‘தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு‘
ஆசிரியர்:செ.தமிழ்ராஜ்
பக்கம்:100
விலை:100
வெளியீடு:மானுட சிந்தனை பதிப்பகம்.
கவிஞர் தமிழ் ராஜ் அவர்களின் ‘தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு‘கவிதை நூல் குறித்து ஓர் சிறிய விமர்சனம் தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை சுருக்கமாக சொன்னால்?
நல்ல குளிர்கொண்ட இரவில் சூடான ஒரு தேனீர் கோப்பை கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆனால். கிடைப்பதில்லை. தேநீர் கோப்பை கையிலிருக்கும் ஆனால் அது குளிர்ந்த இரவாய் இருக்காது . இப்படித்தான் இருக்கிறது நம்முடைய வாழ்க்கையும்….என்பதாகத்தான் இருக்கிறது இந்நூலின் சாரம்.
வாழ்க்கை சிக்கலானது . பெரும் துயரம் கொண்டது அதாவது . புயலில் சிக்கிய சிறு படகு கரை சேர்வதை போலத்தான். அதையே கவிஞருடைய மொழியில் கேட்கையில் மனம் சற்றே கனக்கிறது, பிரிதொரு கவிதையில் கனம் குறைகிறது மனம் இறகாகி பறக்கிறது .
‘உங்களை/ நீங்களே புரிந்து கொள்ளும் /வாழ்வேனும் சித்திரத்தை /நிறைவு செய்கையில்/…. நீங்கள் இருக்கப் போவதில்லை/… மதிப்பீடு செய்யும் /பார்வையாளர் கையில் இருக்கிறது/ நீங்கள் வரைந்த /உங்களின் வாழ்க்கை‘
இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது சட்டெனப் புரிகிறது. ஆனால் இக்கவிதையை கடக்கத்தான் நீண்ட நேரம் ஆகிறது. அதாவது நான்கு காலில் நடந்து போகையில் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்களே அதைத்தான் சொல்கிறார்
‘அணைந்து விடக் கூடாது /எனும் விரல்களின்/ பெரும் தவிப்பும்/அணைத்தே தீர்ப்பது/ எனும் பெருங்காற்றின்/ உதடுகளுக்கும் இடையே/ ஊடாடிக் கிடப்பது தான்/ வாழ்வு எனும் பெரும் துயரம்‘
என்று வாழ்வினுடைய சாரத்தை சிறிது சாறாக பிழிந்து தருகிறார்.
ஞானம் அது எங்கே கிடைக்கும்…எனக்கெல்லாம் புத்தகத்தில் தான் கொஞ்சம் கிடைத்ததென்று நினைக்கிறேன். புத்தனுக்கு போதி மரத்தடியில் கிடைத்ததாய் சொல்லப்படுகிறது. ஆனால் கவிஞர் தமிழ் ராஜ்
‘மரத்தடியிளெல்லாம் இல்லை…வாழ்வின் நெருக்கடியில் கிடைக்கிறது ஞானம்.’ ஒரு ஆழ்ந்த நெருக்கடிக்கு நம்மை ஆளாக்கி சிந்திக்கத் தூண்டுகிறார் ஒரு சொல்….அது என்னவெல்லாம் செய்யும். ஒரு சொல் தானே அது என்ன செய்து விடும். ஆனால்?
‘ஒரு சொல் வாழ்வை உறையச்செய்து விடுகிறது சுழன்றாடும் சுடரை ஊதி அணைக்க அச்சொற்களே காற்றாக மாறிவிடுகின்றன‘
ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும். வார்த்தையை அளந்து பேசு. என்பார்கள். வெல்லும் என்றால்?ஒரே ஒரு சொல் நம்மை உயரத்திற்கும் எடுத்துச் செல்லும். பெரும் வெற்றியைத் தேடித் தரும். அதே சொல் மாறாக இருந்தால் கொல்லும். எதிராளியை மட்டுமல்ல சொன்னவனையும் கொல்லும். அதனால் தான் திருவள்ளுவர். கனி இருக்க காய் கவர்ந்தற்றே என்பார்.
திருவள்ளுவர் இன்னும் நிறைய சொல்லுகிறார். நாகாக்க என்கிறார்.
ஏன் கையை காலை காக்க சொல்லவில்லை? நாக்கைத் தான் காக்க சொல்லுகிறார். அது சரியா இருந்தா மற்றதெல்லாம் அடி வாங்காமல் தப்பித்துக் கொள்ளும் அல்லவா நாகாக்க இல்லையென்றால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. அதாவது சொல்லானது இழுக்கப்பட்டு விடும் என்று சொல்கிறார். திருவள்ளுவர் இன்னும் நிறைய சொல்லுகிறார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. என்கிறார் .அதுவே புதிய குறளாக கவிஞரின் சொல்.
‘ஒரு சொல்லுக்கு பறந்தோடி வருகின்ற கூட்டம்சிறு கல்லுக்கு விரைந்தோடி விடுகின்றது சொற்களிலும் கற்களின் வலிமை ஆகப்பெரிதாகிறது. நாம் கூறும்போது அது ஒரு சிறு சொல் தான் அதுவே எதிராளியை சென்றடையும் போது அது பெரும் பாறையாகவும் வலிமையை பெற்று விடும் என்கிறார். சொல் மட்டுமல்ல மனமும் கனக்கிறது நிறைய தருணங்களில் சொற்கள் தவறாய் வந்ததெல்லாம் ஞாபகத்தில் ஓடுகிறது. இக்கவிதையை அடிக்கடி வாசித்துக் கொண்டால் மனம் பக்குவம் அடையும் என்று தோன்றுகிறது. பிறிதோர் இடத்தில்.
‘கூழாங்கற்களால் கட்டி எழுப்பப்பட்ட கோபுரமொன்று சிறு காற்றிற்கு உருக்குலைந்து விடுவது போன்றது தான். நொடிப் பொழுதில் சிதைந்து விடுகிறது அன்பற்ற கொடுஞ் சொல்லால் சிலர் வாழ்வு.ஆகையினால சொற்களிலும் மௌனம் வேண்டும் என்கிறார்.சொற்களில் மௌனம் வேண்டும் என்பது மிகச் சிறந்த சொல்லாடல்.
‘கடிவாளமற்று கட்டவிழ்த்தப்படும் குதிரைகளாய் பாய்ந்து ஓடும் சொற்களில் இருந்து எதிரிகள் தங்களுக்கான ஆயுதங்களை தயாரித்துக் கொள்கிறார்கள்‘
என விளக்கமான கவிதையில் வாழ்க்கையை நமக்கு விளக்குகிறார். அதாவது நண்பர்களே புகழ்ச்சிக்கும் அன்புக்கும், இனிமையான சொற்களுக்கும் தான் மனிதக் கூட்டம் ஏங்கிக் கிடக்கிறது, அதை வாரி வழங்குவதில் நமக்கு என்ன குறை, புன்னகை கொண்டே வாழ்க்கையை புரட்டுங்கள் என்பதாகவே இருக்கிறது நண்பரின் கவிதைகள்.
என் பார்வையில் எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன் அதாவது. பல வண்ண நிறத்தில் ஒர் ஓவியம் உருப் பெறுகின்ற போது. தூரிகையானது பல நிறங்களையும் தொட்டுத் தொட்டு உதறி உதறிப் பார்த்தே வரையும். அப்படி உதறிச் சிதறிய இடத்திலும் ஓர் ஓவியமாக உருப்பெற்றிருக்கும் அதை தூரிகை தூவிய வண்ணங்கள் என்று சொல்லலாம். அந்தத் தூரிகை தூவிய வண்ணமானது. காணு கின்றவருக்கு காணுகின்றவாறும், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றவாறும் ஏராளமான உருவவங்களைத் தரும் அதைப் போல் தான் கவிஞர் தமிழ் ராஜனின் கவிதைகளும். எழுதியவர் ஓர் எண்ணத்தில் எழுதி இருந்தாலும் காண்பவருக்கு அது வேறொன்றாய் தோன்றலாம். அதுவே சிறந்த படைப்பு ஆகும்.
எனக்கு தமிழ் ராஜுவின் கவிதைகள் வாழ்ந்த வாழப்போகிற வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவதாகத் தான் இருக்கிறது. இதோ உதாரணமாய் ஒரு கவிதை
‘கூழாங்கற்களாய்
வாழ்வின் துன்பங்களை
அடுக்கி நிமிர்கையில்
புத்தன் மிளிர்கிறான்.
