உலகம் அறிந்த இந்திய வனவிலங்கு சூழலியல் விஞ்ஞானி அபராஜிதா தத்தா (Aparajita Datta)
தொடர் 78 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
டாக்டர் அபராஜிதா தத்தா (Aparajita Datta) இருவாச்சி பறவைகளை பாதுகாக்கும் ஐ.நா குழுவினுடைய இணைத் தலைவராக பணியாற்றும் இந்தியாவின் வனவிலங்கு விஞ்ஞானி ஆவார். அவர் தேசிய இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையில் ஒரு முதன்மை விஞ்ஞானியாக தற்போது செயல்பட்டு வருகிறார். அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த வெப்ப மண்டல காடுகளில் அவரது ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக தொடர்ந்து வருகின்றன.
வனவிலங்கு சூழலியல் என்பது சமீப காலமாக அதிக கவனம் செலுத்தப்படும் ஒரு இயற்கை துறையாக உள்ளது. இந்த துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பாதுகாப்பு உயிரியல் விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை சுற்றுச்சூழல் அமைப்புகளை அதிகப்படியான அழிவுக்கு உட்படுத்துகின்ற நவீன மனித வாழ்க்கையை கட்டுப்படுத்தி உயிரினங்களின் இயற்கை தொடர்புகளை பாதுகாப்பது மிகப்பெரிய சிக்கலாகவும் சவாலாகவும் உள்ளது. பூமியின் பல்லுயிர் பாதுகாப்பு ஆய்வு இவ்வகையான விஞ்ஞான போராளிகளை நம்பி இருக்கிறது.

இந்த துறை இயற்கை மற்றும் சமூக அறிவியல் மற்றும் இயற்கை வள மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு துறை. தீவிரமாக வன விலங்குகளை ஆய்வு செய்து அவற்றில் ஏற்பட்டிருக்கின்ற வாழ்க்கையின் மாறுபாடுகளை பதிவு செய்து பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிடுவது இந்த துறையின் கடமையாகும். இன்று இயற்கையின் அழிவு விகிதம் என்பது பலவகைகளில் அளவிடப்படுகிறது. அதை அளவிடுவதற்கான மூன்று முக்கிய வழிமுறைகளை முன்மொழிந்தவர் தான் நம்முடைய மதிப்பிற்குரிய இயற்கை விஞ்ஞானி அபராஜிதா தத்தா (Aparajita Datta).
அழிந்து வரும் பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களை பாதுகாப்பதை தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டுள்ள வனவிலங்கு விஞ்ஞானியான அபராஜிதா தத்தா 1970 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். அவருடைய குடும்பம் 1978 ஆம் ஆண்டு ஜாம்பியா நாட்டிலுள்ள லுசாகா நகருக்கு இடம் பெயர்ந்தது. அங்கே அவருடைய தந்தை ஒரு கணக்காளராக பதவியேற்றார். லுசாகா சர்வதேச பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் அபராஜிதா தத்தா (Aparajita Datta) வனவிலங்கு பாதுகாப்பின் மீது செலுத்திய ஆர்வத்தின் காரணமாக அவருடைய தலைமையில் தங்கள் பள்ளியில் ஒரு சிறிய வனவிலங்கு காட்சி சாலையை ஏற்படுத்தும் அளவிற்கு அவரது பள்ளி நாட்கள் அமைந்திருந்தன.
கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் தனது இளம் அறிவியல் பட்டத்துக்காக அவர் தாவரவியல் படத்தை எடுத்துக்கொண்டார்.. இந்திய வனவிலங்கு கல்வி நிறுவனம் என்பது இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால நிலை அமைச்சகத்தின் கீழே 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னாட்சி இயற்கை வள கல்வி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் டேராடூனில் உள்ளது. இந்த நிறுவனத்தில் சென்று தனது முதுநிலை அறிவியல் கல்விக்காக வனவிலங்கு சூழலியலை பாடமாக எடுத்துக் கொண்டார் அபராஜிதா தத்தா (Aparajita Datta).

இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள குஜராத்தின் ராஜ்கோட் எனும் பகுதியில் அமைந்திருக்கும் சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக அவர் இணைந்தார். ஆனால் அவரது முனைவர் பட்ட ஆய்வை அவர் அருணாச்சல பிரதேசத்திற்கு மாற்றிக் கொண்டார். அங்கு தான் அவர் இருவாச்சி பறவைகள் வாழும் சுற்றுசூழலுக்கு எவ்வளவு இன்றியமையாதவை என்பதும் இந்த இனங்கள் 80க்கும் மேற்பட்ட வகையினை கொண்டதாக அங்கு உலாவுவதையும் மர விதைகளை பரப்பி பிரம்மாண்ட காடுகளை உருவாக்குவதில் அவை காட்டின் விவசாயிகள் போல செயல்படுவதையும் நிரூபித்து முனைவர் பட்டம் பெற்றார்.
2002 ஆண்டில் அவர் சாமுண்டி மலையில் தன் ஆய்வைத் தொடர்வதற்காக மைசூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் இயற்கை பாதுகாப்பு சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு ஏராளமான வகை பழங்குடியினர் இருந்தனர். அவர்கள் ஆயிரக்கணக்கில் இருவாச்சி (Indian Hornbills) பறவைகளை வேட்டையாடுவதைத் தங்களுடைய வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த உள்ளூர் வேட்டையாளர்கள் உடனான தொடர்புகளின் விளைவாக இந்தியாவில் தன் வாழ்க்கையை அவர்களோடு இணைத்துக் கொண்டு வனவிலங்கு ஆய்வுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட முதல் ஆய்வாளர் எனும் பெயரை அவர் பெற்றார்.

இருவாச்சி (Indian Hornbills) பறவைகளை காப்பாற்றும் அதே சமயத்தில், அந்த மலைவாழ் மக்களோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இரு முக்கிய உயிரினங்களை முதல் முறையாக உலகிற்கு அவர் அறிமுகம் செய்தார். அவற்றில் ஒன்றுதான் இந்தியாவின் இளைய மான் (Leaf Muntjac Deer) என்று அது அழைக்கப்படுகிறது. இந்த மிகச் சிறிய இனம் அது வரையில் இந்திய வனப்பகுதிகளில் இருப்பதாக ஆவணப்படுத்தப்படவில்லை. மாறாக அது பெரும்பாலும் மியான்மார் பகுதிகளில் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் தனது மரபணு சோதனையில் மூலம், சாமுண்டி மலையின் பூர்வீக மக்களுக்கு இந்த இளைய மான் என்பது நன்கு அறியப்பட்ட ஒருவகை மான் ஆக இருந்தது.
IUCN எனும் வன விலங்கு பாதுகாப்பு குழுமத்தின் அறிக்கை படி இந்த இனம் தரவு குறைபாடு என்று வகைப்படுத்தப்பட்டு அது அந்த உருவயியல் விநியோகம் வகைப் பிரித்தல் சூழலியல் பற்றி உறுதியற்ற தன்மை நிலவிக் கொண்டிருந்தது. இந்த நிலையை தீர்த்து இந்த இனம் குறித்த முழுமையான ஆய்வு கட்டுரைகளை எழுதி உலகின் கவனத்தை பெற்றவர் அபராஜிதா தத்தா (Aparajita Datta)

அவர் கண்டுபிடித்த இன்னொரு மிக முக்கியமான இனம் கருப்புமான் என்று அவர்கள் அழைத்த Black Barking Deer வகை ஆகும். இந்த இனம் குறித்து அதுவரையில் இந்தியர்கள் அதிகம் அறியாமல் இருந்தனர். இவை மான் இனத்திற்கும், மாடுகள் இனத்துக்கும் இடைப்பட்ட ஒரு இனமாக அவர் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த ஆய்வுகளின் ஊடாக ஏறக்குறைய பர்மாவை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசிக்கும் லிசு இன மலைவாழ் மக்கள் மத்தியில் அவர் புகழ் பெற்றார். இருவாச்சி (Indian Hornbills) பறவைகள் குறித்த இந்த இனக் குழுவினுடைய முக்கியமான பங்களிப்புகளை பற்றி அறிவதற்காக அவர் NYISHI என்னும் பகுதிக்கு பயணம் செய்தார். அங்கு தான் அவர் அது வரை அதிகம் அறியப்படாது இருந்த Clouded Leopard எனும் மேக மூட்ட சிறுத்தை இனத்தை அடையாளம் கண்டு உலகிற்கு அறிவித்தார். இது ஒருவகை வளர்ச்சி அடைந்த காட்டுப் பூனை வகையைச் சேர்ந்ததாகும்.

வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களாக இருந்தாலும், ஆர்வலர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளூர் மலைவாழ் பூர்வீகக்குடி மக்களோடு தங்களை இணைத்துக்கொண்டு கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து செயலில் இறங்கினால் மட்டுமே அறிவியல் ஆய்வுகளுக்கான உண்மையான வனவிலங்கு முடிவுகள் எட்டப்பட முடியும் என்பதோடு வனவிலங்கு பாதுகாப்பு என்பது அந்த மக்களின் கையில் இருப்பதை நாம் உணர வேண்டும் என்பது தான் அபராஜிதா தத்தாவின் நிலைப்பாடு.
SANCTUARY ASIA எனும் நிறுவனம் வழங்கும் பூமியின் கதாநாயகர்கள் என்னும் விருது அவருக்கு 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நேஷனல் ஜியாக்ராஃபிக் நிறுவனம் அவருக்கு சிறந்த வனவிலங்கு பாதுகாவலர் விருதை 2010 ஆம் ஆண்டு வழங்கியது. உலகில் வன விலங்கு பாதுகாப்புக்கான உயரிய விருதாக கருதப்படுவது வைட்லி விருது WHITELY AWARD என்பதாகும். இந்த விருதை பசுமை ஆஸ்கார் விருதுகள் என்று அழைக்கிறார்கள்.. இந்த விருதை இந்தியாவிலிருந்து பெற்ற இரண்டு விஞ்ஞானிகளில் அபராஜித்தா ஒருவர்.. என்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : இந்திய மரபணு பொறியியல் விஞ்ஞானி டாக்டர் சுவேதா தியாகி (Dr. Shweta Tyagi)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

