திட்டமிடாத வகுப்பறைகள் – நூல் அறிமுகம்
கற்றுக் கற்பிப்பதா, கற்பித்துக் கற்பதா? ஓர் அழகிய உரையாடல்.
”மக்களிடம் போ: மக்களிடம் கற்றுக் கொண்டு மீண்டும் அதை மக்களுக்கே கற்றுக் கொடு.” என்பது அரசியல் யதார்த்தவாதத்தின் முக்கியப் பாடக்குறிப்பு. இந்தத் தத்துவ அடித்தளத்தைக் கல்விப் புலத்தில் செயல்படுத்தும் முறையைத் தனது சிந்தனை ஆற்றலாலும் செய்முறைக் கற்றலாலும் குழந்தைகளுடனான உரையாடலாலும் அமல்படுத்தும் தாத்பரியத்தை நிறுவியிருக்கிறார் குழந்தமைக் கவனிப்பாளரான தேனிசுந்தர்.
பள்ளிக்கூடம் என்பது படித்தறிந்த ஆசிரியர்களளால் இளங்குழந்தைகளை சமூக மனிதர்களாக வடிவமைக்கும் இடம். படிப்பிக்கும் ஆசிரியர்களைப் போலவோ அவர்களைத் தாண்டியுமோ குழந்தைகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உளவியல் திட்டத்தை மையமாகக் கொண்டு இயங்குகி\ன்றன பள்ளிகள். கற்றறிந்த அறிஞர்களால் வடிவமைக்கப் பட்ட பாடத்திட்டம் குழந்தைகளுக்குள் புகுத்தப் படுகிறது. 1935ல் ஆங்கிலக் கல்வியாளர் மெக்காலே வடிவமைத்த கல்வித் திட்டம் இன்றளவும் போதிக்கப் பட்டுக்ம்கொண்டிருக்கிறது. அவ்வப்போது பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப் பட்டாலும் அடிப்படை ஒன்றுதான்.
கல்வி என்பது மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் சடங்குமுறையில்லை. தேனிசுந்தர் 1940களில் குஜராத்தி கல்வியியல் அறிஞர் லட்சுமிராம் எழுதிய நூலை மேற்கோள் காட்டி, கல்விக் கூடங்களில் நிகழ்த்தப் படவேண்டிய மாற்றங்கள் பற்றி விவாதிக்கிறார். “பொருத்தமான தேர்வுமுறைகள் சாத்தியப்படும் பாடங்களில் மட்டுமே தேர்வுகள் நடக்க வேண்டும்; தேர்வுகளில் வினாக்களுக்கு விடை எழுத பாடப்புத்தகங்களை அனுமதிக்க வேண்டும். (அதாவது புத்தகத்துக்குள் விடைகளைத் தேடி எடுத்து எழுதவேண்டும். ஏற்கனவே நன்கு வாசித்துப் புரிந்திருந்தால்தான் இது சாத்தியம்.) (1) மேல் வகுப்புக்குச் செல்லத் தகுதியில்லாமை.; (2) மேல் வகுப்புக்குச் செல்லலாம். (3) பலவீனமான பாடங்களில் முன்னேற்றம் காட்டுவதைப் பொருத்து மேல்வகுப்புக்குச் செல்லலாம். முதலாம் இடம், இரண்டாமிடம் என்று மதிப்பெண் போடும் முறையைத் தவிர்க்கலாம்.” என்கிறார் லட்சுமிராம். (ரேங்க் முறையைத் தமிழ்நாடு அரசு மூன்று வருடங்களுக்குமுன் நிறுத்திவிட்டது என்பது வரவேற்கத்தக்கது.)
அறிவியல் என்றால் புதிய கண்டுபிடிப்பின் பிறப்பிடம். அப்படியானால் “திட்டமிடாத வகுப்பறை”யும் அத்தகையதுதான். குழந்தைகளுக்கு நமது சிலபஸ் தரவுகளை ஏவிவிடுவதை விட, குழந்தைகளின் நடவடிக்கைகளிலிருந்து அவர்களுக்கான தேவையறிந்து புகட்டுவதுதான் சிறப்பான கல்வி.
தனியார் தொடக்கப்பள்ளிகளில் “விளையாட்டு மூலம் கல்வி” என்ற கோட்பாட்டை அமல்படுத்துகின்றனர். அது உயர் நடுத்தர வாழ்வியலைப் பிரதிபலிக்கும்படியாக இருக்கிறது. செலுலாய்ட் பொம்மைகள், நெகிழியால் வடிவமைக்கப் பட்ட நீர்த் தாவரங்கள், செயற்கை முறையிலான விளையாட்டுத் திடல்கள், அதாவது இயற்கையான மண் அல்லது புல் வளர்ந்த பூமியாக இல்லாமல் சிமெண்ட் பாளங்களால் ஆனவை, என்|று எல்லாமே இயற்கையை நகலெடுத்த செயற்கைப் படலங்களாய் இருக்கின்றன. இதை உடைத்து எறிந்து இயற்கையும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத் தேடலுமே கல்வி என்ற உண்மையைக் குழந்தைகளிடமிருந்து அறிந்து வெளிப்படுத்துகிறார் சுந்தர்.
கற்றல் பற்றிய ஆசிரியர் சுந்தர் அவர்களின் புதிய முன்வைப்பு மிகவும் முக்கியம்.. அவர் எழுதுகிற்ஆர். ”கண்டிப்பாகக் கற்றல் நிகழவேண்டும்; ஆனால் கற்பித்தல் இருந்தே ஆகவேண்டும் என்கிற அவசியமில்லை. அதிலும் ஆசிரியர் கற்பித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் தேவையில்லை. ஆசிரியரும் வகுப்பறைச் சூழலும் கற்றலுக்கு உதவினாலே போதும். பல நேரங்களில் ஆசிரியர்கள் அமைதியாக இருந்துவிட்டால் அதுவே கற்றலுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.”
இன்றைய சூழலுக்குள் ஐக்கியமாகி இருப்பவர்களுக்கு இது புதுமையாகவும் விநோதமாகவும் தோன்றலாம். ஆனால் இது கற்பித்தல் கோட்பாட்டின் இன்னோர் யதார்த்த வடிவம் என்பதை, இப்படியான முறை அமலாகும்போதுதான் புரிய முடியும்.
பால்வாடியில் பயிலும் மிதுன் ஒரு மண் உருண்டையை எடுத்துவந்து “இது வெடிகுண்டு” என்கிறான். (வெடிகுண்டு என்ற போர்ச்சாளரம் ஏற்கனவே அதிகார ஆதிக்க சமுதாயத்தால் குழந்தைகளுக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது.) அதைப் பார்த்த மயூரிப் பாப்பாவுக்கு இன்னொரு ஐடியா உதயமாகிறது. இரண்டு இலைகளை அந்த மண்னுருண்டையில் செருகி “குட்டிச் செடி” என்கிறாள். ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்குப் பாடம் நடத்துகிறது பாருங்கள். இதில் ஆசிரியரின் தலையீடு எதுவும் இல்லை. இதுதான் திட்டமிடாத வகுப்பறை.
குழந்தைகள் தாமாகவே பலதும் கற்கின்|றனர். ஒருவன் மிமிக்கிரை செய்கிறான்; இன்னொருவன் கம்பு சுற்ருகிறான். ஆசிரியரே எஞ்ஜினாக பல குழந்தைகளும் ரயில் ஓட்டி வில்ளையாடுகிறார்கள். இப்படியான சித்தரிப்புகளில் முக்கிய்ச் செய்தி என்னவென்றால் குழந்தைகள் தாமாக முன்வந்து பள்ளிச் சூவலைக் குதூகலச் சூவலாய் மாற்றுகின்றனர். எங்கு மகிழ்ச்சி ததும்புகிறதோ அங்கு கற்றல் இயல்பாகிவிடுகிறது. இதுதான் திட்டமிடாத வகுப்பறை.
இந்த நூலில் பேய்க்கதை ஒன்றைக் குழந்தைகள் சொல்கிறார்கள். ஒரே ஒரு பேய் உலகத்தில் உள்ள அனைத்தையும் விழுங்கி விடுகிறது. இதைக்கேட்ட கோகுல் இதே கதையை பில்டப் பண்ணி வேறொரு கதை சொல்கிறான். அவன் சொன்ன கதையில் இரண்டு பேய்கள் வருகின்றன. ஒன்றோடு ஒன்று மல்லுக் கட்டி, சின்னப்பேய் செத்துவிடுகிறது. பேய்க்கதையின் அடுத்த பரிமாணமாக ரட்சிகா ஒரு கேள்வி கேட்குறாங்க. “செத்துப் போனவங்ததானே பேயா வருவாங்க? பேய் திரும்பவும் சாகுமா?”
பேய்க்கதையில் வரும் மூன்று பரிமாணங்கள்தான் குழந்தைமையின் பிரதிபலிப்பு. இதில் ஆசிரியரின் பங்கு ஏதும் இல்லை. பிறர் சொல்லக்கேட்டு மனதில் நின்ற பேய் குழந்தைகளின் அடுத்தகட்டக் கற்பனைக்கு வழிகாட்டுகிறது. இதை ஆசிரியர்கள் புரிந்துகொண்டால் குழந்தைகளின் உள்ளம் நலமும் வளமும் பெறும் என்பது நூலாசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இப்படியாக நூல் முழுக்க குழந்தைகளே தங்களுக்குள் உரையாடி, புதுத் தரவுகளை உருவாக்குகின்றனர். அவற்றின் ஊடாக, ஆசிரியர் கொஞ்சமாக, ஊறுகாய்போல உரைப்புக் காட்டுகிறார். குழந்தைகளால் எழுப்பப்பட்ட சுவருக்குப் பூச்சுப் பூச வேண்டியது மட்டும்தான் ஆசிரியரின் பணி என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக் காட்டுகிறார் சுந்தர்.
இது ஒரு புதுமையான நூல். புதிய படிப்பித்தலுக்கான வழிகாட்டுதல்களைச் செய்கிறது. குழந்தைப் படிப்பு இவ்விதமாக உருக் கொண்டால் பெரிய படிப்புப்பிள்ளைகள் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
நூலின் தகவல்கள் :
நூல் : திட்டமிடாத வகுப்பறைகள்
ஆசிரியர் : தேனிசுந்தர்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கம் 48
விலை : ரூ.50/ப
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/thitamidatha-vakuparaigal/
நூல் அறிமுகம் எழுதியவர் :
தேனிசீருடையான்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.