாளர்கள் வாய்மொழி வரலாற்றியல் வகைமையை அதிகம் பயன்படுத்தி உள்ளனர். இவ்வகையில் ‘தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’ எனும் ஊர்வசியின் ஆவணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பாலா நகரில் ஒரு முற்போக்குக் குடும்பத்தில் பிறந்த சிறந்த பெண்ணியவாதியான ஊர்வசி புட்டாலியா வரலாற்றாசிரியரும், சமூகச் செயற்பட்டாளரும் ஆவார். டில்லியிலும், லண்டனிலும் படித்துப் பட்டம் பெற்றவர். இந்தி, பஞ்சாபி, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், இத்தாலியன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். ’வருகைதரு’ பேராசிரியராக பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவரின் ‘The Other Side of Silence: Voices from the Partition of India’, ‘Speaking Peace: Women’s Voices from Kashmir’ ஆகிய இரண்டு படைப்புகளும் காத்திரமானவை. Kali for Women மற்றும் Zubaan ஆகிய இரண்டு பதிப்பகங்களை பெண்கள் படைப்புகளை வெளியிடுவதற்காகவே உருவாக்கி நடத்தினார். பெண்ணுரிமைகள், மனித உரிமைகள், தலித் உரிமைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரின் எழுத்துகளை, செயல்பாடுகளைப் பாராட்டிப் பல விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, ஜெர்மனியின் உயர்ந்த விருதான ‘கத்தே மெடல்’, பிரான்சின் செவாலியே விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

’தொடக்கம், இரத்தம், உண்மைகள், பெண்கள், கௌரவம், குழந்தைகள், ஒடுக்கப்பட்டவர்கள், ஞாபகம்’ என்று எட்டு பகுதிகளாக ஊர்வசி இந்த ஆவணத்தை எழுதியுள்ளார். ’தொடக்கம்’ எனும் முதல் அத்தியாயத்தில் இந்த ஆவணத்தை எழுதுவதற்கான உந்துதல் ஏற்பட்ட விதம் பற்றி ஊர்வசி விவரிக்கிறார்.  1984இல் சீக்கியப் பாதுகாவலர்களால் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது, டில்லி நகரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்களைக் காங்கிரஸ் குண்டர்கள் கொன்று குவித்தனர். சீக்கியர்கள் வீடுகளை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து டில்லியில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு ஊர்வசி உற்றுழி உதவினார். அந்தச் சமயத்தில் சீக்கியப் பெண்களிடம் நெருங்கி உரையாடும் வாய்ப்பு ஊர்வசிக்குக் கிடைத்தது. அன்று நடந்த வன்முறைகளை ஊர்வசியிடம் விளக்கிய சீக்கியப் பெண்கள்,  பிரிவினைக் காலத்தில் தாங்கள் அனுபவித்த துயரங்களையும் கொட்டித் தீர்க்கத் தவறவில்லை. நாற்பதாண்டுளாகியும் பிரிவினைக் காலத்தின் சோகங்கள் அவர்கள் நினைவின் இடுக்குகளில் இன்னும்  உறுத்திக் கொண்டே இருந்தன. அவர்களுடன் உரையாடியதன் மூலம்  ஊர்வசி அவர்களின் மனதில் இருந்த அழியா வடுக்களை அன்பெனும் மருந்திட்டு வருடினார். அந்த உரையாடல் சற்றும் எதிர்பாராமல் பிரிவினைக்காலக் கொடுமைகள் நோக்கி நகர்ந்த வேளையில்  ஊர்வசி விழித்துக் கொண்டார். அந்த உரையாடல் பிரிவினைக்காலத் துயரங்களை வரலாறாகக் கட்டமைக்க உதவிடும் என்ற எண்ணம் ஊர்வசிக்கு உதித்தது. அதன் விளைவாக உருவானதே ’தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’ என்ற இந்த அரிய ஆவணம்.

ஊர்வசி, அவருக்கு உறுதுணையாக இருந்து உதவியவர்கள் சுமார்  எழுபதுக்கும் மேலான நபர்களுடன் பத்தாண்டு காலம் உரையாடிப் பதிவு செய்தனர். அவர்கள் டில்லியிலிருந்து லாகூர், ராவல்பிண்டி என்று ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணம் முழுவதும் பயணிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுடன் உரையாட தொடக்கத்தில் ஊர்வசியுடன் சேர்ந்து வந்த சுடேஷ் வைத் எனும் அவரது தோழி இடையில் பிரிந்து விடுகிறார். பிரிவினைக் காலத்தில் சிறுமிகளாக, பதின்பருவத்தினராக, நடுத்தர வயதினராக, சற்று முதியவர்களாகவும் இருந்த பெண்கள் தாங்கள் அனுபவித்த துயரங்களை நினைவின் ஆழத்திலிருந்து இயன்றளவு எடுத்துப் பகிர்ந்து கொண்டனர். உரையாடல் வழி கிடைத்த தகவல்களைத் திரட்டிய ஊர்வசி, வரலாற்றில் மௌனித்துக் கிடந்த சம்பவங்களை 1998இல் இந்நூலில் வெளியிடுகிறார்.

’இரத்தம்’ எனப்படும் இரண்டாவது பாகம் ஊர்வசியின் இரத்த உறவான ’ரனா’ எனும் அவரின் தாய்மாமாவின் அனுபவம் ஆகும். பிரிவினையின் போது ஊர்வசி புட்டாலியாவின் குடும்பம் லாகூரில் வாழ்ந்தது. பிரிவினை அறிவிக்கப்பட்டதும் லாகூரில் கலகம் வெடிக்கிறது. மொத்தக் குடும்பமும் ஊர்வசியின் தந்தை ஜொஜிந்தர் சிங் புட்டாலியா, தாய் சுபத்ரா உட்பட அனைவரும் லாகூரை விட்டு வெளியேற முடிவெடுக்கின்றனர். அப்போது சுபத்ராவின் சகோதரர்களில் ஒருவனான ரனா மட்டும் லாகூரிலேயே தங்கிக் கொள்ள விரும்பியது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. லாகூரில் இருந்த அவர்களின் வீடு தனக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்ற அற்ப ஆசைக்கு ரனா பலியாகிறான். எனவே முஸ்லீமாக மதம் மாறி இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் முடித்து லாகூரிலேயே ரனா தங்கி விடுகிறான். உறவுகளைத் துறந்து தனியாளாக லாகூரில் இருந்த அவனுடனான தொடர்பு முற்றிலுமாக அற்றுப் போகிறது. பிரிவினைக் காலத்தில் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுத்தவர்களின் கதைகள் ஏராளம் இருக்கின்றன. சொத்துக்காக, காதலுக்காக பாகிஸ்தானிலேயே தங்கிக் கொண்ட இந்துக்களும், சீக்கியர்களும் இருந்தனர். அதே காரணங்களுக்காக இந்தியாவிலேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களும் இருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரனாவிடமிருந்து ஓர் அழைப்பிதழ் வருகிறது. அது அவன் மகளுக்கு நடக்கவிருக்கும் திருமண விழாவுக்கான அழைப்பிதழ். ஊர்வசியின் தாய் சுபத்ரா தன் தம்பியைப் பார்ப்பதற்கான வாய்ப்பாக அதனைக் கருதி லாகூர் புறப்படுகிறார். ரனா மாமா வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்ள ஊர்வசியும் அம்மாவுடன் செல்கிறார். தன் இளமைக்காலத்தில் வாழ்ந்த வீடு முற்றிலுமாக மாறிப் போனது கண்டு சுபத்ரா திகைக்கிறார். மாற்றம் வீட்டின் தோற்றத்தில் மட்டுமில்லை என்பதை விரைவிலேயே அவர் புரிந்து கொள்கிறார். அவர்கள் இருவரையும் வரவேற்று உபசரித்த அங்கிருந்த இஸ்லாமியப் பெண்களால் ரனாவின் உறவினர்களான அந்த இரண்டு பெண்களையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவர்களாலும் அவர்களுடன் இயல்பாகப் பழக முடியவில்லை.

திருமணம் முடிந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு, இருவரும் இந்தியா திரும்பும் வேளையில் ரனா தன் அக்காவிடம் மனம் திறந்து பேசுகிறான். கண்ணீர் வடிக்கிறான். அந்த ஊரில் எல்லோரும் தன்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள் என்கிறான். அவர்கள் யாரும் அவனை உண்மையான முஸ்லீமாக ஏற்றுக் கொள்ளவில்லை. குடும்பத்திலேயும் அவனை அந்நியனாகவே  பார்க்கின்றனர் எனக் கூறி மனம் வெடித்து அழுகிறான். சுபத்ரா தன் தம்பிக்கு ஆறுதல் சொல்கிறார். இருவரும் இந்தியா திரும்புகின்றனர்.

’உண்மைகள்’ எனப்படும் மூன்றாவது அத்தியாயம் பிரிவினை குறித்த கசப்பான உண்மைகளைச் சொல்கிறது. அதிகாரப் பூர்வமாக 1947 ஜூன் மாதம் பிரிவினை அறிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் அலுவலகத்திற்கு அதன் நிலைபாடுகளை விமர்சித்து ஏராளமான கடிதங்கள் வருகின்றன. பஞ்சாப், வங்காள மாகாணங்கள் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கிழக்கும், மேற்குமாக எதிரெதிர் திசையில் பன்னிரண்டு மில்லியன் மக்கள் புலம்பெயர்கின்றனர். ஒரு மில்லியன் பேர் கொல்லப்படுகின்றனர். குறைந்தபட்சம் 75,000 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர். மக்கள் தாங்கள் நம்பியிருந்த இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்மீம் லீக், அகாலிதள் எனும் மூன்று அமைப்புகளும் தங்களைக் கைவிட்டுவிட்டன என்றே கருதினர்.

”எங்கள் விவசாய நிலங்களை, வேலைகளை விட்டு நாங்கள் எப்படி வெளியேறுவது? எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத நீங்கள் அறிவுரைகளை மட்டும் அள்ளி வழங்குகிறீர்கள்,’’ என்று கொதித்து அழுதனர். பிரிவினை அறிவிக்கப்பட்டதும் லாகூர், ராவல்பிண்டி, அமிர்தசரஸ், டில்லி என பல நகரங்களிலும் கலவரம் வெடிக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். ட்ரெயின், ட்ரக், என்று கிடைக்கும் வாகனத்தில் எல்லாம் ஏறி நாட்டைவிட்டு வெளியேறினர். ’கஃபீலா’ (Caravan)  என்றழைக்கப்பட்ட நடைபயணமாக  ஆயிரக்கணக்கானவர்கள் ராணுவப் பாதுகாப்புடன் வந்தனர். இரண்டு நாட்டு இராணுவத்தாலும் வழியில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அரசுகளும் செய்வறியாது திகைத்து நின்றன. பொருளிழப்பு, உயிரிழப்பு, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் இவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து தப்பாதவரகள் யாருமில்லை என்றானது.  பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் தலித்துகள்.

‘பெண்கள்’ என்ற நான்காவது அத்தியாயம் பிரிவினையின்போது பெண்கள் அனுபவித்த சொல்லொண்ணாத் துயரத்தைச் சித்தரிக்கிறது. பெண்கள் மதவெறியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள், மதத் தூய்மை மற்றும் குடும்ப கௌரவம் என்ற பெயரால்  தந்தை, கணவர் அல்லது சகோதரர்களே தங்கள் வீட்டுப் பெண்களைக் கொன்றனர். ராவல்பிண்டிக்கு அருகில் இருக்கும் தொவா கலசா என்ற இடத்தில் 90 பெண்கள் தங்கள் வீட்டு ஆண்கள் முன்னிலையில் கிணற்றில் விழுந்து தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொண்டார்கள். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்கள் ’தியாகிகள்’ எனப்  போற்றப்பட்டனர். டில்லியில் ஒரு குருத்துவாராவில் இத்தியாகிகள் இன்றளவிலும் நினைவு கூரப்படுகிறார்கள் என்று ஊர்வசி சந்தித்த பெண்களில் ஒருவர் சொல்கிறார்.

கடத்திச் செல்லப்பட்ட பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து மறுவாழ்வு அளித்திடும் பணியில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அரசுகளும் தீவிரமாக இறங்கின. பத்தாயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் பெண்கள் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம்  பேர் இஸ்லாமியப் பெண்கள், ஐநூறு இந்து, சீக்கியப் பெண்கள் மட்டுமே மீட்கப்பட்டனர். ‘கடத்தப்பட்ட பெண்களை மீட்டெடுப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது சட்டம்-1949’ஐ இந்திய அரசு இயற்றியது. சுசீலா நய்யார், அனிஷ் கித்வாய், மிர்துளா சாராபாய், பிரேமாவதி தாபர், கமலாபென் படேல், தமயந்தி சாகல், ராமேஸ்வரி நேரு போன்ற சமூகச்செயற்பாட்டாளர்கள் அந்தப் பணியை முன்னின்று வழிநடத்தினர்.  காவல்துறையினர் உதவியுடன் களமிறங்கிய இவர்களின் அனுபவங்களையும் அவர்கள் சொல்லக் கேட்டு ஊர்வசி பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்ட இந்து, சீக்கியப் பெண்கள் இந்தியாவுக்குத் திரும்பி வருவதில் தயக்கம் காட்டினர். குடும்பத்தினர் மீண்டும் தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றனர்.  ஆனால் இந்தியாவிற்குக் கடத்தி வரப்பட்டிருந்த இஸ்லாமியப் பெண்களில் பலரும் மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்றனர். கடத்தப்பட்ட பெண்களில் பலர் புதிய சூழலில் வாழ்வைத் தொடங்கினர். மறுமணம் செய்து கொண்டு கணவன், குழந்தைகளுடன் வாழ்ந்தனர். அல்லது பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாமல் தவித்தனர்.

”உண்மை புனைகதையைவிட புதிரானது” என்பதற்கிணங்க கடத்திச் செல்லப்பட்ட பெண்களின் துயரம் சொல்லில் அடங்காதது. ஜைனாப் என்ற பெண் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவாறு துயருற்றாள். குடும்பத்துடன் பாகிஸ்தான் செல்லும் வழியில் கடத்தப்பட்ட ஜைனாப்  பல வெறியர்களின் கைகளில் சிக்கித் தவித்தாள். இறுதியில் பூட்டா சிங் என்பவன் அவளை விலைக்கு வாங்கி முறைப்படி திருமணம் செய்து கொள்கிறான். அன்பில் கட்டுண்டு அவர்கள் இருவரும் அமிர்தசரஸில் வாழ்கிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார்கள். இந்நிலையில் அவளை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து ஜைனாப்பின்  உறவினர்கள் இந்தியா வருகின்றனர். வலுக்கட்டாயமாக அவளைப் பாகிஸ்தானுக்கு இழுத்துச் செல்கின்றனர். மூத்த பெண் குழந்தையை பூட்டா சிங்கிடம் விட்டுவிட்டு கைக் குழந்தையுடன் கதறி அழுதபடியே, ‘’நான் திரும்ப வருவேன், குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று அவள் சொல்லிச் செல்கிறாள். பாவம்! தான் திரும்பி  வரப்போவதில்லை என்பதை அவள் எப்படி அறிவாள்?

பாகிஸ்தானில் ஜைனாப்பின் மாமன் அவளைத் தன் மகனுக்குத் திருமணம் முடித்து வைக்கிறான். ஜைனாப்புக்கு பாகிஸ்தானில் அரசு தரும் நிலத்தைத் தான் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய திட்டம். மாமன் மகனுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை. இருப்பினும் தகப்பனின் பேராசைக்கு அவன் பலியாகிறான். இதற்கிடையில் பாகிஸ்தான் சென்று ஜைனாப்பைத் திரும்பக் கொண்டுவர பூட்டா சிங் நடவடிக்கை மேற்கொள்கிறான். பாகிஸ்தான் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கிறான். அமிர்தசரசிலிருந்து டில்லிக்கு பலமுறை பயணம் செய்கிறான். முஸ்லீமாக மதம் மாறினால் விசா எளிதில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஜைனாப் மீதான அன்பு அந்த முடிவுக்கும் அவனைத் தள்ளுகிறது. இஸ்லாமுக்கு மதம் மாறியதும் விசா கிடைக்கிறது. பாகிஸ்தான் சென்று ஜைனாப் இருக்குமிடம் சேருகிறான். ஆனால் ஜைனாப் தற்போது சூழ்நிலையின் கைதி. உறவினர்கள் கூடியிருந்த சபையின் முன்னால் ‘’நான் பூட்டா சிங்குடனே வாழ விரும்புகிறேன்; எனவே அவனுடன் செல்கிறேன்.” என்று  தைரியமாக அவளால் சொல்ல முடியவில்லை. தங்களின் இரண்டாவது குழந்தையையும் எடுத்துச் செல்லுமாறு அவள் கண்ணீர் மல்க பூட்டா சிங்கிடம் கேட்டுக் கொள்கிறாள். மனமுடைந்த பூட்டா சிங் தற்கொலை செய்து கொள்கிறான். காவியங்களில் இடம்பெறாத ஜைனாப் – பூட்டா சிங் காதல் கதை மிகப் பெரிய சோகத்தில் முடிகிறது. பிரிவினைக் காலத்தில் இப்படி எத்தனையோ காதலர்கள் மற்றும் திருமணமானவர்களின் வாழ்வு சூன்யமாகிப் போனது.

குடும்ப கௌரவம் என்ற பெயரில் பிரிவினைக் காலத்தில் நடந்த படுகொலைகளை ’கௌரவம்’ என்ற ஐந்தாவது அத்தியாயத்தில் ஊர்வசி பதிவு செய்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுதலைக்குப் பின்னான அரசியலில் அதிகம் தலையிட்டது. ஏதோ காங்கிரசும் அதன் தலைவர் நேருவும்தான் பிரிவினைக்குப் பொறுப்பு என்பதுபோல் அவர்களின் ’ஆர்கனைசர்’ பத்திரிகையில் எழுதியது. அன்று நேருவைத் தூற்றத் தொடங்கிய ஆர்எஸ்எஸ் இன்றுவரை அதனைக் கைவிடவில்லை. பாரதமாதாவின் ஒரு கையை நேரு வெட்டி எடுப்பது போன்ற கருத்துப்படத்தை  ’ஆர்கனைசர்’  வெளியிட்டது. பாகிஸ்தானை பாரதமாதாவின் வெட்டி எடுக்கப்பட்ட கை என்று  அந்தப் படத்தில்  அடையாளப்படுத்தியது. இந்தியப் பிரிவினையை அதிகம் வலியுறுத்திய அமைப்பு இந்து மகாசபை என்பது வரலாறு அறிந்த உண்மை. நேரு தலைமையிலான இந்திய அரசு இந்துப் பெண்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று அந்த அமைப்பு வீண்பழி சுமர்த்தியது. உண்மையில் அன்றிருந்த நேரு தலைமையிலான அரசு மகாத்மா காந்தியின் அறிவுரையைக் கேட்டு பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நிவாரணம் அளிப்பதில் கவனமாக இருந்தது. அன்று பாகிஸ்தானில் பொறுப்பிலிருந்த அரசும் கிட்டத்தட்ட இதே அரசியல் நிலைபாட்டையே கொண்டிருந்தது. நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை இரண்டு அரசுகளும் இணைந்தே செயல்பட்டன. ஆனால் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து இந்திய அரசை நிந்தித்தும், பாகிஸ்தானை தரக்குறைவாக ‘நாபாகிஸ்தான்’ (தூய்மையற்றது) என்றும் குறிப்பிட்டு வந்தது.

மதப் புனிதம், குடும்ப கௌரவம் இரண்டும் எப்போதும் பெண்களின் பொறுப்பாகப் பார்க்கப்படும் பழக்கம் எல்லா மதங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த இரண்டு உன்னதங்களுக்காக பெண்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி கடைப்பிடிக்கப்படுகிறது. தங்கள் அரசன் சண்டையில் தோற்றதும் நூற்றுக்கணக்கான இராஜபுத்திரப் பெண்கள் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். அவர்களை தியாகச் சின்னங்களாகப் போற்றித் துதிக்கும் வழக்கத்தைக் கொண்ட இந்திய நாட்டில் பிரிவினைக் காலத்திலும் பெண்களிடமிருந்து அதுபோன்ற தியாகங்களே எதிர்பார்க்கப்பட்டன. அல்லது அந்தப் பெண்கள்  தியாகங்களைச் செய்யுமாறு நிந்திக்கப்பட்டனர்.

’அமிர்தசரஸ் பஜார்’ பகுதியில் வாழ்ந்த மங்கள் சிங் என்ற எழுபது வயதுப் பெரியவர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஊர்வசிக்குக் கிடைக்கிறது. மங்கள் சிங்கின் குடும்பம் மிகப் பெரியது. சகோதரர்கள் நான்கு பேரும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து செல்ல நினைக்கிறார்கள். “பயணத்தின் நடுவில் தங்கள் குடும்பத்துப் பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படலாம், பாலியல் வன்முறைக்கு ஆளாக நேரிடலாம் என்பதால் பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் பதினேழுபேரை நாங்களே கொன்றோம். எங்கள் வீட்டுப் பெண்களும், குழந்தைகளும் அவர்களாகவே குடும்ப கௌரவத்தைக் காத்திட முன்வந்தனர். அந்தக் கொலைகளைச் செய்ய நாங்கள் பயப்படவில்லை. ஏனென்றால் அது குடும்ப கௌரவமாகும்” என்று பெருமையுடன் சொல்லி முடித்தார் மங்கள் சிங். ”யார் கௌரவத்தைக் காப்பாற்ற, யார் பயமின்றி இருந்தனர்,” என்ற விளக்கத்தை மங்கள் சிங்கிடம் நான் கேட்கவில்லை என்று முடிக்கிறார் ஊர்வசி. குடும்ப கௌரவம், மதப் புனிதம் இரண்டையும் காப்பாற்ற தங்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்ட பெண்கள் ஏராளம் என்பது ஊர்வசி கேட்டறிந்த வரலாறு.

‘குழந்தைகள்’ என்ற ஆறாவது பாகத்தில் ஊர்வசி புட்டாலியா பிரிவினைக்குள்ளான பஞ்சாப் மாகாணத்தின் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச்  சித்தரிக்கிறார். பிரிவினையின் வரலாற்றை எழுதியவர்கள் யாரும் குழந்தைகளைப் பற்றி எதுவும் எழுதாமல் சென்றது தன்னை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கியதாக ஊர்வசி சொல்கிறார். ஒருவரின் குழந்தைக் கால நினைவுகளை எப்படி வரலாற்று உண்மைகளாக ஏற்றுக் கொள்வது? ஒருவரின் குழந்தைக் கால நினைவுகள் அவரின் சுயசரிதை எழுதிட உதவிடலாம்.  குழந்தைக் கால நினைவுகள் வரலாற்றுச் சான்றாகி விடாது என்பதே வரலாற்றாய்வாளர்களின் வாதம். ஆனால் பிரிவினைக் காலக் கொடுமைகளின் வரலாறை எழுதும்போது குழந்தைக் கால நினைவுகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கையுடன் இருந்தார் ஊர்வசி. ஏனெனில் பிரிவினைத் துயரை அதிகம் தாங்கியவர்கள் குழந்தைகளே. எனவே ஊர்வசி பலரின் குழந்தைப் பருவ நினைவுகளையும் பதிவு செய்துள்ளார்.

அமிர்தசரஸ், டில்லி போன்ற நகரங்களில் இந்திய அரசு அனாதைக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான அனாதை இல்லங்களை உருவாக்குகிறது. 1947இல் அனாதைக் குழந்தைகளாக வாழ்ந்தவர்களை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்த போது தங்கள் குழந்தைப்பருவ நிகழ்வுகளை அவர்களால்  தெளிவாக மீட்டெடுக்க முடியவில்லை. உரையாடத் தொடங்கியதும் உள்ளத்தின் ஆழத்தில் படிந்திருந்த பழைய கொடூர நினைவுகள் மெல்ல மெல்ல பீறிக் கொண்டு வெளிவந்தன. ஊர்வசியும் அவருடைய குழுவினரும் பிரிவினைக் காலத்தில் உயிர் தப்பி, அனாதைகளாக வளர்ந்து வாழ்வை முற்றும் தொலைத்த குழந்தைகளையும் சந்தித்தனர். ஓரளவு சமாளித்து தங்கள் வாழ்வை வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட குழந்தைகளையும் சந்தித்தனர்.

டில்லி மருத்துவமனை ஒன்றில் வேலை செய்யும் குல்வந்த் சிங் என்ற பெரியவரைச் சந்தித்து ஊர்வசி உரையாடுகிறார். நீண்ட வெள்ளைத் தாடியுடன் இருந்த குல்வந்த் சிங் ஒரு கையை இழந்த  மாற்றுத் திறனாளி.  ஒரு  மருத்துவமனையில் அவர் பகலில் அலுவலராகப் பணிபுரிகிறார். மாலையில் அருகிலிருக்கும் குருதுவாராவில் சேவை செய்கிறார். தன்னுடைய மீதி வாழ்நாள் முழுவதையும் சேவையில் கழிப்பது என்ற முடிவுடன் இருக்கிறார். அவரிடம் நடத்திய நீண்ட உரையாடலில் அவரின் பால்ய கால நினைவுகளைக் கிளறி அவர் பாகிஸ்தானிலிருந்து தப்பித்து வந்த கதையை ஊர்வசி கேட்கிறார்.

குல்வந்த் சிங் சிறுவனாக இருக்கும்போது வாழ்ந்த ஊர் பிரிவினைக்குப்பின் பாகிஸ்தான் வசம் செல்கிறது. சீக்கியர்களே அந்த ஊரில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். இஸ்லாமியர்கள் புகுந்து சீக்கியர்களை வெட்டிக் கொல்கின்றனர். எங்கு பார்த்தாலும் பிணங்கள். சிறுவன் குல்வந்த் சிங் தன் தந்தையின் பிணத்துக்கருகில் படுத்துக் கிடக்கிறான். சுற்றிலும் தீ பற்றி எரிகிறது. நெருப்பின் சூடு தாங்க முடியாமல் தவிக்கிறான். மெல்ல எழுந்து செல்ல நினைக்கிறான். அப்போதுதான் தன்னுடைய ஒரு கை வெட்டப்பட்டுள்ளதை அவன் உணர்கிறான். சிறிது நேரத்தில் மயங்கி விழுகிறான். கண் விழித்துப் பார்த்தபோது தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை அறிகிறான். ராவல்பிண்டி மருத்துவ மனையில் ஓராண்டு சிகிச்சை பெறுகிறான். இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தில் அக்கறை காட்டுகிறது. குல்வந்த் சிங் உடல்நலம் பெற்றதும் அவனை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.  அவன் இந்தியா வந்து உறவினர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். இருப்பினும் பயனில்லை. அவனுடைய உறவினர்கள் அனாதைச் சிறுவன் குல்வந்த் சிங்கை சுமையாகவே  கருதுகின்றனர்.

இதனால் டில்லியில் ஒரு அனாதை இல்லத்தில் சேர்ந்து படிக்கிறான். பள்ளிப்படிப்பு முடிந்ததும் வேலையும் கிடைக்கிறது. பிரிவினையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இந்திய அரசு வேலையில் முன்னுரிமை வழங்கியது. இதனால் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. எல்லா குழந்தைகளுக்கும் இதுபோன்ற மறுவாழ்வு கிடைக்கவில்லை.  பிரிவினையின்போது அனாதைகளான சிறுமிகள் பலர் பாலியல் தொழிலில் சிக்கிச் சீரழிந்தனர். சிறுவர்களைக் கடத்திச் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடுவைத்த கயவர்களும் இருந்தனர். குழந்தைகள் இல்லாத தம்பதிகள் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்குமாறு அரசும், நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த சமூகச் செயற்பாட்டாளர்களும் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அகில இந்திய வானொலி நிலையம் அதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தது. தத்தெடுத்துக்கொள்ள முன்வந்த பலரும் ஆண் குழந்தைகளையே தேர்ந்தெடுத்தனர். பெண் குழந்தைகளை தத்தெடுத்துச் சென்ற சிலர் அவர்களை வீட்டுவேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களாக நடத்தியது அதிர்ச்சி அளித்தது.

’ஒடுக்கப்பட்டோர்’ என்ற ஏழாவது பாகம் இந்தியப் பிரிவினையினால் பாதிக்கப்பட்ட தலித்துகளின் துயரங்களைச் சித்தரிக்கிறது.  ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தில் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மதப்பிரிவினர் மட்டும் வாழ்ந்திடவில்லை.  தீண்டத்தகாதவர்கள் என்று இந்து சனாதனம் வரையறுத்துள்ள தலித் மக்களும் ஆயிரக்கணக்கில் வாழ்ந்தனர் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. பிரிவினையின்போது இவர்கள் நிலைமை என்னானது என்று எழுத்துவடிவிலான வரலாறு ஒன்றும் சொல்லவில்லை என்ற   குறையை ஊர்வசி சுட்டிக்காட்டுகிறார். இந்த நான்காவது பிரிவினரான தலித்துகள் அனுபவித்த துயரங்கள் மாயாராணி என்ற தலித் பெண்ணைச் சந்திக்கும்வரை தனக்கும் தெரியாமலிருந்தது குறித்து அவர் குற்ற உணர்வு கொள்கிறார். சாதியப் பாகுபாடுகள் நிறைந்த இந்தியாவில் சாதாரண நாட்களிலேயே தலித்துகள் மிகவும் மோசமாக நடத்தப்படும்போது பிரிவினைக்காலம் போன்ற அசாதராண சூழ்நிலையில் எவ்வளவு அதிகம் புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள்?

மாயாராணி ஒரு பள்ளியில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்தார். ஊர்வசியுடன் உரையாடும்போது மாயா தான் சிறுபிள்ளையாக இருந்தபோது செய்த குறும்புகளை அவர் தெரியப்படுத்தினார். ”பிரிவினைக்காலம் என்பதனால் ஊரே பதற்றமாக இருந்தது. இஸ்லாமியரின் தாக்குதலுக்குப் பயந்து இந்துக்களும், சீக்கியர்களும் ஊரை வீட்டு ஓடினர். அவர்களின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பாத்திரங்கள், ஆடைகள், கோதுமை, பருப்பு, போன்ற தானியங்கள் கிடைத்ததை எல்லாம் நாங்கள் எடுத்துக் கொண்டு வருவோம். பெரியவர்கள் திட்டினாலும் கேட்க மாட்டோம். இஸ்லாமியர்கள் இந்துக்கள், சீக்கியர்கள் மூவரும் அவர்களுக்குள் மட்டுமே சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால் எங்களை எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு எங்கள் மீது கருணை எல்லாம் இல்லை. அவர்களுக்கு எங்களின் சேவை முக்கியமானது. நாங்கள் இல்லாமல் அவர்களின் வீட்டுக் கழிப்பறைகளை யார் சுத்தப்படுத்துவது?

கலவரங்கள் முடிந்து, நிவாரணப் பணிகள் தொடங்கியபோது பெரிதும் பாதிக்கப்பட்டது தலித்துகளே. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் அரசு நிலம் கொடுத்தது.  ஆனால் தலித்துகளுக்கு நிலம் கொடுக்கவில்லை. அதேபோல் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் அரசு நிலம் கொடுத்தது. ஆனால் அங்கும் தலித்துகளுக்கு நிலம் கொடுக்கப்படவில்லை. நில உடைமையாளர்களுக்கு மட்டுமே நிலம் கொடுத்தார்கள். தலித்துகள் நிலத்தில் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்; அதனால் அவர்களுக்கு நிலம் கிடையாது. என்னவொரு சமூகநீதி? அதேபோல் இந்துக்களும், சீக்கியர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களில் தலித்துகளை அனுமதிக்கவில்லை. முகாமில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. தலித்துகள் அதனையும் இழந்தனர்.

தலித்துகளின் மத்தியில் நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த ராமேஸ்வரி நேரு (ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்) இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண விழைந்தார். அதற்காக அவர் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. இறுதியில் வெற்றி பெற்று தலித்துகளுக்கு நிலம் பெற்றுத் தந்தார். பிரிவினைக்கு முன்னரே தலித்துகள் தங்களுக்கும் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர் இந்துஸ்தான், பாகிஸ்தான், காலிஸ்தான் கேட்கிறார்கள். அதேபோல் எங்களுக்கும் ’அச்சுடிஸ்த்தான்’ (தூய்மையானவர்களின் நாடு) வேண்டும் என்றனர். ’அகில இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்பு’ சார்பாக அதன் தலைவர் ஹெச்.ஜெ.காண்டில்கர் அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனிடம் சர் சிரில் ராட்கிளிஃபின் எல்லை நிர்ணயக் குழுவில் (Boundary Commission) தலித்துகளுக்கும் பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.

தலித்துகள் இந்தியாவுக்குச் செல்வதை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்தியதற்கு, தலித்துகளின் மீதிருந்த அன்பு காரணம் அல்ல. அவர்கள் போய்விட்டால் துப்புரவுத் தொழிலை யார் செய்வது! தலித்துகளை ’அத்தியாவசியப் பணி’யில் ஈடுபடுவர்கள் என்று அறிவித்து அவர்கள் இந்தியாவுக்குச் செல்லத் தடை விதித்தது. கடல்வழியாகச் சென்று விடுவார்கள் என்பதால் படகுகளை நிறுத்தி அவ்வழியையும் அடைத்தது. அம்பேத்கர் இது குறித்து நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்து மகா சபை, காங்கிரஸ், முஸ்லீம் லீக், அகாலி தளம் மூன்றுமே தலித்துகளை வஞ்சித்ததை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்.

எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர் பட்ட அவதிகளை சித்தரிக்கத் தவறிவிட்டது என்ற தனது ஆதங்கத்தை ‘ஞாபகம்’ என்ற இறுதிப் பாகத்தில் ஊர்வசி வெளிப்படுத்துகிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் ஜெர்மனியில் யூதர்களுக்கு இழைத்த கொடூரம் ‘Holocaust’ என்று அழைக்கப்படுகிறது. 1947இல் இந்தியாவில் பிரிவினைக்காலத்தில் நிகழ்ந்த துயரத்தையும் ‘Holocaust’ என்றே அழைத்திட வேண்டும். இத்தகு பேரவலத்தை நினைவுகூருவதற்குப் போதுமான நினைவுச் சின்னங்களை இதுவரையிலும் இந்திய அரசு நிறுவாதது ஏன் என்ற கேள்வியையும் ஊர்வசி எழுப்புகிறார். சமூகத்தின் குரலற்றவர்களில் குரலாக வாய்மொழி வரலாறு இருந்திடும் என்பதை உறுதியுடன் அவர் கூறுகிறார். சமூகத்தின் நலிந்த பிரிவினருடன் நெருங்கி உரையாடும்போது மட்டுமே அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிய முடியும். அவர்கள் மனதின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் உண்மைகளை உடைத்து வெளிக்கொணர முடியும் என்று நம்புகிறார்.  ஊர்வசி புட்டாலியாவின் வாய்மொழி வரலாறான ’தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’ எழுதப்பட்ட வரலாற்றில் சொல்லப்படாத செய்திகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது என்பதில் ஐயமில்லை.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பெ.விஜயகுமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *