கல்யாணசுந்தரம்னு ஏதோ ஒரு சின்ன பையன் புதுசா பாட்டு எழுதூராணாமே? பட்டி தொட்டில இருந்து பாமர மக்களையும் தாளம் போட வைக்கிறான்… படிக்காத பையளுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஞானம்? இப்படி தமிழ் திரை உலகமே ஆங்காங்கே முணுமுணுத்தது. அவன் எழுதும் வரிகள் எளிமையான நடையில், கேட்டதாக இருக்கும் ஆனால் அவைகள் சொல்ல வரும் கருத்துக்கள் இன்று வரை எந்த எழுத்தாளனும் தீண்டா எல்லையாக இருந்தது.
கடினமான தமிழ்ச் சொற்களால் பக்தி பாடல்களா, காதல் பாடல்களா என்று நீயா நானா களம் இறங்கியதின் இடையில் முற்போக்கு பாடல்களால் தனக்கென ஒரு தடத்தை ஆழமாக பதிக்க ஆரம்பித்தான் கல்யாணசுந்தரம். அன்றுவரை இருந்த தமிழ் திரைப்பட பாடல்களின் நிறத்தை மங்கச் செய்து புதிதாக சிவப்பு நிறத்தை பூசி அழகு பார்த்தான் அந்த பாட்டாளி கவிஞன்….
பாசவலை திரைப்படத்தில் “குட்டியாடு தப்பி வந்தா” என்ற பாடலைத் தொடர்ந்து அதே திரைப்படத்தில் இன்னொரு பாடலை எழுதும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு வருகிறது… ஒரு சூனியக்காரி தனது காதலனை நாயாக மாற்றி விடுகிறாள். இந்த சந்தர்ப்பத்தில் சூனியக்காரி காதலனிடம் காதல் வயப்பட்டு பாடுவது போல் ஒரு காட்சி. இதற்கு பொருத்தமான பாடலை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் கல்யாணசுந்தரத்திடம் கூறுகிறார்.
“இதற்கு எந்த மாதிரி அண்ணே எழுதுறது? என்று கல்யாணசுந்தரம் எம்.எஸ்.வி-யிடம் கேட்க

“இது காதல் பாட்டு தானே! மச்சான் நீ ரொம்ப அழகா இருக்க.. உன்னை பார்த்து மயங்கிட்டேன் இப்படி ஏதாவது வரிகளை போட்டு எழுதுப்பா… ” என்று எம்.எஸ்.வி சொன்னதையே தனது பாடல் வரிகளாக மாற்றினார் கல்யாணசுந்தரம்… “மச்சான் உன்னை பார்த்து மயங்கி போன நேத்து, மனசு வச்சா இன்பம் வரும் பழைய நடையை மாத்து, நீ பழைய நடையை மாத்து” என்று நல்ல தமிழ் நடையில் ஒரு பாடலை எழுதி எம்.எஸ்.வி-யிடம் கொடுத்தார்.
இது நல்ல அழகான தமிழ் நடையில் உள்ள பாடலாக இருந்தாலும் தயாரிப்பாளரான டி.ஆர்.சுந்தரத்துக்கு திருப்தி அளிக்கவில்லை.
“இந்தப் பாடலை மாற்ற வேண்டும். இந்தப் பாடல் எழுதின பையன கூப்பிடுங்க” என்று டி.ஆர்.சுந்தரம், எம்.எஸ்.வி-யிடம் கூறினார்..” அடுத்த நாளே எம்.எஸ்.வி-யும் கல்யாண சுந்தரத்தை டி.ஆர்.சுந்தரத்திடம் அழைத்துச் செல்கிறார்.
டி.ஆர்.சுந்தரம் வெறும் ஒரு தயாரிப்பாளர் மட்டும் அல்ல, அன்று தமிழ் சினிமா உலகத்தையே ஆட்டி படைத்த முதலாளி. லண்டனில் சினிமா தொழில்நுட்பத்தை பயின்றவர். “மாடர்ன் தியேட்டர்ஸ்” என்ற ஒரு மிகப்பெரிய சினிமா தொழிற்சாலையே நடத்தி வந்தார் என்று கூறலாம். டி.ஆர்.சுந்தரம் மிகவும் ஆதிக்க மனோபாவம் கொண்டவர், கல்யாணசுந்தரமோ பொதுவுடமைக்கு சொந்தக்காரன் இப்படிப்பட்ட இரு துருவங்கள் ஒன்றாக சந்திக்கிறது.
டி.ஆர்.சுந்தரத்தின் கேபினில் இவர் உட்காருவதற்காக மட்டுமே நாற்காலிகள் போடப்பட்டிருக்கும், எப்போதும் தன்னைப் பார்க்க வருபவர்களை நிக்க வைத்து பேசும் வழக்கம் இவருக்கு உண்டு. கல்யாணசுந்தரம் அழைத்துச் செல்லப்பட்டபோதும் வழக்கம் போலவே நடந்தது. எம்.எஸ்.வி-யும், கல்யாணசுந்தரம் நிற்க, டி.ஆர்.சுந்தரத்திற்கு மட்டும் நாற்காலி போடப்பட்டிருந்தது. இது கல்யாண சுந்தரத்துக்கு கோபத்தை வர வைத்து…
“இது பெரிய இடம்பா.. முதலாளி கிட்ட பார்த்து பேசணும்” என்று எம்.எஸ்.வி , பட்டுக்கோட்டையின் காதில் எச்சரிக்கை அளித்தார் . பிறகு டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார் “இது ரொம்ப ஜாலியான காதல் பாட்டு இந்தப் பாடலை மாற்றி எழுதி தர வேண்டும் என்று கூறினார்”.
“தமிழே தெரியாதவர்களுக்கு பாட்டு எழுத வந்தா இப்படித்தான்” என்று கல்யாணசுந்தரமோ எம்.எஸ்.வியின் காதில் முணுமுணுக்க எம்.எஸ்.வியோ அதிர்ந்து போனார். எப்படியும் இந்தப் பாட்டு முடிவதற்குள்ள கல்யாணசுந்தரம் எப்படியும் ஒரு சலசலப்பு உருவாக்கி விடுவான் என்று பயம் எம்.எஸ்.விக்கு அப்போது இருந்தது.. ஏனென்றால் இதுவரை டி.ஆர்.சுந்தரத்தை எதிர்த்து எவரும் ஒரு வார்த்தை கூட முன்னாடி பேசியதில்லை, எப்படி இருக்க இந்தப் பொடி பையனின் தைரியம் எம்.எஸ்.வி கே சிறிது கலக்கத்தை உண்டாக்கியது.
கல்யாணசுந்தரம் சிறிது நேரத்துக்கு பிறகு ஒரு பேப்பர் தாளை எடுத்து ஏதோ ஒன்று கடகடவென்று எழுதி டி.ஆர்.சுந்தரிடம் கொடுத்தார். வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிறானே என்று புலம்பிக் கொண்டார் எம்.எஸ்.வி. கல்யாணசுந்தரம் எழுதியதை படித்துவிட்ட டி.ஆர்.சுந்தரத்தின் முகம் மாறியது.. வேறு எதுவும் பேசவில்லை தன் அசிஸ்டன்ட் ஒருவரை அழைத்தார். “இந்தாப்பா இங்க வா, இவங்களுக்கு உட்காருவதற்கு நாற்காலி போடுங்க” என்று சொன்னவுடனே இரண்டு நாற்காலி வந்தது. எம்.எஸ்.வி-கோ கனவில் மிதப்பது போலவே இருந்தது. இன்னே வரை டி.ஆர்.சுந்தரத்திற்கு முன்பு உட்கார்ந்து பேசியதில்லை இந்த பொடி பையனுக்கு என்ன ஒரு தைரியம் என்று பூரிப்பும் இருந்து..
அப்படி என்ன கல்யாணசுந்தரம் அந்த தாளில் எழுதிக் கொடுத்திருப்பார்… வேறொன்றும் இல்லை. மரியாதை என்பது கேட்டு வாங்க கூடாது தானா கிடைக்க வேண்டும். உங்களுக்கு மட்டும் உட்கார நாற்காலியா எங்களுக்கு? என்று முகத்தில் அடித்தவாரே கூறியிருந்தார்.
இருவரையும் உக்கார வைத்து படத்தின் சிட்டுவேஷனை மறுபடியும் விளக்கிக் கூறினார் டி.ஆர்.சுந்தரம். “இது ஜாலியான பாடலாக இருக்கணும் அது மட்டும் அல்லாமல் சூனியக்காரி காதலனை நாயாக மாற்றி விட்டதால் இடையில் நாய் குலைக்கும் போல வரிகளும் வர வேண்டும் என்று கூறினார்…” நான் உங்களுக்கு தான் பாட்டு எழுத வந்தேன் நாய்க்கு அல்ல என்றார் கல்யாணசுந்தரம். டி.ஆர்.சுந்தரத்திற்கு கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், தன்னையே எதிர்க்கத் துணிந்த ஒரு பையனின் துணிச்சல் அவருக்கு பிடித்திருந்தது..
டி.ஆர்.சுந்தரத்தின் ஆளுமை கல்யாண சுந்தரத்துக்கு பிடிக்கவில்லை என்றாலும், தான் சொன்னவுடன் மனம் இறங்கி தங்களையும் மதித்து உட்கார வைத்து பேசிய டி.ஆர்.சுந்தரத்தை மதிப்பளிக்குமாறு அவர் விரும்பிய ஜாலியான பாடலை எழுதினார் கல்யாணசுந்தரம். டி.ஆர்.சுந்தரம் விரும்பிய வரிகள் அமைந்திருந்தாலும் தமிழைக் கெடுக்காதவாறு எழுதுவதிலும் கவனமாக இருந்திருக்கிறார்… கவிஞனாக இருந்து எந்த சூழ்நிலையிலும் தன் தமிழை விட்டுக் கொடுக்காத தமிழ் மேல் பற்று கொண்ட கவிஞனாக என்றும் கல்யாணசுந்தரம் விளங்கினார்.
தொடரும்
“பாட்டாளி கவிஞனின் பாடல்கள் சொல்லும் கதைகளும் கருத்துக்களும்”
எழுதியவர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.