இது ஒரு ஆழ்ந்த தத்துவமாக உள்ளது. செங்கல் போன்ற சதுரமான கற்களை அடுக்குவதைப் போல் கூழாங்கல்லை அடுக்கி விட முடியாது. கூழாங்கல்லை வாழ்வின் துன்பங்களோடு ஒப்பிடுவது கவித்துவமானது. வாழ்வின் துன்பங்களை ஒருவன் கூழாங்கல்லைப் போல் அடுக்கி விட்டானேயானால்….. நிச்சயம் அவன் புத்தனாகவே மிளிர்வான். ஆகாயம் அழுதால் தான் பூமி சிரிக்கும்….இவருடைய ‘ஆகாயமும் அழுகிறது ஏன் அழுகிறாய் என்று கேட்டால் சிட்டுக்குருவியின் இறகை நனைத்து விட்டேன் என்று சொல்லிச் சிணுங்குகிறது
ஒரு கவிதை தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றி சொல்லுகிறது.
‘உங்கள் நாடகங்களை
நீங்கள் நடித்துப் பழகுவதற்கு
திறந்தவெளி மைதானமாய்
எங்கள் மார்புகள்.’
இக் கவிதை துப்பாக்கி முனையை தெறிக்க விடுகிறது. துணிச்சலாய் தன்தன் மார்பை திறந்து காட்டுகிறது. ஆனால் நமக்கோ துப்பாக்கிச்சூட்டில் இறந்து போனவர்களை நினைத்து மனம் கலங்குகிறது.
நம்ம ஊர் எல்லைகளில் பாத்தீங்கன்னா காவல் தெய்வம் என்ற பெயரில் அழகான வெள்ளைக் குதிரையில அய்யனாரு அருவாளோட அமர்ந்திருப்பாரு ஆனால் ஒரு நாளும் அவர் திருடனை மட்டும் பிடிக்கவே யில்லை. அழகாய் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.ஓர் அரசாங்கம் பொது மக்களிடம் திருடுமா? என்றால் திருடும் என்கிறார். அது எப்படிங்க திருடும் என்ற கேள்வி எழும் போது.அது எரிபொருள் நிரப்புகின்ற இடமாக இருக்கலாம், அல்லது டோல் கேட்டாகவும் இருக்கலாம்‘ என்கிறார். அதோடு விடவில்லை
‘சம்பல் பள்ளத்தாக்கு
கொள்ளையர்களை விட கொடுமையானது….
நீங்கள் கடக்கும்
சுங்கச்சாவடிகள்‘ என்கிறார்.
‘மதுபானத்தை
ஊற்றிக் கொடுத்து விட்டு
பிறகு சாலைகளில் நின்று
ஊதச் சொல்லி..
வழிப்பறி செய்கிறது.
இப்படி அரசாங்கம் நம்மை எங்கேயெல்லாம் ஏமாற்றி பணத்தைப் பறிக்கிறது என்பதை புட்டு புட்டு வைக்கிறார்.
என் மனதைத் துளைத்த ஒரு கவிதை
‘குளத்தின் ஆழ்துயிலை
சிறு கல்லால் கலைத்து விட்டு
வேலைக்குச் செல்கிறான்
சிறுவன் ஒருவன்‘
அங்கே கலங்கி நிற்பது குளமல்ல வாசிப்பவனின் மனம்
அந்தக் குளத்தை அவன் ஏக்கத்தோடு பார்த்துவிட்டு போவதாக எனக்குத் தெரிகிறது. அது உறங்கும் உறக்கத்தை கூட அவன் உறங்க முடியவில்லை. தூக்கத்தைத் துறப்பவனுக்கு அதிகாலை என்பது மிகப்பெரும் கொடுமையே.அதுவும் பால்யம் பாழாய் போவது கொடுமையிலும் கொடுமை .அந்த சிறுவன் எரிந்த கல் என் மனதை விட்டு எப்போது அகலமோ.புகைப் படிந்த அடுப்பங்கரையிலிருந்து…. இறுதிவரை மீட்கவே முடியவில்லை… நம் இரைப்பையில் இருள் படியாமல் வெளிச்சம் பாய்ச்சிய தாயாரை.
இது ஒரு தாய்க்கு அல்ல உலகத்தில் உள்ள அத்தனை தாய்களுக்கும் .எத்தனை காலமானாலும் அடுப்படியில் இருந்து அவர்களை மீட்கவே முடியாதுபோல . பத்து வருடங்களுக்கு முன்னால் இவர் தாய்க்கு எழுதியது போல் நான் என் மகளுக்கு எழுதினேன்.
“புகை படிந்த அடுப்படி வேண்டாம் படித்துக்கொள் மகளே என்று நூலகம் கொண்டு விட்டேன் அவளும் தேடித்தேடி எடுத்து வந்தாள்
‘பதினாறு புள்ளி கோலம் போடுவது எப்படி‘
‘இருப்பதைக் கொண்டு சமைப்பது எப்படி‘
எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் நிஜமானர்களுக்கு கால்கள் இருப்பதே மறந்து விடும் ஆமா சுமப்பவனுக்கும் தன் தலையில் பாரம் இருப்பதும் மறந்துவிடும். அல்லது பழகிவிடும்.பசியில செத்துட்டான் உற்றார் உறவினர் ஒருவரும் கவனிக்கவில்லை.அதாவது சோறு போட மாட்டார்கள் ஆனால் செத்த பின்னே சிலை வைப்பார்கள். கவிஞர் அதை இன்னும் அழகாய் அவர் மொழியில்.
‘பசியில் செத்தவர்களை
படைலிட்டு கரைந்தழைக்கிறார்கள்.
பாவச்சோறு என்று அறிந்து
காது கேளாதவாறு
மரக்கிளையை இறுக பற்றி
அமர்ந்திருக்கிறது காகம் ஒன்று‘
போராட்டம் இல்லை எனில் யாராட்டமும் செல்லாது. போராடாமல் வாழ்க்கை இல்லை. பிறந்ததிலிருந்து பிறக்கும்போதும் கூட மனிதன் போராடிக் கொண்டுதான் இருக்கிறான். அன்னையின் கருவறைக்குச் செல்லும் விந்துவாக இருக்கட்டும். அன்னையின் மகப்பேராய் இருக்கட்டும் எல்லாமே ஒரு போராட்டம் தான் ஆனால் இன்றைய சமுதாயம். கேள்வி கேட்க மறுக்கிறது. அடிமை வாழ்வுக்கு பழகிக் கொண்டது அல்லது நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்கிறது. அழுகிப்போன பழத்தில் அப்பிக் கிடக்கும் ஈக்களாக அப்பி கிடக்கும் மனிதர்களை கேலி செய்கிறார்.
‘உலையிலிடப்படும் அரிசி கூட
பானையிலிட்டால் பொங்கி வழிகிறது
குக்கரில் வைத்தால்
விசிலடித்து அலறுகிறது‘
ஆனால் இந்தியர்கள் பண மதிப்பு நீக்கம் என்றாலும் ஜிஎஸ்டி என்றாலும் எத்தனை கொடுமை என்றாலும் .கேவலமாய் தூங்குகிறது. புத்தகத்திலே எனக்கு மிக மிகப் பிடித்த கவிதை இது என்று சொல்லுவேன்.
‘உலகெல்லாம்
வலம் வந்து நெடுந்தூரம்
நீந்தி வந்த களைப்பில்
நுரை தள்ளப்படுத்திருக்கிறது.
அலையாடுங்கடல்,
அலையை கடலில் நீந்தி வந்ததாக உருவகப்படுத்தி இருப்பது சிறப்பு.
90 பக்கம் கொண்ட இந்த நூலில் 180 கவிதைகள். எந்தக் கவிதையையும் குறை சொல்ல முடியாது அனைத்தும் தேர்ந்தெடுத்த முத்துக்கள். அனைத்து கவிதையையுமே நான் இங்கே சொல்லிக் கொண்டிருப்பது அழகாய் இருக்காது. வாசகர் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும். கவிஞர் தமிழ் ராஜ் இன்னும் மேலும் மேலும் சிறப்பான இது போன்ற படைப்புகளை தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.கவிஞருக்கு எனது அன்பான வாழ்த்துக்களையும் எனது நன்றியையும் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
பொன் விக்ரம்
மதுரை
9080723037