திரு.மாணிக்கம் திரைவிமர்சனம்
“தவறு” செய்ய வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் ஒருத்தர் மனிதனாக இருக்கலாம், ஆனால் வாய்ப்பு கிடைத்தும் அறம் பிறழாமல் வாழ்வோர் மாமனிதர்களாகிறார்கள். திரு. மாணிக்கம் அப்படிப்பட்ட மனிதருள் மாணிக்கம்.
இந்த திரைப்படத்தின் இறுதியில் ஒரு மூதுரை வருகிறது, உண்மைதான். மாணிக்கம் போன்ற மனிதர்களால் தான் மனிதத்தின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது.
மனதின் பாரங்களை தளர்த்தி, நெகிழ்த்தி அனுப்பிய படம்.

மாணிக்கத்தின் குடும்பத்தை அறிமுகம் செய்யும் காட்சி என அழகான ஒரு கவிதையாக படம் தொடங்கியது. இரண்டு பிள்ளைகள் பெற்ற பின்பும் சமுத்திரகனிக்கும், அனன்யாவுக்கும் இடையில் நிலவும் காதல் காண நெகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளோடு குழந்தையாக அவரும் கணவன் மடியில் படுத்துக்கொண்டு பாசத்தைப் பகிர்கையில், இப்படி அன்பா வாழ்ந்துட்டுப் போகலாமே, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு ஏன் வாழ்வைத் தொலைக்கிறார்கள் என்று தோன்றியது.
சுமதிக்கென்று பெரிய தேவைகள் இல்லை, கணவனின் நிலை அறிந்து உற்ற தோழியாக வாழ்கிறாள், ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு குறுக்கிடுகையில் அவள் தடுமாறுகிறாள். தன் கணவனிடம் ஒன்றை செய்யச் சொல்லி வலியுறுத்துகிறாள். இந்த உறவுச் சிக்கலை நந்தா பெரியசாமி அவர்கள் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
சுமதியின் தாய் வழி உறவுகளின் மன மாற்றமும், அவர்களின் பதட்டமும், மாணிக்கத்தின் தவிப்பும், ஊடாட்டமும் ஒரு கட்டத்தில் நமது குடும்ப பிரச்சினை போல் ஆகிவிடுகிறது. பார்வையாளர்களிடம் இந்த உணர்வை ஏற்படுத்துவது தான் ஓர் இயக்குனரின் வெற்றி.
பாரதிராஜா காதாப்பாத்திரம் வழியாகத்தன் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு. மனுஷன் பின்னி எடுத்திருக்கார். அவரின் கதை தொடங்கியவுடன், மனம் அவரின் பிரச்சினை தீர வேண்டுமே என்று பதறுகிறது. இந்த இரு தரப்புக்கும் இடையில் மாணிக்கம், இப்போது அவர் யாருக்கு நன்மை செய்யப் போகிறார்? இந்த கதைக் கருவோடு நகரும் கதையில் எதிர்பாரா நிகழ்வாக இன்னொரு சவால் இடைவெளியில்..

ஆடு புலி ஆட்டம் போல நகரும் கதையில், மாணிக்கம் ஏன் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார் என்று இரண்டாம் பாதியில் சொல்லப்படும் பின் கதை உணர்ச்சிகரமாக இருந்தது, அதுவும் அதை எந்த சூழலில் யாரிடம் மாணிக்கம் சொல்கிறார் என்னுமிடத்தில், நந்தா பெரியசாமி அவர்கள் யாரை பெரிய மனிதராகக் கருதுகிறார், அந்த சிக்கலுக்கு எப்படி தீர்வைக் கொண்டு வருகிறார் என்பதைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.
இது போல் படம் நெடுக நாம் ஒன்றியும், நெகிழ்ந்தும் போவோம். விஷால் சந்திரசேகரின் இசை மற்றும் எம். சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.
திரு. மாணிக்கம் is a feel good movie! Do watch in theatres. வருடத்தின் இறுதியில் நல்ல படங்களைப் பார்த்து குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க விரும்புவோருக்கு, அலங்கு திரைப்படம் போலவே திரு. மாணிக்கமும் நல்ல படமாக இருக்கிறது. இயக்குனர் Nanda Periyasami அவர்களுக்கும், நல்லதொரு படத்தை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அலங்கு, திரு. மாணிக்கம் இரண்டு படமுமே நேற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தது. மக்களே, இதுபோன்ற நல்ல படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும்.
எழுதியவர் :
எழுத்தாளர் கொற்றவை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

