மா. சிந்தனா (Chinthana) எழுதிய தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai MaaDeivangal Book) புத்தகம் - நூல் அறிமுகம் (Book Review)

தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai MaaDeivangal) – நூல் அறிமுகம்

தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai MaaDeivangal) – நூலில் இருந்து….

மனித மனதை உரசிப் பார்க்கும் ம. சிந்தனாவின் பேய் ஆராய்ச்சி

பள்ளியில் குழந்தைகள் அடுத்தவர், குறிப்பாக பெரியவர்கள் தங்களுக்கு இழைத்தத் தீங்கு குறித்துத் தெரிவித்தால், அதற்கு முதல் எதிர்வினை, “நீ என்ன செய்தாய்” என்ற கேள்வி. இதைத் தான் “blaming the victim” என்பது. அதாவது, பாதிக்கப் பட்டவர்களையே குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவது.

தனது பள்ளிப் பருவம் தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சூழலிலும் இத்தகைய குரூரம் நிகழ்வதை கண்டும், அனுபவித்தும் வளர்ந்த யாராக இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை இந்த சமூகம் ஏன் உணர மறுக்கிறது? என்ற கேள்விக்கான விடையைத் தேட முற்படுவது இயல்பானது.‌

சாதி, பாலினப் பாகுபாடு உள்ளிட்ட பல கருத்தியல்கள் நமது ஆழ் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

தான் செய்யும் தவறை நியாயப்படுத்த மனிதர்கள் இயல்பாகவே சமூகத்தின் மீது பழி போடுவது வழக்கம். “எல்லாம் அப்படித் தான்”, “ஊர்ல எவன் ஒழுங்கு” இப்படி பேசிவிட்டு போவது இயல்பு.‌

இத்தகையச் சமூகச் சூழலில், ஒரு பெண் தனது குழந்தைப் பருவம் தொடங்கி, அறிவியல் மாணவியாக, குற்றவியல் ஆய்வு, மானுடவியல் ஆய்வு, தொல்லியல் ஆய்வு என பல்வேறு ஆய்வுகளை‌ மேற்கொள்ள முயற்சித்தபோது, தனக்கு கிடைத்த ஒரு அறிய தத்துவப் படைப்பின் உள்ளே சென்று ஒரு மிகப் பெரும் விசாரனை நிகழ்த்தியதின் வெளிப்பாடாக “தென்றிசை மாதெய்வங்கள்” என்ற புதினத்தை படைத்து தந்துள்ளார் பல்துறை ஆய்வாளர் ம. சிந்தனா.

மிகவும் இலகுவான மொழி நடை, பக்குவமான உரையாடல், நறுக்குத் தெறித்தால் போன்ற கருத்து வெளிப்பாடு, மொத்தத்தில் பிரமிக்க வைக்கும் படைப்பாக “தென்றிசை மாதெய்வங்கள்” அமைந்துள்ளது.‌

2000ம் ஆண்டில் நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்த நாட்களில் என்னைப் பார்க்க வந்த நாடகவியலாளர் பிரளயன், ஏகலைவனை கதை சொல்லியாக கொண்டு தான் ஒரு நாடகத்தை குழந்தைகளைக் கொண்டு உருவாக்கி உள்ளதாக சொன்னார்.

துரோணர் பார்வையில் கதை கேட்டு பழகியவர்களுக்கு, ஏகலைவன் பார்வையில் கதை என்றால் எப்படிப்பட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று யூகித்துக் கொண்டு, அதே நாடகத்தை சென்னைக் கலைக் குழு நடத்தத்தட்டும் அதன் செலவுகளை நான் ஏற்கிறேன் என்றேன்.

“உபகதை‌” உருவாகி அரங்கேறியது.‌

சிந்தன் புக்ஸ் வெளியீடாக வெளிவந்துள்ள “தென்றிசை மாதெய்வங்கள்” நாவலில் நீலியின் வாயிலாக கதை சொல்ல முற்பட்டுள்ளார் ம. சிந்தனா.

இதுவரை “நீலகேசி” தமிழர்களின் தத்துவ மரபு நூலாக பேசப்பட்டு வந்தது.

மனித மனதை உரசிப் பார்க்கும் ம. சிந்தனாவின் பேய் ஆராய்ச்சி - Angusam News -  Online News Portal about Tamilnadu

புத்த, சமண தத்துவங்களுக்கு இடையிலான மோதலாக குண்டலகேசியும் நீலகேசியும் பார்க்கப்பட்டது. நீலகேசி தமிழர்களின் தத்துவ திரட்சியாக உருவெடுத்துள்ளது. நீலகேசி சிறு காப்பியமல்ல, அது தமிழின் முழு முதல் தத்துவ நூல் என்று கூறியிருந்தார் அருணன்.

தத்துவ நூலாகப் பார்க்கப்பட்ட நீலகேசியின் கதாநாயகி நீலி நடத்திய தத்துவ விசாரணை குறித்து நூலறிஞர்கள் மேற்கொண்டு வந்த ஆய்வுகளுக்கு உள்ளே சென்று, நீலிக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழ்ச் சமூகம் செய்த பெருங் குற்றத்தைம் மறைக்க, நீலி எப்படி துறவி ஆக்கப்பட்டு, அதிலும் சமணத் துறவியாக, பௌத்தத்தை எதிர்த்து வாதிட்ட துறவியாக புனையப்பட்டாள் என்பதையும் ஆராய்ந்து, உணர்ந்து, உண்மையான நீலி யார்? அவர் பட்ட துண்பம் என்ன? நீலியின் தொடர்ச்சியாக இன்றும் நிர்க்கதிகளாக நிற்கும் இன்றைய நீலிகளின் வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதலை தர முற்படும் மிகப் பெரும் கிளர்ச்சியை ம. சிந்தனா “தென்றிசை மாதெய்வங்கள்” காப்பியத்தின் மூலம் செய்துள்ளார்.

கடவுள் உருவான கதைகள் குறித்த ஆராய்ச்சியுடன் தொடங்கும் “தென்றிசை மாதெய்வங்கள்” புதினம், மொழி உருவான ஆராய்ச்சியையும் மேற்கொண்டு, பெண் ஏன் அடிமையானாள் என்ற பெரும் விசாரனையுடன் கதை களத்திற்குள் செல்கிறது.

குழந்தைப் பருவத்தில் உடல் முழுமையடையும் போது, ‘பெரிய மனுஷி ஆகிவிட்டாள்’ என்ற அறிவிப்போடு கூண்டுக்குள் தள்ளப்படும் பொழுதில் தொடங்கும் மன வேதனை, இயல்பான பெண்ணிய வாழ்வியலாக, பெண்களே ஏற்றுக் கொள்ள வைக்கும் சமூக உளவியலை மிகவும் தத்ரூபமாக இந்த புதினம் பேசுகிறது.

கண்ணகி சிலம்பு உடைத்தது போல, மாதவி தனது யாழை உடைத்ததாக தனது “விதியோ வீணையோ” காப்பியத்தில் கவிஞர் தமிழ்ஒளி காட்சி அமைத்திருப்பார்.

இருபதாம் நூற்றாண்டின் பொதுவுடைமைப் பாவலர் கவிஞர் தமிழ்ஒளியின் வாரிசாக இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எழுத்தாளர் ம. சிந்தனா உருவெடுத்துள்ளார் என்றே இந்த புதின வாசிப்பு எனக்கு உணர்த்துகிறது.‌

பாவேந்தர் பாரதிதாசனாருக்கு ஒரு பரம்பரை என்பதுபோலவே கவிஞர் தமிழ்ஒளிக்கு ஒரு பரம்பரை உருவாகி இருப்பது பெரும் மகிழ்ச்சி.‌

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பேசப்படும் படைப்புகளில் ஒன்றாக “தென்றிசை மாதெய்வங்கள்” புதினம் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிற்கும்.

“அறம் அதிகாரம்” என்ற நூல் மூலம் சமீபத்தில் மறைந்த‌ எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட அறங்கள் எப்படி அதிகாரத்தின் வெளிப்பாடாக இருந்தது என்பதை விளக்கி இருப்பார்.

பாலின சமத்துவத்திற்கு எதிரான கருத்தியலையும், சாதியச் சமூகத்தின் அட்டுழியங்களையும் தனது புதினத்தின் வாயிலாக தோலுரித்து, பாவேந்தர் பாரதிதாசனார் கூறுவதுபோல சாதியெனும் தாழ்ந்தபடி ஆதித்தமிழ் சமூகத்திற்கு தள்ளுபடி.

இடைப்பட்ட காலத்தில் உருவான வணிகச் சமூகத்தில், பொருள் கைவசம் இருக்கும் ஆணவத்தின் வெளிப்பாடாக சமூக பாகுபாடும், அதில் பெண் ஒரு நுகர்வுப் பொருளாக பார்க்கப்படும் மனநிலையும் உருவானது.

அன்றையச் சூழலில் தொடங்கிய, பாதிப்பிற்குள்ளான பெண்ணையே குற்றவாளி கூண்டில் நிறுத்தும் கொடுஞ்செயல், 21ம் நூற்றாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் வரை நீடித்துள்ளதை நாம் உணர்ந்துக் கொள்ள உதவுகிறது இந்த புதினம்.

நீலி மீது சமூகம் போட்ட பழி, நீலியைப் பேய் ஆக்கியது. பேயாக சித்தரிக்கப்பட்டவரை துறவியாக்கி, தனது பாவத்தை போக்கிக் கொள்ள தமிழ்ச் சமூகம் முற்பட்டது.

இன்றும், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே கூட ஒரு பெண்ணிற்குப் பாதுகாப்பு தர முடியவில்லையே என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, “அந்த நேரத்தில், அந்த இடத்தில், உனக்கு என்ன வேலை?” என்று கேட்கும் சமூகம், நாகரீக சமூகமா? என்று மனித மனதை உரசிப் பார்க்க முற்படும் பேய் ஆராய்ச்சிதான் ம. சிந்தனாவின் “தென்றிசை மாதெய்வங்கள்”.

அவசியம் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். இந்த புதினம் வாசகனின் மனதை உரசும். மனதில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும்.

தொழிலாளர் வர்க்க உணர்வு மேலோங்க நமது சிந்தனையை உயர்த்தும்.

ம. சிந்தனாவிற்கு பாராட்டுகள். சிந்தன் புக்ஸ் பதிப்பகத்தாருக்கு பாராட்டுகள்

நூலின் தகவல்கள் : 

நூல் : தென்றிசை மாதெய்வங்கள்
(தூய பிறப்புகளின் தூய்மையற்ற கதை)
நீலியின் மரண வாக்குமூலமாக ஒரு நாவல்.
ஆசிரியர் : மா. சிந்தனா
வெளியீடு : சிந்தன் புக்ஸ் வெளியீடு
பக்கங்கள் :  100
விலை : ரூபாய் 120.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

– பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *