“துன்பம் விலகும்” கவிதை
நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?
உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தாய்
ஒருவேளை உணவுக்கு ஓடிப் பறந்தாய்
உடுத்தும் ஆடை ஒன்றுடன் திரிந்தாய்
ஓட்டை ஆடை உதறிட மறந்தாய்!
நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?
கூரை வீட்டில் குறுகி வாழ்ந்தாய்
கொட்டும் மழையில் குளிரில் நனைந்தாய்
கூனிக் குறுகி கொள்கை தளர்ந்தாய்
கொடுப்பதை ஏற்கும் நிலையில் வளர்ந்தாய்!
நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?
வாய்க்குச் சுவையாம் வாய்ப்பைத் தேடாய்
வாய்த்ததே அமிழ்தம் வாங்கிச் சுவைப்பாய்
வந்த நோய்க்கு வடிகால் தேடாய்
வாட்டம் அடைந்தும் வளர்ப்பதைக் காணாய்!
நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?
நிலத்தில் கீழோர் நிலையை எண்ணார்
நிலவும் உடைமை நேரெனக் கொள்ளார்
நிமிர்ந்து நின்று உரிமை கேளார்
நீளும் வறுமை நெருப்பில் நிற்பார்
நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?
அள்ளிக் கொடுத்தநீ ஆண்டியாய் திரிவதா?
அடுத்தவன் கையை அண்டிப் பிழைப்பதா?
ஆற்றல் எல்லாம் அந்நியர்க் கானதா?
அறிவைக் கூட அடகு வைப்பதா?
நெடுநாள் கனவு நனவாய் ஆகுமா?-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகுமா?
அடங்கி ஒடுங்கி அழிந்தது போதும்
அடுத்தவன் கொழிக்க அழுதது போதும்
ஆற்றல் தன்னை அகிலம் உணர்த்திடு
ஆட்சியில் உழைக்கும் வர்க்கம் உயர்த்திடு!
நெடுநாள் கனவு நனவாய் ஆகும்!-உன்
நீண்ட துன்பம் விலகிப் போகும்!
எழுதியவர்:
கோவி.பால.முருகு
வடலூர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

