Theral pithu short story by manavai karnikan தேறல் பித்து

தேறல் பித்து சிறுகதை – மணவை கார்னிகன்



என்றும் போல் அன்றும் அதிகாலை எழுந்து எனது டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டியில் பூண்டு மூட்டையை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு தயாராக இருந்தேன்.

“மல்லிகா ,ஏய் மல்லிகா,”

“என்னாங்க, ஏன் கத்துறீங்க?”

“நான் போயிட்டு வர்றேன்”. என்று சொல்லிவிட்டு வண்டியைத் தொட்டு இரு கைகூப்பி கும்பிட்டு விட்டு கிளம்பினேன்..

நிதானமாக சென்று கொண்டிருந்த வண்டி. தள்ளாடிச் செல்வதை உணர்ந்து நிறுத்தினேன். வழக்கம்போல் எனது வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

“என்னாண்ணே, இன்னைக்கு லேட்டு?”என்று பார்வதி கேட்டாள்.

“வர்ற வழியில வண்டி பஞ்சர். அதான் லேட். சரி
எத்தனை கிலோ வேணும்

“அரை கிலோ போடுங்கணே”

“சரிம்மா”

“எவ்வளவு விலைணே?”

“அறுவது ரூபாய்ம்மா. விலையெல்லாம் கூடிருச்சும்மா”

“போன வாரம் எம்ஜிஆர் நகர்ல அம்பது ரூபாய்க்கு போட்டிங்களாமாம் அதுக்குள்ளேயும் கூடிடுச்சா?

“பேரம் பேசாதம்மா ஜிஎஸ்டி என்று ஏதேதோ வரி போடுறாங்க. அதான் விலை கூடிருச்சு. நானே இன்னைக்கு லேட்டு வழவழனு பேசாம காசு எடுத்துட்டு வா… “என்று சொல்லிவிட்டு இயந்திரத் தராசு தட்டில் பூண்டுகளை அள்ளி சருகுகளை தூற்றிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த முகத்தைக் கண்டேன்.
பறக்கும் சருகுகளுக்கிடையில் அந்த அழகான முகம் அலங்கோலமாய்த் தெரிந்தது.. ஒன்பது பத்து மணி இருக்கும். கோடை வெயில் கொளுத்தியது. அந்த வெயிலில் நடுவீதியில் நிறைமாதம் மேடிட்ட வயிறுடன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள்.

காசு எடுக்கச் சென்ற பார்வதி. ‘இந்தாண்ணே’ என்று காசை நீட்டினாள். “பார்வதிம்மா யாரு அந்த பொண்ணு. நிலா வெளிச்சத்துல நிக்கிற மாதிரி நிக்குது” என்று கேட்டேன்.

“அண்ணே அதுக இந்த வாரம் தான் புதுசா குடி வந்துச்சுங்க. வந்ததிலிருந்து ஒரே அக்கப்போர். அந்தப் பொண்ணு புருஷன் குடிக்காத நேரமில்லை. நேத்து நைட்டு என்ன சண்டைன்னு தெரியல. அந்த பொண்ணு நைட்ல இருந்து வெளியில் தான் நிக்குது. என் புருஷன் கூட என்னப்பா சண்டை கட்டிக்கிட்டு இருக்கீங்க?’ அப்படின்னு கேட்டதுக்கு. ‘உங்க வேலைய பாருங்க’ ன்னு
சொல்லிட்டான் குடிகார நாய்.
அந்த அழகு முக பெண்ணின் பெயரும் அழகுதான் “பூங்கொடி ” என்றாள் பார்வதி.

பேசிக்கொண்டிருக்கும்போது. “பூண்டுகார் ரே, ஒரே வீட்டில் இவ்வளவு நேரம் ஏவாரம் பார்த்தா எப்படி? சீக்கிரமா வா” என்று அந்தப் பெண்ணைத் தாண்டி மூன்றாவது வீட்டு அம்சவல்லி அக்கா கூப்பிட்டாள்.
வண்டியை மிதித்து மெதுவாக நகர்ந்து சென்றேன். “என்னா பூண்டுகார்ரே பார்வதி கூட இவ்வளவு நேரம் பேச்சு.? வந்தமா வியாபாரத்தை பார்த்தோமா, பொண்டாட்டி புள்ளைங்களோடு சந்தோஷமா இருந்தோமா என்று இரு. வந்த எடத்துல வம்ப வாங்காதே , அவ புருஷன் ஒரு மாதிரி ” என்றாள் அம்சவல்லி.

“அட ஏக்கா நீ வேற. அதெல்லாம் ஒண்ணுமில்ல…. அந்தா நிக்குது பாரு நடுரோட்டில். அந்த பொண்ண பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம்”.

வாகனங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஒரு அடி முன்னும் பின்னும் நகர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தாள் அந்தப் பெண்.
உனக்கு பூண்டு எவ்ளோ வேணும்க்கா?”

“ஒரு கிலோ போடு” என்று சொல்லிவிட்டு, அம்சவல்லி அக்கா அந்த பெண்ணின்பேச்சை ஆரம்பித்தாள்.
“அந்த பொண்ணுக்கு என் வீட்டுக்காரர் தான் கல்யாணம் பண்ணி வச்சாரு. அந்த பையன் என் வீட்டுக்காரருக்கு சொந்தம். கல்யாணம் பண்ணி வச்சா திருந்தி விடுவான்
என்று ஆளாளுக்கு சொன்னாங்க .அம்மா அப்பா இல்லாத பையன் கல்யாணம் பண்ணி வைத்தால் திருந்தி விடுவான் என்று நம்பி பொண்ணு பாக்க ஆரம்பிச்சாரு. ஒரு பொண்ணும் கிடைக்கல எப்படி கிடைக்கும் இங்க படிச்சவனுக்கு பொண்ணு கிடைக்கல .. குடிச்சவனுக்கு எப்படி கிடைக்கும்?” என்று கொஞ்சம் நிறுத்தினாள்.

“அப்புறம் எப்படிக்கா இந்த பொண்ணு?” என்று கேட்டேன்.

“பாவம் அந்தப் பொண்ணு.. அவளுக்கும் அம்மா அப்பா இல்லை சொந்தம் என்று சொல்லிக் கொள்வதற்கும் யாரும் இல்லை. ஒருமுறை அந்தப் பொண்ண வீட்டுக்குக் கூட்டி
வந்தார்…ஏங்க யாருங்க இந்த பொண்ணுன்னு கேட்டதற்கு அப்புறம் சொல்லுறேன் முதல்ல சாப்பாட்டைப் போடுன்னார்….மறுநாள் காலையில சொன்னாரு அந்த பொண்ண பத்தி. கதியில்லாம தனிச்சு இருந்த இவள நோட்டம் விட்ட ஆம்பளைங்க எவனுங்களோ ரொம்ப தொந்திரவு கொடுத்தபடி இருந்திருக்கானுவ… திரும்ப திரும்ப அவனுங்க பண்ணுன டார்ச்சர் தாங்காம, வேற வழியில்லாம அதே வேலையை காசுக்குப் பண்ண ஆரம்பிச்சுட்டா.. தவறான வழியில போய் விழுந்துட்டா… அதாண்டி அவுசாரி வேல. உனக்கு விலாவாரியா சொல்லணும் அப்படின்னாரு… சரி அதுக்கு இப்ப இங்கே எதுக்குக் கூட்டி வந்தீங்கன்னு கேட்டேன். கண்ணனுக்கு யாரும் இல்லை. இந்த பொண்ணுக்கும் யாருமில்லை. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா. ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருக்கும்னு கல்யாணம் பண்ணி வைச்சாரு. இப்ப இவன் என்னடான்னா அந்த பொண்ண சந்தேகம் புடிச்சு தினம் தினம் அடிச்சிக் கொல்றான்..”

” சரிக்கா இந்தா சில்லறை” என்று இருநூறு ரூபாய் நோட்டுல 120 போக மீதியைத் தந்தேன்.

அந்தப் பெண்ணின் கணவன் வீட்டிற்குள் இருந்து வந்து “ஏண்டி தேவிடியா, எவன பார்க்கடி நிக்கிற என்று கேட்டுக்கொண்டே பக்கத்திலிருந்த உருட்டுக் கட்டையைக் கையில் எடுத்தான். அந்தப் பெண் நிலை தெரியாமல் எனது அருகில் வந்து நின்று கொண்டு “ஐயோ அடிச்சுக்கொல்ல வர்றானே இந்த குடிகார நாயக் கட்டிக்கிட்டு அவஸ்தை படுறேனே நாசமா போயிருவடா” என்று சொன்ன மறுகணமே அந்தக் கட்டையால் எனக்கும் சேர்த்து அடி கிடைத்தது.

எனக்கு முன்னால் தலையிலடித்துக் கொண்டு அந்த கர்ப்பிணி தலைதெறிக்க ஓடினாள்.

“போடி தேவிடியா போ எங்க போறேன்னு பாக்குறேன்” என்று சொல்லிக்கொண்டே துரத்திச் சென்றான்.

வீதியில் இரு பக்கமும் ஜனங்க பார்த்தபடி இருந்தார்கள்

“ஐயோ பாவம்”என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு மாறியது.

“பூண்டுகாரண்ணே, பூண்டுகாரண்ணே அடுத்த தெருவுல கூப்பிடுறாங்க, போங்க” என்று சொல்லிவிட்டு சைக்கிள் டையரை ஓட்டிக் கொண்டு சென்றான் ஒரு சிறுவன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *