நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின் உலகம் வழியாக பதிவு செய்திருக்கிறார்.
7வயது வரை பார்வையுள்ள சிறுவனாக இருந்து விட்டு திடீரென பார்வை பறிபோவதும் . அவர்கள் குடும்பம் சொல்லொண்ணாத் துயரில் மூழ்குவதும் ஏற்கனவே அவர்கள் குடும்பச் சூழல் அவல நிலையில் இருப்பதும், குடிப்பதும் கூத்தியாள் வீட்டிற்கு சென்று கூத்தடிக்கும் தகப்பன். வறுமையைத் தவிர வேறு எதையும் அனுபவித்தறியாத தாயார் மற்றும் சகோதரியோடு அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை விவரித்தபடி நாவலின் உலகம் விரிகிறது.
பார்வை பறிபோனதும் கல்வியும் தன் பார்வையை இழந்து வீட்டோடு முடக்கி விடுகிறது. என்ன செய்தும் திருத்த முடியாத குடிகாரத் தகப்பனோடு குருட்டுப் பட்டம் வேறு உயிரை நெருக்குகிறது. அத்துடன் வறுமை, அது கொண்டு வரும் வயிற்றுப் பசி, எந்தத் திசை திரும்பினாலும் வாழ்க்கை விரட்டி விரட்டித் தாக்குகிறது. வாழ்வதற்கு வழியற்ற சின்னக் கிராமத்தில் பார்வையற்றவனுக்கு என்ன பரிகாரம் இருக்கப் போகிறது. மாமனின் வழிகாட்டலோடு சென்னையில் உள்ள அரசு பார்வையற்ற பள்ளியில் படிக்க துவங்குகிறார். அங்கு தான் முதல் முறையாக மூன்று வேளை சோற்றை உண்ணத் துவங்குகிறார்.
சோறு கல்வி என அவர் வாழ்வு ஒளி வீசத் துவங்குகிறது. பார்வையற்றோருக்கான பிரெயில் மொழிப் பாடங்களை ஆர்வத்தோடு கற்கத் துவங்குகிறார். 7 வயதில் நின்ற கல்வி மீண்டும் 13 வயதில் துவங்குகிறது. கல்வியில் அவருக்கிருந்த ஆர்வம் காரணமாகவும் வயதும் அவரை கூடுதல் வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற வைக்கிறார்கள். உடன்படிக்கும் மாணவர்களின் ஒத்துழைப்பில் விடுதி வாழ்க்கையின் இடர்பாடுகள் கடந்து முன்னேறுகிறார். பதின் பருவ வாழ்க்கைக்கு உண்டான உடல் கிளர்ச்சிக்கும் அதை அனுபவிக்கவும் செய்கிறார். வலிய உறவிற்கு அழைக்கும் பார்வையற்ற பெண்களின் நிலையும் வெளிப்படையாக சொல்கிறார். விடுதியில் இருந்து வெளியே சென்று படம் பார்க்கச் செல்வதும், எளிய மக்களின் தொடர்பும் அவர்களின் அன்பும், புயலில் வீடு இடிந்து பலியாகும் தோழியின் வாழ்வியலும் துயரக் கதைகள். திராவிட அரசியலும் மொழி போராட்டமும் விரிவாக பேசப்படுகிறது.
நூல் முழுக்க பார்வையற்ற வலியை விட பசித்த வலிதான் பெரிதாக பேசப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள யாவருக்குமான பொதுவலி. விமர்சனமாக இரண்டு செய்திகளை சொல்லலாம். பார்வை பறிபோனதற்கு ஒரு மூடநம்பிக்கை கதை சொல்லப்படுகிறது. அதன் வழியே தனது குலம் குறித்தான ஒரு சுய பெருமிதமும் போகிற போக்கில் பேசப்படுகிறது. இரண்டாவதாக மூன்று பதிப்புகளை கடந்த பின்பும், எளிய சாதி மக்களை சாதியின் இழி பெயரால் வண்ணாங் கூலி, அம்பட்டங் கூலி என மிக எளிதாக குறிப்பிட்டு கடந்து செல்கிறார். அதில் திருநங்கையர் குறித்தான பழைய கேலிச் சொல்லும் வருகிறது.
ஒரு முற்போக்கு முகாமில் செயலாற்ற கூடிய தோழர் சொற்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வட்டார எழுத்து மொழி என்றாலும் ஏராளமான எழுத்துப் பிழைகள். அடுத்த பதிப்புகளில் இவையெல்லாம் சரி செய்திடல் வேண்டுகிறேன். பார்வையற்றவர்கள் கூறுணர்வும், நுண்ணறிவும் மிக்கவர்களாக வாழ்வை மிகவும் தன்னம்பிக்கையாக எதிர்கொள்கிறார்கள். அந்த வகையில் தோழரின் போராட்டமிக்க வாழ்வும், அதை நம்பிக்கையோடு எதிர்கொண்ட எழுத்துச் செயல்பாடும், நமக்கெல்லாம் முன்மாதிரிகள். அவர் வாழ்வும் எழுத்தும் மென்மேலும் சிறக்கவும், இதன் தொடர்ச்சி இரண்டாம் பாகமாக வருவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தோழர் தேனி சீருடையான் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நூலின் விவரம்:
நிறங்களின் உலகம் (நாவல்)
எழுத்தாளர்.தேனி சீருடையான்
ஆண்டு: 2008
பக்கம்: 304
விலை: 280
வெளியீடு: அகரம் பதிப்பகம்
கட்டுரையாளர்:
✍🏻செ. தமிழ் ராஜ்
வண்டியூர்
மதுரை
[email protected]
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.