வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன.
[எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு இந்தக் குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து புதிய விளக்கங்களோடு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றை எனது பாணியில் தமிழாக்கியிருக்கிறேன்.]
அச்சம்:
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
-எதற்கும் அஞ்சமாட்டேன் என்ற வீம்பு வீரம் அறியாமையேயாகும். அறிவுடையோர் எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்சவே செய்வார்கள்.
தொற்று:
இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
-அறிவார்ந்தவர்கள் உடம்பைக் குறிவைத்துத் தாக்குகிற துன்பங்கள் வரவே செய்யும் என்பதைப் புரிந்து வைத்திருப்பார்கள். ஆகவே கலங்கி நொறுங்கிச் செயலிழந்துவிட மாட்டார்கள்.
தொற்றுப் பரவல்:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
-நோய்த் தாக்குதலுக்கு உள்ளான எவரையும் அதன் பாதிப்புகள் தீண்டும். நோய் தொற்றுவதை விரும்பாதவர்கள் யாரும் அது மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அக்கறையோடு இருப்பார்கள்.
முன்னெச்சரிக்கை:
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
-என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற தெளிவு அறிவுடையோருக்கு இருக்கும். அறியாதவர்களோ நிகழ்வதைப் புரிந்துகொள்ளாமலே இருப்பார்கள்.
தடுப்பு:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
-அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நோயிடம் சிக்க மாட்டார்கள்.
தூய்மையும் வாய்மையும்:
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
-தண்ணீரைப் பயன்படுத்தி உடல் தூய்மையைப் பராமரிக்கலாம், உண்மை நிலைமைகளைச் சொல்வதுதான் உள்ளத்தூய்மையின் அடையாளம்.
பாதுகாப்புக் கவசம்:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டுத் தடுக்கத் தவறுகிறபோது வாழ்க்கை நெருங்கிவரும் நெருப்பின் முன் இருக்கிற வைக்கோல் போலாகிவிடும்.
சுய கட்டுப்பாடு:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
-தனது உயிரையே இழக்க நேரிட்டாலும் மற்றவர்களின் அரிய உயிருக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது.
தனிமைப்படுத்தல்:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
-செயல்திறனுள்ள அரசு உரிய வகையில் தனிமைப்படுத்தி, பரிவோடு பராமரித்து, சிகிச்சைக்குப் பின் உறவினர்களோடு முறையாகச் சேர்த்துவைக்கக்கூடியதாக இருக்கும்.
ஒத்துழைப்பு:
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
-சக மனிதர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென உணர்ந்து செயல்படுவதே உயிரோடு இருப்பதன் பொருள், ஒத்துழைக்க மறுக்கிறவர்கள் பிணமாகவே கருதப்படுவார்கள்.
பொறுப்பின்மை:
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
-மற்றவர்களிடமிருந்து வரும் ஆலோசனைகளைக் கேட்டும் செயல்படாமல், சொந்த அறிவையும் வளர்த்துக்கொள்ளத் தவறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஒரு நோயைப் போன்றவர்கள்தான்.
கடமை:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
-மற்ற உயிரினங்களையும் நேசித்துப் பாதுகாக்கிற அருளுள்ளம் படைத்தவர்களுக்கு தனது உயிரை நினைத்து அஞ்சுகிற நிலைமை வராது.
பேரிடர் மேலாண்மை:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
-துன்பம் ஏற்படுத்தக்கூடிய செயல்களைத் தவிர்க்க முயலுதல், அப்படியும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் தளர்ந்துபோகாமல் கையாளுதல் – இந்த இரண்டுமே திட்டமிட்டுச் செயல்படுகிறவர்களின் வழிமுறைகளாகும்.
கட்டமைப்புகள்:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
-தேவையான பொருள்கள், கட்டமைப்புகள் அனைத்தும் தயாராக இருந்து, உரிய நேரத்தில் கிடைக்கிறதென்றால் அதுவே மக்களைப் பாதுகாக்கும் அரண்.
வழிகாட்டல்கள்:
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
-உலகம் முழுக்க எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அவற்றை நமக்கேற்ற முறையில் பயன்படுத்துவதே அறிவு.
உலக சுகாதார நிறுவனம்:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
-எந்தக் காலக்கட்டம், எப்படிப்பட்ட இடம் என்ற சூழல்களையும் ஆராய்ந்து சரியான முடிவுக்கு வருவதே தலைமைப் பொறுப்பின் தகுதி.
விளக்கு:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
-அறிவார்ந்தவர்களைப் பொறுத்தவரையில் எல்லா விளக்குகளும் விளக்காகிவிடாது, பொய்மையான நம்பிக்கைகளில் தள்ளிவிடாத விளக்குகளே விளக்காகும்.
தேசம்:
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கு இவ்வைந்து.
பெருந்தொற்றிலிருந்து விடுதலை, போதிய வளம், உற்பத்தி, மகிழ்ச்சி, தற்காப்பு இவை ஐந்தும் ஒரு தேசத்தின் அணிகலன்களாகும்.
தற்சார்பு நாடு:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு.
-ஒரு வளமான நாடு வேறு யாரையாவது நாடித்தான் வளம் சேர்க்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படாத வகையில் தனது வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும்.
புலம்பெயர் தொழிலாளர்:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
-புலம்பெயர்ந்து வருகிறவர்களால் ஏற்படும் எதிர்பாராத சுமைகளைத் தானே தாங்கிக்கொண்டு, தேசத்தைப் பராமரிப்பதற்கான நிதி வருவாயை உறுதிப்படுத்துவதாக நாட்டின் அரசு திகழ வேண்டும்.
எல்லைப் பிரச்சினை:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.
-தீராத பசியும், குணமாகாத நோயும், அழிக்கும் பகையும் தன்னை நெருங்கவிடாமல் இயங்குவது நாட்டிற்குப் பெருமை.
முதலீட்டுக்கான இடம்:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.
-ஏதுமற்றவரின் கொடும் பட்டினியைத் தீர்க்கக்கூடியவராக இருப்போமாயின், அவ்வாறு பசிபோக்கும் இயக்கமே நம் பணத்திற்கான முதலீடாகும்.
அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com