எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (Thelivaththai Joseph) எழுதிய ‘மழலை’ (Mazhalai) சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

குழந்தைகளை நம்புங்கள்

– மணி மீனாட்சிசுந்தரம்

அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் எழுதிய நூல்களுள் ஒன்று ‘ How Children learn?’ என்பதாகும்.தமிழில் அந்நூல் எழுத்தாளர் அப்பணசாமியின் மொழிபெயர்ப்பில் ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர். கல்விச் சூழல் உண்மையில் குழந்தைகளின் கற்றலுக்கு உதவுகிறதா, கற்பித்தல் எனும் செயல்முறை குழந்தையின் கற்றலுக்குத் தரும் நன்மை, தீமைகள் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட அந்நூலின் அடிப்படையான வேண்டுகோள் ‘ குழந்தைகளை நம்புங்கள்’ என்பதாக அமைந்திருக்கும்.

பள்ளிச் சூழலைத் தவிர்த்து, அடிப்படையான வாழ்க்கைச் செயல்பாடுகளை குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர்? பெரியவர்களாகிய நமது பங்கு அதில் என்ன? என்பன பற்றிய சிந்தனைகளை எழுப்பும் சிறுகதையே இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ என்னும் சிறுகதை.

பொதுவாகக் குழந்தைகள் தம் வயதுக்கேற்ற வாழ்க்கைச் செயல்களை இயல்பாகவே கற்றுக்கொள்கின்றனர். தம் வயதையொத்த குழந்தைகளுடன் விளையாட்டாகவும், பெரியவர்களின் அறிவுறுத்தல்கள் வழியாகவும் கற்றுக்கொள்ளுதல் நிகழ்கிறது.
குழந்தைகள் வாழ்க்கைச் செயல்களை அறிந்து முன்னேறுதலில் அவர்களின் அனுபவங்களே முக்கியப் பங்காற்றுகின்றன என்பது சரியென்றாலும்,
குழந்தை எல்லாவற்றையும் தன் சொந்த அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்பதும் பொருந்தாது. பெரியவர்களுக்கும்கூட அப்படித்தான்.

தீயைத் தொட்டால் சுடும் என்பதைத் தொட்டுப் பார்த்துத்தான் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டுமா?
ஆனால், சொன்னால் குழந்தை புரிந்து கொள்ள வேண்டுமே? இந்த இரண்டு கேள்விகளின் பின்னுள்ள முக்கியமான ஒன்று ‘ குழந்தையின் பருவ மனம்’.

பருவத்திற்கேற்ற செயல்களை இயல்பாகக் கற்றுக்கொடுப்பதும், பருவத்துக்கு மீறியவற்றைத் திணிக்காமல் இருப்பதும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெரியவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும். இதை உணர்ந்த பெரியவர்களே குழந்தையின் கற்றலுக்கு உறுதுணையாக இருப்பர். அது குறித்தே இச்சிறுகதை பேசுகிறது.

அந்த வீட்டின் குளியலறை அது. பெரியவர்கள் குளிக்கச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு குளிக்கும் போது ‘ நானும் உள்ளே வருவேன் ‘ என அழுது அடம்பிடிப்பாள் இரண்டு வயது நிரம்பிய சில்வியா பாப்பா.கதவைத் திறந்ததும் / குழந்தை ஊற்றாய் ஓடும் கண்களுடன் மெலிதாகச் சிரித்தபடி உள்ளே நுழைந்துகொள்ளும்.நுழைந்த கையுடன் கதவை மூடி சொய்பரை ( தாழ்ப்பாளை) எட்டிப் பிடித்து ஆட்டும்.சொய்பர் ஆடும் அந்த ஒலி கதவு பூட்டப்பட்டதற்கான அறிகுறி என எண்ணி குழந்தையின் மனம் குதூகலிக்கும்./ இது வழக்கமாக அந்த வீட்டில் தொடரும் நிகழ்வாக இருக்கிறது.

ஒருநாள் குழந்தையைக் காணவில்லை./ ‘பாப்பா எங்கே…’ என்று யாரோ எழுப்பிய குரல் எல்லோரையும் திடுக்கிட வைத்துவிட்டது./ அம்மா,அப்பா, பெரியப்பா , பெரியம்மா,பாட்டி என இத்தனை பேருக்கும் தெரியாமல் குழந்தை எங்கோ போய்விட்டது.எங்கே எங்கே என்று எல்லோரும் தேடுகிறார்கள்.

தற்செயலாக அம்மா குளியலறைக் கதவைப் பார்க்கிறாள்.

குளியலறைக் கதவின் வெளியே கொண்டி தொங்கிக் கொண்டிருக்கிறது.கொண்டி வெளியே தொங்கிக் கொண்டிருந்தால் உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (Thelivaththai Joseph) எழுதிய ‘மழலை’ (Mazhalai) சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்

/அம்மா,அப்பா, பெரியம்மா, பாட்டி,சாந்தியுடன் குளியலறை உள்ளே போய் குளித்த, மேல் கழுவிய, சூவிருந்த, பிஞ்சுக் கைகளில் சவர்க்காரம்(சோப்பு) குழைத்துக் குதூகலித்த பழக்கத்தில் உள்ளே நுழைந்து விட்டது குழந்தை.நுழைந்தது மட்டுமில்லாமல் நுழைந்த வேகத்தில் கதவையும் சாத்திக் கொண்டுவிட்டது.
எப்பொழுதும் போல உள்ளே நுழைந்ததும் சொய்பரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது குழந்தை. அது எப்படியோ நீண்டு பூட்டிக்கொண்டது./

குழந்தை குளியலறையின் உள்ளே தான் இருக்கிறாள் என்றதும் அனைவரும் குளியலறையைச் சூழ்ந்துகொண்டு குரல் கொடுக்கின்றனர்.

/ ‘அம்மா நான் உள்ளீ…’ என்னும் உற்சாகமான மழலையின் குரல் வெளியிலிருப்போரின் காதில் நாராசமாய் நுழைகிறது./
/படபடவென்று கதவைத் தட்டிப் பார்க்கிறார்கள் ; தள்ளிப் பார்க்கிறார்கள்.’பூட்டின மாதிரியே இந்தப் பக்கம் கொண்டியைத் தள்ளுங்க பேபி’ , ‘ கதவு கிட்டவே நில்லுங்கம்மா…உள்ளுக்குப் போகாதீங்க.. வழுக்கும்…/

இப்படிப் பதற்றத்துடன் பலவிதமான குரல்கள், கோரிக்கைகள்.

பெரியவர்களின் இந்தப் பதற்றம், ஆர்வத்துடன் குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்ட குழந்தையிடமும் தொற்றிக் கொள்கிறது. / உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டபோது இருந்த குதூகலம் குழந்தையிடம் இப்போது மறைந்துவிட்டது/

எல்லோரும் வெளியில் இருக்கிறார்களே… ஒருவரையும் பார்க்க முடியவில்லையே…நாம் மட்டும் உள்ளே இருக்கிறோமே…கதவைத் திறக்க முடியவில்லையே… என்ற எண்ணங்கள் குழந்தையை அச்சப்பட வைக்கின்றன. குழந்தை பாதுகாப்பற்ற சூழலை உணரும்போது தனக்குப் பாதுகாப்பு தரும் உறவையே தேடும்.
குழந்தை தாத்தாவைத் தேடுகிறாள்.

தன்னுடைய படிப்பறையில் பைபிள் படித்துக் கொண்டிருந்த தாத்தா , வீட்டாரின் குரல்களைக் கேட்டு வெளியே வருகிறார்.நிலைமையைப் புரிந்துகொள்கிறார்.

குளியலறையின் கதவருகே சென்று / “ குஞ்சுக் கண்ணே, அப்படியே நில்லுங்கள்….தாத்தா உங்களிடம் வருகின்றேன்…” என்று குரல் கொடுத்தார்./

குழந்தைக்கு மகிழ்ச்சி.தாத்தா நம்மிடம் வரப்போகிறார்.நம் தனிமை ஓடிவிடும்.நாம் எல்லோருடனும் சேர்ந்து விடலாம் என உற்சாகமாகிறது குழந்தை.

குளியலறையின் பின்புறச்‌ சுவருக்கும் வீட்டின் சுற்றுச் சுவருக்கும் இடையில் ஒரு ஒல்லியான ஆள் பக்கவாட்டில் ஊர்ந்து போகக்கூடிய அளவுக்கே இடைவெளி இருக்கிறது. தாத்தா அந்த இடைவெளியில் நுழைந்து வீட்டுச் சுவரில் ஒரு காலும் பின் சுவரில் ஒரு காலும் வைத்துச் சிரமப்பட்டு மேலேறி குளியலறையின் பின்புறத்தின் மேற்பகுதியில் இருக்கும் சிறிய சன்னல் வழியாக உள்ளே பார்க்கிறார்.

/ பூட்டப்பட்டுவிட்ட கதவில் முதுகைச் சாய்த்தபடி சோர்ந்துபோய் நிற்கிறது சிசு. கதவின் மண்வர்ணப் பின்னணியில் ஒரு லில்லி மலர் போல./
உயரத்தில் தாத்தாவின் முகத்தைச் சன்னலில் கண்டதும் குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி./ தாத்தா கண்ணே என்று கூவியபடி சன்னலை நோக்கி விரைய யத்தனித்தது குழந்தை./

/ வரவேண்டாம் கண்ணே, அங்கேயே இருங்கள். கதவுப் பக்கம் திரும்பி கொண்டியைக் காட்டுங்கள்…’ என்கிறார் தாத்தா./

/சரியாகச் சொய்பரின் உருண்டைத் தலையைப் பிடித்துக் காட்டுகிறது குழந்தை. சொய்பரின் கீழ் இடைவெளிக்குள் விழுந்து கிடக்கிறது இந்தக் குமிழ்.அதைப் பிடித்துத்தான் குழந்தை ஆட்டுகிறது. இடைவெளிக்குள் விழுந்து கிடப்பதால் ஒலி எழுப்புகிறதே தவிர முன் பின்னாக ஓட மறுக்கிறது./

“அதுதான் அதேதான் “ என்று உற்சாகமாகக் கூறுகின்றார் தாத்தா.” “அதை நேராக்குங்கள் செல்லம்” என்கிறார் தாத்தா/

குழந்தை தாத்தா சொன்னதைச் செய்கிறது. குழந்தையின் விரலசைவை உன்னிப்பாகக் கவனிக்கும் தாத்தா “ இப்போது கொண்டியைத் தள்ளுங்கள்” என்கிறார்.

/ பூட்டுகிற பக்கம் தள்ளிப் பார்த்து ஏமாறுகிறது குழந்தை. அந்தப் பக்கம் இல்லை.மற்ற பக்கம் என்று தாத்தா கூறி முடிக்குமுன் சின்ன விரல்கள் இயங்கின/

/ கிளிக் என்னும் ஒலியுடன் கொண்டி விலகியது. கதவு திறந்து கொண்டது.
தேவனைத் தொழ வான் நோக்கி உயரும் கரங்கள் போல் எத்தனை கரங்கள் நீளுகின்றன. வெளியே ஓடி வந்த குழந்தை அம்மாவின் கரங்களுக்குள் அடைக்கலமாகிறது /

இந்தக் கதையைப் படிக்கும்போது நம் மனத்தில் சில எண்ணங்கள் ஓடியிருக்கும்.

இத்தனை பேர் வீட்டில் இருந்தும் குழந்தையைக் கவனிக்காமல் விடுவது தவறு. குளியலறையின் வெளிப்புறத் தாழ்ப்பாளைக் குழந்தைக்கு எட்டாத உயரத்தில் அமைத்திருக்கலாம். குழந்தை குளியலறைக்குள் தாழ்ப்பாளை ஆட்டி விளையாடும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும்.

அல்லது இப்படியும் ஒரு யோசனை நமக்கு வரக்கூடும்.வந்தால் நல்லது. அதாவது, கதவைத் திறக்கவும் பூட்டவும் குழந்தைக்கு முன்பே சொல்லிக் கொடுத்திருக்கலாம் அல்லவா?

ஆமாம்.குழந்தை இயல்பாக அதில் ஆர்வம் கொண்டிருந்தது. ஆர்வம் இருக்கும் இடத்தில் கற்றல் எளிதாக நிகழும்.ஆனால், பெரியவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. குழந்தையால் அதைச் செய்யமுடியாது என்பது பெரியவர்களின் எண்ணமாக இருந்திருக்கும்.அல்லது இப்போது இது அவசியமில்லை என அவர்கள் கருதியிருக்கலாம்.அப்படித்தான் பல விசயங்களை நாம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை. குழந்தைகளின் தேவையைவிட பெற்றோர்களின் விருப்பமே குழந்தையை நோக்கி அவர்களைச் செயல்பட வைக்கிறது.

இதை எழுதும்போது நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட ஒரு சிறுமி சொன்னது நினைவுக்கு வருகிறது.
“ என்னுடைய பெற்றோர் எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.கல்வி,நடனம், சைக்கிள், பைக் என..ஆனால், தோல்வியடையும் போது என்ன செய்வது எனக் கற்றுக் கொடுக்கவில்லை”.

கதை இவ்வாறு நிறைவுக்கு வருகிறது.

/ ‘இனியொரு தடவை இப்படி நேராமல் இருக்க என்ன செய்யலாம்…வெளியிலிருக்கும் கொக்கியைக் குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைக்கலாமா ‘ என்பன போன்ற சிந்தனைகளில் மூளையைக் குழப்பிக் கொண்டனர் கூடி நின்ற பெரியவர்கள்./

/ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்துகொண்டால் இதேபோலத் திறந்துகொள்வேன் ‘ என்ற தெளிவான சிந்தனையுடன் குழந்தையின் பிஞ்சுக் கைகள் அம்மாவின் கழுத்தை இறுக்கிக் கொண்டன. கண்களின் ஓரம் தாத்தாவைத் தேடுகிறது./

குழந்தைகளை நம்புவோம்.அவர்கள் விரும்பியதைக் கற்க உதவுவோம்.

உதவிய நூல்கள்

1.எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?
– ஜான் ஹோல்ட் .
தமிழில்‌ – அப்பணசாமி.
பாரதி புத்தகாலயம், சென்னை – 18

2. மீன்கள் (சிறுகதைத் தொகுப்பு).
– தெளிவத்தை ஜோசப்.
(தொகுப்பாசிரியர் : ஜெயமோகன்)
நற்றிணை பதிப்பகம், சென்னை – 05.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. நாகேந்திரன் இ

    குழந்தையின் அறிவை ‘மழலை’கதை மூலம் அழகான கண்ணோட்டத்தில் எழுதியுள்ள மணி மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள் ஐயா.

  2. Amutha

    அருமையான ஆழமான வரிகள். அருமை👏👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *