அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும் : பேரா.சோ.மோகனா 

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..

உனக்கும், எனக்கும், ஒரே வயது..!

நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் (4 .54 பில்லியன்) ஆகின்றன என அறிவியல் கிட்டததட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது. சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும், பூமியில் இருக்கும கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age of dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1% மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals ) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயது குறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை, மற்றும் பிரகாசம், போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456 .7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது.. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும், பூமி சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.

உலகைப் புரட்டிய அறிவியல்..!

மனித இனம் உருவாவதற்கு முன் ஏராளமான மாற்றங்கள் பூமியிலும் உருவாகி இருக்கலாம். அவையெல்லாம் வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ரீதியான பரிணாம மாற்றங்களே! ஆனால் மனித இனம் பரிணமித்த பின்தான் பூமியின் முகவமைப்பே மிகவும் மாறியது. அதுவும் அறிவியல் இந்த மாற்றங்கள் மூலம் இந்தப் புவியைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விஞ்ஞானிகளின் பங்களிப்பும், ஆராய்ச்சியும் இன்றி அறிவியல் உலகம் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாகி இருக்க முடியாது. புவிக் கோளின் அறிவியல் பரிணாமம் மற்றும் தொழில் நுட்ப பரிணாமத்தில்ஆதிகாலம் தொட்டே , காலம் காலமாக நிறைய மூளைகள் பங்களிப்பு செய்துள்ளன.

பதிவில் ஆணும். பெண்ணும் சமமா..?

தொழிற்புரட்சிக்குப் பின்புதான் அதி நவீன, அதிவேக அறிவியல் மாற்றங்கள் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் ஏராளமான ஆண் அறிஞர்கள்தான் புகழ் பெற்றிருந்தனர்; அவர்களின் பெயர்களும் காலத்தால் பேசப்பட்டன. தொழிற்புரட்சியின் மாற்றங்களுக்கு பெண்களும் கூட முக்கியமான பங்களிப்பை செய்து தங்களின் இருப்பை நிலை நிறுத்தி இருக்கின்றனர். ஆதிகால பெண் விஞ்ஞானிகளில் மிகச் சிலரது பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பலரது பெயர்கள் வசதியாக மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு , மறைந்தும் போய்விட்டன. இடைக்காலத்தில் ஆணுக்கு இணையாகப் பெண்கள் போட்டி போட்டு வரமுடியாயாத சமூகச் சூழலும், நிலவி வந்தது. இன்று நவீன காலத்தில் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். இருப்பினும் கூட இதுவரை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகள் மிகக் மிகக் குறைவே.
நோபல் பரிசும் பெண்களும்

நோபல் பரிசு – உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று. ஆண்டுதோறும் யாரெல்லாம் இந்தப் பரிசை வெல்லப்போகிறார்கள் என உலகமே உற்று நோக்கும். பரிசை பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கும் நோபல் பரிசை இதுவரை எத்தனை பெண்கள் பெற்றுள்ளனர் எனக் கணக்கிட்டால் நமக்கு அதிர்ச்சியான தகவலே கிடைக்கிறது. 1901ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டு வரை 105 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1917, 1944 & 1963 ஆண்டுகளில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதுவரை மொத்தம் 981 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை வெறும் 26 மட்டுமே. தான்

இறந்த உடலை அறுக்க உதவிய கிலியானி!

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

 

இடைக்காலத்தில் வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் அலெஸ்ஸாண்டிரா கிலியானி (Alessandra Giliani), born in 1307 and died on 26 March 1326) எனபவர். இவர் ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடல் அறுப்பவர் . அலெஸ்ஸாண்டிரா கிலியானி கி.பி 1307ஆம் ஆண்டு இந்த உலகைக் காண வந்தார். ஆனால் பூமியைத் தரிசித்த மாதம் /தேதி எதுவெனத் தெளிவாகத் தெரியவில்லை. அவர் பிறந்த தேதி பற்றிய தகவலோ, பெற்றோர் பற்றிய பதிவுகளோ இல்லை. 19 ஆண்டுகள் மட்டுமே இப்பூவுலகில் உயிர் வாழ்ந்தார். தனது 19 வது வயதில் உலகுக்கு பறை சாற்றும் வகையில் மிகக் கொடூரமான களத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார். உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்க மனிதம் இவர் . இவர் அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து, இறந்த உடலை அறுத்து அதிலிருந்து இரத்தம் வடிப்பது தொடர்பாக படித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்த குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். எதற்குத் தெரியுமா? அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்கு செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிய முடியும் என்பதனால்தான். உலகில் இப்படி முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, இப்படி வேறு வண்ண திரவம் ஏற்றியவரும். அதனைப்பற்றி பதிவு உள்ளவரும். அலெஸ்ஸாண்டிரா கிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறிய முடியும் படிக்கவும் முடியும். இவ்வாறு கிலியானி மருத்துவர்களுக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தவர் .

உயிரைப் பயணம் வைத்து உதவி..!

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

இறந்த உடலை வெட்டி தயார்ப்படுத்துவது என்பது அந்த கால கட்டத்தில் மிகவும் உயிரைப் பயணம் வைக்கும் செயல். இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம்/மத துவேஷம் என்று பார்க்கப் பட்டது. அது மட்டுமா? தெய்வ நிந்தனை செய்பவருக்குத் தண்டனை கொலை தண்டனைதான்;அதுவும் பொது இடத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுள் உருவாக்கிய உடலை அறுப்பதும், அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதும் மதத் துரோகம்/கடவுள் மறுப்பு விஷயம் என்றும் போதிக்கபப்பட்டது. இப்படிப்பட்ட காலத்தில் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி, பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக, இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார் என்பதும், அதை பற்றிய பதிவும் வியப்பானதுதான். இறந்த உடலிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரத்தம் வடிந்த குழாய்களுக்கு, உள்ளே போனால் உறைந்துவிடும் ஒரு புதிய வண்ணத்திரவத்தையும் கண்டுபிடித்து இரத்த குழாய்களுக்குள் செலுத்தினார். இதனால் மிகச் சிறிய இரத்தக் குழாய்களை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்.

அலெஸ்ஸாண்டிரா கிலியானியின் சேவை:

அலெஸ்ஸாண்டிரா கிலியானி மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் (Otto Angenius) என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி, குறிபிட்டு எழுதியுள்ளார்.. மிகவும் மரியாதைக்குரிய மனிதமாய் மக்களுக்கும் மருத்துவருக்கும் சேவை செய்த உயிராக மதிக்கப்படுகிறார். ஓட்டோ.

அவர் கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்றும் நம்பபடுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி (Michele Medici) என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857ஆம் ஆண்டில் எழுதி வைத்த குறிப்பில், கிலியானியைப் பற்றியும், அவரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.
பார்பார குயிக் கிலியானி பற்றி 18ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்தவித தகவலும், அந்தக்கால பதிவுகளின்படி எதுவும் நேரிடையாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி பார்பாரா குயிக் என்பவர் எழுதியுள்ளார். அவர் அந்தக்கால நூலகர் மற்றும் ஓட்டோவின் எழுத்துக்களின் படி, கிலியானி பற்றிய யாவும் தேவாலயத்தில் உள்ளன என்கின்றனர். குறிப்பில் கிலியானி மட்டுமல்ல, அவரது குடும்பமே அழிக்கப்பட்டது என்று தெரிய வருகிறது. கிலியானியின் அழிந்த பொருட்கள் ஒரு தாழியில் தேவாலய சாரக்கட்டு இடத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

அறிவியல்.புரட்சியின் காலக்கட்டம்!

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

உலகில் மருத்துவப் புரட்சி ஏற்பட்ட காலம் கி.பி 1400-1700 ஆண்டுகளே எனலாம். 1400ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் அறிவியல் முன்னேற்றம் ஏதும் பெரிதாக நிகழாததால், அது இருண்ட காலம் என்றே அழைக்கப்பட்டது. பண்டைய கிரேக்க ரோமானியக் கருத்துகளிலிருந்து வேறுபட்டு புதிய கருத்துக்களை விதைத்த காலம் பதினாறாம் நூற்றாண்டுதான். அப்போது பழங்கால பழக்கங்களிலிருந்து விடுபட்டு, தேவாலயங்களில் புதியமாற்றங்கள் உண்டாயின. அப்போது மருத்துவர் ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் (Andreas Vesalius -31 டிசம்பர் 1514 – 15 அக்டோபர் 1564) என்பவரும், வில்லியம் ஹார்வே (William Harvey -1 ஏப்ரல் 1578 – 3 ஜூன் 1657) ) என்பவரும் அன்றைய காலகட்ட மருத்துவத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நடத்திக் காண்பித்தனர். அது போது நடந்த தொழில்நுட்பக் கருத்துக்கள் சமுதாயத்தில் உயர்குடியில் வாழ்வோருக்குக் கூட போய்ச் சேர பல நூறு ஆண்டுகள் ஆயின என்றும் சொல்லப்படுகிறது. உயர்குடி மக்களுக்கே இந்த நிலை என்றால் சமூகத்தின் நிலை, மற்ற குடிமக்களின் நிலையை நாம்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் யாரும் அதன் பயனை, நலனை உணரவில்லை. இதனால் அப்போது இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அருகில், பல படித்த மருத்துவர்கள் இருந்தும் கூட தனது 65 வயதில், 1685 ம் ஆண்டு மாரடைப்பில் மண்டையைப் போட வேண்டியதாயிற்று. புதிய் சிகிச்சை முறையைக் கையாளாத காரணத்தால்.

கொலைதண்டனை பெற்ற,நவீன உடலியலின் தந்தை!

ஆண்ட்ரியாஸ் வேசலியஸ், 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் போலோக்னா (Bologna) நகரில் ஒரு மருத்துவர் மட்டுமல்ல; தத்துவமேதை, உடலியலாளரும் கூட. உலகின் கருத்தைக் கவரும் புத்தகமான, மனித உடலின் அமைப்பு என்பது பற்றி ஏழு மருத்துவ புத்தகக்கள் எழுதியவர். ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் எழுதிய புத்தகத்தின் அட்டையிலேயே அவர் பொது இடத்தில் அனைவரும் பார்க்கும்படியாக உடலை அறுக்கும்படியான படம் போடப்பட்டுள்ளது. இவர்தான் உலகில் முதன் முதலில் மனித உடலை அறுத்துப் பார்த்தவர் என்றும், அது தொடர்பான படங்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அவர் தனது 23வது வயதில் 1537 ஆம் ஆண்டு, மருத்துவர் பட்டம் பெற்று, பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணி செய்தார். அதற்கு முன்பு புரூசெல் சென்று அங்கும் பணியாற்றினார். அவர் அங்கும் கூட தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளை அபகரித்துக் கொண்டு வந்து அந்த உடலை அறுத்து மாணவர்களுக்குக் காண்பித்தாராம். இதுதான் இவருக்கு வினையைத் தேடித் தந்தது. .

தப்பித்தார் வெசலியஸ்!

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

வேசலியஸூக்கு முன் வாழ்ந்த காலன் சொன்ன சில கருத்துக்கள் தவறானது என்று விளக்கிக் கூறியுள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்பினார். பின் பொது இடத்தில் பிணத்தை அறுத்துக் காண்பித்ததை ஒட்டி சில முரணபாடுகள் உண்டாயின. காலனைக் குறை சொன்னது, கடவுள் மறுப்பு, பொது இடத்தில் பிணம் அறுத்தது,மேலும் கல்லறையிலிருந்து பிணங்கள் திருடி அறுத்துப் பார்ப்பதற்காக அவருக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? கொலை தண்டனை! ஆனாலும் கூட வேசலியஸ் அரசு அதிகாரிகள் மூலம் சிபாரிசு செய்து, கொலைத் தண்டனைக்குப் பதிலாக, வேசலியஸ் ஜெருசலம் சென்று வர ஆணையிட்டனர். ஜெரூசலம் சென்று திரும்பி வரும் வழியில் கடல் பயணத்தில் கப்பல் சேதமுற்று, கிரேக்கத்தீவில். வேசலியஸ் இறந்தார். அப்போது அவரின் வய்து 50. நவீன உடலியலின் தந்தை (Founder and father of modern anatomy) என்று அழைக்கப்படுவது ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்தான்.

“I will pass over the other arts in silence and direct my words for a while to that which is responsible for the health of mankind; certainly of all the arts that human genius has discovered, this is by far the most useful, indispensible, difficult, and laborious.” (Andreas Vesalius, De Humani Corporus Fabrica)

ஏசு பிறக்க 600 ஆண்டுக்கு முன், பிணம் அறுத்த அல்மெயான் !

மனித உடலையும் அதன் உறுப்புகளையும் அவை செயல்படும் விதம் பற்றியும் அறிந்து கொள்ள உடலை அறுத்துப்பார்த்தே ஆக வேண்டும். அப்படி எல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் இன்று நம்மில் நிறைய பேர் உயிருடன் இருந்திருக்க முடியாது.. மருத்துவ உலகம் முன்னேறி இருக்க முடியாது. உடலின் கண்டுபிடிப்பு (Discovery of Human body) அறுத்துப் பார்த்தல் மூலமே நடந்தது. ஆனால் பழங்கால ரோமானிய,கிரேக்க மதத்திலும், பல நாடுகளிலும், இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மனிதனை அறுப்பது என்ற வார்த்தையே சமூகக் குற்றமாகப் பார்க்கப்பட்டது.மதம் மற்றும் அனைத்து நாடுகளிலும் இறந்த உடலை வெட்டி உள் உறுப்புகளைப் பார்ப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் கூட கி.மு. 6 ம் நூற்றாண்டிலேயே, கிரேக்க தத்துவவாதி, அல்மெயான் (Alcmaeon (535-? B.C.) என்பவர்தான் மனித உடலை முதன் முதல் அறுத்துப்பார்த்த முதல் மனிதர் என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2600 ஆண்டுகளுக்கு முன் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்.

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் கங்கைக்கரையின் வாரணாசியில் சுஸ்ருதா எனற அறுவை சிகிச்சை நிபுணர் வாழ்ந்த்தார். இவர் அவர் சிசேரியன், கண்பொறை, செயற்கை காலகள்,கால்,கை உடைதல்,சிறு நீரக பிரச்சினை, மூக்கின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் மூள அறுவை போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் சுஷஸ்ருதா. மயக்க மருந்து பற்றி அப்போதே இந்தியாவில் அறிந்திருந்தனர். அவர் தன் வாழ்நாளில் சுமார் அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் சுஸ்ருதா.மேலும் அவரிடம் சுமார் 125 வகையான அறுவை சிகிச்சைக் கருவிகள் இருந்தன என்று பதிவுகள் காண்பிக்கின்றன. சுஸ்ருதா சமிதா என்று அறுவை சிகிச்சைப் புத்தகத்தையும் எழுதி இருந்தார். இந்தியாவின் அறுவை சிகிச்சையின் பிதாமகன் சுஸ்ருதா தான்.
“Surgery is the first and the highest division of the healing art, pure in itself, perpetual in its applicability, a working product of heaven and sure of fame on earth” – Sushruta (400 B.C.)
அலெக்சாண்டிரியாவில் முதல் அனாடமி பள்ளி.!

“The first recorded dissection of the humsn body, in the Western world took place in ancient Alexandria by Herophilus and Erasistratus. Though none of their writings have come down to us, other medical writers recorded what they had discovered.”

மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இரண்டு பெரிய கிரேக்க பண்டிதர்கள் மற்றும் மருத்துவர்களான சால்டிடோனின் ஹிரோபிலஸ் மற்றும் அவரது இளவலான செரோஸைச் சேர்ந்த எராசிட்ரடஸ் இருவரும், பழங்காலத்தில் மனித பிணங்களை அறுத்து மருத்துவ பாடம் போதிப்பதில் முதலும் கடைசியுமான நிபுணர்களாக இருந்தனராம். அல்மெயானுக்குப் பின் கி. மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்சாண்டிரியாவின் சால்சிடான் நகரின் ஹீரோபிலஸ் (Herophilus of Chalcedon (335 B.C.-280 B.C) தான் உலகின் முதல் உடலியல் பள்ளி (School of Anatomy) நடத்தியவர். அவர்தான் அப்போதைய சிறந்த உடலியல் மருத்துவர் என்றும் போற்றப் படுகிறார். அலெக்சாண்டிரியா மருத்துவப் பள்ளியில் அவரது மாணவர்களுக்கு இறந்த மனித உடலை அறுத்துக் காண்பித்து மருத்துவ அறிவை அனுபவ பூர்வமாக பாடம் நடத்தினார். ஹீரோபிலஸ் உடலின் டியோடினம், கல்லீரல், கணையம், இரத்த ஓட்ட மண்டலம், கண்,மூளையின் திசு, இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தும் தெள்ளெனத் தெரிந்தவர் என்றும் பாராட்டப்படுகிறார். முதன் முதலில் கட்டளை நரம்புகளுக்கும், உணர்ச்சி நரம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தவர் ஹீரோபிலஸ்தான். இவரிடம்தான் உலகின் முதல் பெண் மருத்துவர் என்று அழைக்கப்படும் அக்னோடைஸும் மருத்துவம் பயின்றார்.

குற்றவாளிகள் உயிரோடு மருத்துவ உபகரணமாய்..!

ரோமானிய மருத்துவரும் தகவல்களைத் தொகுத்துத் தருபவருமாகிய ஆலூஸ் கார்னெலியஸ் செல்சஸ் (Aulus Cornelius Celsus A.D. 3-64) என்ற தகவல் தொகுப்பாளர் அலெக்சாண்டிரியாவில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அலெக்சாண்டிரியா நகரில் குற்றவாளிகளின் உடம்பு, அரசன் தாலமி காலத்தில் (reigns of Ptolemy II and III (285-221 B.C. ) உயிரோடு வெட்டப்பட்டு, உடலின் உறுப்புகளைப் பற்றி அறியப்பட்டதாய் சொல்கிறார். அரசன் தாலமியே நேரில் இருந்து அறுக்கும் உடல்களை பார்த்தாராம். அந்த காலத்தில் உடலை வெட்டிப்பார்க்கும் பழக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட , அது மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதப்பட்டாலும் கூட, ஆலூஸ் கார்னெலியஸ் செல்சஸூம் கூட மருத்துவப் படிப்புக்கு உடலை திறந்து பார்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

மூட நம்பிக்கைகளில் மூழ்கிய உலகம்..! மனித உடற்கூறு பற்றிய பதிவு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாப்பிரஸ் மரப்பட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க ௦மருத்துவர் காலன் (Greek physician Galen A.D. 130-201) கி.பி.180 ல் உடற்கூறு தொடர்பாக நிறைய எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் உடலை அறுத்துப்பார்த்துதான் உடற்கூறு பற்றிய இரண்டு ரகசியங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டார். மீண்டும் கி.பி. 1163ஆம் ஆண்டில், ரோமானிய தேவாலயம், மனித உடலை அறுத்துப் படிக்கும் பழக்கத்தத் தடை செய்திருந்தது. இந்த கால கட்டத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்து, மக்களுக்கு பணியாற்றி அதன் மூலம் உயிர்ப்பலியானவர்தான். இத்தாலிய அறுவை சிகிச்சை நிபுணர் மோண்டினோ டி லுஸ்ஸி, (Italian surgeon, Mondino de Luzzi). அவர் 1316 ல் மனிதனின் உடலை அறுப்பது தொடர்பான முதல் தொகுதியை (1316 – Anathomia corporis humani) வெளியிட்டார். இந்த புத்தகம்தான் மனித உடல்கூறு தொடர்பான் முதல் புத்தகம். அப்போது மனித உடலின் உறுப்புகள் அறுத்துப்பார்ப்பதை மதங்கள் மூடநம்பிக்கையால் தடை செய்திருந்தன. ஆனாலும் கூட மனித உடலியல் மற்றும் அறிவியல் ஆர்வ மேலீட்டால் இந்த புத்தகத்தை தயாரித்து வெளியிட்டார். மோண்டினோ. ஆனால் அவரது புத்தகம், Anathomia corporis humani 1478 ஆம் ஆண்டு, அவர் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியிடப்பட்டது என்றால் அதிலுள்ள தகவல்களை எண்ணிப் பாருங்கள். உடலியல் புத்தகம் எழுதிய ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் புத்தகம் எழுதி வெளியிட்டதிற்காகவும். மனித உடலைத் திருடி அறுத்துப் பார்த்த்திற்காகவும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுப் பின்னர் தப்பித்தார்.

ஓவியர் லியானார்டோ!

அறுவை சிகிச்சையின் கதையும், நாயகியும்..(The story of the operation and the heroine) Surgery - Andreas Vesalius அறிவியல் - https://bookday.in/

அதன்பின் லியானார்டோ டாவின்சி (Leonardo da Vinci 1452-1519), என்ற கணித மேதை, தத்துவமேதை, ஓவியர், வரைபடலாளர், பொறியியலாளர், உடற்கூறியலாளர் கி.பி. 1500 ஆம் ஆண்டில் ,மனித உடலின் தசை அமைப்புகளை படமாக தன் கையாலேயே வரைந்து புத்தகமாகத் தொகுத்துள்ளார். ஆனாலும் , அதற்கு. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே முதலில் உடல் உறுப்புகள் பற்றி துல்லியமான படங்களை அந்தக் காலத்தில் வரைந்த மனிதர் ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்தான்.

கல்லறை வியாபாரம்!

கி.பி 1565ஆம் ஆண்டு களில் நிலைமை மாறியது. கத்தோலிக்கத்திலிருந்து மறுமலர்ச்சி ஏற்பட்டு பிராட்டஸ்டண்டுகளை விடுவித்தனர். இங்கிலாந்து மனித உடல்களை அறுக்க பயன்படுத்தலாம் என்று அனுமதி வழங்கியது. ஆராய்ச்சி நீண்டது. ஆனால் தேவைக்கேற்ப உடல்கள்தான் கிடைக்கவில்லை. 1565ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து குற்றவாளிகள் மற்றும் அனாதையான உடல்களை அறுத்துப் பார்த்துப் பயன்படுத்தியது .ஆனால் ஒரு காலகட்டத்தில், தூக்குப்போட்டு தொங்குவதை விட மனித உடலை அறுத்துப் பார்ப்பது மோசமானது என மக்கள் கருதினர். எனவே, மக்களின் கோபம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு எதிராகத் திரும்பியது. கொதித்து எழும்பிய மக்கள் கும்பல், மருத்துவரிடமிருந்து கத்தி, கத்தரியைப் பிடுங்கி மனித உடல்களைக் காத்தது. இதனால் மருத்துவப் படிப்புக்கு இறந்த உடல்கள் கிடைக்கவில்லை. எனவே கல்லறையிலிருந்து உடலலைத் திருடி விற்பது என்ற புது வணிகம் புதுப்பொலிவுடன் உருவெடுத்து பரபரப்பானது. புதிதாக அமரராகும் மனித உடல்களை கல்லறையிலிருந்து திருடும் கும்பலை அறுவை நடத்தும் மருத்துவர்கள் வாடகைக்கு அமர்த்தியும் இருந்தனர்.

களை கட்டிய பிண வியாபாரம்…!

நியூயார்க நகரில், குழந்தைகள் மருத்துவமனை சன்னல் வழியே.. மனித உடல்களை வெட்டிப்பார்க்கும் மருத்துவ மாணவர்களைப் பார்த்தது தொடர்பாக 1788ஆ ஆண்டில், மூன்று நாட்கள் கலகம் வெடித்தது. கலகத்தின் மூலம் திகில் கதை போலவே கொஞ்சம் சுவாரசியமானதுதான். இந்த குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம், அறுத்துக் கொண்டிருந்த இறந்த உடலைப் பார்த்ததைக் கூறினர். அப்படிக் கேட்ட பெற்றோர்களில் ஒருவர் மனைவியின் சவம் கல்லறையிலிருந்து காணாமல் போயிருந்தது அதன் பின்னரே தெரிய வந்தது. அது தொடர்பாய் வெடித்ததுதான் கலகம். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே, நியூயார்க்கில், உடனடியாகக் கிடைக்கும் பிணத்தை மருத்துவர்கள் அறுவை சோதனைக்குப் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அது போல ஒரு சட்டம் இங்கிலாந்தில் 1832ஆம் ஆண்டில்,உரிமை கோராத பிணங்களை அறுக்க எடுத்துக் கொள்ளலாம் என்றும் சட்டம் இயற்றினர். மீண்டும் 1829அம ஆண்டு, பிணத்தட்டுப்பாடு தலைதூக்கியது. அப்போது நடந்த கூத்து பிரசித்திப் பெற்றது. எடின்பரோவில் அரைகுறையாய் தூக்கில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் குற்றவாளிகளை எல்லாம், உடனடியாக அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு விற்றனர். அதன் பின் பல படிகள் தாண்டி,இருபதாம் நூற்றாண்டில்தான் மதத்தின் பிடியிலிருந்து மருத்துவம் வெளியேறி மக்களுக்கு சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.ஆனால் இன்று உடற்கூறியல் வெகுவாக முன்னேறி DNAவைத் தாண்டி நானோ தொழில்நுட்பம் வரை எல்லையை எட்டியுள்ளது.

கிலியானிக்கு பெருமை

ஹார்பர்டீனால் (HarperTeen), 2010 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட, எ கோல்டன் வெப் (A Golden Web) என்ற பார்பரா குயிக் (Barbara Quick’ )கின் நாவல், அலெஸாண்ட்ரா கிலியானியின் வாழ்க்கை மற்றும் காலங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் புனைகதையாகும் ..

கட்டுரையாளர் :

பேரா.சோ.மோகனா 

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *