தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை  – நிராயுதபாணியாகளாக இருந்த பொதுமக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை இழைத்த காவல்துறை உயரதிகாரிகள் – தமிழில்: தா.சந்திரகுரு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை – நிராயுதபாணியாகளாக இருந்த பொதுமக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை இழைத்த காவல்துறை உயரதிகாரிகள் – தமிழில்: தா.சந்திரகுரு



இளங்கோவன் ராஜசேகரன்
ஃப்ரண்ட்லைன்
2022 ஆகஸ்ட் 19

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 2022 மே 18 அன்று சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ள, ஃப்ரண்ட்லைனுக்குக் கிடைத்த பகுதிகளிலிருந்து:

C:\Users\Chandraguru\Pictures\Inquiry Commission report on Thoothukudi firing\CCI_UDHindu_KSL_U8G43K1ET_R1527937752_0_73de3f0c-f149-4a59-b458-83d3da971bc3.jpg
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி 2018 மே 22 அன்று பேரணியாகச் சென்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை விரட்டியடித்த காவல்துறையினர்

தொழிற்சாலையால் உருவாகும் மாசுபாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அந்த துப்பாக்கிச்சூட்டை காவல்துறை மேற்கொண்ட மிக மோசமான செயல் என்று ஆணையம் விவரித்துள்ளது.   

2018 மே 22, 23 ஆகிய நாட்களில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் இறுதி அறிக்கையில் ‘அதை மிகவும் கேவலமான செயல் என்று குறிப்பிடுவதற்கு ஆணையத்திடம் தயக்கம் எதுவுமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் ஜாக்சன் என்ற பதினெட்டு வயது பள்ளி மாணவி உட்பட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றும் பலர் குண்டு காயங்களுக்கு உள்ளாகினர். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

C:\Users\Chandraguru\Pictures\Inquiry Commission report on Thoothukudi firing\81151313.jpg
2018 மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது  சாதாரண உடையில் இருந்த காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகக் கூறி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குச் சொந்தமான தாமிர உருக்காலைக்கு எதிராக அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் நூறு நாட்களாக அமைதியுடன் நடத்தி வந்த போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிவடைந்தது. தடுத்து நிறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காவல்துறையின் அடக்குமுறைக்கு உள்ளாகினர்; காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 2018 மே 23 முதல் மே 28 வரை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அந்த மாவட்டத்தில் இணைய வசதிகள் முழுமையாக முடக்கப்பட்டன.     

நூறாவது நாள் போராட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணியின் மீது அதீத வன்முறையைப் பயன்படுத்தினார்கள் என்றும், தங்களுக்குள் அவர்கள் ஒருங்கிணைப்புடன் செயல்படவில்லை என்றும் காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் குற்றம் சாட்டியுள்ளார். அத்தகைய குற்றத்தை இழைத்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.  

ஐந்து தொகுதிகளாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் உள்ள முக்கிய பகுதிகள் ஃப்ரண்ட்லைனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 2022 மே 18 அன்று சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகளில், நிராயுதபாணியாக இருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக அதிகாரப்பூர்வ இயந்திரம், காவல்துறை மீது மிகத் தெளிவான கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று  1952ஆம் ஆண்டு விசாரணை ஆணைய சட்டப் பிரிவு 3(4) குறிப்பிடுகிறது.   

ஆணையம் மேற்கொண்ட விரிவான பகுப்பாய்வு

தமிழ்நாடு மாநிலம் இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடவடிக்கைகளில் ஒன்றாக நடைபெற்ற அந்தச் சம்பவத்தை மிக உன்னிப்பாக மறுகட்டமைத்து, கொந்தளிப்பான அந்தப் பிரச்சனை குறித்து விசாரணை ஆணையம் மிகவும் விரிவான, முழுமையான ஆய்வை மேற்கொண்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை அடக்குவதற்காக காவல்துறை துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று தெரிவித்த அப்போதைய அதிமுக அரசின் கூற்றுகளை நிராகரித்த அருணா ஜெகதீசன் ‘போர்க்குணத்துடன் இருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்தைக் கையாளும் வகையிலேயே அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று அரசு கூறுவதை நிறுவுவதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களிடமிருந்து எந்தவொரு தூண்டுதலும் இல்லாமலேயே காவல்துறை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Justice Aruna Jagadeesan, Chairman of the Commission of Inquiry probing the 2018 firing in Thoothukudi, at the collectorate on June 4, 2018.      

2018 ஜூன் 4 அன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் 

‘தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீதே காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் விசாரணை ஆணைய அறிக்கையில் ‘தங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் மறைவிடங்களில் இருந்து சுட்ட நிகழ்வுகளும் அப்போது நடந்துள்ளன’ என்றும் கூறப்பட்டுள்ளது. எங்கிருந்து, எந்த திசையில் இருந்து தோட்டாக்கள் வருகின்றன என்பதைப் போராட்டக்காரர்கள் அறிந்திராத காரணத்தாலேயே அங்கே நிலவிய ஒட்டுமொத்த குழப்பம் மற்றும் அழிவு, மரணம் போன்றவை நடந்தேறின என்று விசாரணை ஆணைய அறிக்கை தெளிவுபடுத்திக் கூறுகிறது.      

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து போராட்டக்காரர்கள் உயிரிழந்த நிலையில், ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஹெரிடேஜ் பூங்காவிற்குள் மறைந்திருந்து பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர் என்று அறிக்கை கூறுகிறது.

The 100th day of protest against Sterlite Industries’ copper smelter plant in Thoothukudi, on May 22, 2018. This ended in unprecedented violence.
2018 மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குச் சொந்தமான தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற நூறாவது நாள் போராட்டம் வரலாறு காணாத வன்முறையில் முடிந்தது

அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவை மிகவும் மோசமாகச் சங்கடத்திற்குள்ளாக்கிய அந்தச் சம்பவம் குறித்து மிகவும் மோசமான திருப்பத்தை அளிக்கும் வகையில் இருக்கின்ற அந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. விதிகளைப் பின்பற்றாததைக் காரணம் காட்டி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின் அடிப்படையில் மே 28 அன்று அன்றைய அரசு அந்த ஆலையை மூடியது. ​​ பொதுமக்களின் துயரத்திற்கு காரணமானவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக உறுதியளித்திருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\Inquiry Commission report on Thoothukudi firing\Sealing Sterlite.jpg
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் காவல்துறை உயரதிகாரிகள் 

அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காவல்துறை உயரதிகாரிகள் சிலரை விசாரணை ஆணையம் பொறுப்பேற்க வைத்துள்ளது. அப்போதைய தென்மண்டலக் காவல்துறை ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ் – தற்போது காவல்துறை கூடுதல் டிஜிபி (காவலர் நலன்); திருநெல்வேலி பகுதி துணைக் காவல் கண்காணிப்பாளர் கபில்குமார் சி.சரத்கர் – தற்போது சென்னை நகர கூடுதல் காவல் ஆணையர்; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பி.மகேந்திரன் – தற்போது சென்னை துணை ஆணையர் (நிர்வாகம்); காவல்துறை துணை கண்காணிப்பாளர் (தூத்துக்குடி) லிங்கத்திருமாறன்; மூன்று காவல் ஆய்வாளர்கள், இரண்டு துணை ஆய்வாளர்கள், தலைமைக்காவலர் ஒருவர் மற்றும் ஏழு காவலர்கள் அவர்களில் அடங்குவர்.    

அந்த அதிகாரிகள் ‘நிச்சயமாக வரம்பை மீறியிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் ஆணைய அறிக்கை அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான பணிகளைப் புறக்கணிக்கணித்ததற்காக குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கான பாரபட்சம் எதுவுமற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது.      

தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்தது, ஒட்டுமொத்த அலட்சியம், தவறான முடிவுகளை மேற்கொண்டது போன்ற காரணங்களுக்காக தற்போது ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் இருக்கின்ற, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் மீது தனிப்பட்ட முறையில் விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மே 22 அன்று ஒட்டுமொத்த நகரமும் முற்றுகையிடப்பட்டிருந்த வேளையில், தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தங்கியிருப்பதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியர் நூறு கிலோமீட்டர் தொலைவில் கோவில்பட்டியில் இருந்துள்ளார். துறைரீதியான நடவடிக்கையை அவர் மீது அரசு மேற்கொள்ள வேண்டுமென்று ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.        

பாய்ந்த குண்டுகள் குறித்த (பாலிஸ்டிக்ஸ்) அறிக்கை

காவல்துறை நடவடிக்கையில் இருந்த மற்றுமொரு அம்சத்தை விசாரணைக்குழு ஆய்வு மேற்கொண்ட பாய்ந்த குண்டுகள் குறித்த பாலிஸ்டிக்ஸ் அறிக்கை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. ‘துப்பாக்கிச் சூடு நீண்ட தூரத்தில் இருந்து (ஆயுதங்களைக் கொண்டு) நடத்தப்பட்டிருக்கிறது, குறுகிய தூரத்திலிருந்து அல்ல’ என்று குறிப்பிட்டு குருவிகளைப் போல போராட்டக்காரர்கள் எவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை அந்த அறிக்கை விவரித்துள்ளது (துப்பாக்கி கொண்டு நசுக்கப்பட்ட போராட்டம்Gunning down a protest, ஃப்ரண்ட்லைன், 2018 ஜூன் 22).     

பாலிஸ்டிக்ஸ் அறிக்கையில் இருக்கின்ற ‘நீண்ட தூரத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு’ என்ற கூற்றுடன் பிரேத பரிசோதனை அறிக்கைகள், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடமிருந்த காயங்கள் பற்றிய ஆய்வுகள் ஒத்துப் போகின்றன. காவல்துறை தப்பியோடிய பொதுமக்கள் மீது எவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியது என்பதை துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட காயங்களின் தன்மையிலிருந்து ஆணையம் ஊகித்தறிந்துள்ளது.        

பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோட்டாக்கள் நுழைந்து, வெளியேறிய இடங்கள் தோட்டாக்கள் மண்டை ஓட்டின் பின்புறத்திலிருந்து நுழைந்து முகத்தின் முன்பகுதி வழியாக வெளியேறியிருப்பதைக் காட்டுகின்றன. தங்களை எது தாக்கியது என்பதுகூடத் தெரியாமலேயே பாதிக்கப்பட்டவர்கள் இறந்து போயினர் என்பது இப்போது நிரூபணமான உண்மையாகி இருக்கிறது. இறந்து போன பதின்மூன்று பேரில் ஸ்னோலின் ஜாக்சன் உட்பட ஆறு பேர் பின்னால் இருந்து சுடப்பட்டே இறந்து போயிருக்கின்றனர் என்று 2019 மார்ச் 13 ஃப்ரண்ட்லைன் பதிப்பில் வெளியான ‘வெளிப்படுத்திக் காட்டும் அறிக்கை’ (Revealing Report) என்ற கட்டுரை கூறுகிறது.       

காவல்துறை நிலையியற் கட்டளைகள் (பிஎஸ்ஓ) அல்லது அத்தகைய சூழ்நிலைகளுக்கென்று வகுக்கப்பட்டுள்ள ‘செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள்’ போன்றவற்றை காவல்துறை பின்பற்றவில்லை என்று ஆணைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பிஎஸ்ஓவில் உள்ளவாறு எச்சரிக்கைகள், கண்ணீர்ப்புகை அல்லது தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்துதல், தடியடி அல்லது எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறையால் மேற்கொள்ளப்படவில்லை (காவல்துறை நிலையியற் கட்டளைகளை மீறுதல்Violation of Police Standing Order, ஃப்ரண்ட்லைன், 2018 ஜூன் 6).

ஆதாரமற்ற கூற்றுகள்

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விரிவான ஆய்வுகளிலிருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதாக அப்போதைய மாநில அரசாங்கத்தின் கூற்றை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆதாரமும் ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை.  

மே 22 பேரணியில் பங்கேற்றவர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததையும், கற்களை வீசுவதில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிற ஆணைய அறிக்கை காவல்துறையினரின் உயிர் அல்லது உடலுக்கு உடனடி அச்சுறுத்தலாக எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிடுகிறது.    

ஆணைய அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ‘மோசமாக காயம் அடைந்த மணிகண்டன் என்பவரைத் தவிர எந்தவொரு காவல்துறையினருக்கும் மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான காயங்களோ அல்லது வேறுவிதமான மோசமான காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. காவல்துறையினர் காயம் அடைந்தனர் என்று காவல்துறையால் கூறப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளிலும் காயங்கள் மிகச் சிறியவையாகவே இருந்துள்ளன. சிறிய அளவிலான வீக்கம் அல்லது உள்காயத்தைத் தவிர வேறு எந்த காயமும் காணப்படவில்லை’.  

‘ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களைத் தடுப்பதற்கான வாய்ப்பு காவல்துறையிடம் இருந்தது. ஆனாலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொரு கட்டத்திலும் நிலைமையை அவர்கள் திறமையின்றி கையாண்டவிதம் செயல்படுவதில் சிரமத்தை ஏற்படுத்தியது’ என்று அந்த அறிக்கை கூறுகிறது.

The vehicles burnt by the protesters during the protest against Sterlite Industries in Thoothukudi on May 22, 2018.
தூத்துக்குடியில் 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்கள்

காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் அங்கே திரண்டிருந்தவர்கள் கோபத்துடன் எதிர்வினையாற்றினர். ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்கள் எரித்தனர். உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பதிலாக அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத ஆயுதங்களை, வழிமுறைகளைக் காவல்துறை பயன்படுத்தியிருக்க வேண்டும்.  துப்பாக்கிச்சூட்டின் போது இடுப்பு, முழங்கால்களுக்குக் கீழே குறிவைத்து காவல்துறையினர் சுடவில்லை என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அவ்வாறு சுடுவது மிகவும் சிறப்பான தடுப்பு நடவடிக்கையாக இருந்திருக்கும். ஆனால் நகரின் பல்வேறு இடங்களில் கூடியிருந்த மக்களை நோக்கி காவல்துறையினர் கண்மூடித்தனமாகவே துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திக் காட்டியிருந்தனர்.   

‘நிரூபணமான தோல்வி’ 

காவல்துறை அதிகாரிகளை முறையாக ஒழுங்கமைப்பதிலும், தேவையான உத்தரவுகளைத் திறம்பட வழங்குவதிலும் காவல்துறை உயரதிகாரிகளிடம் நிரூபணமான தோல்வியே காணப்பட்டது என்று விசாரணை ஆணையம் கூறுகிறது.  

நகரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி காவல்துறை மூத்த அதிகாரியான ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று ஆணைய அறிக்கை குறிப்பிடுகிறது. டிஐஜி கபில்குமார் சி.சர்கார், டிஎஸ்பி லிங்கத்திருமாறன் ஆகியோரால் ஆட்சியர் அலுவலகம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து ஐஜிக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் காவல் ஆய்வாளர் திருமலையின் அறிவுறுத்தலின் பேரில் துணை ஆய்வாளர் ரெனஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்தும் ஐஜிக்கு தகவல் அளிக்கப்படவில்லை.    

கொலைகார சுடலைக்கண்ணு 

உயரதிகாரிகளிடையே இவ்வாறாக ஒருங்கிணைப்பு எதுவும் இல்லாதிருந்தது குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்தது. காவல்துறை மேற்கொண்ட சட்டத்திற்கு புறம்பான சாகசங்களை மேற்கோள் காட்டுவதற்கு சுடலைக்கண்ணு என்ற காவலரைத் தனிமைப்படுத்தி குறிவைத்து சுட்ட ‘ஏஸ்-ஷூட்டர்’ என்று அவரை ஆணையம் அழைக்கிறது.        

மே 22 அன்று நீண்ட தூரத்திற்குச் சுடக்கூடிய, தானாக குண்டுகளை ஏற்றிக் கொள்ளும் துப்பாக்கியை (SLR) நகரம் முழுவதும் மிகுந்த விருப்பத்துடன், உற்சாகத்துடன் சுமந்து சென்ற ஒரே காவலராக சுடலைக்கண்ணு இருந்தார் என்று அறிக்கை கூறுகிறது. அந்த துப்பாக்கியைக் கொண்டு ஆட்சியர் அலுவலகம், மூன்றாம் மைல், இந்திய உணவுக் கழக (எஃப்சிஐ) ரவுண்டானா, திரேஷ்புரம் போன்ற இடங்களில் அவர் பதினேழு சுற்றுகள் சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.      

ஐஜி (மதுரை ரேஞ்ச்), டிஐஜி (திருநெல்வேலி) ஆகிய இருவருமே தமிழர்கள் இல்லை. அந்தப் பகுதியின் மொழி, நிலப்பரப்புக்கு புதியவர்களாக இருந்த அவர்கள் இருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்காக போராடிக் கொண்டிருந்த நிலையில், இந்திய உணவுக்கழக குடோனில் இரண்டு பேர் சுடலைக்கண்ணுவுடன் இருந்த தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், பக்கத்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் சக்தி குமார் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் திரேஷ்புரத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அந்த இரண்டு அதிகாரிகளும் தங்களுடைய நடமாட்டம், செயல்பாடுகள் குறித்து ஐஜி உள்ளிட்ட பிற மூத்த அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் அளிக்கவில்லை. 

அடுத்த நாள் – மே 23 அன்று அண்ணாநகருக்குச் சென்ற​​​ எஸ்பி மகேந்திரன் முந்தைய நாள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்கள் கூட்டத்தின் கோபத்தை எதிர்கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கே நடந்த கல்வீச்சில் காவல்துறை அதிகாரி ஒருவரின் இடது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. சூழ்நிலையை உணர்வுப்பூர்வமாக கையாளுவதற்குப் பதிலாக அந்த எஸ்பி துப்பாக்கி வைத்திருந்த தன்னுடைய உதவியாளர் ஸ்டாலினிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஒன்பது சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன் விளைவாக இருபத்தைந்து வயது இளைஞர் ஒருவரின் மரணம் நிகழ்ந்தது. மற்றும் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  

காவல்துறை ஐஜியே குற்றங்களுக்கான காரணம் 

அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளுடனான நிகழ்வுகள் மே 22 அன்று நடைபெறலாம் என்பதாக வலுவாகப் பரிந்துரைக்கப்பட்ட உள்ளீடுகளை உளவுத்துறை பெற்றிருந்தது. ஆயினும் அவற்றை எதிர்கொள்வதற்கான தகுந்த உத்திகளை உருவாக்கத் தவறியதற்கு ஐஜியே காரணம் என்று ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நடந்த ஆரம்பகட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்த பிறகு, காவல்துறைக்கு எதிராக வன்முறை நடந்து விடும் என்ற பயம் காரணமாகவே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திட ஐஜி உத்தரவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. மீண்டும் அங்கே வரவழைக்கப்பட்ட சுடலைக்கண்ணு மற்றொரு காவலர் சொர்ணமணியுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த இடத்தில் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.       

விசாரணை ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் தூண்டுதல் எதுவும் இல்லாமலேயே காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தினர் என்று  பரிந்துரைக்கின்றன. ‘காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது என்ற முடிவிற்கு வருவது தவிர்க்கவே முடியாததாகிறது. ஒட்டுமொத்த உண்மைகள், சூழ்நிலைகளின் தன்மையைக் கொண்டு பார்க்கும் போது, தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு காவல்துறை அவ்வாறு செயல்பட்டது என்று கூற முடியவில்லை. உண்மையில் காவல்துறையும் அவ்வாறாகச் சொல்லவில்லை’ என்றே அறிக்கை கூறுகிறது.   

செயலில் இறங்கிடாத ஆட்சியர் 

மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஆணையம், ஆட்சியர் ஆரம்பத்திலிருந்தே அலட்சியத்துடன் இருந்ததாகவே தோன்றுகிறது என்று குறிப்பிடுகிறது. மே 22க்கு முன்பாக நடைபெற்ற அமைதிக்குழுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  தலைமையேற்கவில்லை. அந்தக் கூட்டத்தை தீவிரமாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு அதை துணை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கையாளுவதை மாவட்ட ஆட்சியர் தவிர்த்திருப்பாரேயானால் அந்தப் பிரச்சனை இதுபோன்று தோல்வியில் முடிந்திருக்காது. அந்த நேரத்தில் தன்னுடைய முகாம் அலுவலகத்தில்தான் ஆட்சியர் இருந்துள்ளார் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டக்காரர்களின் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆட்சியர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஐஜி, டிஐஜி அல்லது எஸ்பி என்று யாருமே தன்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஊரில் நிலவிய பதற்றத்தைத் தணிப்பதற்காக மற்றொரு அமைதிக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியரான அவர் வெகுவிரைவாகக் கூட்டியிருந்திருக்க வேண்டும் என்று கூறி அவரது கோரிக்கையை ஆணையம் முற்றாக நிராகரித்துள்ளது.


C:\Users\Chandraguru\Pictures\Inquiry Commission report on Thoothukudi firing\202112300606071853_ExCollector-N-Venkatesh-appears-before-Aruna-Jagadeesan_SECVPF.jpg

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன்பு ஆஜரான மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ்

தடை உத்தரவுகள்

தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144-ன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று எஸ்பி மகேந்திரன் வலியுறுத்தினார். ஆயினும் ஆட்சியர் அந்தச் சட்டப் பிரிவை தூத்துக்குடி சிப்காட், தெற்கு காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட சில பகுதிகளுக்கு மட்டும் என்று முந்தைய நாள் இரவில்தான் அமல்படுத்தினார்.   

சில இடங்களுக்கு மட்டும் என்று அதுபோன்று அமல்படுத்தப்பட்ட தடை உத்தரவு, போராட்டத்திற்கென்று அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடமான எஸ்ஏவி உயர்நிலைப்பள்ளி மைதானத்திற்குச் செல்லும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அந்த இடத்தை சென்றடைய விடாமல் அவர்களுக்குத் தடையையும் ஏற்படுத்தியது. எனவே கூட்டம் பொறுமையிழந்தது.  

ஆணையம் தன்னுடைய அறிக்கையில் இருநூற்றுக்கும்  மேற்பட்ட பக்கங்கள் கொண்ட முழு தொகுதியை, மே 22 போராட்டத்திற்கு சற்று முன்னதாக தடை உத்தரவுகளை இவ்வாறு மிக மோசமாகச் செயல்படுத்தியது, பின்னர் நடைபெற்ற சம்பவங்களில் அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை விளக்குவதற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது.    

‘மாவட்ட ஆட்சியரிடம் செயலற்ற தன்மை, மந்தம், மெத்தனம், கடமை தவறுதல் போன்ற செயல்பாடுகள் இருந்துள்ளன’ என்று ஆணையம் கூறுகிறது. சேகர் (துணை தாசில்தார், தேர்தல்கள்), கண்ணன் (கோட்ட கலால் அலுவலர்), சந்திரன் (மண்டல துணை தாசில்தார்) என்று தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட்டுகளின் பெயரையும் ஆணையம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் மே 22, 23 ஆகிய நாட்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் மூவரும் காவல்துறையினரால் வரவழைத்து தேவைப்பட்ட இடங்களில் இருத்தி வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட்டுகள்/துணை தாசில்தார்களுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை, சட்டத்திற்குட்பட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.  

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து ஆட்சியர் வளாகத்திலும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் தீ வைத்த இருபது பேர் அடையாளம் காணப்படாதது குறித்தும் விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. அவ்வாறு தீ வைத்தவர்கள் யாரென்று வீடியோ துணுக்குகளில் தெளிவாகத் தெரிவதாகவும் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

சிபிஐ விசாரணை

மாநில காவல்துறை அல்லது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) தீ வைத்தவர்கள் யாரென்று அடையாளம் காணவே முடியவில்லை. அவர்களை அடையாளம் காணும் விவகாரத்தில் உதவி கோரி சிபிஐக்கு ஆணையம் கடிதம் எழுதியது. ஆனாலும் அந்த நடுவண் அரசு நிறுவனம் அவர்களில் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்றே பதிலளித்தது. வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று பலர் மீது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ள போதிலும், அந்தப் பட்டியலில் அதிகாரிகள் யாருக்கும் இடம் இருக்கவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.     

அதற்கு மாறாக சிபிஐ காவல்துறை மற்றும் வருவாய்த் துறைகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சில நபர்கள், பணியாளர்கள் மீது துணை முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணை நியாயமாக, நேர்மையாக இருக்கும் என்று ஆணையம் நம்புகிறது.  

அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இருபது லட்சம் ரூபாயில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாயாக, காயமடைந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயாக இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தருமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அதிகரிப்பு ‘நிதர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக அல்லது அதிகமாக இருக்கவில்லை. மிகவும் யதார்த்தமாகவே இருக்கிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பின்னர் பலியாகிய ஜஸ்டின் செல்வா மிதேஷுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கோரியுள்ளது. அவருடைய தாயாருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும், காயமடைந்த காவலர் மணிகண்டனின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Inquiry Commission report on Thoothukudi firing\thequint_2018-06_30697a30-cdf5-4418-af0e-3f7d0dce0542_e8fa7e61_de69_4295_97d9_ee4da76a80b9.jpg

2018 மே 22 அன்று நடைபெற்ற வன்முறையில் சில ஆர்வலர்கள் குற்றம் சாட்டியதைப் போல ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கோ அல்லது அப்போதைய அரசு, நடிகர் ரஜினிகாந்த் போன்ற சிலர் குற்றம் சாட்டியிருந்ததைப் போல எந்தவொரு அமைப்பினருக்கோ தொடர்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்ற வகையிலே எந்தவொரு குறிப்பிட்ட ஆதாரமும் ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை.   

 https://frontline.thehindu.com/news/inquiry-commission-report-on-thoothukudi-firing-names-top-police-officials-for-serious-offences-against-unarmed-civilians/article65782715.ece

நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *