ஹிந்துத்துவ அரசியலின் எழுச்சி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் உள்ள முரண்பாடுகள் அந்த அரசியல் அமைதிப்புரட்சியை வெறுமையாக்கி விட்டன. வேலையில் இடஒதுக்கீடு குறித்த நிறைவேறாத வாக்குறுதி அந்த புரட்சி புத்துயிர் பெற வழிவகுப்பதாக இருக்கும்.
‘அமைதிப்புரட்சி’ என்று என்னால் அழைக்கப்படுகின்ற அந்தப் புரட்சியை முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக, மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தொடங்கி வைத்தார். அந்தப் புரட்சி சமூக-அரசியல் செயல்முறையைத் தூண்டியதன் விளைவாக, சமூக விடுதலையை ஏற்படுத்தியதோடு, உயர் மற்றும் மேலாதிக்க சாதிகளின் இழப்பில் சாதாரண மக்களை அரசியல் அதிகாரத்திற்கு உயர்த்தவும் செய்தது.
சிவில் சேவைத் துறையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை வழங்கியது நேர்மறையான பாகுபாட்டை விரிவுபடுத்துவதாக இருந்தாலும்கூட, அந்த மண்டல் தருணமானது முதன்மையான அரசியல் செயல்பாடாகவே இருந்தது. 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்னர், மிகவும் மதிப்புமிக்கதாக இருந்த பொதுத்துறை வேலை வாய்ப்புகளைத் தங்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதாக இருந்த அந்தச் சீர்திருத்தத்திற்கு எதிராக உயர்சாதியினர் உடனடியாக அணிதிரண்டனர். அவர்களுடைய எதிர்ப்பு கீழ்சாதியினரிடையே கோபத்தைத் தூண்டியதன் விளைவாக, ஓபிசி குழுக்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. அந்த ஓபிசி குழுக்கள் பலவும் உயர்சாதி பிரபலங்களுக்கு வாக்களிப்பதை நிறுத்தி, தங்கள் சொந்த சமூக சூழலுக்குள்ளிருந்து பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க விரும்பின.
ஹிந்தி பகுதியில், 1984இல் 11 சதவீதமாக இருந்த ஓபிசி எம்.பிக்களின் பிரதிநிதித்துவம் 1990களில் 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது. அதே சமயம் 1984இல் 47 சதவீதமாக இருந்த உயர்சாதி எம்.பி.க்களின் எண்ணிக்கை, 1990களில் 40 சதவீதத்திற்கு கீழாகக் குறைந்தது. 2004வாக்கில், மக்களவையில் உயர்சாதியினரின் இருப்பு 33 சதவீதமாகக் குறைந்த போது, 25 சதவீத எம்.பி.க்கள் ஓபிசி பிரிவினராக இருந்தனர். இத்தகைய திருப்பத்திற்கு, ஆரம்பத்தில் ஜனதா தளம் உள்ளிட்ட அதன் பிராந்திய கிளைகள், பின்னர் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் காரணமாக இருந்தன.
1990களின் முற்பகுதியில் ஜனதா தளம் சிதைந்து போயிருந்தாலும், அந்தக் கட்சி உருவாக்கிய ஜனநாயகமயமாக்கலை அது பாதிக்கவில்லை. முதலாவதாக, உயர்சாதியினரைத் தேர்ந்தெடுப்பதற்கு பழைய வாடிக்கையாளர் பட்டியல் வழிமுறைகளை நம்ப முடியாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் பல ஓபிசி வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்களாக ஓபிசிக்கள் இருந்ததோடு, ‘புதிய’ ஓபிசி வாக்குகளும் புறக்கணிக்கப்பட முடியாதவையாக இருந்தன. இரண்டாவதாக, ஓபிசிக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அரசின் புதிய கொள்கைகள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியாலும் செயல்படுத்தப்பட்டன. 2004இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, பொதுப்பல்கலைக்கழகங்களில் ஓபிசியினருக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு நிர்ணயித்தது. மண்டல் II என்றழைக்கப்பட்ட அந்த முடிவு மீண்டும் உயர் சாதியினரின் கோபத்தைத் தூண்டியது. ஆக இன்றைய நிலைமையில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக. அந்த ‘மண்டல் தருணம்’ குறித்து என்ன மிஞ்சியிருக்கிறது?
அந்த ‘அமைதிப்புரட்சி’ பாஜகவின் முன்னணியில் இருந்த உயரடுக்கினரின் பழிவாங்கல் நடவடிக்கையாக ஒரு எதிர்ப்புரட்சியைக் கொண்டு வந்தது. பாஜகவின் ஹிந்து தேசியவாதமானது, ஹிந்து ஒற்றுமை என்ற பெயரில் சாதி அடையாளங்களை மீறுவதையும், இஸ்லாத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. முதன்முறையாக, 2014ஆம் ஆண்டில் தூய ஆர்எஸ்எஸ் தயாரிப்பான ஓபிசியைச் சேர்ந்த பாஜக தலைவரான நரேந்திர மோடியின் ரசவாதம் காரணமாக உருவான தேசிய-ஜனரஞ்சக ஹிந்துத்துவா பதிப்பு, சில ஓபிசிக்களை கவர்ந்திழுத்த போது, அந்த பின்னடைவு முடிவிற்கு வந்தது. தன்னை சுயமாக உருவானவராக, முன்னாள் சாய்வாலாவாகக் காட்டிக் கொண்டதோடு, நேர்மறையான பாகுபாட்டை ஆதரிக்கவில்லை என்பதால், நடுத்தர வர்க்க உயர்சாதியினரைப் பொறுத்தவரை, மண்டலுக்கான மாற்றுமருந்தாக மோடி அமைந்தார். முதல் தேர்தல் வெற்றிக்கு பாஜகவை அழைத்துச் சென்றதன் மூலம், ஓபிசிக்களின் இழப்பில் உயர்சாதியினர் மக்களவையில் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொள்வதற்கு மோடி வழிவகுத்துக் கொடுத்தார். 2014ஆம் ஆண்டில், உயர்சாதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1980களில் இருந்த அதன் பிரதிநிதித்துவத்திற்கு இணையாக 44.5 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் ஓபிசி எம்.பி.க்களின் பங்கு 20 சதவீதமாகக் குறைந்தது என்று அசோகா பல்கலைக்கழகம் மற்றும் சி.என்.ஆர்.எஸ்-அறிவியல் போ ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பின்ப்பர் (இந்தியாவின் தேசிய மற்றும் மாகாண அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்த சமூக சுயவிவரம்) தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்தி பகுதியில் சாதி மற்றும் சமூக பிரதிநிதித்துவம் (1962-2019)
தன்னுடைய சாதாரண பின்னணி மற்றும் ஹிந்துத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே ஓபிசி வாக்காளர்களை மோடி ஈர்க்கவில்லை. வளர்ச்சி மற்றும் வர்க்கம் என்ற பெயரில் சாதி அரசியலை அவர் மூழ்கடித்தார். மண்டல் ஒதுக்கீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியால் பயனடைந்த ஓபிசிக்களின் எழுச்சி காரணமாக 2000களில் உருவான ‘புதிய நடுத்தர வர்க்கத்தின்’ பாதுகாவலராக அவர் தன்னை முன்வைத்தார். வேலை வாய்ப்பின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக ஓபிசி இளைஞர்கள் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்தனர். அந்த வேலைகள் நிலையற்றவை, மோசமான ஊதியம் தருபவை என்றாலும்கூட, அவை அந்த முன்னாள் கிராமப்புற மக்கள் தங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவின. புதிய நடுத்தர வர்க்கத்திற்கான மோடியின் உரை, வர்க்க அடிப்படையிலானதாக இருந்தாலும், சோசலிசத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. அது அதிக சமத்துவம் மற்றும் மறுவிநியோகத்தைக் கோருவதற்குப் பதிலாக, சமூக நீதிக்கான முதல் அளவுகோலாகத் திறமையை முன்னிறுத்தியது. 1991 பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பிறகு திறமை என்பது படிப்படியாக மேலாதிக்கம் கொண்டதாக மாறியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சில சமூக-ஜனநாயகக் கொள்கைகளுடன் (மண்டல் II உட்பட) அதனை சமநிலைப்படுத்திக் கொண்டது.
இடஒதுக்கீட்டு அரசியலின் தலைவிதியை மோடி முடித்து வைத்தார் என்றால், ‘மண்டல் தருணம்’ என்பது அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போயிருந்தது. ஓபிசி அரசியலானது, இரண்டு வழிகளில் ஓபிசி கொள்கைகளின் வெற்றிக்குப் பலியானது. மத்திய அரசும், மாநிலங்களும் 27 சதவீத ஓபிசி ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய போது, மொத்த இடஒதுக்கீடு 49 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று நீதித்துறை மறுத்துவிட்டதால் ஒரு நிறைவுப் புள்ளி எட்டப்பட்டது. ஓபிசிக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், ‘எனக்கு வாக்களியுங்கள், உங்களுக்கு அதிக இடஒதுக்கீடு கிடைக்கும்’ என்று இனிமேல் ஒருபோதும் சொல்ல முடியாது போனது.
இரண்டாவதாக, ஒட்டுமொத்த ஓபிசி குழுக்களில் உள்ள சில சாதியினர் மட்டும் மற்றவர்களை விட இடஒதுக்கீட்டின் மூலம் அதிகப் பயனடைந்தனர். யாதவர்களை இதற்கான எடுத்துக்காட்டாக கொள்ளலாம். அவர்கள் மற்றவர்களை விட அதிக இடஒதுக்கீடுகளைப் பெற்றார்கள் என்பதை இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பிலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடியும். உத்தரப்பிரதேசத்தில் 2011-12இல் குர்மிகள் 5.8 சதவீதம், தெலிஸ்கள் 5.7 சதவீதம், குஷ்வாகாக்கள் 6.7 சதவீதம், லோதிக்கள் 3.5 சதவீதம் என்பதற்கு மாறாக, யாதவர்களில் 14.5 சதவீதம் பேர் மாத ஊதியம் பெறும் வேலையைப் பெற்றிருந்தனர் (கணக்கெடுப்பின் கடைசி சுற்று).
சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள் ஆட்சியின் போது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடந்த யாதவர்மயமாக்கல் ஓபிசிக்களைப் பிரித்தது. யாதவர்களுடன் சேர்ந்து வாக்களிக்க மறுக்கும் அளவிற்கு சில சாதிகள் அன்னியப்படுத்தப்பட்டன. பீகாரில், 1994ஆம் ஆண்டிலேயே குர்மிகள் நிதீஷ் குமாரைப் பின்தொடர்ந்து தனிக் கட்சி ஒன்றை உருவாக்கினர். உத்தரப்பிரதேசத்தில், யாதவர்களுக்கு எதிரான சாதிகளுக்கு யாதவர்களின் மீதிருந்த கோபத்தைப் பயன்படுத்தி, யாதவர் அல்லாத ஓபிசி வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில், யாதவர் அல்லாத சாதிகளிடமிருந்து வேட்பாளர்களை நியமிக்கும் அளவுக்கு பாஜக சாதுரியமாக இருந்தது. இவ்வாறான உத்தி 2019 தேர்தல்களில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணியை விட ஏழை ஓபிசிக்கள் பாஜகவிற்கு வாக்களித்தபோது தெளிவாகத் தெரிந்தது. பாஜகவிற்கு உயரடுக்கினர் என்ற பிம்பம் இருந்தபோதிலும், பகுஜன் சமாஜ் கட்சி-எஸ்பி கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்த 33.5 சதவிகிதத்தினருக்கு எதிராக 59 சதவிகித ஏழை ஓபிசிக்கள் பாஜகவையே ஆதரித்தனர்.
ஏழை ஓபிசிக்களை விட பணக்கார மற்றும் நடுத்தர ஓபிசிக்கள் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணிக்கு அதிக வாக்களித்ததற்கான காரணம், சாதிகளைப் பற்றி கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் தருணத்தில் தெளிவாகிறது. சமாஜ்வாதி கட்சி பெரிய அளவிற்கு யாதவர்கள் கட்சியாக இருக்கிறது. யாதவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கின்ற கடாரியாக்கள், குஷ்வாகாக்கள், தெலிஸ்கள் மற்றும் லோதிக்களைவிட யாதவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஓபிசிகளைப் பாதிக்கின்ற ஒற்றுமை பிரச்சினை உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் எதிர்கொள்வதைப் போன்றது. ஜாதவ் அல்லாத எஸ்சிக்கள் ஜாதவர்களின் சமூக-பொருளாதார உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜாதவ் கட்சியாகக் கருதப்படும் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து தங்களைத் தூர விலக்கி வைத்துக் கொள்கிறார்கள். ஜாதவ் அல்லாத எஸ்சிக்கள் பலரும் இப்போது பாஜகவிற்கு வாக்களிக்கின்றனர். இருப்பினும், இந்த உந்துதல் காரணி, கீழ்நிலை ஓபிசிக்கள் மற்றும் கீழ்நிலை எஸ்சிக்கள் விஷயத்தில், இழுக்கும் காரணி மூலமாக வலுப்படுத்தப்படுகிறது. ஹிந்துத்துவச் சக்திகளை ஆதரிப்பதன் மூலம், இந்த சாதிகள் தங்களைச் சமஸ்கிருதப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. ஹிந்து ‘உயர் பாரம்பரியத்தால்’ அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
மண்டல் அரசியல் விளையாட்டு முடிந்து விட்டதை இது காட்டுகிறதா? அப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 2015ஆம் ஆண்டில், மத்திய அரசு வேலைகளில் ஏ வகுப்பு ஊழியர்களில் 12 சதவிகிதம், பி வகுப்பில் 12.5 சதவிகிதம் மற்றும் சி வகுப்பு தொழிலாளர்களில் 19 சதவிகிதம் என்று மிகக் குறைவாகவே ஓபிசிக்கள் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றனர். 1990இல் வாக்குறுதியளிக்கப்பட்ட அளவிற்கு கிட்டத்தட்ட 10 சதவிகித புள்ளிகள் குறைவாக. மொத்த தொழிலாளர்களில் 18 சதவிகிதம் மட்டுமே என்று அவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதே இதன் பொருள். இந்தப் பற்றாக்குறை குறித்து போராடுவதை ஓபிசிக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு