தேனி சுந்தர்- மாணவர் மனசு ( Theni Sundar - Manavar Manasu)

தேனி. சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

*வேடிக்கையும் விளையாட்டும் தான் குழந்தைகள் உலகம்*

 

அரசு பள்ளி ஆசிரியரான நூலாசிரியர் தேனி. சுந்தர், தனது பள்ளி மாணவர்களிடம் கற்றுக் கொண்ட பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே இந்நூல்.

16 தலைப்புகளில் ஒவ்வொரு சம்பவங்களையும் மாணவர்களின் மொழியில் மிக அற்புதமாக நூலைச் செதுக்கி உள்ளார்.

வகுப்பில் மாணவர்களோடு மாணவராக வலம் வருகிறார். கல்வித்துறை உயர் அதிகாரிகள் வரும்போது அதிகாரிகளுக்கே அதிகாரியாகவும் மாறிவிடுகிறார்.

உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மாணவர்களிடம் அன்பாக பேசி வினாக்கள் எழுப்புவதில்லை. மாறாக அதிகாரத்துடன் கேள்வி கேட்பதை சுட்டிக்காட்ட தயங்கவில்லை நூலாசிரியர். குழந்தைகளின் மொழியில் வினாக்கள் எப்படி எழுப்புவது? என்பதை உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு இவரது மாணவர்கள் பாடநூல்களை மட்டுமல்லாது பல பொது அறிவு விஷயங்களை கற்று அறிந்து கொண்டு வருகின்றனர் என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.

அதிகாரிகள் உங்கள் அப்ரோச் மிகவும் அருமையாக உள்ளது என நூலாசிரியருக்கு பாராட்டு சொல்வது அருமை.

மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்குக் கொண்டு வரும் தின்பண்டங்களை மற்றொரு மாணவர் வகுப்பறையில் திருடி தின்ற சம்பவத்தை திரையில் பார்க்கும் அளவுக்கு நகைச்சுவையோடு வர்ணித்துள்ளது பாராட்டுதலுக்குரியது.

பொதுவாகவே மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணித பாடங்கள் பிடிக்காது.

இந்த இரு பாடங்கள் நடத்தும் போது ஆசிரியர்கள், முகம் கடுக்கவோ வார்த்தைகள் தடித்து பேசக்கூடாது மிகவும் அன்போடு எளிமையாக புரியும் படி நடத்தினால் இரு பாடங்களையும் மாணவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.

உயர் அதிகாரிகள் ஆய்வு செய்கிறோம் என்ற வகையில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் நடத்தும் அதிகார தோரணைகளை மிக அழகாக நகைச்சுவை தழும்ப சுட்டிக்காட்டி உள்ளார். இந்நூலை வாசிக்கும் கல்வித் துறை அதிகாரிகள் தங்கள் அதிகார தோரணங்களை நிச்சயம் மாற்றிக் கொள்வார்கள் என்பது உண்மை.

ஆய்வுக்கு வந்த அதிகாரியை, மாணவர்கள் இவரெல்லாம் நம் பள்ளி தலைமை ஆசிரியராக வந்தால் நாங்கள் வேறு பள்ளிக்கு சென்று விடுவோம் என ஆசிரியரிடம் மாணவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் மிக அருமை.

பொதுக் கழிப்பறை சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர் குழந்தையும் பள்ளியில் படித்து வருகிறார்.

தன் மகளிடம் வீட்டுச் சாவியை வாங்க வரும் போது நகராட்சி பணியாளர் மது அருந்திவிட்டு வருவதை மாணவரும் ஆசிரியரும் கடுமையாக கண்டிக்கிறார்கள்.

மாலையில் பள்ளி விடும்போது ஆசிரியரை சந்தித்து தனது பணி குறித்தும் நான் ஏன் மது அருந்துகிறேன் என்பதையும் கூறியதோடு, என் பிள்ளையை நல்லா படிக்க வைங்க என நகராட்சி ஊழியர் ஆசிரியரிடம் மன்றாடுவது மிகவும் நெகிழ்வான சம்பவம். இதுதான் கிராம பகுதியில் படிக்கும் மாணவர்கள் நிலை என்பதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

ஆசிரியரோடு குழந்தைகள் நெருக்கமாக உள்ளார்கள் என்பதற்கு உதாரணம்: வகுப்பறையில் நுழையும் ஆசிரியரை மாணவர்கள் கதவின் பின் ஒளிந்து கொண்டு ஆசிரியர் வரும்போது “பே” என சப்தமாக ஒலி எழுப்பி பயம் காட்டுகின்றனர். ஆசிரியரும் பயந்து போனதாக நடந்து கொள்கிறார். இதை ரசித்து சிரித்தும் கொண்டாடிய மாணவர்கள் தான் பள்ளியின் உலகம்.

பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல கல்வித்துறை அதிகாரிகளும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூலாசிரியர் ஆசிரியர் தேனி சுந்தருக்கு பேரன்புகள்.

நூலின் தகவல்கள் 

நூல் : “மாணவர் மனசு”

நூலாசிரியர் : தேனி. சுந்தர்

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

விலை : ரூபாய் 70/-

தொடர்பு எண்: 044 24332424

நூலறிமுகம் எழுதியவர் 

MJ. பிரபாகர் 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *