‘பசி என்றால் பசி. ஆனால் கத்தியாலும் முட்கரண்டியாலும் சமைத்த இறைச்சியை சாப்பிட்டு திருப்தி அடையும் பசியானது, கைகள், நகங்கள் மற்றும் பற்களின் உதவியுடன் பச்சையான இறைச்சியை விழுங்கும் பசியிலிருந்து வேறுபடுகிறது’ என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். இதன் மூலம் இருவேறு பசியை வேறுபடுத்துகிறார். பசிக்காக உணவு என்ற நிலைமாறி, உணவுக்காக பசி என்று மாற்றப்பட்டிருக்கிறது. பசி என்பது மனித இனத்தின் நீண்ட காலப் பிரச்சினையாகும். இன்றைய நிலைமையில் பசி என்பது முதலாளித்துவத்தின் அடிப்படையான பிரச்சினையாக மாறியது. எனவே உணவுப் பொருட்கள் தொழில்முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை பண்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. தேவைக்காக உற்பத்திச் செய்யபட்ட உணவு, சந்தைக்கான உற்பத்தியாக மாறியது குறித்தும், அதனால் பெரும்பான்மை மக்கள் உணவின்றி பட்டினியால் சாகும் அவலநிலைக்கு ஆளாயிருப்பது குறித்தும் இக்கட்டுரை விவாதிக்கிறது.
மனித தேவையும் உழைப்பும்
உணவு, நீர், தங்குமிடம், உடை, வாழ்க்கை முறைகள் போன்ற வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு மனித இருப்பு முதன்மையான ஆதாரமாகும்; மேலும் அனைத்து உழைப்பும் முதலில் உணவு ஒதுக்கீடு மற்றும் உற்பத்தியை நோக்கியதாகும் என்றார் மார்க்ஸ். இதற்காக, மனிதன் தனது உடலுறுப்புகளைப் பயன்படுத்துகிறான். முக்கியமாக மூளை, கைகள், பேச்சுறுப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்றை செயல்படுத்தும்போது விளையும் ஆற்றல்தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு பெறுகின்றனர். எனவேதான், மனிதன் உழைப்பு என்னும் ஆற்றலால் இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான் என்று எங்கல்ஸ் கூறினார்.
உணவு சங்கிலி (food chain)
விவசாய உற்பத்திக்கு நிலம்தான் முதன்மையான ஆதாரம். ஆரம்பத்தில், உணவு உற்பத்தி பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்து நடைபெற்றது. நிலத்தைப் பண்படுத்துவது, விதையை விதைப்பது, பயிரை வளர்ப்பது, களையை யெடுப்பது, உரத்தி இடுவது, பூச்சிகொல்லித் தெளிப்பது, அறுவடைச் செய்வது, சந்தையை நாடுவது, நுகர்வோரைச் சென்று சேர்வது, உணவு சமைப்பது, உண்ணுவது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் உணவு உற்பத்தியின் தொடர் நடவடிக்கைகளாகும். உணவு விளைவிக்கும் நிலத்திலிருந்து சாப்பிடும் தட்டு வரையிலும் நடைபெறும் நிகழ்வுமுறைகளின் தொடர்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் உணவுச் சங்கிலி என்கிறோம். இயற்கையாக நடைபெற்ற உணவு உற்பத்தி தற்போது தொழில்மயமாக்கப் பட்டுள்ளது. உணவை நுகர்வோரின் கலாச்சாரமும் மாறியிருக்கிறது. உற்பத்திக்கும், நுகர்வுக்கும் ஆன உறவு சிக்கலாகிவிட்டது. உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு இடையிலான பிளவு அதிகரித்துள்ளது.. எப்போது உணவு உற்பத்தி தொழில்முறையில் ஆனதாக மாறியதோ, உணவு எப்போது சரக்காக மாறியதோ அப்போதே உணவுச் சங்கிலி அறுபட்டுப் போனது.
காலநிலை மற்றும் உணவு சாகுபடி, மண்ணின் வேதியியல், தொழில்துறை விவசாயம், கால்நடை நிலைமைகள், உணவு உற்பத்தி மற்றும் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்கள், உணவுப் பொருட்களில் நச்சு சேர்க்கைகள், உணவு பாதுகாப்பு போன்றவை யாவும் விவசாயத்தில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் நேரடி விளைவுகளாகும். அதுவரை பேணப்பட்டு வந்த உணவுச் சங்கிலித் தொடர் அறுபட்டது. இதனால், தற்கால சமுதாயத்தில் உணவு மலிவான தன்மையைப் பெற்றிருக்கிறது. மேலும் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லான நுகர்வின் வடிவங்கள் பெருகியுள்ளன.
விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் உணவுச் சங்கிலித் தொடரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையான முறையில் செய்துகொண்டிருந்த விவசாயத்தில் முதலாளித்துவம் என்னென்ன மாற்றங்களை உருவாக்கின என்பதை இனி காண்போம்.
விவசாயத்தின் புதிய ஆட்சி (new regime of faming)
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனில் ஏற்பட்ட உணவு உற்பத்தியில் உருவான புதிய மாற்றங்களைப் பற்றி மார்க்ஸ் பகுப்பாய்வுச் செய்தார். முதலில் விவசாயத்தில் உருவான ஆரம்பகால பொருளாதார முன்னேற்றங்களை அவர் மறுக்கவில்லை. அதாவது ‘புதிய உணவு முறைகள் மற்றும் பசுமை பயிர்களை செயற்கையாக வளர்ப்பது, இயந்திரத்தை அறிமுகப்படுத்துதல், களிமண் மண்ணை புதிய முறையில் பண்படுத்துவது, கனிம உரங்களின் பயன்பாடு, நீராவி-இயந்திரத்தினை ஈடுபடுத்தியது, அனைத்து வகையான புதிய இயந்திரங்கள் ஆகியவை பிரிட்டானிய விவசாயத்திற்கு ஒரு புதிய வளர்ச்சியைக் கொடுத்தது. பொதுவாக அதி தீவிரமான சாகுபடி அனைத்தும் இந்த சகாப்தத்தின் சிறப்பியல்பு…. மண்ணின் உண்மையான உற்பத்தி வருவாய் வேகமாக உயர்ந்தது. ஒரு ஏக்கருக்கு அதிக மூலதன செலவினம், அதன் விளைவாக பண்ணைகளின் விரைவான அளவில் குவிந்திருப்பது ஆகியவை புதிய முறையின் அத்தியாவசிய நிலைமைகளாகும்’ என உயர் விவசாயத்தில் ஏற்பட்ட ஆரம்ப பொருளாதார முன்னேற்றங்களை மார்க்ஸ் விவரிக்கிறார்.
பின்னர், விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. உரங்கள் பயன்படுத்தப்பட்டன. பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்டன. விவசாய உற்பத்தியில் வளர்ச்சி என்ற பெயரில் உற்பத்தி இடுபொருட்களிலும் கருவிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால், நிலத்தில் இருந்த சத்துக்கள் அழிக்கப்பட்டன. எனவேதான், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருந்தாலும், ஒரு பகுத்தறிவுள்ள வேளாண்மை முதலாளித்துவ அமைப்புடன் பொருந்தாது என்றார் மார்க்ஸ்.
இயற்கையான செயல்முறையை கொண்டிருந்த உணவு உற்பத்தி, தொழிற்சாலைச் சார்ந்த தயாரிப்பு செயல்முறையாக மாறியிருப்பதைதான் மார்க்ஸ் விவசாய உற்பத்தியின் புதிய ஆட்சி (new regime of high faming) என்று கூறுகிறார்.
மேற்குறிப்பிட்ட புதிய முறையின் விளைவு தானிய உற்பத்தி, இறைச்சிக்கான உற்பத்தியாக மாறியதாகும். உணவுப் பொருள் உற்பத்திக்கு பதிலாக இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், மேய்ச்சல் மற்றும் தீவனப் பயிர்களின் உற்பத்தி அதிகரித்தது. கால்நடைகளின் இனப்பெருக்கம், மருத்துவ சிகிச்சை முறை, இன்ன பிற விசயங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக மார்க்ஸ் கூறினார்.
இத்தகைய மாற்றங்களின் காரணமாக தானியத்தை உணவாகக் கொண்டிருந்த உழைக்கின்ற மக்கள், பெரும்பாலும் ரொட்டியை உண்டு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களுக்கு இறைச்சியும் பால்பொருட்களும் எட்டா கனியாக மாறின. ஆனால் இவை உயர் வகுப்பினருக்கான உணவாக மாறியது. விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் மொத்த விளைவாக, ஒரு புறம் உணவுப் பொருட்கள் உபரியாக குவிந்துக் கிடக்கிறது. மறுபுறம், உழைக்கின்ற மக்கள் பட்டினியால் மாண்டு கொண்டிருக்கின்றனர். இந்த அராஜகதனமான உற்பத்திமுறை, உணவுக்கும் பட்டினிக்கும் இடையே முரண்பாட்டைத் தோற்றுவித்தது. வேளாண்மையில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினால், உண்வுப் பொருட்களின் உற்பத்தி அபரிமிதமாக இருந்தாலும், உழைக்கின்ற மக்களுக்கு உணவும் கிடைப்பதில்லை, ஊட்டச் சத்தும் கிடைப்பதில்லை. இது குறித்த மார்க்சின் ஆய்வுகளை இனிப் பார்க்கப் போகிறோம்.
தொழிலாளர்களின் உணவும் ஊட்டச் சத்தும்
முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் உணவு எவ்வாறு உற்பத்திச் செய்யப்படுகிறது என்பதையும், எவ்வாறு விநியோகம் செய்யப்படுகிறது என்பதையும், எந்த வகையில் நுகர்வு செய்யப்படுகிறது என்பதையும் மார்க்ஸ் ஆய்வு செய்து வந்தார். உழைக்கின்ற மக்கள் உண்ணுகின்ற உணவு பற்றியும் சத்துணவு குறைபாடு பற்றியும் மார்க்சும் எங்கல்சும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பிரிட்டன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கின்ற மக்கள் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதைக் கவனத்துடன் ஆராய்ந்தார். பிரிட்டிஷ் ஆய்வாளர்களான சைமன், அந்தோனி வோல் ஆகியோரது அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு மார்க்ஸ் ஆய்வு செய்தார்.
கிராமத்தைப் போலவே நகரத்திலும் பிரதான உணவு ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் தேநீர்…… கிராமப்புற ஏழைகள் பறவைகளை சாப்பிட்டால், நகர்ப்புற ஏழைகள் முன்கூட்டியே பிறந்த கன்றுகளையும், நோயுற்ற ஆடுகளையும் சாப்பிட்டார்கள்…. ஸ்டாக்கிங் நெசவாளர்கள், காலணி தயாரிப்பாளர்கள், தையல்பெண்கள் மற்றும் பட்டு நெசவாளர்கள் ஆகியோர் வாரத்திற்கு ஒரு பவுண்டுக்கும் குறைவான இறைச்சியையும், எட்டு அவுன்ஸ் கொழுப்புக்கும் குறைவான உனவையும் சாப்பிட்டனர். அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகளை ரொட்டியிலிருந்து மட்டுமே பெற்றுகொண்டனர்.
லங்காஷயர் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் குறைந்தபட்ச அளவுள்ள கார்போஹைட்ரேட்டுகளைகூட பெறவில்லை. வேலை இழந்த தொழிலாளர்கள் இன்னும் குறைவாகவே பெற்றனர். வேலைவாய்ப்பு அற்ற தொழிலாளர்கள் குறைந்தபட்ச புரதத்தின் அளவைவிட குறைவாகப் பெற்றனர். ஒரு தொழிலாளி உட்கொள்ளும் சராசரி இறைச்சி வாரத்திற்கு 13.6 அவுன்ஸ் மட்டுமே. விவசாயத் தொழிலாளர்களும் இதேபோல் கார்போஹைட்ரைடு உள்ள உணவையும் புரதம் நிறைந்திருக்கும் உணவையும் இழந்தனர். தொழில்துறை நகரங்களில் தொழிலாளர்கள் போதிய அளவு ஊட்டச்சத்து உட்கொள்வதைக் காட்டும் அட்டவணையை அவர் உருவாக்கினார்.
விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களில் பெரும் பகுதியினரின் உணவு போதுமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இல்லை. எனவே அவர்கள் அனைவரும் பட்டினி நோய்களால் மிகவும் துன்பப்படுகின்றனர் என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்ஸ் பல்வேறு தொழிலாளர்களின் ஊட்டச்சத்து குறித்து ஒரு புள்ளிவிவர அட்டவணையை உருவாக்கினார். அந்த முடிவுகள் அவரை திடுக்கிட வைப்பதாக இருந்தன. அதாவது, இரு மடங்கு அதிகமாக உழைக்கும்போது, விவசாயத் தொழிலாளர்கள் 61 சதவிகித புரதத்தை மட்டுமே பெற்றனர், 79 சதவிகிதம் நைட்ரஜன் அல்லாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் 70 சதவீதம் கனிமப் பொருட்கள் ஆகியவற்றை பெறுகின்றனர் என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து ஏங்கல்ஸும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1845 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, உணவு பற்றாக்குறை மற்றும் அதிகரித்த விலைகள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் நகர்ப்புற தொழிலாளர்கள் மிகக் குறைவான ஊட்டச்சத்து கொண்ட உனவை எடுக்கவேண்டிய நிலையிருந்தது. அதேபோல் பல்வேறு நோய்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடே முக்கிய காரணமாகும் என்று வாதிட்டார். இதை மருத்துவ துறையினர் கண்டறிந்து கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கும் முன்பே எங்கல்ஸ் கண்டறிந்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவு மற்றும் வகையை பற்றி ஆய்வு செய்த மார்க்ஸ், உணவு சீரழிவு, சேர்க்கைகள் மற்றும் நச்சுகள் பற்றிய பிரச்சினைகளையும் கையாண்டார். தொழிலாளர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் வழங்கப்படும் பொருட்கள் எந்தளவு சீரழிந்து இருந்தன என்பதை கலப்படம் குறித்த ஆய்வில் மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்யும்பொது ஏங்கல்ஸ் இதே போன்ற பிரச்சினைகளை எழுப்பினார். அங்கு அடிக்கடி உணவை கலப்படம் செய்வது ஊட்டச்சத்தில் ஒரு முக்கிய பிரச்சினை என்று அவர் வாதிட்டார். ஒரு கட்டுரையை அவர் மேற்கோள் காட்டி, சர்க்கரை, பெரும்பாலும் ஒரு ரசாயனப் பொருளுடன் கலக்கப்படுகிறது என்றும், கோகோ, மட்டன் கொழுப்புடன் கலப்படம் செய்யப்படுகிறது என்றும் மிளகு, உமிகளில் இருந்து எடுக்கப்படும் தூசுகளால் கலப்படம் செய்யப்படுகிறது என்றும் எங்கல்ஸ் கூறினார்.
லண்டன் மருத்துவரான ஹாசல் என்பவர் உணவுப் பொருட்களில் இருந்த கலப்படத்தை ஆய்வுச் செய்து எத்தனைப் பொருட்களில், என்ன வகையான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன, அவை எத்தகைய பாதிப்பை உருவாக்குகின்றன என்பதை ஆய்வுச் செய்து வெளியிட்டார். மேலும் உணவிலும் மருத்துவத்திலும் எவ்வாறு மோசடி நடக்கின்றது என்பதை அம்பலப்படுத்தினார்.
தேவைக்கான உற்பத்தியல்ல.
உலகத்தின் உற்பத்தியாகும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு நுகரப்படுவதில்லை. உணவு விளைவிக்கும் நிலத்திலிருந்து சாப்பிடும் தட்டு வரையிலும் இருக்கும் உணவுச் சங்கிலித் தொடர் அறுந்து போனால் தேவையானவர்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் விளைவாக உணவு உபரியாக வீணடிக்கப்படுகின்றது. உணவு உபரியாக இருக்கும் நாடுகளில்தான் அதிமான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். உணவு பற்றாக் குறையால் பட்டினியால் துன்பப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது.
முதலாளிகள் சந்தையில் விற்க வேண்டிய சரக்குகளை மட்டும் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உணவை உற்பத்திச் செய்வதில்லை. எந்த வகையான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், லாபத்தை அதிகரிப்பதே அவர்களின் குறிக்கோள். உணவு சங்கிலித் தொடரைச் சிதைப்பது உணவு உற்பத்தியின் அளவால் அல்ல, மாறாக இலாபத்தை மட்டும் தேடுவதால். இதன் விளைவு பசியும், பட்டினிச் சாவுகளும்தான். பசியாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும், உலகத்தின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மரித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளைப் பற்றித்தான் இனி பார்க்க இருக்கிறோம்.
பசிக் குறியீட்டு அட்டவணை
முதலில் பசிக் குறியீடு என்றால் என்ன என்று பார்ப்போம். உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பட்டினியின் அளவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குறைபாடு, குழந்தைகளின் உடல்குறைபாடுகள், குழந்தை இறப்பு ஆகிய நான்கு விசயங்களை அடிப்படையாகக் கொண்டு உலகப் பட்டினிக் குறியீட்டு அட்டவணை தயார் செய்யப்படுகிறது
உலக அளவிலும், தேசிய அளவிலும், வட்டார அளவிலும் பசி குறித்து அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்கும், பசிக்கு எதிரான திட்டங்களில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளை மதிப்பிடுவதற்கும் வருடாந்திரக் குறியீட்டுப் பட்டியல், ஐக்கிய நாடுகளின் அமைப்புகளால் வடிவமைக்கப்படுகிறது. 2000-ஆம் ஆண்டில், 113 நாடுகள் கொண்ட பசிக் குறியீடு பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்திருந்தது. உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை கொண்ட நாடுகள் 2014ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55வது இடத்தில் இருந்தது. உலகளாவிய பட்டினிக் குறியீடு – 2019 இன் படி, 117 நாடுகளில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது.
இந்த கணக்கீடு இது குழந்தை வளர்ச்சியின்மை, எடை குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில் பாகிஸ்தான் (94), பங்களாதேஷ் (88) மற்றும் இலங்கை (66) ஆகியவற்றை விட இந்தியா மோசமாக உள்ளது. ‘கடுமையான பசி’ என்ற நிலைக்கு தள்ளப்பட்ட 45 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில், ஆறு முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட அனைத்து குழந்தைகளில் வெறும் 9.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவு அளிக்கப்படுகிறது என்று ஒரு அறிக்கைக் கூறுகிறது.
உலக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு
தற்போது 10 பில்லியன் நபர்களுக்கு உணவளிக்க போதுமான உணவு கையிருப்பில் உள்ளது. ஆயினும், உலகில் உள்ள 7.1 பில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 870 மில்லியன் பேர் நீண்டகால ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஏழை நாடுகளில் 100 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்; மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 3.1 மில்லியன் பேர் இறக்கின்றனர். வளரும் நாடுகளில் 66 மில்லியன் குழந்தைகளுக்கு பசியுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்காகும் செலவு வெறும் 3.2 பில்லியன் டாலர் மட்டுமே.
முதலாளித்துவ உலகின் இந்த கொடூரமான காட்டுமிராண்டித்தனத்தால் நோய்வாய்ப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர். உலக அளவில், தற்போது 85 கோடி மக்கள் போதுமான உணவின்மையாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலும் தவிக்கும் நிலையில், மண்ணில் உள்ள வளங்கள் குறையுமானால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது.
சமூக அமைப்பு, உற்பத்தித்திறனில் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும் வகையில் உற்பத்தித் திறனும், தொழில்நுட்பங்களும் வளர்ந்துள்ளன. ஆனால், மனிதர்கள் பட்டினியால் இறந்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு புறம், தாம் விளைவித்த உணவுப் பொருட்களை விவசாயிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் செயற்கையாக விலையை உயர்த்துவதற்காக மில்லியன் கணக்கான டன் எடையுள்ள உணவுப் பொருட்களைக் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்படுகின்றன. பட்டினி என்பது போதுமான உணவுப்பொருட்களை விளைவிக்க முடியாமல் போனதால் உருவானதன்று. மாறாக முதலாளித்துவக் கட்டமைப்பு மற்றும் அரசியல் நிலைமைகளின் நேரடி விளைவாகும்.
ஒரே நேரத்தில், 1.5 பில்லியன் மக்கள் இன்னும் பசியுடன் இருக்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும் உணவுக்காக கலவரங்கள் இன்னமும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சாப்பிட வேண்டிய உணவு இல்லாததால் அல்ல. முதலாளித்துவ உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு பங்கிடப்படாது என்பதுதான் விதி. இதற்கும் மனிதர்களின் உற்பத்தித் திறனுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மாறாக, இந்தக் கட்டமைப்புதான் இத்தகைய நிலைமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் வேளாண்மை அறிவியலின் முன்னேற்றங்கள் மூலம் அனைவருக்கும் ஏராளமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் சுவையான உணவை உற்பத்தி செய்ய முடியும். மலிவான, சுவையான மற்றும் சுவாரஸ்யமான உணவை வழங்கும் பொதுஉணவகங்களின் பரந்த வலையமைப்பை உருவாக்க உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் முதலாளிகளுக்கு முக்கியமானது உணவின் தரமனறு; மனித ஆரோக்கியமும் அன்று; மாறாக லாபத்தை அதிகரிப்பது. மனிதனின் தேவைக்காக அல்லாமல் லாபத்துக்காக உற்பத்திச் செய்தால், மக்கள் பட்டினியில்தான் இருப்பார்கள்.
இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு
ஆரோக்கியத்திற்குத் தேவையான தினசரி கலோரியின் அளவு 2100 கலோரிகள். உலகத்தில் உள்ள மொத்த உணவைப் பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 2700 கலோரிகள் கிடைக்கும் என்கிறது ஐ.நா.வின் புள்ளிவிவரம். உண்மையில், உணவு இல்லாத காரணத்தினால் இந்த உலகில் யாரும் பட்டினிக் கிடப்பதில்லை. மாறாக தேவையான மக்களுக்கு உணவு சென்று சேர்வதில்லை என்பதுதான் உண்மை. உணவு ஏராளமாக கையிருப்பில் இருக்கிறது. தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் உபரி உணவு தேவையான மக்களுக்குச் சென்று சேர்ப்பதைவிட, அதிலிருந்து லாபத்தைப் பிழிந்தெடுப்பதில்தான் அரசுகளுக்கு நாட்டமிருக்கிறது.
பெண்களைப் பொருத்தவரை, உணவு பாதுகாப்பு இல்லை. உலகத்தின் உள்ள மொத்த விவசாயிகளில் பாதிப்பேர் பெண்விவசாயிகள். ஆனால் ஆண் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூலி, அரசு சலுகை மற்றும் வேலைச் செய்யும் சூழல் இருப்பதில்லை. ஆண்களுக்கு கொடுக்கப்படும் ஆதாயத்தையும் சலுகைகளையும் பெண்களுக்கு வழங்கப்பட்டால், உலகில் பட்டினியால் துன்பப்படும் 150 மில்லியன் மக்களை பசிப்பிணியிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
பொதுவாக 821 மில்லியன் மக்களுக்குப் பொதுமான உணவு கிடைப்பதில்லை. ஒன்பதில் ஒருவருக்கு இரவு உணவு இல்லை. 20 மில்லியன் மக்களுக்கு உணவு பஞ்சத்தால் பெரும் பாதிப்பை அடையப் போகிறார்கள். இந்த எண்ணிக்கையில் பெண்களும் குழ்ந்தைகளும் 60% ஆகும். சுமார் 520 மில்லியன் மக்கள் ஊட்டச் சத்து இல்லாமையால் நோயுற்றுக் கிடக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
சென்ற 2019-ம் ஆண்டு ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள, உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையில் உலகளவில், 2018-ம் ஆண்டில், 82 கோடி மக்களுக்கு சாப்பிடப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்று மதிப்பிட்டுள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 81.1 கோடியாக இருந்தது.
அதாவது போதுமான உணவு கிடைக்காதோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அனைத்துப் பகுதிகளிலும் அதிக பருமன் கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
5% குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் (5-19 வயது) அதிக எடை கொண்டவர்கள்; 10 குழந்தைகளில் ஒருவர் (5-9 வயது) நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள்; மற்றும் அதே வயதினரில் 1% நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று, அக்டோபர் 2019 இல் வெளியிடப்பட்ட சி.என்.என்.எஸ். அறிக்கையை சுட்டிக்காட்டி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
ஐந்து வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளில் மூன்றில் ஒருவர், வளர்ச்சி குறைபாடு மற்றும் எடை குறைபாடு கொண்டவர்கள்; அதேபோல ஆறில் ஒருவர் உயரத்திற்கு ஏற்ற எடை குறைபாடு, மற்றும் ஐந்து பேரில் இருவருக்கு இரத்த சோகை இருப்பது, விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு மூலம் தெரியவருகிறது. இது 5-14 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை பற்றியும் அறிக்கையை வழங்கி உள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு, மற்ற நாடுகளில் உள்ள குழந்தைகளையும் விடவும் இந்தியாவில் 20.8 சதவீதமாக உள்ளது. குழந்தைகள் உடல் குறைபாடு 37.9 சதவீதமாக உள்ளது. பட்டினியில் இந்தியாவில் உள்ள அளவு 30.3 சதவீதம் ஆக உள்ளது. இந்த அளவீடு பட்டினி மிக தீவிரமான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.
பட்டினிச்சாவு
இந்தியாவில் உணவு தானிய கையிருப்பு 58.49 மில்லியன் டன்கள். இந்திய மக்களின் உணவுத் தேவை 21 மில்லியன் டன்கள். ஆக சுமார் 30.57 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் உபரியாக இருக்கின்றது. இந்நிலையில்தான் வருடத்திற்கு ஒன்பது மில்லியன் மக்கள் பசியால் துடித்து இறக்கின்றனர். இவர்களில் 6 மில்லியன் பேர் குழந்தைகள். நாட்டில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் வெறும் வயிற்றில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 9 மில்லியன் மக்கள் பசியாலும், பசி தொடர்பான நோய்களாலும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் 6 மில்லியன் குழந்தைளும் அடங்கும் என்று ஓர் அறிக்கைக் கூறுகிறது. மேலும் 2 மில்லியன் மக்கள் போதுமான உணவு இன்றி மறைமுக பசிப்பிணியால் (hidden hunger) துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற கொடும் நோய்களை விடவும் பட்டினி நோய் கொடூரமானது என்பதை மேற்கண்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 2017 இல் 821 மில்லியன் மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அல்லது ஒன்பது நபர்களுக்கு ஒருவர் பசியால் துன்பப்படுகிறார். ஆசியாவில் 515 மில்லியன் மக்களும் 256.5 மில்லியன் ஆப்பிரிக்காவிலும், 39 மில்லியன் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருக்கின்றனர். இந்நிலையில் இழவுவீட்டில் இடிவந்து விழுந்தமாதிரி கொரானாவின் தாக்குதல் நடைபெற்றது. இதனால் வந்த கூடுதலான பாதிப்புகளை இனிப் பார்ப்போம்.
வறுமையில் வாடும் மக்கள் மீது கொரானா தொடுத்த ஏவுகணை
ஏற்கனவே வறுமையில் வாடும் வறிய மக்களின் வாழ்க்கையில், பசி கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கொரானா என்ற ஏவுகணை நேராக இவர்களைத் தான் முதலில் தாக்கியது. உழைக்கின்ற மக்களின் மீது பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியிலும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
நடப்பாண்டில் உலகளவில் சுமார் 135 பில்லியன் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ள ஐநா மன்ற தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 265 மில்லியன் மக்கள் பட்டினியில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் எச்சரிக்கிறது. இந்நிலையில் உலகளவில் 368 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியில் பெற்று வந்த சாதாரண உணவை இழந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
உலக அளவில் ஆய்வு நடத்திய நியூயார்க் டைம்ஸ், இந்தியா முதல் கென்யா வரை உலக அளவில் பசி பட்டினி மக்களை வாட்டி வதைக்கிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு ரொட்டி மற்றும் வறுத்த காய்கறிகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கென்ய தலைநகரான நைரோபியில் ஏராளமான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். உலகில் திரும்பிய பக்கம் எல்லாம் இதுபோன்ற காட்சியாகளே தென்படுகின்றன.
எண்ணை வருவாயை அதிக அளவில் பயன்படுத்தி வந்த ஈரான் போன்ற நாடுகளும் வறுமைக்கு ஆளாகியுள்ளது. வெனிசுலாவில் ஏற்கனவே பொருளாதார சரிவில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் வடக்கு சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் இடம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மோசமான விளைவுகளை கொரோனா ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மில்லியன் கணக்கான மக்களை பட்டினியில் தள்ளியுள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் உணவுக்கான கவலை அதிகரித்துள்ளன.
பசி கொடுமையால் துயருற்று இருக்கும் மொத்த வறியவர்களில் 98% பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். அதாவது ஆசியாவில் பகுதிகளில்தான் அதிகம். அடுத்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன.
ஆப்பிரிக்காவின் இன்றைய நிலையை விளக்க, கொரோனா ஊரடங்கால் உணவிற்காக மக்கள் பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்த காட்சி ஒன்றே போதும். உலக நாடுகளிலேயே ஆப்பிரிக்காவின் நிலைமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏற்கனவே வேலையில்லாமல் திண்டாடும் மக்கள், அதிகரித்து கொண்டிருந்தனர். உள்நாட்டில் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் மிகவும் கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பொது சுகாதாரம் என்பது கொஞ்சமும் கிடையாது.
இங்குள்ள மனிதர்கள், விலங்குகளைவிட கீழான வாழ்க்கை நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர். சூடான் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகள் உணவுக்காக திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உகண்டா மட்டும் எத்தியோப்பியா, தென்சூடான் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகளிலும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாலி நைஜர் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். ஆப்பிரிக்காஅவில் மட்டும் பசியால் துன்பப்படும் மக்களின் எண்ணிக்கை, 135 மில்லியனிலிருந்து 250 மில்லியனாக உயரப்போகிறது என்கிறது ஓர் ஆய்வு.
இதுகாறும், உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உணவுச் சங்கிலித் தொடர் முறிந்துப் போனது குறித்தும், அதனால் உழைக்கின்ற மக்கள் உணவு கிடைக்காமலும், ஊட்டச்சத்தைப் பெற முடியாமலும், பசியாலும் பட்டினியாலும் இறந்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறித்தும், மக்கள் கொடூரமான நோய்களால் பலியாவதை விடவும் பசியால் மாண்டு போகிறவர்களே அதிகம் என்பதையும் பார்த்தோம்.
இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலம், தொழிற்சாலையாக மாறிவிட்டது. அங்கு உணவு விளைவிக்கப் படுவதில்லை. மாறாக சந்தைக்கான சரக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அவற்றால் மனிதத் தேவைகள் பூர்த்திச் செய்யப்படுவதில்லை. முதலாளித்துவத்தின் அகோரப் பசிக்கு, லாபங்கள் மட்டும் போதுமானதாக இல்லை, அதற்கு உழைக்கின்ற மக்களும் சேர்ந்தே இரையாகின்றனர்.
References:-
- The facts: what you need to know about global hunger
- Report on Global Hunger, World Health Organisation
- Marx as a Food Theorist, Monthly Review
- Food and the Socialist Revolution