எரிச்சலாக இருந்தது அன்று.
எரிந்து விழும் மூடனாகப் போய் கொண்டிருந்தேன் சாலையோடே.
ஒரே வாகன நெரிசல்,
சுற்றிலும் ஹார்ன் ஒலி;
மண்டை காய்ந்து விடும் போலிருந்தது.
முன் செல்லும் வெளியூர் வேன் ஒன்றில்
ஒரு குழந்தை
வண்ணக் குமிழிகளை ஊதிய படி.
எரிச்சல் தான் வந்தது.
தொடர ஒரு குமிழி
இரண்டு குமிழிகள்
மூன்று….
எனக் கண் முன் உடைந்து
சிதறின ஓரிரு நொடி ஆயுளே கொண்ட அக்குமிழிகள்;
துளிச் சாரலோடே!
ஈரம் பட்டுப் பட்டு
குழந்தை சிரிக்கத் தொடங்கிற்று!
– தேடன்