நூல்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கம்: 173
விலை: 195
ஒரு தோட்டியின் மகன் தோட்டியாக கூடாது என்கிற சுடலைமுத்துவின் ஆசை/ஏக்கம் தான் “தோட்டியின் மகன்”. தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய நாவல், தமிழில் சுந்தர ராமசாமி யால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இசக்கியின் இறப்பிற்கு பின்பு, தோட்டியாக மாறிய சுடைலைமுத்து, தமது சந்ததியினர் தோட்டியாக வளர கூடாது என்று முதல் நாளில் இருந்து பிரயத்தனப்படுகிறான்…
அவனுடைய அந்த கொள்கை எப்படி அவனது மனிதநேயத்தை கொன்று, அவனை சுயநலவாதியாக மாற்றுகிறது மற்றும் ஒரு தோட்டியின் மகனிற்கு பெயர் சூட்டுவது, பள்ளியில் சேர்ப்பது, என்று சமூகத்தில் இருக்கும் அழுத்தங்களை தெளிவாக பதிவு செய்துள்ளது இந்த நாவல்.
தன் ஆசை நிறைவேறுவதற்காக தன் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து கொள்கிறான், தான் தோட்டி வேலைக்கும் செல்லும் இடத்தில் “பெரிய ஆளுங்க” எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று கற்று கொண்டு வந்து தன் மனைவிக்கு போதிக்கிறான். தன் குழந்தையின் மீது பிற தோட்டி குழந்தையின் சாயல் விழாமல் இருக்க வேண்டி வீட்டிலேயே வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான், தன் சாயல் கூட அவன் மனதில் விழ கூடாது என்று பிள்ளையை அள்ளி கொஞ்சாமல், சோறு ஊட்டாமல் விலக்கியே வாழ பழகிக்கொள்கிறான். இறுதியில் அவன் கனவு நிறைவேறியதா? என்பதே நாவல்.
நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி ” ஒரு கொடுமையான வாழ்க்கையை எவ்வளவு நேர்த்தியாக மனதில் பதியும்படி சொல்லிவிட்டார் இந்த ஆசிரியர்..!” என்று தகழி குறித்து கூறி இருப்பார். அதே அழுத்தத்தை சற்றும் குறையாமல் தமிழ் மொழிபெயர்ப்பில் கொடுத்துள்ளார்.