68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி பற்றி பல விவாதங்கள் கிளம்பியுள்ளன – சி.பி.கிருஷ்ணன்

68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி பற்றி பல விவாதங்கள் கிளம்பியுள்ளன – சி.பி.கிருஷ்ணன்

68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி பற்றி பல விவாதங்கள் கிளம்பியுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.  ”Write off என்றால் தள்ளிவைப்பு; Waive off என்றால்தான் தள்ளுபடி” என்று ஒரு புது விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது உண்மை அல்ல. Write off என்றாலே தள்ளுபடி தான்.

தள்ளுபடி என்றால் என்ன?

What is WRITE-OFF? What does WRITE-OFF mean? WRITE-OFF meaning ...

ஒரு கடன் வராக்கடன் ஆக மாறிய பின் sub-standard, doubtful, loss asset என்ற நிலைகளை கடந்து, அந்த கடனுக்கான முழு தொகையும் லாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்த பிறகு, ”இனி அந்த கடன் வரவே வராது” என்று வங்கியாளர்கள் முடிவு செய்த பின் அதனை தள்ளுபடி செய்வார்கள். Loss Asset ஐ Balance Sheetல் வைத்துக் கொண்டிருப்பதால் Basel விதிகளின் படி கூடுதலாக மூலதனம் தேவைப்படுகிறது என்று காரணம் காட்டி அது தள்ளுபடி செய்யப்படுகிறது.

சிறு வராக்கடன் முதல் பெரும் வராக்கடன்கள் வரை இவ்வாறு தள்ளுபடி செய்யப்படுவதுண்டு. 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்துள்ள பெரும் கடனாளிகளின் (large borrowers)வராக்கடனை தள்ளுபடி செய்ய வங்கியின் உயர் மட்ட இயக்குநர் குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது. அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட பின் தொடர்ந்து அந்த கடனாளிகளின் கடனை வசூலிக்க வங்கிகள் முயற்சி செய்யும்.

ஆனால் அவ்வாறு செய்யப்படும் முயற்சி எதுவும் பலன் அளிப்பதில்லை. உதாரணமாக அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை வருடம் 2014-15 – ரூ. 49018 கோடி, 2015-16 – ரூ. 57585 கோடி, 2016-17 – ரூ. 81683 கோடி, 2017 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ. 84272 கோடி. தள்ளுபடி செய்யப்பட்ட பின் வசூலிக்கப்பட்ட தொகை 2014-15 – ரூ.5462 கோடி, 2015-16 –ரூ. 8096 கோடி, 2016-17 – ரூ. 8680 கோடி, 2017 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை – ரூ. 7106 கோடி. ஆக 2014 ஏப்ரல் முதல் 2017 டிசம்பர் வரை அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத்தொகை 2,72,558 கோடி ரூபாய். தள்ளுபடி செய்யப்பட்ட தொகையில் வசூலிக்கப்பட்ட மொத்தத்தொகை 29343 கோடி ரூபாய். அதாவது தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடனில் 10.8 சதவீதம் தான் வசூலிக்கப்பட்டது.

₹68,607-Cr Loans for Vijay Mallya, Nirav Modi are NOT Forgiven ...

இதுவும் நடைமுறை அனுபவத்தில் சிறு கடனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையாகத் தான் உள்ளது. ஏற்கனவே இத்தகைய கடன்களுக்கு வங்கிகளின் லாபத்திலிருந்து முழு (100%) ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால் இந்த வசூலிக்கப்பட்ட தொகை நேரடியாக லாபத்தில் வரவு வைக்கப்படும். ஆக 89 சதம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட்ட தொகை. இதை வேண்டுமானால் waive off amount என்று அழைக்கலாம். இது பாராளுமன்ற மேலவையில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில் என்று வங்கிகளின் வராக்கடன் ஆய்வாளர் திரு விவேக் கவுல் பதிவு செய்கிறார்.

(Source:https://www.equitymaster.com/diary/detail.asp?date=04/03/2018&story=4&title=89-of-Bad-Loans-Written-Off-by-Public-Sector-Banks-are-Not-Recovered).

ஏதோ write off செய்யப்பட்ட கடன் முழுவதும் பின்னால் வசூல் ஆகிவிடும் போல் மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள். அது உண்மையல்ல.

68607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப் பட்ட பட்டியலில் உள்ள 50 பேரில் ஒவ்வொருவரும் ரூ.600 கோடிக்கு மேல் வங்கியிலிருந்து கடன் வாங்கி திருப்பிக் கட்டாத ஏமாற்றுக் கடனாளிகள் (wilful defaulters).

ரிசர்வ் வங்கியின் விதிப்படி “ஒரு கடனாளி வசதி இருந்தும் திருப்பிக் கட்டவில்லை என்றால், கடன் வாங்கிய காரணத்திற்காக நிதியை பயன்படுத்தாமல் வேறு நிறுவனத்திற்கோ அல்லது வேறு சொத்து வாங்கவோ பயன்படுத்தினால், வாங்கிய கடனை வேறு சொத்தும் சேர்க்காமல் செலவழித்துவிட்டால், பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட அசையும், அசையா சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் விற்று விட்டால் அவர் ஏமாற்றுக் கடனாளி என்று வரையறுக்கப்படுவார்.

RBI to launch central fraud tracking registry for digital payments

இதை வங்கியின் செயல் இயக்குநர் (Executive Director) தலைமையிலான மூவர் குழு தீர்மானிக்கும். கடனாளிக்கு தன் தரப்பு வாதத்தை எடுத்துக் கூற வாய்ப்பளிக்கப்படும். பிறகு நிர்வாக இயக்குநர் (Managing Director) தலைமையிலான குழு அதை மறுஆய்வு செய்யும். அந்தக் குழுவும் உறுதி செய்தபின்தான் அவர் ஏமாற்றுக் கடனாளி என்று தீர்மானிக்கப்படுவார். அத்தகைய நபர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் உடனே வசூல் செய்யப்பட வேண்டும்.” (Source: RBI Master Circular 01.07.2015 on wilful defaulters).

2018 டிசம்பர் வரை இப்படி 11000க்கும் கூடுதலான ஏமாற்றுக் கடனாளிகள் உள்ளனர் என்று ட்ரான்ஸ்யூனியன் சிபில் தெரிவிக்கிறது. (Source: The Wire dated 21st Nov. 2019) ஏமாற்றுக் கடனாளிகளின் பட்டியலை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு எதிரானது என்று கூறி ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இதை தருவதற்கு பத்தாண்டுகளாக மறுத்து வந்தது. எனவே இதை பெறுவதற்கு உச்ச நீதி மன்றம் வரை செல்லும்படி ஆகிவிட்டது.

2019 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகுதான் இத்தகைய தகவல்களை ரிசர்வ் வங்கி கொடுக்கிறது. இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கடனை வசூல் செய்யவேண்டும் என்று வங்கி ஊழியர் இயக்கம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து போராடி வருகிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இவர்களிடமிருந்து கடன் வசூலிக்கப்பட்டுவிடும் என்று ஒரு மாயையை உருவாக்குகிறது.

இது ஒரு புறம் இருக்க, 2016 மே மாதம் ஐபிசி (Insolvency Bankruptcy Code) என்றொரு புதிய சட்டம் பாஜக அரசால் இயற்றப்பட்டது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் வராக் கடனை இந்த சட்டப்படி ஐபிபி (Insolvency Bankruptcy Board)க்கு எடுத்துச் செல்ல வேண்டும். அது என்எசிஎல்டி (National Company Law Tribunal) என்ற ஒரு தீர்ப்பாயத்திடம் இத்தகைய வழக்குகளை ஒப்படைக்கும். அத்தீர்ப்பாயம் 180/270 நாட்களுக்குள் இந்நிறுவனங்களை முழுவதுமாக யாருக்காவது விற்றோ அல்லது இவற்றை கலைத்து (liquidation) பகுதி, பகுதியாக விற்றோ இக்கடனை தீர்த்து (resolve) வைக்கும். 2017 ஜூன் மாதம் 12 மிகப் பெரிய நிறுவங்களின் வராக்கடன்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இத்தீர்ப்பாயத்திடம் கொண்டு செல்லப்பட்டன.

அன்றைய தேதியில் இந்த 12 நிறுவனங்களின் மொத்த வராக்கடன் 3,45,000 கோடி ரூபாய். இது அனைத்து வங்கிகளின் மொத்த வராக் கடனில் 25% ஆகும். இவற்றில் ஆம்டெக் ஆடோ லிட், எரா இன்ஃப்ரா என்ஜினியரிங் லிட். ஜேபி இன்ஃப்ராடெக் லிட், லான்கோ இன்ஃப்ராடெக் லிட், ஏபிஜி ஷிப்யார்ட் லிட் ஆகிய 5 நிறுவனங்களின் வராக்கடன்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மற்ற ஏழு நிறுவனங்களின் கடன்கள் என்சிஎல்டியின் தீர்ப்பினடிப்படையில் வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டன. தற்போது அதன் நிலையை இந்த அட்டவணை விளக்குகிறது.

(Source: IBC News Letter Oct-Dec 2019)

இந்த ஏழு நிறுவனங்களின் மொத்த வராக்கடன் தொகையான ரூ.2,13.731 கோடியில் வசூல் செய்யப்பட்ட தொகையான ரூ.1,12,894 கோடி. இந்த தொகையும் வங்கிகளுக்கு உடனடியாக மொத்தமாக கிடைக்காது. தவணை முறையில் நான்கைந்து வருடங்களில்தான் கிடைக்கும். இது போக வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ. 1,00,837 கோடி; (இதில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன வராக்கடனின் தள்ளுபடி மட்டுமே ரூ.24,471 கோடியாகும்). இந்த தொகை புத்தகத்தில் இருந்து மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக வங்கியிலிருந்தே ரத்து செய்யப்பட்ட தொகை.

இது எப்போதும் திரும்ப வராது. ஒரு தனியார் நிறுவனத்தை மற்றொரு தனியார் நிறுவனம் வாங்குகிறது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டியது வங்கிக் கடனாளி நிறுவனம். ஆனால் நஷ்டத்தை ஏற்படுத்திய வராக்கடனாளிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இந்த சட்டப்படி நஷ்டமடைவது வங்கிகள் தாம். இதனால் பல வங்கிகளின் லாபம் உறிஞ்சப்பட்டு அவை கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. மக்களின் பணம் கொள்ளை போகிறது. இப்படி ஓர் ’அருமையான’ சட்டத்தைத்தான் மத்திய அரசு இயற்றியுள்ளது. இது ஒரு சாம்பிள் தான். இப்படி நூற்றுக்கணக்கான கணக்குகள் அன்றாடம் என்சிஎல்டியால் ‘தீர்த்து’ வைக்கப்படுகின்றன.

இப்படி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும் தள்ளுபடிக்கு ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் ஹேர்கட் (Haircut). என்ன ஆச்சரியமாக உள்ளதா? இருந்தாலும் அதுதான் உணமை.

—சி.பி.கிருஷ்ணன்,

இணைச் செயலாளர்,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.

[email protected].

Show 1 Comment

1 Comment

  1. Padmanabhan Sahasranamam

    சமீபத்தில் நான்வாசித்த முக்கியமான சிறந்த கட்டுரை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *