நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்




இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சுகுணா திவாகர் வார்த்தைகளில் சொல்வதானால், “ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்து இறுதி யுத்தத்தின் ரத்தச்சுவடுகள் தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்திய” 2009-ல் தொடங்கி 2019 வரையிலான தமிழக அரசியல் குறிப்பாக திராவிட இயக்க நகர்வுகள் குறித்த பதிவுகளே ஆகும்.

அடிப்படைகளின் மரணம் என்ற முதல் கட்டுரை எழுதப்பட்டு இப்போது 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 13 ஆண்டுகளில் முழுதாகப் பத்தாண்டுகள் திமுக அதிகாரத்தில்/ஆட்சியில் இல்லாத காலம். இந்தக் காலகட்டத்தில் திமுக தனது தவறுகளை சுயபரிசோதனை செய்து திருத்திக் கொண்டு தனது முக்கிய கருத்தியல் ரீதியிலான கொள்கை கோட்பாடுகளை சூழலுக்கேற்ப மீளுருவாக்கம் செய்து புதிய செயல்திட்டம் வகுத்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியும் திராவிட அரசியலின் எதிர்காலத்திற்கான பாட்டையுமாகும். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் பதவியேற்ற போது, பிற சனநாயகவாதிகளைப் போலவே நானும், சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதலாலான செயல்திட்டத்துடன் தனது ஆட்சியை தொடங்கியுள்ளதாகவே கருதுகிறேன். வரப்போகும் 5 ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியே திராவிட அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்று வரை ஊழல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஜெயலலிதாவை, “இரும்புப் பெண்மணி, பன்மொழி வித்தகர், அறிவாளி, பெண்களுக்கான முன்மாதிரி(?)” என்றெல்லாம் பார்ப்பனீய ஊடகங்களும் பார்ப்பனீயத்தை உயரிய கலாச்சார பண்பாட்டு நிலையாகக் கருதிக் கொண்டிருக்கும் தமிழக இடைநிலை ஆதிக்க சாதிகளும் ஊதிப் பெருக்கியபடியே இருக்கின்றன. எம்.ஜி.ஆரில் தொடங்கிய மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஜெயலலிதா காலத்தில் அதலபாதாளத்தில் விழுந்து இபிஎஸ்_ஓபிஎஸ் காலத்தில் மீளமுடியாத நிலைக்குச் சென்றதை மறுக்க முடியாது. மாநில நலனுக்கானதாகவும், ஒன்றிய அரசுக்கு எதிரானதாகவும் ‘ஜெ’ முன்னெடுத்த சில ‘நற்காரியங்கள்’ தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் தன்முனைப்பே என்பதை புரியச் செய்கிறது ‘தந்தை’ பெரியாரும் ‘அம்மா’ ஜெயலலிதாவும் என்ற கட்டுரை.

இரண்டு கழகங்கள் என்ற கட்டுரை திமுக, அதிமுக செயல்பாடுகளை நுட்பமாக ஒப்பிடுகிறது. ‘குடும்ப/வாரிசு அரசியல்’ – தமிழகத்தில் கருணாநிதி தொடங்கி வைத்த பெருங்கேடு- இப்போது கட்சி பாகுபாடின்றி பல கட்சிகளில் தொடர்வது கழகங்கள் ஏற்படுத்திய அவல விளைவுகளில் ஒன்று. எவ்வித அரசியல் பார்வையுமற்ற குடும்ப வாரிசுகள் (உதயநிதி, துரை வைகோ போன்றோர் – ஏன் குடும்ப அரசியலை விமர்சனம் செய்து வரும் நாதக சீமான் கூட வேட்பாளர்களில் தனது குடும்ப உறவினர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல காட்டுகள் உண்டு) தேர்தல் அரசியல் களத்தில் முன்னிருத்தப்படுகின்றனர்.

அரசியல் பிடிவாதங்கள் அபாயமானவை என்ற கட்டுரை, ரவிக்குமாரின் பார்ப்பனல்லாதோரின் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத வறட்டு பிடிவாதத்தையும், கி.வீரமணியின் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற பெயரில் சசிகலாவை ஆதரித்த ‘வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளாத’ வறட்டு வாதத்தையும் உடைத்துப் போடுகிறது. பெரியாரை மதத்தலைவராக்கும் வேலையை திகவினரே மேற்கொள்ளத் தொடங்கி நாட்கள் பலவாகிவிட்டன. வரலாற்றுப் பார்வையின் அவசியத்தை சுட்டிச் செல்கிறது இக்கட்டுரை.

அணிகளாய் சிதறிய அதிமுக என்ற கட்டுரை, கொள்கையாலன்றி தனிமனித முரண்பாட்டால் உருவான அதிமுக, தனிநபர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு இப்போது சுயநலத்தால் அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அவலத்தை எடுத்துரைக்கிறது. ஆனாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இப்போதும் நீடிப்பதும் நிலைத்திருப்பதும் எம்ஜிஆர் என்ற தனிநபர் முன்னெடுத்த பாமர அரசியலின் எச்சமாகக் கூட இருக்கலாம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடர்பான கட்டுரை அவரின் ஆளுமையை விமர்சன நோக்கில் அணுகுகிறது. தமிழக அரசியலிலும் வெகுசன சினிமாவிலும் எம்ஜிஆர் என்ற விந்தை நிகழ்வை அவ்வளவு எளிதாகத் தவிர்த்துவிட முடியாது.

“திராவிட” கலைஞர் ஏன் இந்தியாவுக்குத் தேவை என்ற கட்டுரை அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளில் முக்கியமான ஒன்று.

திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று இன்னும் உருவாகவில்லை அல்லது அதற்கான வரலாற்றுத் தேவை இன்னும் எழவில்லை என்ற நிதர்சனத்தை நடப்பு அரசியல் நிகழ்வுகள் மூலம் கூறிச் செல்கிறது ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவையில்லையா’ என்ற கட்டுரை.

இத்தொகுப்பின் கடைசி இரு கட்டுரைகள் – “திராவிட அரசியலின் எதிர்காலம்” மற்றும் “மீண்டெழும் திராவிட அரசியல்” ஆகியன திராவிட அரசியல் போக்கு குறித்த நுட்பமான பார்வைகளையும் முக்கியமான கேள்விகளையும் முன்வைக்கின்றன. பெரியார் சொன்ன இன அடிப்படையிலான “திராவிடர்” இயக்கத்துக்கும் அண்ணா, கலைஞர் முன்னெடுத்த நில எல்லை அடிப்படையிலான “திராவிட” முன்னேற்ற கழகத்துக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடு, திராவிட இயக்கங்கள்/ஆட்சிகள் மூலம் தமிழகத்திற்கும் இந்திய ஒன்றியத்துக்கும் ஏற்பட்ட அனுகூலங்கள், பாரிய மாற்றங்கள் பற்றிப் பேசும்போதே “தனி நபர் வழிபாடு”, “குடும்ப/வாரிசு அரசியல்”, “ஊழல்”, “ஆணாதிக்க மய்ய அரசியல்” போன்ற அவலங்களையும் சேர்த்தே நூலாசிரியர் பேசுகிறார். இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டு அடையாளங்களை அழித்து ஒற்றைத்துவ ‘ஒரே தேசம் ஒரே வரி ஒரே மதம் ஒரே கல்விமுறை, ஒரே கலாச்சாரம்/பண்பாடு” என்ற வகைமாதிரியை பாஜக – சங் பரிவார அடிப்படைவாத சக்திகள் கட்டி எழுப்பி வரும் தற்கால சூழலில் , இந்திய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ‘பன்மைத்துவத்தை’ முன்வைக்கும் ‘திராவிட அரசியலின்’ பங்கு முக்கியமாகிறது என்பதை பிரதி தெளிவுற எடுத்துரைக்கிறது. பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஆதிக்க சாதிகளின் அதிகார மய்ய அரசியலாக “திராவிட அரசியலின்” போக்கு மாறிவிட்டதையும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது வரலாற்றின் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்நூல் வெளிவந்த பின்பு, 2021-ல் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஓராண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையில், தற்போதைய சூழலில் திராவிட அரசியலின் போக்கும் நோக்கும் குறித்த கட்டுரையை சுகுணா திவாகர் எழுதவேண்டும் என்ற விருப்பம் இந்நூலை வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.

“செய்வீர்களா…சுகுணா…நீங்கள் செய்வீர்களா…?”

– அன்புச்செல்வன்

நூல் : திராவிட அரசியலின் எதிர்காலம்
ஆசிரியர் : சுகுணா திவாகர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹90
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *