அறிவியல் மற்றும் பயணம் உள்ளிட்டு பல்வேறு தலைப்புகளில் 17 புத்தகங்களை அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டேவிட் குவாமன் வெளியிட்டுள்ளார்.

நேஷனல்  ஜியோகிராஃபிக்  இதழுக்கு அவர் தொடர்ந்து தவறாமல் பங்களிப்பு செய்து வருகிறார். வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு தடம் மாறி பரவப் போகும் வைரஸ் மூலமாகவே, அடுத்து பெரிய அளவில் வரப் போகின்ற தொற்றுநோய்  நிச்சயமாக இருக்கும் என்று ’தடம் மாறுதல்: விலங்கு நோய்த்தொற்றுகளும் அடுத்த மனித தொற்றுநோயும்’ என்ற தலைப்பில் 2012ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தில் அவர் கணித்து எழுதியிருந்தார். பல சர்வதேச விருதுகளை வென்ற அந்த புத்தகம், உலகெங்கிலும் விலங்கு தொற்று ஆபத்து அதிகமாக இருக்கின்ற இடங்களில் இருந்து நேரடியான தகவல்களைத் தருவதாகவும், தொற்றுநோய் குறித்து புலனாய்வு செய்கின்ற வகையிலும் இருந்தது.

இதுவரை  நடத்தப்பட்டுள்ள விசாரணைகள் மூலமாக, சீனாவின் ஹூபே மாகாணத்தில், வூஹான் நகரில்  உள்ள  கடல் உணவு மற்றும் உயிர் விலங்கு சந்தையே, இந்த சார்ஸ்-கோவ்-2 என்ற புதிய கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருப்பதன் மூலம், குவாமனின்  அந்தக் கணிப்பு இப்போது உண்மையாகியிருக்கிறது. இந்த வைரஸின்  விலங்கு  ஆதாரஉயிரி இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், தொற்றுநோய் குறித்த புலனாய்வுகள் குதிரைலாட வெளவால்கள் மற்றும் எறும்புதின்னிகளே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றன.

Photos show how the SARS virus impacted the world in 2003 ...

தன்னுடைய புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தில், கொரோனா வைரஸ் (சார்ஸ் கோவ்) குடும்பத்தில் உள்ளதொரு வைரஸால் ஏற்பட்ட, 2003ஆம் ஆண்டின் கடுமையான அதிதீவிர சுவாச நோய்க்குறி (SARS – சார்ஸ்) தொற்றுநோயைப் பற்றி குவாமன் எழுதியிருந்தார். ’இந்த வைரஸ் குறித்ததாக அல்லாமல், மற்றொரு வைரஸ் குறித்த கசப்பான வரலாறு இனிமேல் சொல்லப்பட வேண்டி வரும். அடுத்ததாக வருகின்ற அந்தப் பெரிய  வைரஸ், இதைப் போன்ற விபரீதமான வடிவத்தையே  கொண்டிருக்கும். குறிப்பிடத்தக்க நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே உயர்தொற்று ஏற்படும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. நகரங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக மரணதூதுவனைப் போல, அந்த வைரஸ் பரவுவதற்கு அது உதவக்கூடும்’ என்று எழுதியிருந்தார்.

அவருடைய அந்த தகவல் முன்னறியும் தன்மை கொண்டதாக இருந்துள்ளது. அந்த ’அடுத்த பெரிய’ நோயாக, அறிகுறியற்றதாக அல்லது ஃப்ளு காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டதாக இருக்கின்ற இந்த கோவிட்-19 நோய் இருக்கிறது. நோய் அரும்புவதற்கான காலம் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரையிலும் இருப்பதால், வைரஸின் கடுமையான அறிகுறிகளைக் காட்டாமலேயே, கோவிட்-19 நோயைக் கொண்டிருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு இந்த தொற்றுநோயைப் பரப்பக் கூடும்.

Orion Magazine | Why David Quammen Is Not Surprised

எழுத்தாளர் டேவிட் குவாமன் எழுதிய புத்தகம்

இந்த விலங்கு நோய்க்கிருமிகளைத் தளர்த்தி, மனிதர்களிடையே சீர்குலைவை ஏற்படுத்துவதற்கு, மனிதர்களின் அழிவை ஏற்படுத்துகின்ற நடத்தையே காரணமாக இருப்பதாக குவாமன் உறுதியாக நம்புகிறார். ’மனிதர்களுடன்  அதிக அளவில் இந்த விலங்கு நோய்க்கிருமிகள் தொடர்பை   ஏற்படுத்திக் கொள்வதற்கு, மனிதர்களால் உருவாக்கப்படுகின்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களும், இடையூறுகளுமே காரணமாக இருக்கின்றன. அதே நேரத்தில் மனிதர்களின் தொழில்நுட்பமும், நடத்தையும் இந்த நோய்க்கிருமிகளை இன்னும் பரவலாகவும் விரைவாகவும் பரப்புகின்றன’ என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

டேவிட் குவாமன் மின்னஞ்சல் மூலமாக ஃப்ரண்ட்லைனுக்குத் தந்துள்ள நேர்காணலின் பகுதி:

இணையதளத்தில் உங்களுடைய 2012ஆம் ஆண்டு புத்தகம் பற்றி நீங்கள் அறிமுகப்படுத்திய போது, ’கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கப் போகின்ற அடுத்த பெரிய, கொலைகார, நம்மை கோடிக்கணக்கில் கொள்ளப் போகின்ற உலகளாவிய தொற்று, ஒரு புதிய நோயால் ஏற்படும். அந்த கொலைகார நோய்க்கிருமி – பெரும்பாலும் ஒரு வைரஸாக – விலங்குகளிடமிருந்து மனிதர்களிடையே தடம் மாறி பரவுவதாக இருக்கும்’ என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். அடுத்த தொற்றுநோய் விலங்கிடமிருந்து மனிதனுக்குப் பரவுகின்ற நோயாக இருக்கும் என்று 2012ஆம் ஆண்டிலேயே உங்களால் எவ்வாறு கணிக்க முடிந்தது?

விலங்கிடமிருந்து ஏற்படும் தொற்றுநோயை, அதாவது விலங்கிடமிருந்து நோய்த்தொற்று மனிதர்களுக்குள் செல்லும் என்பதைக் கணிப்பதற்கு, இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற அர்ப்பணிப்பு மிக்க, துணிச்சலான அறிவியலாளர்களைக் கவனமாகக் கேட்டு, அவர்களுடன் களத்தில் பயணம் செய்த ஆண்டுகளே என்னை வழிநடத்தின. வைரஸ்கள் அனைத்து காட்டு விலங்குகளிலும் இருக்கின்றன. பொதுவாக அவை தனித்துவம் கொண்ட வைரஸ்களாக இருக்கும். அவற்றில் சிலவற்றை நாம் மனிதர்களில் பார்த்திருக்க முடியாது. ஆனாலும் மனிதனைத் தொற்றும் திறன் கொண்டவையாக, அந்த மனிதனில் தன்னைப் பெருக்கிக் கொள்ள முடிந்தவையாக, ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்குச் செல்லக் கூடிய வல்லமை கொண்டவையாக அவற்றில் சில வைரஸ்கள் இருக்கின்றன.

How Coronaviruses Jump From Animals To People: David Quammen ...

காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை அழிப்பது, அவற்றை உயிருடன் பிடிப்பது, உணவுக்காக அவற்றைக் கொல்வது ஆகியவற்றின் மூலம், நாம் அவற்றுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகிறோம். அப்போது நம்மையே அந்த வைரஸ்களிடம் நாம் ஒப்படைக்கிறோம். இது இந்த உலகம் முழுவதும் அன்றாடம் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே, சில மனிதர்களிடம் அந்த வைரஸ்கள்  பரவுவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எப்போதாவது மனிதர்களிடையே பரவுகின்ற தன்மை கொண்டதாக இருக்கின்ற அந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கான மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. பலரைக் கொல்கிறது. இன்று நாம் அந்த நிலையிலேயே இருக்கிறோம்.

இந்த விலங்குகளிடமிருந்து பரவுகின்ற வைரஸ்கள், விலங்குகளைத் தாண்டி மனிதர்களிடம் எவ்வாறு வருகின்றன அல்லது  அந்த ’தடம் மாறுதல்’ எவ்வாறு  நிகழ்கிறது?

தடம் மாறுதல்’ என்பது நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் – ஒரு வகையான ஆதாரஉயிரியிடம் இருந்து இன்னொரு வகையிலான ஆதாரஉயிரியிடம் செல்லும் தருணத்திற்கான சொல் ஆகும். அமைதியாக தான் வாழ்ந்து வந்த விலங்கிடமிருந்து மனிதனுக்கு கடந்து செல்லும் வைரஸ், அந்த மனிதனிடம் நோயை உருவாக்கும் என்று நாம் கருதலாம். இந்த வைரஸ்கள் தங்களுடைய இயல்பான ஆதாரஉயிரிகளான விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் நகர்ந்து செல்கின்றன. பல்வேறுபட்ட இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளையும், அந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் வாழுகின்ற காட்டு விலங்குகளையும் சீர்குலைப்பதன் மூலம், அந்த வைரஸ்களை அவ்வாறு செய்யுமாறு மனிதர்களாகிய நாம் வருந்தி அழைத்து, அதற்கான வாய்ப்பை அவற்றிடம் வழங்குகின்றோம்.

காட்டை அழித்து, வெட்டப்பட்ட மரங்களைப்  பாதுகாப்பதற்கான முகாமை நிறுவும் போது, அந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கு சொந்தமான  காட்டு விலங்குகளைப் பிடிக்கும் போது  அல்லது கொல்லும் போது, அந்த விலங்குகள் சுமந்து கொண்டிருக்கும் பல வகையான வைரஸ்களுக்கு மாற்று ஆதாரஉயிரிகளாக நம்மை நாமே வழங்கிக் கொள்கிறோம். சில வைரஸ்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மனித வைரஸாக மாறி, சிறிய வகையிலான தொற்றுநோயாகவோ அல்லது கொலைகார உலகளாவிய தொற்றுநோயாகவோ வெளிப்படலாம். இந்த இரண்டு விளைவுகளுக்குமான பொறுப்பு வௌவால்களையோ அல்லது வைரஸ்களையோ சாராது. முழுக்க முழுக்க அந்த விளைவுகளுக்கு நாமே பொறுப்பாகி இருக்கிறோம்.

’தடம் மாறுதல்’ குறித்த ஆய்வுகளின் போது, நீங்கள் சீனாவில் உள்ள ’ஈரச் சந்தைகளை’ பார்வையிட்டுள்ளீர்கள்ஈரச் சந்தை என்றால் என்ன என்பதை விவரிக்க முடியுமா? விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவுகின்ற தொற்று நோய்களுக்கான ஆற்றல் மிக்க காப்பகங்களாக ஏன் அந்த சந்தைகள் இருக்கின்றன?

இடைப்பட்ட காலகட்டங்களில், ஈரச் சந்தை வர்த்தகத்தை சீன விதிமுறைகளால் அடக்கி வைக்க முடியவில்லை. ஈரச் சந்தை என்பது குழப்பமான இடமாகும். அங்கே உயிருள்ள வீட்டு விலங்குகள், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் போன்ற பல விலங்குகளுக்கு இடையே கூண்டுகள் அல்லது தொட்டிகளில் வைத்து காட்டு விலங்குகளும் உணவுக்காக விற்கப்படுகின்றன. எறும்பு தின்னிகள், புனுகு பூனைகள், மூங்கில் எலிகள், ரக்கூன் நாய்கள், ஆமைகள், பாம்புகள், தவளைகள், பல வகையான காட்டு பறவைகளுடன் கோழிகள், வாத்துகள் மற்றும் பன்றிகள், உயிரற்ற மீன்கள் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கும். ஒரு விலங்கிடமிருந்து மற்றொரு விலங்கிற்கு, மனிதர்களின் கைகளுக்கு என்று ரத்தம், தண்ணீர், வைரஸ் போன்றவை சுதந்திரமாக வழிந்தோடிக் கொண்டிருக்கும்.

 

Monkeys, bats and snakes are sold alongside cats and dogs at ...

வூஹான் இறைச்சி சந்தை

இயற்கை மீது மனிதகுலம் கொண்டிருக்கும் அகங்காரம்தான் இந்த தொற்றுநோய்க்கான காரணமா என்ற மிகப் பரந்த  தத்துவார்த்த கேள்வியை நான் கேட்கலாமா?

நிச்சயமாக அவ்வாறு கேட்கலாம். நமது தேவைகள், வசதி, இன்பம் ஆகியவற்றிற்காக, நமது  சுரண்டலுக்காகவே காத்திருக்கின்ற வளங்கள் நிறைந்த களஞ்சியமாகவே இந்த பூமி இருப்பதாக நாம் கருதி வருகிறோம். நாமும் இந்த இயற்கையுலகின் ஒரு பகுதிதான், நாம் ஒன்றும் அதற்கு மேலானவர்கள் இல்லை என்பதை மறந்து விடுகிறோம். இது அகங்காரம்தான். இந்த அகங்காரம் நம்மை எங்கே இட்டுச் செல்லும் என்பதை கிரேக்க சோகம்  உங்களுக்குத்  தெரிவிப்பதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விலங்கு வகைகளை அழிப்பது அல்லது பரந்த காடுகளை அழிப்பது போன்ற  கடுமையான நடவடிக்கைகளை நாம் கடைப்பிடிக்காவிட்டால், இந்த விலங்குகள் மூலமாகப் பரவுகின்ற நோய்களை நம்மால் ஒருபோதும் அழிக்க முடியாது என்ற வகையிலேயே அந்த நோய்களின் தன்மை இருக்கின்றது. அதற்கான சாத்தியம் இல்லை என்கிற போது, விலங்குகள்  மூலமாகத் தொற்றுகின்ற நோய்கள்  பரவுவதைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வுதான் என்ன?

Muthukamalam.com / Essay Literature - கட்டுரை ...

அழிக்கப்படும் காடுகள்

உண்மையில் விலங்குகளின் மூலம் தொற்றுகின்ற நோய்கள் குறித்த பிரச்சினைக்கு ’நிரந்தரத் தீர்வு’ என்ற ஒன்று இருக்கிறதா?  மனிதர்களாகிய  நாம் இன்றைக்கு இருப்பதைப் போல  ஏராளமான எண்ணிக்கையிலும், பசியுடனும், ஆற்றல் மிக்கவர்களாகவும் இருக்கும் வரை, நிச்சயமாக எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. பொறுமையான சுய கட்டுப்பாடு, நுகர்வைக்  குறைத்தல், மக்கள்தொகையைக் குறைத்தல், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவையெல்லாம் தற்காலிகத் தீர்வுகளாகவே இருக்கும். அறிவியல் என்பது முக்கியமானது. பரிணாம உயிரியல் மிக முக்கியமானது. பரிணாம வளர்ச்சியை  நீங்கள் (என்னுடைய நாட்டில் சிலர், சில தலைவர்களைப் போல) நம்பவில்லை என்றால், பாக்டீரியா தொற்று இருக்கும் போது மருத்துவரிடம் செல்வது குறித்தோ அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் (ஆன்டிபயாட்டிக்) பயன்படுத்துவது பற்றியோ நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நவீன மருத்துவத்திற்கு பரிணாம உயிரியல் மிகமுக்கியமானது.

அன்றாடம் தன்னுடைய தடத்தை விரிவாக்கி, சீறிக் கொண்டிருக்கும் இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கின்ற நமக்கு அது வழங்குகின்ற படிப்பினைகள்  யாவை? சாத்தியமுள்ள மற்றொரு நோய் பரவலுக்கு நாம் எவ்வாறு தயாராக வேண்டும்?

Officials confirm second COVID-19 case within Tennessee - WRCBtv ...

இந்த தொற்றுநோயிலிருந்து, தொற்றுநோய்கள் தவிர்க்க முடியாதவை, தாங்கிக் கொள்ள முடியாதவை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஏராளமான நிதியை ஒதுக்குவதன் மூலம், இப்போதிலிருந்து மூன்று அல்லது ஐந்து அல்லது பத்து வருடங்கள் கழித்து வாவிருக்கின்ற கோவிட்-19 போன்ற மற்றொரு நிகழ்வுக்கு நாம் தயாராகலாம். இவ்வாறு அதிகமான நிதியை ஒதுக்குவது, பெரும் செலவை ஏற்படுத்துவதாக இருப்பதால், பொதுநலனில் அக்கறையற்ற அரசியல்வாதிகளிடையே கவனத்தை ஈர்ப்பதாக அது இருக்காது. ஆனால் அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி, கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் பெரும் செலவைவிட நிச்சயம் மிகக் குறைவாகவே இருக்கும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும், நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே கட்டுப்படுத்தப்படுவார்கள் எனும் வகையில் நாடு முழுமைக்கான ஊரடங்கை மார்ச் 24 அன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய மக்களில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கின்ற பிரிவினரிடம் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கின்ற நாட்டில்அதுவரையிலும் 10 இறப்புகள், 536 நோயாளிகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டு இருந்தைக் கருத்தில்  கொண்டு பார்க்கும் போதுஇவ்வாறான  நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது விவேகமானதுதானா?

மோடியின் முஸ்லிம் காங்கிரஸ் ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ஆம். இருக்கலாம். ஆனால் அதிகம் பாதிக்கப்படுகின்ற உழைக்கும் மக்கள், வீடற்றவர்கள், ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஏற்பாடுகளை மோடி  செய்து தர வேண்டும். இல்லையெனில் நோய் மற்றும் மரணத்தைத் தடுக்கின்ற  முயற்சிகளுக்காக, ஏழைமக்கள் அனைவரும் மிகப்பெரிய செலவுகளை ஏற்றுக் கொள்வதென்பது, அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப் பெரிய அநீதியாகும். பல நூற்றாண்டுகளாக இவ்வாறான செலவுகளை ஏழைகளே செய்து வருகிறார்கள். அதை நிறுத்த வேண்டிய நேரம் இது. அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை, இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து இந்தியாவில் உள்ள யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது. உலகம் முழுவதும் இதேபோன்ற நிலைமைதான். அனைவருக்கும் உணவளிக்கப்பட்டு, தங்குமிடம் தரப்படும் வரை, உண்மையில் யாருமே ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியாது.

https://frontline.thehindu.com/cover-story/article31249903.ece    

– விகார் அகமது சயீத்

நன்றி ஃப்ரண்ட்லைன், 2020  ஏப்ரல் 11

’தடம் மாறுதல்: விலங்கு நோய்த்தொற்றுகளும், அடுத்து வரப் போகும் மனித தொற்றுநோயும்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்  டேவிட் குவாமனுடன்  நடத்தப்பட்ட நேர்காணல்.

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *