செயலை விட சிறந்த சொல் வேறில்லை… பேரா. எ. பாவலன்

செயலை விட சிறந்த சொல் வேறில்லை… பேரா. எ. பாவலன்



செயலை விட சிறந்த சொல் வேறில்லை
(கவிஞர் இன்குலாபின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவத்தை முன்வைத்து)

“நான் எழுதத் தொடங்கியதற்கு எங்கள் வீட்டுச் சூழலும் ஒரு காரணம் இஸ்லாமிய சமூகம் வாய்கிழிய பேசினாலும் எங்களை ஒரு தனி சாதியாக தான் கருதுகிறது” இப்படித்தான் தனக்கும் எழுத்துக்குமான உறவு என்கிறார் கவிஞர் இன்குலாப்.

இன்குலாப் - Tamil Wiki

சாகுல் அமீது என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் இன்குலாப் அவர்கள், ஏப்ரல் 4 1944க்கும், டிசம்பர் 1, 2016க்கும் இடைப்பட்ட காலவெளியில் 72 ஆண்டுகள் ஏழு மாதங்கள் இருபத்தி நான்கு நாட்கள் என்று இந்தப் பூமிப்பந்தில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த போதும் வாழ்க்கைக்கு பிறகும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் மிக நேர்மையாக வாழ்ந்தவர்… வரலாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் சான்று தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசாங்கம் இரட்டைவேடம் போடுகிறது என்று திருப்பி அளித்தவர். அதேபோன்று இன்குலாப் இறந்த பிறகு 2017ஆம் ஆண்டு காந்தல் நாட்கள் என்கின்ற கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோது அவர் குடும்பத்தை சேர்ந்த மனைவி மக்கள் அனைவரும் ஏற்க மறுத்ததோடு நிராகரித்தனர்

கவிஞர் இன்குலாப் எப்பொழுதும் சமரசமின்றி வாழ்ந்த ஒரு நேர்மையான மனிதர். அன்று அரசாங்கத்தை எதிர்த்து கவிதை எழுதிய காரணத்திற்காக நடு சாமத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கைது செய்து தீவிரவாதியைப் போல நிர்வாணப்படுத்தி கடுமையாகத் தாக்கப்பட்டார். அதிகாரத்தால் எந்த விடுதலையும் கொடுக்க முடியாது. விடுதலை என்பது மற்றவர்கள் கொடுக்கப் படுவதில்லை மாறாக எடுத்துக் கொள்வது. மறுபடி…. மறுபடியும் ஆட்சியாளர்களையும் அதிகாரத்தையும் எதிர்த்துக் கொண்டே இருந்தார். அதனால் தான் அவரை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் டிசம்பர்1, 2016 அன்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து இறுதியாக அவரின் உடலை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுவாஞ்சேரிக்கு அடுத்து மூன்று மைல் தூரத்திலுள்ள அய்யன், சேரிக்கு சென்றிருந்தேன். என் கிராமத்திற்கு பக்கத்து ஊரைச் சர்ந்த என் வயதை ஒட்டிய இளைஞர் ஒருவர், பத்து இருபது பேர்களுமான கூட்டத்தில் சிவப்பு கொடியைக் பிடித்துக் கொண்டு இன்குலாப் ஜிந்தாபாத் இன்குலாப் ஜிந்தாபாத் என்று பெருங்குரலெடுத்து கோஷம் போட்டு சென்றார். அன்று கடுமையான மழை கூட. அந்த மழையிலும் ஓரமாக ஒதுங்காலாம் என்று எண்ணாமல் அணிவகுத்துச் சென்றனர். அந்த இளைஞரை பார்த்ததும் இந்த ஆப்பை எப்படி தெரியும் என்று அறிந்து கொள்ள வேண்டும் முனைப்பில் பொறுமை காத்து இருந்தேன்.

பின்னர் அவருடைய சவத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய பின்னர் அவரிடம் வினவினேன். அப்பொழுது எங்கள் கிராமத்திற்கும் அவருடைய கிராமத்திற்கும் இடையில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவுகளை அகற்ற சொல்லி போராட்ட களத்தில் நின்றவர் என்று கூறினார். அதன் பிறகு கவிஞரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. கருங்குழி மதுராந்தகம் அருகில் இருந்த அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடும் பொழுது தவறாமல் கவிஞர் கலந்து கொள்வார். இனிமேல் அவர் இல்லாமல் எப்படி எங்களால் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராட முடியும் என்று தன் சோகத்தை வெளிப்படுத்தினார். அக்கூட்டத்தில் இருந்த மற்றொரு தோழர் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதாகக் கூறினார். அந்த மாவட்ட தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடியபோது அப்போராட்டத்தில் தோழர் இன்குலாப் தான் தலைமை தாங்கினார் இவ்வாறு கூறினார். இந்த போராட்டக் களங்களுக்கு செல்லும்பொழுது அவர் ஒரு பேராசிரியர். அவர் பணி புரியும் நிர்வாகத்தை குறித்து துளியளவும் அச்சம் கொள்ளாமல் துணிச்சலோடு களத்தில் நின்றவர். அதேபோன்று கல்லூரி நிர்வாகத்திற்கும் விடுதி மாணவர்களுக்கும் நடந்த பிரச்சனைக்காக மாணவர்கள் பக்கம் இருந்த நியாயத்திற்காக கல்லூரி நிர்வாகத்தையும் எதிர்த்தவர். மட்டுமல்ல அந்த பிரச்சனையை முன்வைத்து அன்று குரல்கள் என்ற நாடகத்தின் மூலமாக வெளிக் கொணர்ந்தவர். நிருவாகம் அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திட்டமிட்டது. ஆனாலும் அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை இப்படி நூற்றுக்கணக்கான சான்றுகளைக் கூறமுடியும்.

கவிஞர் இன்குலாப் அவர்கள் நேர்மையாகவும் துணிவாகவும் மானுட விடுதலையை விரும்பியவர். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் கடுமையாக யுத்தம் நடைபெறுவது வாடிக்கையாகியிருந்து. அப்பொழுது இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை எதிர்த்து அறச்சீற்றம் கொண்டவர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்ட களத்தில் நின்றவர். போலித்தனமான இந்திய தேசியத்தை பேசியவர்களுக்கு மத்தியில் நேர்மையான தேசியத்தை முன்னெடுத்தவர். இந்திய தேசியம் என்பது தமிழர்களின் உணர்வுகளையும் உள்ளடக்கியது. கவிஞர் இன்குலாப் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஊன்றி கவனித்து கொண்டிருந்தார். அவர் போராடிய போராட்டத்தின் வலிமையை அறிந்து நேரில் பார்க்க முயன்றார். அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், நேரில் அழைத்து பாராட்டிய கவிஞர் இன்குலாப் அவர்கள்.

இன்குலாப் தான் வாழ்ந்த போது சமூகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து களமாடினார். சாதி மதம் ஆணாதிக்கம் உள்ளிட்டவற்றை வேரறுக்க புறப்பட்ட வேங்கையின் மைந்தன் அவர். பார்ப்பனியத்தையும் பாசத்தையும் சாதனத்தையும் தன் இறுதி மூச்சு வரை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பொதுவுடைமை சிந்தனையாளர் என பல முகங்கள் இருந்தாலும் அவரிடம் போர் குணமே உயர்ந்து இருந்தது.

தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவராக அறியப்பட்டவர். 1968 டிசம்பர் 25 பிறகு கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 அப்பாவி தலித் மக்களை உயிரோடு ஒரு குடிசையில் பூட்டி எரித்தனர். அந்தப் படுகொலைக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முன்னெடுப்பில் உண்மையை அறிந்து அக்கட்சியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர்தான் மார்க்சியத்தை விரும்பி ஏற்றுக்கண்டார். ஆனாலும் போலியே மார்க்சியவாதிகளாலும் அவரைப் பற்றி உண்மையாக தெரிந்து கொள்ளவில்லை. எதைப் பேசக்கூடாது தவிர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள் அவற்றையெல்லாம் எதிர்த்தார். எதிர் வாதம் செய்ய துணிவில்லாத போலி மார்க்சியவாதிகள் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கினார். அந்த அடிப்படையில் அவரை முதலாளித்துவ கவிஞர் என்று வசைபாடினர். என்னதான் அவர்கள் பொதுவுடமை பேசினாலும் அவர்களும் ஒரு சாதி இந்துக்கள் என்று கடக்க வேண்டி உள்ளது.

நகரசுத்தி தொழிலாளர்கள் மலத்தை கையால் அள்ளும் இழி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர் அப்பொழுது திரு. எரிமலை இரத்தினம், திரு. எக்ஸ்ரே மாணிக்கம் உள்ளிட்டவர்களோடு இணைந்து போராட்டக் களம் கண்டவர். திருச்சி மாவட்டம் குளப்பாடி கிராமத்தில் ஆதிக்க சாதியின் ஒருவரின் கிணற்றில் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் குளித்தார்கள் என்பதற்காக மின்சாரம் வைத்து அக்குழந்தைகளை கொல்லப்பட்டார். அந்தப் படுகொலைக்கு பின்னர் ஒரு கவிதையை இத்தனை மூர்க்கமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றவர் கவிஞர் இன்குலாப். அப்படி அந்த படுகொலைக்காக அவர் எழுதியதுதான் “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல். இப்படி எங்கெல்லாம் சாதி ஆதிக்கம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஐயா இன்குலாப்பின் கால்கள் களத்தில் நிற்கும் அவருடைய எழுதுகோல் புரட்சி செய்யும்.

கவிஞர் இன்குலாப் மிகச் சிறந்த படைப்பாளி. அவர் எழுதிய அல்லது படைத்த ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு உண்டு. தொடக்கத்தில் கவிதையால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அந்த வகையில் இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, சூரியனை சுமப்பவர்கள், கிழக்கும் பின்தொடரும் குரல், இன்குலாப் கவிதைகள் தொகுதி-2, ஒவ்வொரு புல்லையும் போன்ற கவிதை நூல்களையும், பாலையில் ஒரு சுனை என்னும் சிறுகதையையும், துப்பாக்கிகள் பூவாளிகள், நமது மானுடம், யுகாக்கினி, மூன்றாவது உலகம், யாருடைய கண்களால், ஆனால்…, எதிர்ச்சொல் என்னும் கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். அவ்வை குறிஞ்சிப்பாட்டு மணிமேகலை குரல்கள் தடி மீட்சி உள்ளிட்ட நாடகங்களையும் உருவாக்கியுள்ளார்.

கவிஞர் இன்குலாப் படைத்த அனைத்து படைப்புகளும் மானுட விடுதலைக்கு உண்டானவை ஆதிக்கசாதியை எதிர்த்தும் அதிகார வர்க்கத்தை எதிர்த்தும் போராடிய போராளி அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூட கடைசி நேரத்தில் விமர்சனம் என்ற பெயரில் அபாண்டமாக வசை சொற்களால் குற்றம் சுமத்தினார்கள் அவை எல்லாவற்றையும் எளிமையாக கடந்தவர் அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை போல உயிரோடு இருக்கும்போது தன்னுடைய உடலை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்து விட்டார்.

அன்று டிசம்பர் 1 2016 மழை கண்ணீர் வடிக்கிறது வீட்டு வாசலில் ஆயிரம் ஜோடி செருப்புகள் இடம் மாறிக் கிடக்கின்றன‌ பெரிய பந்தற்கீழ் பெரிய பெரிய ஆளுமைகள் அமர்ந்திருக்கிறார்கள். அதில் பலரும் இன்குலாபின் நினைவுகளை குறித்து பகிர்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அணுகுகிறார்கள். அவை அனைத்தும் மற்றவர்களுக்கு மாறுபட்ட கோணம்.

மாலை 5 க்கும் 6 க்கும் இடைப்பட்ட நேரம். ஆம்புலன்ஸ் ஒன்று அந்த தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது அவரை எடுத்துச் செல்ல. அய்யன்சேரி கிராமமே ஆம்புலன்ஸ் வாகனத்தையும், வீட்டையும், தெருவையும் சூழ்ந்துகொண்டனர். இப்பொழுது உடலை மருத்துவர்கள் கொண்டு வந்த பேழைக்கு மாற்றப்படுகிறது. நிலம் அதிர பெரும் குரல் எழுகிறது. “இன்குலாப் ஜிந்தாபாத்…. இன்குலாப் ஜிந்தாபாத்…. வீரவணக்கம்…. வீரவணக்கம்…. கவிஞருக்கு வீரவணக்கம்” மற்ற எல்லோருடைய கண்களில் இருந்து அவர்களே அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது. சிலருக்கு உடல் ரோமம் சிலிர்க்கிறது. அந்த ஆம்புலன்ஸ் வாகனம் தெரியும் தெருவின் கடைக்கோடி வரை ஒரு கூட்டம் ஆர்ப்பரிக்க ஓடுகிறது. ஒரு கூட்டம் அமைதி காத்து நிற்கிறது. இன்குலாப் என்ற ஒற்றைச் சொலில் இன்னும் ஒளிர்கிறார்.

சிறகு விரித்து
விதை ஒன்று அலையும்
முளைக்க ஒரு பிடி மண் தேடி

முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி
சென்னை – 34
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. கவிதா ராம்குமார்

    சிறகு விரித்து விதை ஒன்று அலையும் முளைக்க ஒரு பிடி மண் தேடி அருமையான வரிகள் வாழ்த்துகள் தோழரே….

    • ச. தேன்மொழி

      இன்குலாப் அவர்களின் செயல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதிகாரத்தால் எந்த விடுதலையும் கொடுக்க முடியாது. விடுதலை என்பது மற்றவர்கள் கொடுக்கப் படுவதில்லை மாறாக எடுத்துக் கொள்வது. சிறப்பான கருத்து. வாழ்த்துக்கள்🎉🎊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *